Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 9 Verses

1 முற்காலத்தில் ஆண்டவர் சபுலோன் நாட்டிடையும், நெப்தாலிம் நாட்டையும் அவமதிப்புக்கு உள்ளாக்கினார்; ஆனால் பிற்காலத்தில் கடல் நோக்கும் வழியையும், யோர்தான் அக்கரைப் பகுதியையும் புறவினத்தார் வாழும் கலிலேயாவையும் மகிமைப்படுத்துவார்.
2 இருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்; மரண நிழல் படும் நாட்டில் உள்ளோர்க்கு ஒளி உதித்துச் சுடர் வீசிற்று.
3 மக்களினத்தைப் பலுகச் செய்தீர், அதன் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடையின் போது உழவன் மகிழ்வது போலும், கொள்ளைப் பொருளைப் பங்கிடுவோர் அக்களிப்பது போலும், உம் முன்னிலையில் அவர்கள் அக்களிக்கிறார்கள்.
4 ஏனெனில் மாதியான் நாட்டுப் போர்க் காலத்தில் செய்தது போல், அவர்கள் தோள் மேல் சுமத்தப்பட்ட நுகத்தையும், தோளைக் காயப்படுத்திய தடியையும், அவர்களை ஒடுக்கியவனின் கொடுங்கோலையும் நீர் ஒடித்தெறிந்தீர்.
5 ஏனெனில் போர்க்களத்தில் பயன்பட்ட ஒவ்வொரு மிதியடியும், இரத்த வெள்ளத்தில் தோய்ந்த ஆடைகள் யாவும் நெருப்புக்கு விறகாகப் பயன்பட்டு எரிக்கப்படும்.
6 ஏனெனில் நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது, நமக்கு ஒரு மகன் தரப்பட்டுள்ளான்; ஆட்சியின் பொறுப்பு அவருடைய தோள் மேல் இருக்கும், அவருடைய பெயரோ, "வியத்தகு ஆலோசனையாளர், வல்லமையுள்ள இறைவன், முடிவில்லாத் தந்தை, அமைதியின் மன்னன்" என வழங்கப்படும்.
7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும் அமைதியின் பெருக்கிற்கும் முடிவு என்பதே இராது. தாவீதின் அரியனையில் அமர்வார்; அவரது அரசை நிறுவுவார்; இன்று முதல் என்றென்றும் நீதியாலும் நியாத்தாலும் அதை நிலைபெயராது காத்திடுவார்; சேனைகளின் ஆண்டவரது ஆர்வம் இதைச் செய்யும்.
8 ஆண்டவர் யாக்கோபுக்கு எதிராக ஒரு வாக்குரைத்திருக்கிறார்; அப்படியே அது இஸ்ராயேலுக்குப் பலிக்கும்.
9 அப்போது எல்லா மக்களும் அறிந்து கொள்வார்கள், எப்பிராயீமும் சமாரியாவின் குடிகளும் தெரிந்து கொள்வர். செருக்கிலும் உள்ளத்தின் அகந்தையிலும் அவர்கள்,
10 செங்கற் கட்டடம் தகர்ந்து வீழ்ந்தது, ஆனால் செதுக்கிய கற்களால் கட்டுவோம்; காட்டத்தி மரங்கள் வெட்டுண்டு சாய்ந்தன, ஆனால் அவற்றுக்குப் பதிலாகக் கேதுரு மரங்கள் வைப்போம்" என்று சொல்லுகிறார்கள்.
11 ஆகவே இராசீனின் எதிரிகளை அவர்களுக்குகெதிராய் ஆண்டவர் எழும்பச் செய்வார், அவர்களின் பகைவர்களைத் தூண்டிவிடுவார்;
12 கிழக்கிலே சீரியர்களும் மேற்கிலே பிலிஸ்தியர்களும், வாயைப் பிளந்து இஸ்ராயேலை விழுங்குவார்கள். இதெல்லாம் செய்தும் அவர் சினம் ஆறவில்லை. நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
13 தங்களை நொறுக்கியவரிடம் மக்கள் திரும்பவில்லை, சேனைகளின் ஆண்டவரை அவர்கள் தேடவில்லை.
14 ஆதலால் ஆண்டவர் ஒரே நாளில், இஸ்ராயேலின் தலையையும் வாலையும், கிளையையும் மெல்லிய நாணலையும் தறித்து விட்டார்.
15 முதியோரும் மதிப்புக்குரியவரும் தலையாவர், பொய்யுரைக்கும் தீர்க்கதரிசி வால் ஆவான்.
16 ஏனெனில், இந்த மக்களை நடத்துகிறவர்கள் தவறான வழியில் நடத்திச் செல்லுகிறார்கள், அவர்களால் நடத்தப்படுகிற மக்களோ விழுங்கப் படுகிறார்கள்.
17 ஆதலால் ஆண்டவர் அவர்களின் இளைஞரைக் குறித்து மகிழ்வதில்லை, திக்கற்றவர் மேலும் கைம்பெண்கள் மேலும் இரங்குவதில்லை. ஏனெனில் ஒவ்வொருவனும் கடவுட் பற்றில்லாதவன், கொடியவன், ஒவ்வொருவன் வாயும் பேதமையே பேசுகிறது; இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
18 ஏனெனில் அக்கிரமம் தீயைப் போல் எரிகின்றது, முட்களையும் முட்புதர்களையும் தீய்க்கின்றது, காட்டில் அடர்ந்துள்ள செடிகளைப் பிடிக்கின்றது, தூண் போல புகைப்படலம் எழும்புகின்றது.
19 சேனைகளின் ஆண்டவருடைய ஆத்திரத்தினால் நாடெல்லாம் தீப்பற்றி எரிகின்றது; மக்களோ நெருப்புக்கு விறகானார்கள், சகோதரன் சகோதரனுக்கு இரங்குவதில்லை.
20 வலப்பக்கம் பிடுங்கித் தின்றும் பசி தீரவில்லை; இடப்பக்கம் எடுத்து விழுங்கியும் திருப்தியில்லை. ஒவ்வொருவனும் தன் அயலானின் சதையைப் பிடுங்கித் தின்பான்; மனாசே எப்பிராயீமைப் பிடுங்கித்தின்பான், எப்பிராயீம் மனாசேயைப் பிடுங்கித் தின்பான், இருவரும் ஒன்றாக யூதாவின் மேல் பாய்வார்கள்.
21 இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
×

Alert

×