Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 36 Verses

1 எசேக்கியாஸ் அரசனின் பதினான்காம் ஆண்டில் அசீரியாவின் மன்னனாகிய சென்னாக்கெரிப் என்பவன் யூதாவின் அரண் சூழ்ந்த நகரங்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுப் பிடித்தான்.
2 அசீரிய அரசன், இரப்சாசேஸ் என்பவனை இலக்கீசினின்று யெருசலேமுக்கு எசேக்கியாஸ் அரசனுக்கு எதிராகப் பெரும் படையுடன் அனுப்பினான்; அவனும் புறப்பட்டு 'வண்ணான் வயல்' என்னுமிடத்திற்குப் போகும் சாலையில் மேல் குளத்தின் கால்வாயருகில் வந்து நின்றான்.
3 அவனிருந்த இடத்திற்கு அரண்மனைக் காரியக்காரனாயிருந்த எல்சியாசின் மகன் எலியாசிமும், செயலாளனாகிய சொப்னாவும், பதிவு செய்பவரான அசாப் என்பவரின் மகன் யோவாஹே என்பவனும் புறப்பட்டுப் போனார்கள்.
4 இரப்சாசேஸ் என்பவன் அவர்களைப் பார்த்து, "நீங்கள் எசேக்கியாசிடம் போய் இவ்வாறு சொல்லுங்கள்: 'அசீரியாவின் அரசனாகிய மாமன்னர் சொல்லுகிறார்: நீ எதன் மீது உன் நம்பிக்கையை வைத்திருக்கிறாய்?
5 எந்த யோசனையோடு அல்லது எந்தப் பலத்தோடு நமக்கு எதிராகக் கலகம் செய்ய நீ காத்திருக்கிறாய்?
6 இதோ முறிந்த நாணலையொத்த எகிப்தின் மீது நம்பிக்கை கொள்ளுகின்றாய் போலும்; மனிதன் அதன் மேல் ஊன்றி நின்றானாகில், அது அவனுடைய கையைப் பொத்துக் காயமாக்கும்; எகிப்தின் அரசனாகிய பார்வோனும் தன்னை நம்பியிருக்கிறவர்களுக்கு அவ்வாறு தான் செய்வான்.
7 அல்லது, "எங்கள் ஆண்டவராகிய கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்" என்பாயாகில், அவருடைய உயரிடங்களையும் பீடங்களையுந்தானே எசேக்கியாஸ் இடித்து விட்டு, யூதாவையும் யெருசேமையும் பார்த்து, "நான் அமைத்த இந்தப் பீடத்தின் முன்பாகவே நீங்கள் வழிபாடு செய்ய வேண்டும்?" என்று சொன்னான்.
8 இப்போது அசீரியாவின் அரசராகிய எம் தலைவரிடத்தில் சரணடைந்து விடு; அவரை எதிர்க்க உன்னால் இயலாது; உனக்கு இரண்டாயிரம் குதிரைகளை நானே கொடுக்கிறேன். ஆனால் அவற்றின் மேலேறிப் போர் புரியக் கூடியவர்களை ஏற்படுத்தவும் உன்னால் முடியாது.
9 அப்படியிருக்க, எம் தலைவரின் ஊழியர்களுள் மிகக் கடையரில் ஒரே ஒரு படைத் தலைவனைக் கூட எப்படி நீ எதிர்த்து நிற்கக்கூடும்? இப்படிப்பட்ட நீ தேர்ப்படைக்கும் குதிரை வீரர்களுக்கும் எகிப்தின் கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே!
10 மேலும், ஆண்டவரின் ஆணையின்றியா இந்த நாட்டை அழிக்கப் படையெடுத்து வந்தேன்? நீ அந்த நாட்டின் மேல் படையெடுத்துப் போய் அதை அழி என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டார்'" என்று சொல்லியனுப்பினான்.
11 அப்போது எலியாசின், சொப்னா, யோவாஹே என்பவர்கள் இரப்சாசேசை நோக்கி, "உம்முடைய ஊழியர்களான எங்களிடத்தில் சீரியா மொழியில் (அரமாயிக் மொழியில்) பேசும்; ஏனெனில் அது எங்களுக்குத் தெரியும். ஆனால், மதிலின் மேல் இருக்கும் மக்களுக்குக் கேட்கும்படி யூத மொழியில் (எபிரேய மொழியில்) எங்களுடன் பேச வேண்டா" என்று கேட்டுக் கொண்டனர்.
