Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Hebrews Chapters

Hebrews 11 Verses

1 விசுவாசம் என்பது நாம் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பவை கிடைக்கும் என்னும் நிலையான உறுதி.
2 கண்ணுக்குப் புலப்படாதவை பற்றி மனந்தளராத நிலை. இந்த விசுவாசத்தின் பொருட்டே நம் முன்னோர் நற்பெயர் பெற்றனர்.
3 உலகங்களெல்லாம் கடவுளின் திருச்சொல்லால் உருவாயின என்றும், ஆகவே காணாதவற்றினின்று காண்பவை உண்டாயின என்றும் விசுவாசத்தினாலேயே உணர்கிறோம்.
4 விசுவாசத்தினால் தான் ஆபேல் காயினை விட மேலான பலியைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தான்; விசுவாசத்தினாலேயே, அவன் நல்லவன் எனக் கடவுளிடமிருந்து சான்று பெற்றான்; ஏனெனில், அவனுடைய காணிக்கைகள் ஏற்றவையெனக் கடவுளே சான்று பகர்ந்தார். இறந்தும் அவ்விசுவாசத்தினால் இன்னும் பேசுகிறான்.
5 விசுவாசத்தினாலேயே ஏனோக் சாவைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார். கடவுள் அவரை மேலே எடுத்துக் கொண்டதால் மறைந்து போய்விட்டார். மேலே எடுத்துக்கொள்ளப்படுமுன்பே கடவுளுக்கு உகந்தவர் என்று நற்சான்று பெற்றவரானார்.
6 விசுவாசத்தினாலன்றி ஒருவனும் கடவுளுக்கு உகந்தவனாயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்கிறவன் அவர் இருக்கிறார் என்றும், தம்மைத் தேடுபவர்களுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறாரென்றும் விசுவசிக்க வேண்டும்.
7 விசுவாசத்தினாலே, தம் கண்ணுக்கு மறைவாயிருந்ததைக் குறித்து நோவா இறைவனால் எச்சரிக்கப்பெற்ற போது, தம் குடும்பத்தைக் காப்பாற்றப் பயபக்தியோடு பேழையை அமைத்தார். அதே விசுவாசத்தினால் உலகைக் கண்டனம் செய்து, விசுவாசத்தினால் இறைவனுக்கு ஏற்புடையவராகும் பேற்றுக்கு உரிமையாளர் ஆனார்.
8 இறைவனின் அழைப்பை ஏற்ற ஆபிரகாமை கீழ்ப்படிந்து தம் உரிமைச் சொத்தாகப் பெறவிருந்த இடத்திற்குப் போனது விசுவாசத்தினாலேயே.
9 போகவேண்டிய இடத்தை அறியாதிருந்தும் புறப்பட்டுப் போனார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறி, அதே வாக்குறுதியின் உடன் உரிமையாளர்களான ஈசாக், யாக்கோபுடன் கூடாரங்களில் குடியிருந்து, வேற்று நாட்டினர் போல் வாழ்ந்தது, விசுவாசத்தினாலேயே.
10 ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ளதொரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதன் சிற்பியும் ஆக்குநரும் கடவுளே.
11 சாராள் வயதான காலத்திலும் ஒரு மகனை ஈன்றெடுக்க ஆற்றல் பெற்றது விசுவாசத்தினாலே தான்.
12 ஏனென்றால், வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என்று அவன் கருதினான். இவ்வாறு உயிரிழந்தவர் போலிருந்த ஒரே ஆள், விண்மீன்களைப் போலவும், கடற்கரை மணலைப் போலவும் கணக்கற்ற மக்களுக்குத் தந்தையானார்.
13 இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலேயே இறந்தனர்: வாக்களிக்கப்பட்டவற்றைக் கைக்கொள்ளவில்லையெனினும், அவற்றைத் தொலைவில் கண்டனர்; கண்டு வாழ்த்தினர். இவ்வுலகில் தாங்கள் வேற்று நாட்டினர் எனவும், அந்நியர்களெனவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
14 இவ்வாறு ஒப்புக்கொள்பவர்களோ நம் தாய்நாட்டைத் தேடுவோர் எனக் காட்டுகின்றனர்.
15 தாங்கள் விட்டுவந்த நாட்டையே நினைவில் வைத்திருந்தால் திரும்பிச் செல்ல வாய்ப்பு இல்லாமலா இருந்திருக்கும்!
16 ஆனால், அவர்கள் உண்மையில் நாடியது ஒரு மேலான நாட்டை, அதாவது விண்ணக நாட்டையே. அதனால்தான் கடவுளும் தம்மை 'அவர்களுடைய கடவுள்' என அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. தாமே அவர்களுக்காக ஒரு நகரை அமைத்துள்ளார் அல்லரோ?
17 விசுவாசத்தினாலேயே ஆபிரகாம் தாம் பரிசோதிக்கப்பட்ட பொழுது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தார்.
18 "உன் பெயர் நீடிக்க, ஈசாக்கின் வழியாய் உனக்கு மக்கள் பிறப்பார்கள்" என்று இறைவன் கூறியிருந்தார். வாக்குறுதிகளைப் பெற்றிருந்தும் ஆபிரகாம் தம் ஒரே மகனைப் பலியிடத் தயங்கவில்லை.
