Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 40 Verses

1 ஆறுதல் கொடுங்கள், நம் மக்களைத் தேற்றுங்கள், என்கிறார் உங்கள் கடவுள்.
2 யெருசலேமின் இதயத்தோடு உரையாடி உரத்த குரலில் அதற்குச் சொல்லுங்கள்: அதனுடைய அடிமை வேலை முடிந்து போயிற்று. அதன் அக்கிரமம் மன்னிக்கப்பட்டது; ஆண்டவரின் கையிலிருந்து தன் பாவங்கள் அனைத்திற்காகவும் இரு மடங்கு தண்டனை அது பெற்றுக் கொண்டது.
3 கூக்குரல் ஒன்று ஒலிக்கிறது: "பாலை நிலத்தில் ஆண்டவர் வழியை ஆயத்தப்படுத்துங்கள், பாழ்வெளியில் நம் கடவுளின் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்.
4 பள்ளத் தாக்குகள் எல்லாம் நிரவப்படுக! மலை, குன்று யாவும் தாழ்த்தப்படுக! கோணலானவை நேராக்கப் படுக! கரடு முரடானவை சமமான வழிகள் ஆகுக!
5 அப்போது ஆண்டவரின் மகிமை வெளிப்படுத்தப்படும், மனிதர் அனைவரும் ஒருங்கே அதைக் காண்பர்; ஏனெனில், ஆண்டவர் தாமே திருவாய் மலர்ந்தார்"
6 உரக்கக் கூவிச் சொல்" என்றது ஒரு குரலொலி; "உரக்கக் கூவி எதைச் சொல்வேன்?" என்றேன் நான். மனிதர் அனைவரும் புல்லுக்குச் சமம், அவர்களின் மகிமையெல்லாம் வயல் வெளிப்பூவேயாகும்.
7 ஆண்டவரின் ஆவி அதன் மேல் அடிக்கும் போது, புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது; உண்மையாகவே மக்கள் புல்லைப் போன்றவர்கள் தான்.
8 புல் உலர்ந்து போகிறது, பூ உதிர்ந்து போகிறது, நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.
9 சீயோனுக்கு நற்செய்தி அறிவிப்பவனே, உயர்ந்த மலைமேல் நீ ஏறிப்போய் நில்; யெருசலேமுக்கு நற்செய்தி அறிவிப்பவனே, உன் குரலையெழுப்பி முழங்கு; அஞ்சாமல் உன் குரலையுயர்த்தி, யூதாவின் பட்டணங்களுக்கு, "இதோ, உங்கள் கடவுள்" என்று சொல்லி அறிவி.
10 இதோ, ஆண்டவராகிய கடவுள் வல்லமையோடு வரப்போகிறார், அவருடைய கை செங்கோல் செலுத்தும்; இதோ, அவருடைய வெற்றிப் பரிசு அவரோடு இருக்கிறது, அவர் முன்னால் அவருடைய வெற்றிச் சின்னங்கள் வருகின்றன.
11 ஆயனைப் போல் அவர் தமது மந்தையை மேய்ப்பார், ஆட்டுக் குட்டிகளை தம் கையால் கூட்டிச் சேர்ப்பார்; சினையாடுகளை இளைப்பாறுமிடத்திற்குக் கூட்டிச் செல்வார்.
12 கடல் நீரை உள்ளங்கையால் அளந்தவர் யார்? வானத்தின் நீள அகலங்களைக் கணித்தவர் யார்? மரக்காலால் மண்ணுலகை முகர்ந்தவர் யார்? மலைகளை எடைக்கல்லால் நிறுத்துக் குன்றுகளைத் துலாக்கோலால் தூக்கியவர் யார்?
13 ஆண்டவரின் ஆவிக்கு உதவி செய்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாக இருந்தவன் யார்?
14 யாரிடம் அவர் ஆலோசனை கேட்டார்? எவன் அவருக்குப் படிப்பித்தான்? நீதி நெறியை அவருக்குக் கற்பித்தவன் எவன்? அறிவு புகட்டி, அவருக்கு விவேக நெறியைக் காட்டினவன் எவன்?
15 இதோ மக்களினங்கள் வாளியிலிருந்து சொட்டும் நீர்த்துளி போலும், தராசில் ஒட்டியுள்ள தூசு போலவும் கருதப்படுகின்றன; இதோ தீவுகள் அவர் முன்னால் சிறிய அணுவாகக் காணப்படுகின்றன.
