Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 22 Verses

1 காட்சியின் பள்ளத்தாக்கைப்பற்றிய இறைவாக்கு: நீங்கள் அனைவரும் வீட்டுக் கூரைகளின் மீது ஏறிப் போயிருப்பதற்குக் காரணம் என்ன?
2 ஆரவாரமிக்க நகரமே, அக்களிப்பு கொள்ளும் பட்டணமே, மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பு உன்னில் நிறைந்திருப்பது ஏன்? கொலையுண்ட உன் மக்கள் வாளாலும் மடியவில்லை, போர்க்களத்திலும் மாண்டாரல்லர்.
3 உன்னுடைய தலைவர்கள் அனைவரும் ஒன்றாய் ஓட்டமெடுத்தனர், வில்லை நாணேற்றாமுன்பே பிடிபட்டார்கள்; உன்னில் காணப்பட்ட யாவரும் பிடிபட்டுக் கட்டுண்டனர்.
4 ஆதலால் நான் சொன்னேன்: "நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டா; ஆறாத்துயர் கொண்டு நான் அழப்போகிறேன், என் மக்களாகிய மகளின் அழிவைக் குறித்து எனக்குத் தேறுதல் சொல்ல யாரும் முயல வேண்டா."
5 அமளியும் திகிலும் நிறைந்தது அந்நாள், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் அதை வரச்செய்தார்; இன்னோம் பள்ளத்தாக்கில் மதிற்சுவர் தகர்க்கப்பட்டது, மக்கள் மலைகள்மேல் நின்று உதவிக்குக் கூவுகிறார்கள்.
6 ஏலாம் அம்பறாத் தூணியை எடுத்துக் கொண்டது, தேர்ப்படையும் குதிரைவீரரும் புறப்பட்டுவிட்டனர், கீர் நகர மக்கள் கேடயத்தை எடுத்து வந்தனர்.
7 செழுமையான உன் பள்ளத்தாக்குகள் தேர்ப்படைகளால் நிரப்பப்பட்டன; குதிரை வீரர் உன் வாயில்களிலே வந்து அணிவகுத்து நின்றனர்.
8 யூதாவின் மதில் இடிபட்டுத் திறக்கப்பட்டது, அந்நாளில் 'வனவீடு' என்னும் படைக்கலச் சாலையை நோக்கினாய்;
9 தாவீதின் நகரத்து மதில்களில் உடைப்புகள் பல இருந்ததைக் கண்டீர்கள்; கீழ்குளத்தின் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்.
10 யெருசலேமின் வீடுகளை எண்ணினீர்கள், அரணைப் பலப்படுத்த வீடுகளை இடித்தீர்கள்.
11 பழங்குளத்தின் தண்ணீருக்கென்று இரண்டு மதில்களுக்கு நடுவில் ஒரு நீர்த் தேக்கம் அமைத்தீர்கள். ஆனால் படைத்தவரை நீங்கள் நோக்க மறந்தீர்கள்; முற்காலத்திலேயே அனைத்தையும் திட்டமிட்டவரைப் பார்க்கவுமில்லை.
12 அந்நாளில் சேனைகளின் கடவுளான ஆண்டவர் அழும்படியும் புலம்பும்படியும், தலையை மழித்துக் கொள்ளவும், சாக்குத் துணி உடுத்தவும் உங்களை அழைத்தார்.
13 ஆனால், இதோ நீங்கள் மகிழ்ச்சியும் அக்களிப்பும் பொங்க எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியுண்டு இரசங் குடிக்கிறீர்கள்: "உண்போம், குடிப்போம், நாளைக்கு மடிவோம்" என்கிறீர்கள்.
14 சேனைகளின் ஆண்டவர் எனக்குச் சொன்னார், நான் காதால் கேட்டேன்: "நீங்கள் சாகும் வரையில் இந்த அக்கிரமத்துக்கு மன்னிப்பு என்பது உங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காது" என்கிறார் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
15 சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "வீட்டுக் காரியங்களைக் கவனிக்கின்ற காரியக்காரனான சொப்னா என்பவனிடம் போய், அவனுக்கு நீ இதைச் சொல்லவேண்டும்:
16 உனக்கு இங்கே என்ன வேலை? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? உனக்கென்று நீ இங்கே கல்லறை வெட்டியிருக்கிறாய், உயர்ந்த இடத்தில் உனக்குக் கல்லறை அமைக்கிறாய், பாறையில் உனக்கோர் இருப்பிடம் குடைந்துள்ளாயே!
17 மனிதா, இதோ உன்னை ஆத்திரத்தோடு ஆண்டவர் பிடித்துத் தள்ளுவார், உன்னைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்ளுவார்.
18 சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றுவார், பரந்த வெளியில் உன்னைப் பந்தாடுவார், அங்கேயே நீ சாவாய்; உன் தலைவனுடைய வீட்டுக்கோர் அவமானமாய் இருந்தவனே, உன் அழகிய தேர்களும் அங்கேயே கிடக்கும்.
19 உன் பதவியிலிருந்து உன்னைக் கீழே தள்ளுவோம், உன் நிலையிலிருந்து உன்னை விழத்தாட்டுவோம்.
20 அந் நாளில் எல்கியாவின் மகனான நம் ஊழியன் எலியாக்கீமை அழைப்போம்.
21 உன் உடைகளை அவனுக்கு உடுத்துவோம், உன் இடைக் கச்சையை அவனுக்குக் கட்டுவோம், உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்போம், யெருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வீட்டாருக்கும் அவன் ஒரு தந்தையைப் போல் இருப்பான்.
22 தாவீதின் வீட்டுத் திறவுகோலை நாம் அவனுடைய தோள் மேல் வைப்போம்; அவன் திறந்தால், யாரும் அதை மூடமாட்டார்கள்; அவன் மூடினால், யாரும் அதைத் திறக்கமாட்டார்கள்.
23 உறுதியான சுவரில் முளை போல் அவனை அடித்து வைப்போம்; அவன் தன் தந்தையின் வீட்டுக்கு மகிமையின் அரியணையாவான்;
24 முளையாணியாகிய அவன் மேல் அவனுடைய தந்தையின் வீட்டு மகிமையெல்லாம்- சந்ததியும் வழித் தோன்றல்களும் கிண்ணங்கள் முதல் குடங்கள் வரையுள்ள எல்லாக் கலங்களும்- மாட்டித் தொங்கும்.
25 அந் நாளில், உறுதியான சுவரில் அடிக்கப்பட்டிருந்த முளை பிடுங்கிக்கொள்ளும்; முளையானது முறியுண்டு கீழே விழும்; அதில் தொங்கியவை அனைத்தும் அழியும்; ஏனெனில் ஆண்டவரே இதைச் சொல்லியிருக்கிறார் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
×

Alert

×