Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 60 Verses

1 யெருசலேமே எழுந்திரு, எழுந்து ஒளிவீசு, ஏனெனில் உனது ஒளி வந்து விட்டது, ஆண்டவரின் மகிமை உன் மேல் உதித்து விட்டது.
2 இதோ, காரிருள் பூமியை மூடிக்கொள்ளுகிறது; அடர்ந்த இருள் மக்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது; ஆனால் ஆண்டவர் உன் மேல் எழுந்தருள்வார், அவரது மகிமை உன் மீது உதயமாகும்.
3 மக்களினங்கள் உன் ஒளி நோக்கி வருவார்கள், உன்னில் உதிக்கும் சுடர் கண்டு மன்னர்கள் வருவர்.
4 கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார், இவர்கள் அனைவரும் ஒன்று கூடி உன்னிடம் வருகின்றனர்; உன் புதல்வர்கள் தொலைவிலிருந்து வருகின்றனர். உன் புதல்வியர் இடுப்பில் தூக்கி வரப்படுகின்றனர்.
5 நீயோ அதைக் கண்டு அக்களிப்பாய், உன் உள்ளம் வியப்பினால் பூரிப்படையும்; ஏனெனில், கடல் வளம் உன்னிடம் கொணரப்படும். மக்களினங்களின் செல்வம் உன்னிடம் வந்து சேரும்.
6 ஒட்டகங்களின் கூட்டம் உன்னை நிரப்பும், மாதியான், எப்பா நாட்டு இளம் ஒட்டகங்களும் வரும்; சாபா நாட்டினர் அனைவரும் பொன்னும் தூபமும் ஏந்தியவராய் ஆண்டவருக்குப் புகழ் பாடிக் கொண்டு வருவார்கள்.
7 கேதாரின் மந்தைகள் யாவும் உன்னிடம் சேர்க்கப்படும், நாபாயோத்தின் செம்மறிகள் உனக்குப் பயன்படும்; நமக்கு ஏற்புடைய பீடத்தின் மேல் அவை ஒப்புக் கொடுக்கப்படும், நமது மாட்சிமையின் கோயிலை மகிமைப்படுத்துவோம்.
8 மேகங்கள் போலும், கூட்டுக்குப் பறந்தோடும் காட்டுப் புறாக்கள் போலும் விரைந்து பறந்து போகும் இவர்கள் யார்?
9 தீவுகள் நமக்காகக் காத்திருக்கின்றன; உன் பிள்ளைகளைத் தொலைவிலிருந்து ஏற்றி வரவும், அவர்களுடன் அவர்களுடைய வெள்ளியையும் பொன்னையும் கொண்டு வந்து உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கும், உன்னை மகிமைப்படுத்திய இஸ்ராயேலின் பரிசுத்தருக்கும் அர்ப்பணஞ் செய்யக் கடலின் மரக்கலங்களும் காத்திருக்கின்றன.
10 அந்நியரின் மக்கள் உன் சுவர்களைக் கட்டுவர், அவர்களின் அரசர்கள் உனக்குப் பணிபுரிவர்; கோபத்தில் நாம் உன்னை அடித்து நொறுக்கினோம், இப்போது சமாதானமாகி உன் மேல் இரக்கம் காட்டினோம்.
11 உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும், இரவிலும் பகலிலும் அவை மூடப்படா; மக்களினங்களின் செல்வங்கள் கொண்டு வரப்படும், அவர்களின் அரசர்கள் கூட்டி வரப்படவும் அவை திறந்தே இருக்கும்.
12 உனக்கு அடிபணியாத மக்களினமோ அரசோ அழிந்து போகும், அவை அனைத்தும் முற்றிலும் பாழாக்கப்படும்;
13 லீபானின் மகிமை உன்னை நாடி வரும், தேவதாரு, புன்னைமரம், ஊசியிலைமரம் ஆகியவை நமது பரிசுத்த இடத்தை அழகுபடுத்தக் கொண்டு வரப்படும்; நம் கால்மணையின் இருப்பிடத்தை நாம் மகிமைப்படுத்துவோம்.
14 உன்னை தாழ்த்தியவர்களின் மக்கள் உன்னிடம் தலை வணங்கி வருவர்; உன்னை நிந்தித்தவர் அனைவரும் உன் அடிச்சுவடுகளை வணங்குவர்; ஆண்டவரின் நகரம் என உன்னை அழைப்பர், உன்னை இஸ்ராயேலின் பரிசுத்தருடைய சீயோன் என்பர்.
15 கைவிடப்பட்டு, மனிதரால் நீ வெறுக்கபட்டாய், உன் வழியாய்க் கடந்து செல்ல எவனும் கருதினானல்லன்; அப்படிப்பட்ட உன்னை முடிவில்லாத மாட்சிமையும், தலைமுறை தலைமுறையாய் நிலைக்கும் மகிழ்ச்சியுமாக்குவோம்.
16 மக்களினங்களின் பாலை நீ பருகுவாய், அரசர்களின் முலைப்பாலைக் குடிப்பாய்; உனக்கு மீட்பளிக்கும் ஆண்டவர் நாமே என்பதையும், உன்னை விடுவிப்பவர் யாக்கோபின் வல்லவரே என்பதையும் அறிவாய்.
17 செம்புக்குப் பதிலாக பொன்னும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியும், மரத்துக்குப் பதிலாய்ச் செம்பும், கற்களுக்குப் பதிலாய் இரும்பும் கொணர்வோம்; சமாதானம் உன்னை மேற்பார்வை பார்க்கவும், நீதி உனக்குத் தலைமை தாங்கவும் செய்வோம்.
18 இனி மேல் கொடுமை என்னும் சொல்லே உன் நாட்டில் கேட்கப்படாது; உன் எல்லைப் புறங்களில் அழிவு, துன்பம் என்னும் கூக்குரல் இருக்காது. உன் மதில்களுக்கு 'மீட்பு' என்றும், உன் வாயில்களுக்குப் 'போற்றி' என்றும் பெயரிடுவாய்.
19 பகலில் வெளிச்சந்தர உனக்குத் கதிரவன் தேவையில்லை, இரவில் உனக்கு ஒளி வீச வெண்ணிலவும் தேவையில்லை; ஏனெனில், ஆண்டவரே என்றென்றைக்கும் உன் ஒளியாயிருப்பார், உன் கடவுளே உனக்கு மகிமையாய் விளங்குவார்.
20 உன்னுடைய கதிரவன் இனி மறைய மாட்டான், உன்னுடைய வெண்ணிலவு இனித் தேய்ந்து போகாது; ஏனெனில், ஆண்டவரே என்றென்றைக்கும் உன் ஒளியாயிருப்பார், உன் கண்ணீரின் நாட்களும் முடிந்து போகும்.
21 உன் இனம் நீதிமான்களை மட்டுமே கொண்டிருக்கும், மண்ணுலகு என்றென்றும் அவர்களது உரிமையாகும்; நாம் நட்ட பசுந்தளிராய் உன் மக்கள் இருப்பர், நமக்கு மகிமை தரும் நம் கைவேலையாய் இருப்பர்.
22 உன்னில் சிறியவன் ஆயிரமாய்ப் பலுகுவான், அற்பனாய் இருப்பவனும் வலியதோர் இனமாவான்; ஆண்டவராகிய நாமே இந்த வித்தையைத் தக்க காலத்தில் திடீரெனச் செய்வோம்.
×

Alert

×