16 லீபானின் மரங்கள் நெருப்பு வளர்க்கப் போதா, அதன் மிருகங்கள் தகனப் பலிக்குப் பற்றா.
17 மக்களினங்கள் யாவும் அவர் முன் இல்லாதவை போலும், ஒன்றுமில்லாமை போலும் விழலாகவும் கருதப்படுகின்றன.
18 அப்படியிருக்க, யாருடைய சாயலாய் ஆண்டவரை ஆக்குவீர்கள்? எந்த உருவத்தை அவருக்கு அமைப்பீர்கள்?
19 சிலை வடிவத்தையோ? சிலையைச் சிற்பி வார்க்கிறான், பொற்கொல்லன் அதைப் பொன் தகட்டால் வேய்கிறான். வெள்ளிச் சங்கிலிகள் அதற்குச் செய்து போடுகிறான்.
20 திறமையுள்ள தச்சன் உளுத்துப் போகாத வைரமேறிய மரத்தைத் தேர்ந்து கொள்ளுகிறான்; அசைக்க முடியாதபடி சிலையொன்றைச் செய்து, நிலை நாட்டுவதெப்படி எனத் தேடுகிறான்.
21 உங்களுக்கு இது தெரியாதா? நீங்கள் கேட்டதில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா?
22 அவர் பூமியுருண்டைக்கு மேல் வீற்றிருக்கிறார். அதில் வாழ்வோர் அவர்முன் வெட்டுக் கிளிகளைப் போல்வர்; வான் வெளியை ஆடை போல விரிக்கிறவர் அவரே, தங்கியிருக்கும்படி கூடாரம் போல அதை அமைக்கிறவர் அவரே.
23 இரகசியங்களின் ஆள்வோரை இல்லாதவர் போல் ஆக்குகிறார், உலகத்தின் தலைவர்களை வீணர்களாகச் செய்கிறார்.
24 நடப்பட்டு, விதைக்கப்பட்டு, வேரூன்றினார்களோ இல்லையோ, உடனே அவர்கள் மேல் தம் ஆவியை ஊதினார்; ஊதியதும் அவர்கள் உலர்ந்து போயினர், புயலில் சிக்கிய துரும்பென அவர்களை வாரிச் சென்றது.
25 யாருக்கு நம்மை நீங்கள் ஒப்பிடுவீர்கள்? யாருக்குச் சமமாக்குவீர்கள் என்கிறார் பரிசுத்தர்.
26 உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள் இவற்றைப் படைத்தவர் யார்? இவற்றின் படைகளை ஒன்றன் பின் ஒன்றாய் வெளி நடத்தி, இவையனைத்தையும் பெயரிட்டழைக்கிறவரே அன்றோ? தம்முடைய பலத்தின் மகத்துவத்தாலும் ஆற்றலின் வல்லமையாலும், ஒன்றேனும் குறைவுறாதபடி பார்த்துக் கொள்ளுகிறார்.
27 என் நடத்தை ஆண்டவருக்கு மறைவாயுள்ளது, எனக்கு நீதி செலுத்தாமல் என் கடவுள் விட்டு விட்டார்" என்று யாக்கோபே, நீ சொல்வதெப்படி? இஸ்ராயேலே, நீ பேசுவதெப்படி?
28 உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையோ? ஆண்டவர் தான் முடிவில்லாத கடவுள்; பூமியின் எல்லைகளைப் படைத்தவர் அவரே, அவர் சோர்ந்து போவாரல்லர், களைப்படைவாரல்லர்; அவருடைய ஞானமோ புத்திக்கு எட்டாதது.
29 அவரே களைத்தவனுக்குப் பலம் தருகிறார், வலிமையும் சக்தியும் அற்றவர்க்கு அவற்றை ஊட்டுகிறார்.
30 இளைஞரும் சோர்ந்து போவார்கள், களைப்படைவார்கள்; வாலிபர்கள் நோய்வாய்ப்பட்டு விழுவார்கள்.
31 ஆனால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், புதிய வலிமையைப் பெற்றுக்கொள்வர்; கழுகுகளைப் போல் இறக்கைகள் பெற்றுப் பறந்திடுவர், ஓடுவார்கள், ஆனால் களைக்கமாட்டார்கள்; நடப்பார்கள், ஆனால் சோர்வடைய மாட்டார்கள்.
×

Alert

×