Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 44 Verses

1 நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட இஸ்ராயேலே, கேள்.
2 உன்னைப் படைத்துத் தாய் வயிற்றில் உருவாக்கிக் காத்து வரும் ஆண்டவர் கூறுகிறார்: நம் ஊழியனாகிய யாக்கோபே, நாம் தேர்ந்து கொண்ட நேர்மையாளனே, அஞ்சவேண்டா.
3 ஏனெனில் வறண்ட இடத்தில் நீரைப் பொழிவோம், ஈரமற்ற நிலத்தில் ஆறுகள் ஓடச் செய்வோம். உனது வித்தின் மேல் நம்முடைய ஆவியையும், உனது சந்ததியின் மேல் நமது ஆசியையும் பொழிவோம்.
4 செடிகளைப் போல் அவர்கள் தளிர்ப்பார்கள், நீரருகில் உள்ள மரம் போலத் தழைப்பார்கள்.
5 'நான் ஆண்டவருக்குச் சொந்தம்' என்பார் ஒருவன்; யாக்கோபின் பெயரைச் சூடிக்கொள்வான் மற்றொருவன். 'ஆண்டவர்' என்று இன்னொருவன் தன் கையில் எழுதி, 'இஸ்ராயேல்' என்று புனைப்பெயர் சூடிக்கொள்வான்." ஒரே கடவுள் என்னும் கோட்பாடு
6 இஸ்ராயேலின் மாமன்னரும், அதன் மீட்பரும், சேனைகளின் ஆண்டவருமாகிய ஆண்டவர் கூறுகிறார்: "முதலும் நாமே, முடிவும் நாமே; நம்மையன்றி வேறு தெய்வம் இல்லை.
7 நமக்குச் சமமானவன் யார்? அறிவிக்கட்டும்; எடுத்துக்காட்டி எண்பிக்கட்டும்; நடக்கப்போகின்றவற்றை முதலிலிருந்தே முன்னறிவித்தவன் யார்? வரப்போவதை இப்பொழுதே நமக்கு அறிவிக்கட்டும்!
8 நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; துவக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொன்னோம், அறிவித்தோம் அன்றோ? நீங்களே நமக்குச் சாட்சிகள்! நம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ? புகலிடம் வேறில்லை; அப்படியொன்றையும் நாம் அறியோம்."
9 சிலை செய்யும் அனைவரும் வீணராவர்; அவர்களுடைய விலையுயர்ந்த வேலைப்பாடுகள் பயனற்றவை; அவர்களே, அவை காண்பதில்லை, கண்டுபிடிப்பதில்லை என்பதைக் குறித்து வெட்கி நாணவேண்டிய சாட்சிகளாய் இருக்கின்றனர்.
10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை எவனாவது உருவாக்குவதுண்டா? அல்லது செதுக்குவதுண்டா?
11 இதோ அவ்வேலையில் ஈடுபடுவோர் யாவரும் நாணமடைவர்; அந்த வேலைக்காரர் வெறும் மனிதர் தானே! அவர்கள் எல்லாரும் ஒன்றாய்க் கூடிவந்து நம்முன் நிற்கட்டும்; அப்போது தம் மடமைக்காக நடுங்குவார்கள்; அனைவரும் வெட்கமடைவார்கள்.
12 கொல்லன் இரும்பை வாள் போன்ற அரத்தால் அராவி வேலை செய்கிறான்; அதை உலையிலிட்டுச் சம்மட்டியால் அடித்து அந்தச் சிலையை உருவாக்குகிறான்; தன் கைப் பலத்தைப் பயன்படுத்தி வேலை செய்கிறான்; பசியுறுகிறான், சோர்ந்து போகிறான்; தண்ணீர் குடிப்பதில்லை; களைத்துப் போகிறான்.
13 மரத்தில் சிலை செய்யும் தச்சன் மரத்தின் மீது நூலிட்டு, உளியால் பக்குவப்படுத்தி, மூலமட்டப்பலகையால் சரிபார்த்து, கவராயம் என்னும் கருவியால் அளவாகப் பிரித்து ஓர் அழகான மனித உருவத்தைச் செய்கிறான்; அதையெடுத்து ஒரு மாடத்தில் வைக்கிறான்.
14 அவன் கேதுரு மரங்களை வெட்டுகிறான்; அல்லது காட்டிலுள்ள மரங்களின் நடுவில் நிற்கும் காஞ்சி மரத்தையோ ஆலமரத்தையோ தேர்ந்தெடுக்கிறான்; அல்லது தான் நட்டு, மழை வளர்த்த கேதுரு மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்.
15 அது மனிதர்களுக்கு விறகாகப் பயன்படும்படி உண்டாக்கப்பட்டது; குளிர்காய்வதற்கும் அதிலிருந்தே விறகு எடுக்கிறான்; அப்பஞ் சுடவும் அதையே பயன்படுத்துகிறான்; அதிலும் மீதியாய் இருப்பதைக் கொண்டு தான் தெய்வத்தை உருவாக்கி வணங்குகிறான்; உளியால் ஒரு சிலை செதுக்கி அதன் முன் தெண்டனிடுகிறான்.
