Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 10 Verses

1 அநீதியான சட்டங்களை ஆக்குவோர்க்கும், அநியாயங்களை எழுதி வருவோர்க்கும் ஐயோ கேடு!
2 அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல் ஒடுக்குகிறார்கள், நம் மக்களுள் எளியோரின் உரிமையைப் பறிக்கிறார்கள். கைப்பெண்களைக் கொள்ளைப் பொருள் போல பறிக்கிறார்கள், திக்கற்றவர்களை இரையாக்கிக் கொள்ளுகிறார்கள்!
3 தண்டனை கிடைக்கும் நாளிலே என்ன செய்வீர்கள்? தொலைவிலிருந்து அழிவு வரும் போது என்ன ஆவீர்கள்? உதவி தேடி யாரிடம் ஓடிச் செல்வீர்கள்? உங்கள் செல்வங்களை எவ்விடத்தில் வைத்துச் செல்வீர்கள்?
4 கைதியாய் விலங்குக்குத் தலை வணங்காமலோ, மடிந்தவர்களோடு மடியாமலோ தப்ப முடியாது; இதிலெல்லாம் அவர் சினம் ஆறவில்லை, நீட்டிய கோபக் கை இன்னும் மடங்கவில்லை.
5 அசீரியாவுக்கு ஐயோ கேடு! கோபத்தில் நாம் எடுக்கும் கோல் அது, ஆத்திரத்தில் நாம் ஏந்தும் தடி அந் நாடு.
6 இறைப் பற்றில்லா இனத்திற்கெதிராய் அதை அனுப்புகிறோம், நம் ஆத்திரத்துக்கு ஆளான மக்களுக்கு விரோதமாய் அதற்கு நாம் ஆணை கொடுக்கிறோம்; அவர்களைக் கொள்ளையடித்துப் பொருட்களைப் பறித்துக் கொள்ளவும், தெருவிலிருக்கும் சேற்றைப் போல் அவர்களை மிதிக்கவும் அந்நாட்டுக்கு நாம் கட்டளையிடுகிறோம்.
7 ஆனால் அந்நாட்டினர் அவ்வாறு நினைக்கவில்லை, அவர்கள் மனம் அவ்வாறு கருதவில்லை; ஆனால் அவர்கள் மனம் மக்களினம் பலவற்றை அழித்து நாசமாக்கவே விரும்புகிறது.
8 ஏனெனில் அவர்கள் சொல்வது இதுவே: "எங்கள் படைத் தலைவர் அனைவரும் அரசர்கள் அல்லரோ?
9 கால்னோ நகரம் கார்க்கேமிஷ் போலானதில்லையோ? ஏமாத்தோ அர்பாத்தைப் போல் இல்லையோ? சமாரியா தமஸ்குவைப் போல் இல்லையோ?
10 யெருசலேம், சமாரியா இவற்றிலுள்ள படிமங்களை விடச் சிறப்பு வாய்ந்த சிலைகளுடைய அரசுகள் வரை நம்முடைய கை எட்டியிருக்க,
11 சமாரியாவுக்கும் அதன் படிமங்களுக்கும் நாம் செய்தது போல, யெருசலேமுக்கும் அதன் சிலைகளுக்கும் செய்யமாட்டோமா?"
12 ஆண்டவர் சீயோன் மலை மீதும் யெருசலேமின் மேலும் தம் வேலைகளையெல்லாம் முடித்த பிறகு அசீரியாவின் அரசனுடைய ஆணவம் நிறைந்த உள்ளத்தின் சிந்தனை மேலும், இறுமாப்பு நிறைந்த அவன் செருக்கின் மேலும் தண்டனையை வரச் செய்வார்.
13 ஏனெனில் அவன் இவ்வாறு சொல்லி வந்தான்: "என்னுடைய கையின் வல்லமையால் அதைச் செய்து முடித்தேன், என் ஞானத்தால் அதற்கான திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்களின் எல்லைகளை அகற்றி விட்டேன், அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன், அரியணைகளில் அமர்ந்திருந்தவர்களைக் கீழே தள்ளினேன்.
14 குருவிக் கூட்டைப் பிரித்தெடுப்பது போல் என் கை மக்களினங்களின் செல்வங்களை எடுத்துக் கொண்டது; கைவிடப்பட்ட முட்டைகளைச் சேர்த்தெடுப்பது போல் உலக முழுவதையும் நான் சேர்த்துக்கொண்டேன்; எனக்கெதிராய் இறக்கையடிக்க யாருமில்லை, வாய் திறக்கவோ கீச்சிடவோ துணிந்தாரில்லை."
15 பிளப்பவனுக்கும் மேலாகக் கோடரி பெருமை கொள்வதுண்டோ? அறுப்பவனுக்கு எதிராக வாள் மேன்மை பாராட்டுமோ? தன்னைத் தூக்கியவனைக் கைத்தடி சுழற்றியது போலும், மரமல்லாத மனிதனை மரக்கோலானது தூக்கியது போலுமாகும்!
16 ஆதலால் ஆண்டவர்- சேனைகளின் ஆண்டவர், அவனுடைய கொழுத்த வீரர்கள் நடுவில் பாழாக்கும் நோயை அனுப்புவார்; அவனுடைய மகிமைக்குக் கீழே தணல் பற்ற வைக்கப்படும், அது நெருப்பைப் போல் எரியும்.
