Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 8 Verses

1 பின்னர் ஆண்டவர் என்னைப்பார்த்து, "நீ வரைபலகை ஒன்று எடுத்து, அதில் சாதாரண எழுத்துகளில், 'மாஹெர்-ஷலால்-ஹாஷ்-பாஸ்' என எழுது" என்றார்.
2 இதற்குப் பிரமாணிக்கமுள்ள சாட்சிகளாக ஊரியாஸ் என்னும் அர்ச்சகரையும், பராக்கியாஸ் என்பவனின் மகனான சக்கரியாவையும் ஏற்படுத்தினேன்.
3 பின்பு நான் இறைவாக்கினளுடன் கூடினேன்; அவள் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றாள். அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "அவனுக்கு மாஹெர்-ஷலால்-ஹாஷ் -பாஸ் எனப் பெயரிடு.
4 ஏனெனில் குழந்தை, 'அப்பா, அம்மா' என்று கூப்பிடக் கற்றுக் கொள்வதற்குள் தமஸ்குவின் செல்வங்களும், சமாரியாவின் கொள்ளைப் பொருளும் அசீரிய அரசனுக்கு முன் வாரிக் கொண்டு போகப்படும்" என்று சொன்னார்.
5 ஆண்டவர் மீண்டும் என்னிடத்தில் பேசினார்:
6 அமைதியாக ஓடும் சிலோயே நீரை இம்மக்கள் வேண்டாமென மறுத்து விட்டு, இராசீனுக்கும் ரொமேலியின் மகனுக்கும் முன்பாக அஞ்சி நடுங்குவதால்,
7 இதோ ஆண்டவர் இம் மக்களுக்கு எதிராக, ஆற்றல் மிக்க பேராற்றின் பெருவெள்ளத்தை அதாவது, அசீரியா அரசனையும் அவன் மகிமை அனைத்தையும் திரண்டுவரச் செய்திடுவார்; எல்லாக் கால்வாய்களிலும் அதன் வெள்ளம் பெருகும், கரைகள் அனைத்திலும் புரண்டு பாயும்.
8 யாண்டும் ஒரே வெள்ளக் காடாய்ப் பெருகியோடி, யூதா நாட்டிலும் பாய்ந்து அதன் கழுத்தை எட்டும்; எம்மானுவேலே, உன் நாட்டின் பரப்பையெல்லாம் அது நிரப்பி நிற்கும்."
9 மக்களினங்களே, அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் தோல்வியுறுவீர்கள்; தொலை நாடுகளே, நீங்களெல்லோரும் செவி சாயுங்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்; நீங்கள் போர்க்கோலம் கொள்ளுங்கள், தோல்வியே அடைவீர்கள்;
10 ஒன்றுகூடி ஆலோசனை செய்யுங்கள்; அதுவும் விழலுக்கு இறைத்த நீராய்த் தான் போகும். நீங்கள் ஆணை பிறப்பியுங்கள், அதுவும் நிலை நிற்காது; ஏனெனில் கடவுள் நம்மோடிருக்கிறார்.
11 தமது வலிமையுள்ள கையை என் மேல் வைத்து, ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை செய்தார்; இந்த மக்கள் நடக்கின்ற அந்த வழியிலேயே நானும் நடக்காதபடி எனக்குச் சொன்னார்:
12 இந்த மக்கள் சதித் திட்டம் என்று சொல்வதையெல்லாம், நீங்களும் சதித் திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் அஞ்சுவதற்கு நீங்கள் அஞ்சாதீர்கள், அஞ்சி நடுக்கம் கொள்ளாதீர்கள்.
13 ஆனால், சேனைகளின் ஆண்டவர் ஒருவரையே பரிசுத்தர் என்று நீங்கள் போற்ற வேண்டும்; அவரைக் கண்டே நீங்கள் அஞ்ச வேண்டும்; அவர் முன்பே நீங்கள் நடுங்க வேண்டும்.
14 அவரே பரிசுத்த இடமாய் இருப்பார், இஸ்ராயேலின் இரு வீட்டாருக்கும் இடறி விடும் கல்லாகவும் தடுக்கிவிடும் பாறையாகவும் இருப்பார்; யெருசலேம் குடிகளுக்குப் பொறியாகவும் கண்ணியாகவும் இருப்பார்.
15 அதன் மேல் பல பேர் இடறி வீழ்வர், வீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு அகப்பட்டுக் கொள்வர்.
16 இந்த அறிக்கையைக் கட்டி வை; என் சீடர்கள் நடுவில் இந்தப் படிப்பினையை முத்திரையிட்டு வை.
17 யாக்கோபின் வீட்டாருக்குத் தம் முகத்தை மறைத்துக் கொள்ளும் ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவரை நான் நம்பியிருக்கிறேன்.
18 சீயோன் மலை மேல் கோயில் கொண்டுள்ள சேனைகளின் ஆண்டவர் இஸ்ராயேலில் ஏற்படுத்திய அடையாளங்களாகவும் முன்னறிகுறிகளாகவும், இதோ நானும், ஆண்டவர் எனக்கீந்த பிள்ளைகளும் இருக்கிறோம்.
19 மை வித்தைக்காரரையும் முணுமுணென்று ஓதிக் குறிசொல்லும் மந்திரவாதிகளையும் குறி கேளுங்கள்" என்று உங்களிடம் அவர்கள் சொல்லுகிறார்களே, குலதெய்வத்தை ஆலோசிப்பதல்லவா மக்களுக்கு முறைமை? வாழ்வோருக்காகச் செத்தவரையல்லவா குறி கேட்பார்கள்?
20 அதை விடத் திருச் சட்டத்தையும் இறைச் சான்றையும் ஆலோசியுங்கள்; அந்த வாத்த்தைகளின்படி அவர்கள் விடை கூறாவிடில், மறுநாள் ஒளியை அவர்கள் காணமாட்டார்கள்.
21 பெருந்துன்பத்தோடும் பசியோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வர்; அவர்கள் பசியினால் வாடும் போது, ஆத்திரங் கொண்டு தங்கள் அரசனையும் கடவுளையும் சபிப்பார்கள்; மேலே அண்ணாந்து பார்ப்பார்கள்,
22 கீழே தரையைக் குனிந்து நோக்குவார்கள், கடுந் துயரும் இருளும் மன வேதனையின் காரிருளும் புலப்படும், எங்கும் இரவே பரவியிருக்கும், மன வேதனையில் இருப்பது காரிருளில் இருப்பதன்றோ?
×

Alert

×