Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 37 Verses

1 எசேக்கியாஸ் அரசன் இவற்றைக் கேட்டதும், தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, கோணி ஆடை உடுத்தி ஆண்டவரின் கோயிலுக்குள் போனான்.
2 மேலும் அரண்மனைக் காரியக்காரனான எலியாசிமையும், செயலாளனான சொப்னாவையும், அர்ச்சகர்களுள் மூப்பரையும் கோணி ஆடை போர்த்தியவர்களாய், ஆமோசின் மகனான இசையாஸ் இறைவாக்கினரிடம் அனுப்பினான்.
3 அவர்கள் போய் அவரைப் பார்த்து, "எசேக்கியாஸ் கூறுகிறார்: 'இந்த நாள் வேதனையும் கண்டிப்பும் பழிச் சொல்லும் நிறைந்த நாளாக இருக்கிறது. குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நேரம் நெருங்கி விட்டது, பெறுவதற்கோ பலமில்லை.
4 உயிருள்ள கடவுளைப் பழிக்கும்படி அசீரியாவின் அரசனாகிய தன் தலைவனால் அனுப்பப்பட்ட இரப்சாசேஸ் கூறிய வார்த்தைகளை உம் கடவுளாகிய ஆண்டவர் ஒரு வேளை கேட்டிருப்பார்; உம் கடவுளாகிய ஆண்டவர் கேட்ட அந்த வார்த்தைகளைக் கண்டித்தாலும் கண்டிப்பார்; ஆதலால் இன்னும் மீதியாய் விடப்பட்ட எஞ்சினோருக்காக உமது மன்றாட்டை உயர எழுப்பியருளும்" என்றார்கள்.
5 எசேக்கியாஸ் அரசனின் ஊழியர்கள் இசையாசிடம் வந்து இவ்வாறு சொன்னதும்,
6 இசையாஸ் அவர்களை நோக்கி, "உங்கள் தலைவனிடம் போய் நீங்கள் சொல்ல வேண்டியது இதுவே: 'ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனுடைய ஊழியர்கள் நம்மைப் பழித்துரைத்த வார்த்தைகளைக் கேட்டு நீ அஞ்சாதே.
7 இதோ, நாம் அவனுக்குள் ஓர் ஆவியை அனுப்புவோம்; அவனும் வதந்தி ஒன்றைக் கேள்விப்பட்டுத் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பி விடுவான். அவனுடைய சொந்த நாட்டில் அவன் வாளுக்கிரையாகி மடியச் செய்வோம்" என்றார்.
8 அவ்வாறே, அசீரியாவின் அரசன் லாக்கீசினின்று புறப்பட்டுப் போய் விட்டான் என்று இரப்சாசேஸ் கேள்விப்பட்டுத் திரும்பிப் போய், லொப்னாவுக்கு விரோதமாகப் போர் செய்து கொண்டிருந்த அரசனைக் கண்டான்.
9 அப்போது, "உனக்கு விரோதமாய்ப் போர் புரியக் கிளம்பி விட்டான்" என்னும் செய்தியை எத்தியோப்பாவின் அரசனான தராக்கா என்பவனைக் குறித்து அரசன் கேள்வியுற்றான்; உடனே அவன் எசேக்கியாஸ் அரசனிடம் தன் தூதுவர்களை அனுப்பி,
10 அவர்களிடம், "யூதாவின் அரசனான எசேக்கியாசிடம் நீங்கள் போய், 'நீ நம்பிக்கை வைத்திருக்கும் உன் கடவுள், யெருசலேம் அசீரிய அரசன் கையில் விடப்படாது என்று உனக்கு வாக்குறுதி செய்து உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்.
11 இதோ அசீரியாவின் அரசர்கள் தாங்கள் அழித்த நாடுகளுக்கெல்லாம் என்னென்ன செய்தார்கள் என்று நீ கேட்டிருப்பாய்; அப்படியிருக்க நீ மட்டும் தப்பித்துக் கொள்ளக் கூடுமோ?
12 என் தந்தையர்கள் அழித்த கோசாம், ஆராம், இரசேப் முதலிய நாட்டு மக்களையும் தாலாசாரிலிருந்த ஏதோம் மக்களையும் அந்த மக்களின் தெய்வங்கள் காப்பாற்றினவோ?