16 அதில் பாதியை அடுப்பெரிக்கிறான்; மற்றொரு பாகத்தைப் பயன்படுத்தி இறைச்சி சமைத்துச் சுவையான உணவுப் பொருட்களைத் தயாரித்து வயிறாரச் சாப்பிடுகிறான்; சாப்பிட்ட பின் குளிர்காய்கிறான்: "நன்றாகக் குளிர்காய்ந்தேன், நல்ல தீ வளர்த்தேன்" என்று சொல்லிக் கொள்ளுகிறான்.
17 மீதியைக் கொண்டோ தனக்கொரு தெய்வமாகச் சிலை செதுக்கி, அதன்முன் குப்புற விழுந்து வணங்கி, "நீரே என் கடவுள், என்னை மீட்டருளும்!" என மன்றாடுகிறான்.
18 அவர்கள் ஒன்றும் அறியவில்லை; கண்டுபிடிக்கவுமில்லை. காணமுடியாதபடி அவர்களின் கண்கள் கட்டப்பட்டன; உணரமுடியாதபடி அவர்களின் உள்ளம அடைபட்டது.
19 ஆதலால் அவர்கள் மனத்தில் சிந்திப்பதில்லை; கண்டுபிடிப்பதில்லை; உணர்வதும் கிடையாது: "ஒரு பாதியை அடுப்பெரித்தேன்; அதன் நெருப்புக் பொறிகளில் அப்பம் சுட்டேன்; இறைச்சி சமைத்துச் சாப்பிட்டேன். அதில் மீதியானதைக் கொண்டு சிலை செதுக்குவேனோ? மரக்கட்டை முன் குப்புற விழுந்து வணங்குவேனா?" என்று சொல்லக் கூடத் தெரியாமல் உணர்ச்சியற்றுப் போயினர்.
20 வெறும் சாம்பலில் பற்ற வைக்கிறான்; அதன் உள்ளம் உணர்விழந்து போகிறது; அவன் தவறுகிறான்; "என் கைவேலைப்பாடு சுத்தப் பொய்" என்று சொல்லித் தன்னையே அவன் விடுவித்துக் கொள்ளமாட்டான்.
21 யாக்கோபே, இவற்றை றினைவில் வைத்துக் கொள்: இஸ்ராயேலே, நீ நம் ஊழியன் என்பதை மறவாதே; நாமே உன்னை உருவாக்கினோம், நீ நம்முடைய ஊழியன்; இஸ்ராயேலே, உன்னை மறவேன்.
22 கார்மேகம் கலைவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கினோம், பனிப்படலம் போல் உன் பாவங்கள் பறந்தன; நம்மிடத்தில் நீ திரும்பி வா, ஏனெனில் உன்னை நாம் மீட்டிருக்கிறோம்.
23 வானமே, அக்களித்து ஆர்ப்பரி, ஆண்டவர் செயலாற்றினார்; மண்ணுலகின் எல்லைகளே, அகமகிழுங்கள், மலைகளே, காடுகளே, அங்குள்ள மரங்களே, மகிழ்ச்சியால் ஆரவாரஞ் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டார், இஸ்ராயேலில் தம் மகிமையை வெளிப்படுத்தினார்.
24 உன் மீட்பரும், தாய் வயிற்றில் உன்னை உருவாக்கியவருமான ஆண்டவர் கூறுகிறார்: "நாமே ஆண்டவர், நாமே அனைத்தையும் படைத்தோம்; தனியாகவே வானத்தை விரித்தோம், பூமியை நிலைநாட்டினோம்; நமக்கு உதவினவன் ஒருவனுமில்லை.
25 நிமித்தகர் சொல்லும் குறிகளைப் பொய்யாக்குகிறோம், மந்திரவாதிகளை மடயராக்குகிறோம்; ஞானிகளை விழத்தாட்டுகிறோம், அவர்களது அறிவை மடமையாக்குகிறோம்.
26 நம் ஊழியனின் வாக்கியத்தையோ உறுதிப்படுத்துகிறோம், நம் தூதர்களின் மொழிகளை நிறைவேற்றுகிறோம்; யெருசலேமைப் பார்த்து, 'நீ குடியிருப்பு ஆவாய்' என்றும், யூதாவின் நகரங்களுக்கு, 'நீங்கள் கட்டப்படுவீர்கள், அதன் பாழடைந்த இடங்களை எழுப்புவோம்' என்றும், சொல்லுகிறவர் நாமே.
27 பாதாளத்தைப் பார்த்து, 'நீ வற்றிப்போகக்கடவாய், உன் ஆறுகளை நாம் வற்றச் செய்வோம்' என்பவர் நாமே;
28 சீருஸ் அரசனுக்கு, 'நீ நமது மந்தையின் மேய்ப்பன், நம் விருப்பத்தையெல்லாம் நிறைவேற்றுவாய்' என்று சொல்லுகிறவர் நாமே; யெருசலேமை நோக்கி, 'நீ மறுபடி கட்டப்படுவாய்' என்றும், திருக்கோயிலைப் பார்த்து, 'உன் அடிப்படை மறுபடி இடப்படும்' என்றும் சொல்லுகிறவர் நாமே."
×

Alert

×