12 அதற்கு அவன், "உங்கள் தலைவனிடமும் உங்களிடமுந்தான் இவ்வாக்கியங்களை எல்லாம் சொல்லும்படி எம் தலைவர் என்னை அனுப்பினார் என்று நினைக்கிறீர்களா? உங்களோடு கூட தங்கள் மலத்தையே தின்று, தங்கள் சிறுநீரையே குடிக்கப் போகிறவர்களாகிய, மதில் மேலிருக்கும் இந்த மக்களுக்குந்தான் சொல்லும்படி என்னை அனுப்பினார்" என்றான்.
13 பின்னர், இரப்ராசேஸ் எழுந்து நின்று உரத்த குரலில் யூத மொழியில் பேசினான்: "அசீரியாவின் அரசனாகிய மாமன்னரின் வார்த்தைகளை கேளுங்கள்:
14 அரசர் கூறுகிறார்: 'எசேக்கியாஸ் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் உங்களை விடுவிக்க அவனால் முடியவே முடியாது.
15 ஆண்டவர் திண்ணமாய் நம்மை மீட்பார், இந்தப் பட்டணம் அசீரிய அரசனுக்குக் கைவிடப்படாது" என்று சொல்லி, எசேக்கியாஸ் ஆண்டவர் மேல் உங்களுக்குப் போலி நம்பிக்கை உண்டாக்க முயல்வான்; அதை நம்பாதீர்கள்.
16 எசேக்கியாசுக்குச் செவி மடுக்காதீர்கள்; ஏனெனில் அசீரியாவின் அரசர் கூறுகிறார்: வெளியே வந்து நம்மோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள். நாம் வந்து உங்கள் நாட்டைப் போன்ற நாட்டுக்கு -
17 கோதுமையும் திராட்சை இரசமும் மிகுதியாய்க் கிடைப்பதும், அப்பமும் திராட்சையும் மலிந்திருப்பதுமான நாட்டுக்கு- உங்களைக் கொண்டு போகும் வரையில், நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் சொந்தத் தோட்டத்தையும் திராட்சைக் கனியையும், சொந்த அத்திமரத்தின் பழங்களையும் சாப்பிடுவீர்கள்; சொந்தக் கேணியின் தண்ணீரையும் பருகுவீர்கள்.
18 ஆதலால், "ஆண்டவர் நம்மை மீட்பார்" என்று சொல்லி, எசேக்கியாஸ் உங்களை ஏமாற்றி விடாதபடி எச்சரிக்கையாய் இருங்கள். மக்களினங்களின் தெய்வங்களில் ஒன்றேனும் தன் நாட்டை அசீரிய அரசரின் கையிலிருந்து விடுவித்ததுண்டோ?
19 ஏமாத்தினுடைய தெய்வங்களும், அர்பாத்தினுடைய தெய்வங்களும் எங்கே? செபர்வாஹீமின் தெய்வங்கள் எங்கே? சமாரியாவை எம் கையினின்று அவை விடுவித்தனவோ?
20 இந்த நாடுகளின் தெய்வங்கள் எல்லாவற்றிலும் ஒன்றேனும் தன் நாட்டை எம் கையிலிருந்து விடுவித்திருந்தால் தானே, ஆண்டவரும் எம் கையினின்று யெருசலேமை விடுவிப்பார் (எனலாம்)?" என்றான்.
21 அவர்களோ மௌனமாய் இருந்தனர்; ஒரு வார்த்தையும் அவனுக்கு மறுமொழியாய்ச் சொல்லவில்லை; ஏனெனில், "அவனுக்கு மறுமொழி கூறவேண்டா" என்று அரசன் கட்டளையிட்டிருந்தான்.
22 அரண்மனைக் காரியக்காரனான எல்சியாஸ் மகன் எலியாசிமும், செயலாளனான சொப்னாவும், பதிவு செய்வோனான அசாப் என்பவனின் மகன் யோவாஹே என்பவனும் ஆடைகள் கிழிபட்ட கோலமாய் எசேக்கியாசிடம் வந்து, இரப்சாசேஸ் சொன்ன வார்த்தைகளையெல்லாம் அவனிடம் கூறினர்.
×

Alert

×