1
|
எகிப்து நாட்டுக்கு எதிராகக் கூறப்பட்ட இறைவாக்கு: இதோ, விரைந்து செல்லும் கார்மேகத்தில் ஏறிக் கொண்டு, ஆண்டவர் எகிப்துக்கு வருகின்றார்; எகிப்து நாட்டின் சிலைகள் அவர் முன்னிலையில் அஞ்சி நடுங்கும், எகிப்தியரின் இதயம் உள்ளுக்குள் பாகாய் உருகும். |
2
|
எகிப்தியருக்கு எதிராய் எகிப்தியரையே தூண்டிவிடுவோம், சகோதரனுக்கு விரோதமாய்ச் சகோதரனும், தன் அயலானுக்கு எதிராய் ஒவ்வொருவனும், நகருக்கெதிராய் நகரமும், அரசுக் கெதிராய் அரசும் அவர்களுக்குள்ளே போரிடுவார்கள். |
3
|
எகிப்தியரின் ஆற்றல் அவர்களுக்குள்ளே வற்றிப் போகும், அவர்களுடைய திட்டங்களை நாம் குழப்பி விடுவோம்; சிலைகளையும் குறிசொல்பவர்களையும் ஆலோசனை கேட்பார்கள்; மை வித்தைக்காரரையும் மந்திரவாதிகளையும் வழி கேட்பார்கள். |
4
|
கொடுமையாக வேலை வாங்கும் தலைவர்களிடம் எகிப்து நாட்டினரைக் கையளிப்போம்; கொடுங்கோலனான அரசன் ஒருவன் அவர்களை ஆள்வான் என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய கடவுள். |
5
|
கடல் நீர் வற்றிப் போகும், ஆற்று நீர் வறண்டு காய்ந்து போகும். |
6
|
அதனுடைய கால்வாய்கள் நாற்றம் வீசும், எகிப்து நாட்டின் நைல் ஆற்றுக் கிளை நதிகள் நீர் குறைந்து மௌ;ள மௌ;ள வற்றிப் போகும், கோரைகளும் நாணல்களும் வதங்கிப் போகும். |
7
|
நைல் நதியருகிலும், நைல் நதியின் கரைகளிலும், இருக்கின்ற புல்தரைகள் யாவும், நைல் நதியருகில் விதைக்கப் பட்டவை அனைத்தும் வறண்டு போம், வாடிப்போம், மடிந்து போகும். |
8
|
செம்படவர்கள் அழுவார்கள், புலம்புவார்கள்; நைல் நதியில் தூண்டில் போடுவோர் அனைவரும் துக்கம் கொள்வர்; தண்ணீரில் வலை வீசுவோர் கலங்கி நிற்பர். |
9
|
மெல்லிய சணலாடை செய்வோர் நம்பிக்கையிழப்பர், வெண்பருத்தியில் துணி நெய்வோர் சோர்வு கொள்வர். |
10
|
நெசவுத் தொழில் செய்பவர்கள் நசுக்கப்படுவர், கூலி வேலை செய்வோர் அனைவரும் துக்கம் கொள்வார்கள். |
11
|
தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள், பார்வோனின் ஞானமிக்க மந்திரிகள் மடமையான ஆலோசனை கொடுத்தார்கள்; "நான் ஞானிகளின் புதல்வனல்லனோ? பழங்கால மன்னர்களின் மைந்தன் அல்லனோ?" என்று நீங்கள் பார்வோனிடம் எவ்வாறு சொல்லக்கூடும்? |
12
|
அப்படியானால் உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் ஆண்டவர் எகிப்துக்கு எதிராக என்ன திட்டம் தீட்டியுள்ளார் என்பதை அவர்கள் உனக்கு வெளியாக்கிக் கூறட்டுமே! |
13
|
தானீஸ் பட்டணத்துத் தலைவர்கள் அறிவிலிகள் ஆனார்கள், மெம்பீஸ் நகரத்துத் தலைவர்கள் ஏமாந்து போனார்கள்; எகிப்து மக்களுக்கு மூலைக்கல் போல் இருந்தவர்களே எகிப்தைத் தவறான நெறியில் நடத்தினார்கள். |
14
|
