Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 23 Verses

1 தீர் நகரத்தைப் பற்றிய இறைவாக்கு: தர்ஸீசின் மரக் கலங்களே, கதறியழுங்கள்; ஏனெனில் உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டு விட்டது; சேத்திம் நாட்டினின்று அவை வரும் போது, இந்தச் செய்தி எட்டியது.
2 கடற்கரை நாட்டில் வாழும் மக்களே, சீதோன் வியாபாரிகளே, மௌனமாயிருங்கள்; உங்கள் தூதுவர்கள் நீர்மேல் பயணம் செய்து கடல் கடந்து வெளிநாடு போயிருந்தார்கள்;
3 நைல் நதி நீர்பாசனத்தால் விளைந்தவையும், ஆற்றுப்பாசனத்தால் அறுவடையானவையும் உனது வருமானம்; மக்களினம் பலவற்றோடு நீ வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டாய்.
4 சீதோனே, நீ வெட்கப்படு; "நான் பிரசவ வேதனை அடையவுமில்லை, பிள்ளை பெறவுமில்லை; இளைஞர்களை உண்பிக்கவுமில்லை, கன்னிப் பெண்களை வளர்க்கவுமில்லை" என்று கடல் சொல்லுகிறது, கடற்கரைக் கோட்டை கூறுகிறது.
5 தீர் நாட்டைப் பற்றிய செய்தி எகிப்துக்கு எட்டும் போது, அச் செய்தியைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.
6 கடலைக் கடந்து ஓடி விடுங்கள், கடற்கரை நாட்டில் வாழ்பவர்களே, கதறியழுங்கள்.
7 பண்டைக்கால முதல் நிலைத்திருந்து மகிழ்ச்சி பொங்கும் உங்கள் நகரம் இது தானோ! தொலை நாடுகளுக்குச் சென்று குடியேற இந்த நகரத்தார் கிளம்பினார்களே!
8 மணிமுடிகளை மன்னர்களுக்கு வழங்கி வந்ததும், இளவரசர் போன்ற வணிகர்களைக் கொண்டிருந்ததும், உலகத்தில் மதிப்பு வாய்ந்த வியாபாரிகளைப் பெற்றிருந்ததுமான தீர் நகருக்கெதிராக இதைத் திட்டமிட்டவர் யார்?
9 எல்லா மகிமையின் ஆணவத்தைப் பங்கப்படுத்தவும், உலகத்தில் மதிப்பு வாய்ந்தவர்களை அவமதிக்கவும், சேனைகளின் ஆண்டவர் தாம் இதைத் திட்டமிட்டார்.
10 தர்சீஸ் ஈன்றெடுத்த மகளே, நைல் நதி போல் உன் நாட்டில் பரவியோடு, இனி மேல் உனக்குத் தடையே இல்லை.
11 கடல் மீது தம் கையை அவர் நீட்டியுள்ளார், அரசுகளை அவர் ஆட்டி வைத்திருக்கிறார், கானானின் பலமான கோட்டைகளைப் பாழ்படுத்துமாறு அதற்கெதிராக ஆண்டவர் கட்டளை தந்தார்.
12 ஒடுக்கப்பட்ட கன்னிப் பெண்னே, சீதோன் மகளே, இனிமேல் நீ அக்களிப்பு அடையமாட்டாய்; எழுந்து, கடல் கடந்து செத்தீமுக்குப் போ; அங்கேயும் உனக்கு அமைதி இராது" என்று அவர் சொல்லியிருக்கிறார்.
13 இதோ, கல்தேயர் நாட்டைப் பார்; இப்பொழுது அது ஒரு நாடாகவே இல்லை, அசீரியர்கள் அதைக் காட்டு மிருகங்களுக்கு விட்டு விட்டனர், முற்றுகையிட அதைச் சுற்றிக் கொத்தளங்கள் எழுந்தன, அரண்மனைகள் இடித்துத் தகர்க்கப்பட்டன, நாடும் பாழாகிக் கிடக்கின்றது.
14 கடல் வாணிக மரக்கலங்களே, கதறியழுங்கள்; ஏனெனில் உங்கள் அரண் அழிவுற்றது.
15 அப்போது, எழுபது ஆண்டுகளுக்கு தீர் நகரம் மறக்கப்பட்டு விடும்; ஆனால் எழுபது ஆண்டுகளுக்குப் பின்னர், வேறொரு அரசனுடைய நாட்களில், தீர் நகருக்கு விலைமகளின் கவிதையில் சொல்லியுள்ளபடி நிறைவேறும்:
16 மறக்கப்பட்ட விலைமகளே, வீணையை எடுத்துக்கொள், நகரத்தைச் சுற்றி வா, இனிய இசை எழுப்பு, பாடல்கள் பல பாடு, உன்னை அனைவரும் நினைக்கச் செய்."
17 எழுபது ஆண்டுகளுக்குப் பின் ஆண்டவர் தீர் பட்டணத்தைச் சந்திப்பார்; அவள் திரும்பவும் தன் பழைய தொழிலிலேயே ஈடுபடுவாள்; பூமியின் மேலுள்ள உலகத்து அரசுகள் எல்லாவற்றுடனும் வேசித்தனம் செய்வாள்.
18 ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களும் வருமானமும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்படும்; அவற்றைச் சேர்த்து வைக்க மாட்டார்கள்; அவை குவிந்து கிடக்க மாட்டா; ஆனால் அவளுடைய வாணிகப் பொருட்களைக் கொண்டு ஆண்டவர் திருமுன் வாழ்பவர்க்கு ஏராளமான உணவும் நல்ல உடையும் வழங்கப்படும்.
×

Alert

×