13 ஏமாத்தின் அரசன் எங்கே? அர்பாதின் மன்னன் எங்கே? செபர்வாரும், ஆனா, ஏவா பட்டணங்களின் அரசர்கள் எங்கே?' என்று சொல்லுங்கள்" எனச் சொல்லியனுப்பினான்.
14 எசேக்கியாஸ் தூதர்கள் கையிலிருந்து கடிதத்தை வாங்கிப் படித்தான்; அதன் பிறகு, எசேக்கியாஸ் ஆண்டவரின் கோயிலுக்குள் அதை எடுத்துச் சென்று ஆண்டவர் முன்னால் அதை விரித்து வைத்தான்.
15 வைத்து எசேக்கியாஸ் ஆண்டவரைப் பார்த்து மன்றாடினான்:
16 இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரே, கெரூபீம்களுக்குமேல் வீற்றிருப்பவரே, உலகத்தின் அரசர்களுக்கெல்லாம் ஒரே கடவுளாய் இருப்பவர் நீரே; விண்ணையும் மண்ணையும் உண்டாக்கினவர் நீரே.
17 ஆண்டவரே, செவிசாய்த்துக் கேளும், ஆண்டவரே, கண் திறந்து பாரும், உயிருள்ள கடவுளைப் பழிக்கும்படி சென்னாக்கெரிப் சொல்லியனுப்பியுள்ள வார்த்தைகளையெல்லாம் காதால் கேளும்.
18 ஆண்டவரே, அசீரிய அரசர்கள் மக்களினங்களை அழித்து அவர்களுடைய நாடுகளைப் பாழாக்கியது உண்மையே.
19 அவர்களுடைய தெய்வங்களை நெருப்பில் எறிந்தார்கள்; ஏனெனில் அவை தெய்வங்கள் அல்ல; மரத்தாலும் கல்லாலும் மனிதரால் செய்யப்பட்ட கைவேலைப்பாடுகள்; ஆகவே அவை தவிடு பொடியாக்கப்பட்டன.
20 இப்போது, எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, உலகத்தின் அரசுகள் யாவும் நீர் ஒருவரே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்ளும்படியாக, அவனுடைய கையிலிருந்து எங்களை மீட்டருளும்."
21 அப்போது ஆமோஸ் மகனான இசையாஸ் எசேக்கியாசுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினார்: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனான சென்னாக்கெரிபின் காரணமாய் நீ நம்மிடம் மன்றாடினதைக் கேட்டோம்;
22 அவனைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: 'கன்னிப் பெண்ணாகிய சீயோன் மகள் உன்னை அவமதித்தாள், உன்னைப் பழித்தாள்; யெருசலேம் என்னும் புதல்வி உன் பின்னால் தலையசைத்தாள்.
23 யாரை நீ ஏளனம் செய்தாய்? யாரைப் பழித்துரைத்தாய்? யாருக்கு எதிராய் நீ உன் குரலை உயர்த்தினாய்? இறுமாப்பாக உன் கண்களை உயர்த்திப் பார்த்தாய்? இஸ்ராயேலின் பரிசுத்தருக்கு எதிராய்த் தானே!
24 உன் ஊழியர்கள் வழியாய் நீ ஆண்டவரைப் பழித்தாய், நீ சொன்னாய்: திரளான என் தேர்ப்படைகளோடு மலைகளின் உச்சிகளுக்கும் லீபான் குன்றின் கொடு முடிக்கும் நான் ஏறிப் போனேன்; அதன் மிக உயரமான கேதுரு மரங்களை வீழ்த்தினேன், அதன் மிகச் சிறந்த தேவதாரு மரங்களை வெட்டினேன்; மிகத் தொலைவான அதன் உச்சியையும் அடைந்தேன், அடர்ந்த அதன் காடுகளையும் அழித்தேன்.
25 கிணறுகள் வெட்டினேன், அவற்றின் தண்ணீரைப் பருகினேன்; என் காலடிகளின் சுவடுகளாலேயே எகிப்தின் நீரோடைகளையெல்லாம் உலரச் செய்தேன், என்றாய்.