17 இஸ்ராயேலின் ஒளியானவர் நெருப்பாவார்; அதனுடைய பரிசுத்தர் தீக்கொழுந்தாய் இருப்பார்; அவனுடைய முட்களையும் முட்புதர்களையும் ஒரே நாளில் சுட்டுத் தீய்த்துச் சாம்பலாக்கி விடும்.
18 அவனுடைய காட்டின் மகிமையையும் வளம் நிறைந்த சோலையின் மாண்பினையும் ஆண்டவர் முற்றிலும் அழித்து விடுவார், உடலும் உயிரும் அழிக்கப்படும்; நோயாளி ஒருவன் மெலிந்து தேய்வது போல் அதுவும் அவ்வாறே ஆகி விடும்.
19 அவனுடைய காட்டின் மரங்களுள் மிகச் சிலவே எஞ்சியிருக்கும், ஒரு குழந்தை கூட அவற்றைக் கணக்கிட்டு எழுதி விடலாம்.
20 அந்நாளில் இஸ்ராயலின் வீட்டாருள் எஞ்சியவரும், யாக்கோபின் வீட்டாருள் தப்பியவரும், தங்களைத் துன்புறுத்தியவனைச் சார்ந்திராமல், உண்மையில் இஸ்ராயேலின் பரிசுத்தராகிய ஆண்டவரையே இனிச் சார்ந்திருப்பார்கள்.
21 எஞ்சினோர் திரும்பி வருவார்கள், யாக்கோபின் வீட்டாருள் எஞ்சினோர் வல்லமை மிக்க கடவுளிடம் திரும்பி வருவர்.
22 இஸ்ராயேலே, உன் மக்கள் கடற்கரை மணி போல் எண்ணிறந்தாராயினும், அவர்களுள் எஞ்சினோர் மிகச் சிலரே திரும்பிவருவர். அழிவு முடிவு செய்யப்பட்டு விட்டது; இதிலெல்லாம் இறைவனின் நீதி விளங்கும்.
23 ஏனெனில் இறைவன் சேனைகளின் ஆண்டவர் தம் தீர்மானத்தின்படியே நாடெங்கினும் அழிவைக் கொண்டுவருவார்.
24 ஆதலால் இறைவன்- சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "சீயோனில் வாழ்கின்ற எம் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியர்கள் உங்களைத் தடியினால் அடிக்கும் பொழுதும், உங்களுக்கெதிராய்த் தங்கள் கோலை உயர்த்தும் பொழுதும் நீங்கள் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம்.
25 ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்தில் நமது ஆத்திரம் தணிந்து விடும்; அவர்களை அழிக்கும்படியாக நமது கோபம் திருப்பப்படும்.
26 ஓரேப் பாறையருகில் முன்பு மாதியானைத் தண்டித்தது போலும், எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீது கோலை நீட்டியது போலும், சேனைகளின் ஆண்டவர் அவர்களுக்கெதிராய்ச் சாட்டையை எடுப்பார்.
27 அந்நாளில் உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை நீங்கும், உங்கள் கழுத்திலிருந்து அவனுடைய நுகத்தடி எடுக்கப்படும்"; ரிம்மோனிலிருந்து புறப்பட்டு வந்துள்ளான்,
28 அயாத்துக்கு அவன் வந்து விட்டான், மகிரோனைக் கடந்து சென்றுள்ளான், மக்மாஸ் அருகில் தன் மூட்டை முடிச்சுகளை வைத்திருக்கிறான்.
29 கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள், காபாவின் அருகில் தங்கி இரவைக் கழிக்கிறார்கள்; ராமா திடுக்கிட்டு அஞ்சுகிறது, சவுலின் நகரான கபாஹாத் ஓட்டமெடுத்தது.
30 கால்லீம் என்னும் மங்கையே கூக்குரலிடு! லாயிசாவே கூர்ந்து கேள்! அநாத்தோத்தே மறுமொழி சொல்!
31 மெத்மேனா ஓட்டம் பிடித்தது, காபீம் குடிமக்கள் புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.
32 இன்றைக்கே அவன் நேபேயில் தங்குவான், சீயோன் மகளின் மலையையும், யெருசலேமின் குன்றையும் கையசைத்து அச்சுறுத்துவான்.
33 இதோ, சேனைகளின் ஆண்டவராகிய இறைவன், பயங்கரமான வல்லமையோடு கிளைகளை வெட்டுவார், ஓங்கி வளர்ந்தவை வெட்டிக் கீழே தள்ளப்படும், உயர்ந்திருப்பவை தாழ்த்தப்படும்.
34 அடர்ந்த காட்டினை அவர் கோடரியால் வெட்டித் தள்ளுவார், லீபான் நிமிர்ந்து நிற்கும் மரங்களுடன் கீழே சாயும்.
×

Alert

×