ஆண்டவர் அதன் நடுவில் மனக்குழப்பத்தை உண்டாக்கினார், போதை வெறி கொண்டவன் வாந்தியெடுத்துத் தள்ளாடுவது போல், எகிப்தை அதனுடைய செயல்களிலெல்லாம் தள்ளாடச் செய்தனர். |
15
|
எகிப்து நாட்டின் தலையோ வாலோ, கிளையோ நாணலோ, யாரும் எதையும் செய்து பயன் விளையாது. |
16
|
எகிப்தும் அசீரியாவும் மனந்திரும்பும்: அந்நாளில், எகிப்தியர் பேடிகளாகி, ஆண்டவர் அவர்கள் மேல் நீட்டியுள்ள கையின் வல்லமையைக் கண்டு அஞ்சி நடுங்குவார்கள். |
17
|
யூதா நாடு எகிப்து நாட்டுக்கொரு திகிலாய் இருக்கும்; யூதா என்னும் பெயரைக் கேட்பவர் அனைவரும், சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகக் தீட்டியுள்ள திட்டத்தை முன்னிட்டு அஞ்சுவார்கள். |
18
|
அந்நாளில் கானான் நாட்டின் மொழியைப் பேசும் நகரங்கள் எகிப்து நாட்டில் ஐந்து இருக்கும்; அவை சேனைகளின் ஆண்டவர் பேரால் ஆணையிடும்; அவற்றுள் ஒன்று சூரியபட்டணம் எனச் சொல்லப்படும். |
19
|
அந்நாளில், எகிப்து நாட்டின் நடுவில் ஆண்டவருக்கென ஒரு பீடம் இருக்கும்; நாட்டின் எல்லைப்புறத்தில் ஆண்டவருக்கென ஒரு தூண் நாட்டப்பட்டிருக்கும். |
20
|
அது எகிப்து நாட்டில் சேனைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சாட்சியாகவும் விளங்கும்; கொடியவர்கள் ஒடுக்கும் போது ஆண்டவரை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவார்கள்; அவரோ அவர்களுக்கு மீட்பர் ஒருவரை அனுப்பி, அவர்களை விடுவித்துக் காப்பாற்றுவார். |
21
|
அப்போது ஆண்டவர் தம்மை எகிப்தியருக்கு வெளிப்படுத்துவார்; எகிப்தியர் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வர்; பலிகளும் தகனப் பலிகளும் தந்து அவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்கு நேர்ச்சிக் கடன் வைத்துக் கொண்டு, அவற்றை நிறைவேற்றுவார்கள். |
22
|
ஆண்டவர் எகிப்தியரைத் துன்பத்தால் வதைப்பார்; வதைத்தாலும் துன்பத்தை ஆற்றிடுவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவர் அவர்களுடைய மன்றாட்டுகளைக் கேட்டு அவர்களை நலமாக்குவார். |
23
|
அந்நாளில் எகிப்துக்கும் அசீரியாவுக்கும் ஒரு நெடுஞ்சாலை அமைக்கப்படும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் தாராளமாய்ப் போய் வருவார்கள்; எகிப்தியரும் அசீரியரும் சேர்ந்து வழிபாடு செய்வார்கள். |
24
|
அந்நாளில், இஸ்ராயேல் எகிப்தோடும் அசீரியாவோடும் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து, உலகத்தின் நடுவில் ஆசீர்வாதமாய் விளங்கும்; |
25
|
அதையே சேனைகளின் ஆண்டவர் ஆசீர்வதித்து, "நம் மக்களாகிய எகிப்தும், நமது கைவேலைப்பாடாகிய அசீரியாவும், நமது உரிமைச் சொத்தாகிய இஸ்ராயேலும் ஆசிர்வதிக்கப்படுவனவாக!" என்று சொல்லி யிருக்கிறார். |
Isaiah 19:1 Tamil Language Bible Words basic statistical display
COMING SOON ...