26 முற்காலத்திலேயே நாம் அதைத் திட்டமிட்டோம் என்பதை நீ கேட்டதில்லையோ? பண்டை நாள் முதல் திட்டமிட்டிருந்ததையே இன்று நாம் செயல் படுத்துகின்றோம்: அரண் சூழ்ந்த பட்டணங்களை நீ மண்மேடாக்குவது உனக்கு நாம் வகுத்த திட்டம் தான்.
27 அவற்றின் குடிமக்கள் கை சோர்ந்து, விடவிடத்து வெட்கிப்போயினர்; அவர்கள் வயல்வெளிச் செடிகள் போலும், மேய்ச்சல் நிலத்து அறுகு போலும், கூரை மீது முளைத்து முற்றுவதற்குள் உலர்ந்துபோகும் புற்கள் போலும் ஆயினர்.
28 உன் இருப்பிடத்தையும், உன் புறப்பாட்டையும், உன் வருகையையும், நமக்கெதிராய் நீ கொண்ட கோப வெறியையும் அறிந்துள்ளோம்.
29 நீ நமக்கெதிராய் ஆத்திரங்கொண்டு பொங்கினாய், உன் ஆணவச் சொற்கள் நம் செவிக்கெட்டின; ஆதலால் நாம் உன் மூக்கில் வளையம் போட்டு, உன் வாயில் கடிவாளம் மாட்டி, நீ வந்த வழியே திரும்பிச் செல்லும்படி, உன்னைக் கூட்டிப் போய் விடுவோம்.'
30 உனக்கு ஓர் அடையாளம் இருப்பது இதுவே: அறுவடையில் சிதறியதை இவ்வாண்டில் சாப்பிடுவாய், அடிக்கட்டையில் கிளைப்பதன் பலன் தான் அடுத்த ஆண்டிற்குக் கிடைக்கும். மூன்றாம் ஆண்டிலோ விதைத்து, அறுவடை செய்தும், திராட்சை நட்டுக் கனிகளைப் பறித்தும் சாப்பிடுவாய்.
31 யூதாவின் வீட்டில் விடுவிக்கப்பட்டு எஞ்சியிருப்பது மீண்டும் கீழே வேர் விட்டு மேலே கனி கொடுக்கும்.
32 ஏனெனில் எஞ்சியிருப்போர் யெருசலேமிலிருந்து புறப்படுவர், தப்பியவர்கள் கூட்டம் சீயோன் மலையிலிருந்து வெளியே போகும், சேனைகளின் ஆண்டவரது வைராக்கியம் இதைச் செய்து முடிக்கும்.
33 ஆதலால் அசீரியாவின் அரசனைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: இப்பட்டணத்தில் அவன் நுழைய மாட்டான், அதற்குள்ளே அம்பு எய்ய மாட்டான்; கேடயம் தாங்கி அதன் முன் வரமாட்டான், அதைச் சுற்றி முற்றுகையும் இடமாட்டான்;
34 தான் வந்த வழியே அவன் திரும்பி விடுவான், இந்த நகரத்தினுள் நுழைய மாட்டான், என்கிறார் ஆண்டவர்.
35 நம்மை முன்னிட்டும், நம் ஊழியன் தாவீதை முன்னிட்டும் இந்த நகரத்தை நாமே காப்போம், மீட்போம்."
36 ஆண்டவரின் தூதரோ அசீரியர்களின் பாளையங்களுக்குப் போய் நூற்றெண்பத்தையாயிரம் பேரைக் கொன்று போட்டார்; மறுநாட் காலையில் மற்றவர்கள் எழுந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் செத்துக் கிடந்தார்கள்.
37 பிறகு அசீரிய அரசனான சென்னாக்கெரிப் தன் நாட்டுக்குத் திரும்பிப் போய் நினீவேயில் வாழ்ந்து வந்தான்.
38 ஒரு நாள் அவன் தன் குல தெய்வமான நெஸ்ரோக்கின் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருக்கையில், அவனுடைய சொந்த மக்களான அதிராமெலக், சாராசார் என்பவர்கள் அவனை வாளால் வெட்டிக் கொன்று விட்டு, ஆரராத் நாட்டுக்கு ஓட்டம் பிடித்தனர்; அவன் மகனாகிய அசாராதோன் என்பவன் அவனுடைய இடத்தில் அரசாளத் தொடங்கினான்.
×

Alert

×