Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 34 Verses

1 மக்களினங்களே, நெருங்கி வந்து கேளுங்கள், பல நாட்டு மக்களே, காது கொடுத்துக் கவனியுங்கள்; பூமியும் அதில் நிறை யாவும் கேட்கட்டும், நிலமும் அதில் முளைக்கும் அனைத்தும் செவி சாய்க்கட்டும்.
2 ஏனெனில் ஆண்டவரின் கோபம் எல்லா மக்களினங்கள் மேலும் விழும், அவருடைய ஆத்திரம் அவர்களுடைய படைகள் அனைத்தின் மேலும் விழும். அவர்களை அவர் கொன்று போடுவார், அவர்களைப் படுகொலைக்குக் கையளிப்பார்.
3 கொல்லப்பட்டவர்கள் ஆங்காங்கு எறியப்படுவர், அவர்களுடைய பிணங்களினின்று நாற்றம் எழும்; அவர்களுடைய இரத்தம் மலைகள் மேலும் வழிந்தோடும்.
4 வானத்தின் படைகள் யாவும் சோர்வடையும், வான்வெளி ஏட்டுச் சுருள் போல் சுருட்டப்படும்; திராட்சைச் செடியின் இலைகளும் அத்திமரத்தின் இலைகளும் உதிர்வது போல வான் படைகள் யாவும் வீழும்.
5 ஏனெனில் வானகத்தில் நமது வாள் குடிவெறி கொண்டுள்ளது, இதோ, நீதி விளங்கும்படியாக இதுமேயா மேலும், படுகொலைக்கென நாம் தீர்மானித்த மக்கள் மேலும் இறங்கப் போகிறது.
6 ஆண்டவருடைய வாள் செந்நீர் நிறைந்துள்ளது, கொழுப்பால் அது தழும்பேறியுள்ளது; செம்மறிகள், வெள்ளாடுகள் இவற்றின் இரத்தத்தாலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பினாலும் நிறைந்துள்ளது. போஸ்ராவில் ஆண்டவருக்குப் பலி கிடைக்கப் போகிறது, இதுமேயாவில் படுகொலை நடக்கப் போகிறது.
7 அவற்றுடன் காட்டெருதுகளும் விழும், வலிய எருதுகளுடன் இளைய காளைகளும் வந்து மடியும்; அவற்றின் இரத்தத்தால் பூமி நிரம்பி வெறி கொள்ளும், மண் தரையில் அவற்றின் கொழுப்பு ஏறியிருக்கும்.
8 ஏனெனில் ஆண்டவர் பழிவாங்கும் நாளிதுவே, சீயோனுக்காக நீதி வழங்கிப் பலனளிக்கும் காலமாகும்.
9 ஏதோமின் நீரோடைகள் கீலாக மாறும், அதனுடைய நிலத்தின் மண் எரியும் கந்தகமாகும்; அதன் நிலம் தணல் பறக்கும் குங்கிலியமாகும்.
10 இரவும் பகலும் அது அணையாமல் எரியும், அதிலிருந்து புகை இடைவிடாது எழும்பிக் கொண்டிருக்கும்; தலைமுறை தலைமுறைக்கும் அது பாழாய்க் கிடக்கும், என்றென்றைக்கும் அவ்வழியாய் எவனும் செல்லமாட்டான்.
11 நாரையும் முள்ளம் பன்றியும் அதை உரிமையாக்கிக் கொள்ளும்; ஆந்தையும் காதமும் அங்கே குடிகொள்ளும்; ஒன்றுமில்லாமையாய் அதைப் பாழாக்கத் தண்டனைக் கோல் நீட்டப்படும், அதை முற்றிலும் அழிக்கும்படி தூக்கு நூல் இடப்படும்.
12 கூளிகள் அவ்விடத்தில் குடிகொள்ளும், பெருங்குடி மக்கள் அங்கிருக்க மாட்டார்கள்; அரசனுக்கு முடிசூட்டும் விழா அங்கே நடைபெறாது, அதன் தலைவர்கள் யாவரும் ஒன்றுமில்லாமை ஆவார்கள்.
13 அதன் வீடுகளில் முட்களும் காஞ்சொறிப் பூண்டுகளும் முளைக்கும், அதன் கோட்டைகள் மீது நெருஞ்சில்கள் கிளம்பும்; குள்ள நரிகள் அங்கே குடிகொள்ளும், தீக் கோழிகளுக்கு அது மேய்ச்சலிடாமகும்.
14 காட்டு மிருகங்களும் கழுதைப்புலிகளும் அங்கே கூடிவரும், கூளிகள் ஒன்றை ஒன்று கூப்பிடும். பெண் பேய் அங்கே வந்து தங்கியிருக்கும், அவ்விடத்தில் வந்து இளைப்பாறும்.
15 விரியன் பாம்பு அங்கே வளை பறித்து அதில் குட்டிகள் போட்டு வளர்க்கும்; சுற்றிக் குடைந்து, அவற்றை தன் நிழலில் காக்கும், பருந்துகள் தங்கள் துணைகளோடு கூடிவரும்.
16 ஆண்டவரின் நூலில் கவனமாய்த் தேடிப் படியுங்கள், இவற்றுள் ஒன்றும் குறைந்து போகாது; ஒன்றுக்கொன்று துணையின்றிப் போய் விடாது; ஏனெனில் அவர் வாயிலிருந்து வந்தது அவரது ஆணையே, அவரது ஆவி தான் அவற்றை ஒன்று சேர்த்தது.
17 அவரே அவற்றுக்குச் சீட்டுப் போட்டுப் பங்கு பிரித்தார், அவரது கையே அளவுக்கேற்பப் பகிர்ந்து கொடுத்தது. அவை அதனை என்றென்றைக்கும் உடைமையாக்கிக் கொள்ளும், தலைமுறை தலைமுறையாய் அங்கே குடியிருக்கும்.
×

Alert

×