19 ஏனெனில், கடவுள் இறந்தோரையும் எழுப்ப வல்லவர் என்பதை மனதில் கொண்டிருந்தார். எனவே, தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். இது ஒரு முன்னடையாளமாயிற்று.
20 விசுவாசத்தினால் தான் ஈசாக்கு பிற்காலத்தில் நிகழ வேண்டியவற்றைக் குறிப்பிட்டு யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் ஆசி அளித்தார்.
21 யாக்கோபு சாகும் பொழுது சூசையின் மக்கள் ஒவ்வொருவர்க்கும் ஆசி அளித்ததும், தமது ஊன்றுகோலின் மீது சாய்ந்து கொண்டு இறைவனைத் தொழுததும் விசுவாசத்தினாலேயே.
22 இறக்கும் தருவாயிலிருந்த சூசை இஸ்ராயேல் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைக் குறிப்பிட்டதும், தம் எலும்புகளை என்ன செய்யவேண்டுமென்று கற்பித்ததும் விசுவாசத்தினாலேயே.
23 மோயீசன் பிறந்த பொழுது குழந்தை அழகாயிருப்பதைக் கண்டு, அதன் பெற்றோர் அரசன் ஆணைக்கு அஞ்சாமல், மூன்று மாதம் அதை மறைத்து வைத்தது விசுவாசத்தினாலேயே.
24 மோயீசன் வளர்ந்த பின்னர், தாம் பார்வோன் மகளின் மகன் எனப்பட மறுத்ததும் விசுவாசத்தினால் தான்.
25 பாவ இன்பங்களைச் சொற்பக்காலம் துய்ப்பதை விட, கடவுளுடைய மக்களோடு துன்புறுவதையே அவர் விரும்பினார்.
26 இறைவனால் அபிஷுகம் பெற்றவர்கள் படவேண்டிய நிந்தையை, எகிப்தின் கருவூலங்களினும் மேலான செல்வமாகக் கருதினார். ஏனெனில் தமக்குக் கிடைக்கப்போகும் கைம்மாற்றைக் கண் முன் வைத்திருந்தார்.
27 அரசனின் கடுஞ்சினத்திற்கு அஞ்சாமல் அவர் எகிப்து நாட்டை விட்டுச் சென்றதும் விசுவாசத்தினாலேயே. கண்ணுக்குப் புலப்படாத இறைவனைக் கண்ணால் பார்ப்பவர் போல், தளராமல் நிலைத்து நின்றார்.
28 அவர் பாஸ்காவைக் கொண்டாடியதும், முதற்பேறானவர்களை அழிக்க வந்த தூதன் இஸ்ராயேலரைத் தொடாதபடி இரத்தத்தைக் கதவு நிலைகள் மேல் தெளித்ததும் விசுவாசத்தினாலேயே.
29 இஸ்ராயேல் மக்கள் கட்டாந்தரையைக் கடப்பது போலச் செங்கடலைக் கடந்தனர். எகிப்தியரோ, அவ்வழியே கடக்க முயன்ற போது மூழ்கி விட்டனர்.
30 இஸ்ராயேலர் ஏழு நாள் வலம் வந்த பின்னர், யெரிக்கோவின் மதில்கள் விழுந்ததும் விசுவாசத்தினால் தான்.
31 விலைமகளான ராகாப் ஒற்றர்களை உபசரித்து ஏற்று, அவிசுவாசிகளுடன் அழியாமல் தப்பித்துக் கொண்டது விசுவாசத்தினாலேயே.
32 இன்னும் சொல்ல வேண்டுமா? கிதியோன், பாராக், சாம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் ஆகியோரைப் பற்றியும் இறைவாக்கினர்களைப் பற்றியும் கூற எனக்கு நேரமில்லை.
33 விசுவாசத்தினால் தான் அவர்கள் அரசுகளை எதிர்த்து வென்றனர்; நீதி வழங்கினர்; வாக்களித்தவற்றைப் பெற்றுக்கொண்டனர்;
34 சிங்கத்தின் வாயை அடைத்தனர்; தீயின் கொடுமையைத் தணித்தனர்; வாள்முனைக்குத் தப்பினர்; வலிமையற்றவராயிருந்தும் வலிமை பெற்றனர்; போரில் வீரம் காட்டினர்; மாற்றார் படைகளை முறியடித்தனர்.
35 இறந்த தம்மவர் உயிருடன் எழுந்து வரப் பெண்கள் கண்டார்கள். மேலான உயிர்த்தெழுதலை அடைந்து கொள்ளும் பொருட்டு, சிலர் விடுதலை பெற விரும்பாமல் வதைக்கப்பட்டு மடிந்தனர்.
36 வேறு சிலர் ஏளனத்துக்கும் சாட்டையடிகளுக்கும் ஆளாயினர்; விலங்கிடப்பட்டுச் சிறையில் வாடினர்.
37 கல்லால் எறியப்பட்டனர்; வாளால் அறுக்கப்பட்டனர்; பட்டயத்துக்கு இரையாயினர்; ஆட்டுத் தோலையும் செம்மறியின் தோலையும் போர்த்தி அலைந்தனர்; வறுமையுற்று வாடினர்; துன்புறுத்தப்பட்டனர்; கொடுமைக்காளாயினர்.
38 உலகமோ அவர்களைக் கொண்டிருக்க அருகதையற்றுப் போயிற்று. குகைகளிலும் நிலப் பொந்துகளிலும் பாலை வெளிகளிலும் மலைகளிலும் அலைந்தனர்.
39 இவர்களனைவரும் விசுவாசம் கொண்டிருந்ததினாலே நற்பெயர் பெற்றனர். ஆயினும் வாக்களித்ததை அவர்கள் பெறவில்லை.
40 ஏனெனில், நம்மோடு சேர்ந்தாலொழிய அவர்கள் நிறைவு பெறலாகாது என்று கடவுள் நம்மை மனத்திற்கொண்டு மேலானதொரு திட்டம் வகுத்திருந்தார்.
×

Alert

×