Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Hebrews Chapters

Hebrews 10 Verses

1 வரப்போகும் நன்மைகளின் உண்மை உருவைத் திருச்சட்டம் எடுத்துக்காட்டவில்லை. அவற்றின் நிழலாக மட்டுமே உள்ளது. அதனால் தான், ஆண்டுதோறும் இடைவிடாமல் ஒப்புக்கொடுத்து வரும் அதே பலிகளால் இறைவனை அணுகி வருபவர்களை நிறைவுள்ளவர்களாக்கத் திருச்சட்டத்திற்கு வலிமையில்லை.
2 இருந்திருந்தால் பலிகளை ஒப்புக்கொடுப்பது நின்றிருக்குமன்றோ? ஏனெனில், பலிகளால் வழிபடுபவர்கள் ஒரே முறையில் எக்காலத்திற்குமே தூய்மை அடைந்தவர்களாய், பாவத்தினின்று விடுபட்ட மனச்சாட்சியைப் பெற்றிருப்பார்களன்றோ?
3 மாறாக, அந்தப் பலிகளினாலே பாவம் நீங்கவில்லை என்பது தான் ஆண்டுதோறும் நினைவூட்டப்படுகிறது.
4 காளைமாடுகள், ஆட்டுக்கடாக்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது.
5 அதனால் தான் உலகிற்கு வரும் போது கிறிஸ்து: "பலியோ, காணிக்கையோ, நீர் விரும்பவில்லை. ஆனால், எனக்கு ஓர் உடலை அமைத்தளித்தீர்.
6 தகனப் பலிகளோ, பாவப் பரிகாரப் பலிகளோ உமக்கு உகந்தவையாய் இல்லை.
7 அப்பொழுது நான் கூறியது: இதோ! இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன், என்னைக் குறித்தே மறைநூல் சுருளில் எழுதியுள்ளது" என்கிறார்.
8 "திருச்சட்டப்படி ஒப்புக்கொடுக்கப்பட்ட போதிலும், பலிகள், காணிக்கைகள், தகனப் பலிகள், பாவப் பரிகாரப் பலிகள் இவற்றையெல்லாம் நீர் விரும்பவில்லை, இவை உமக்கு உகந்தவையாய் இல்லை" என்று முதலில் கூறுகிறார்.
9 பின்பு, 'இதோ, உமது திருவுளத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன்' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை எடுத்து விடுகிறார்.
10 இந்தத் திருவுளத்தால் தான், ஒரே முறையில் எக்காலத்திற்குமே ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவினுடைய உடலின் பலியால் நாம் பரிசுத்தராக்கப்பட்டோம்.
11 ஒவ்வொரு குருவும் நாடோறும் இறைபணி ஆற்றுகையில், கையில் திரும்பத் திரும்ப அதே பலிகளை ஒப்புக்கொடுத்து வருகிறார். அவையோ பாவங்களை ஒரு போதும் போக்கி விட இயலாதவை.
12 ஆனால், இவர் என்றென்றைக்கும் பயன்தரும் ஒரு பலியைப் பாவங்களுக்காக ஒப்புக்கொடுத்து, 'கடவுளின் வலப்புறத்தில் அமர்ந்துள்ளார்.'
13 அங்கே, 'தம் பகைவர் தமக்குக் கால்மணையாக்கப்படும் வரை' காத்திருக்கிறார்.
14 தாம் பரிசுத்தராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார்.
15 இதைப் பற்றிப் பரிசுத்த ஆவியும் நமக்குச் சாட்சியம் அளிக்கின்றார்.
16 எவ்வாறெனில், "ஆண்டவர் கூறுகின்றார்: அந்நாட்களுக்குப் பின் அவர்களோடு நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே:
17 என் சட்டங்களை அவர்களுடைய உள்ளத்தில் பதிப்பிப்பேன். அவர்களுடைய மனத்தில் அவற்றைப் பொறித்து வைப்பேன்" என்று சொன்ன பின், "அவர்களுடைய பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையேன்" என்று தொடர்ந்து சொல்கிறார்.
18 இவற்றிற்கு மன்னிப்புக் கிடைத்த பின், பாவப்பரிகாரப் பலிக்கு இடமேயில்லை.
19 ஆகையால் சகோதரர்களே, இயேசு தம் உடலாகிய திரைச்சீலையைக் கடந்து, புதியதும் உயிருள்ளதுமானதொரு பாதையை நமக்குத் திறந்து வைத்தார்.
20 அதன் வழியாய்த் தூயகம் நுழைய அவருடைய இரத்தத்தின் ஆற்றலால் நமக்குத் துணிவு உண்டு.
21 கடவுளின் வீட்டின் மீது அதிகாரம் பெற்ற ஒரு தலைமைக் குருவும் நமக்கு இருக்கிறார்.
22 ஆகையால் கெட்ட மனச்சாட்சியிலிருந்து துப்புரவாக்கப்பட்ட உள்ளமும், தூய நீரில் கழுவப்பட்ட உடலும் கொண்டவர்களாய் நேர்மை உள்ளத்தோடும், முழு விசுவாச உறுதியோடும் அவரை அணுகிச் செல்வோமாக.
23 நாம் அறிக்கையிடும் நம்பிக்கையைத் தயக்கமின்றிப் பற்றிக்கொள்வோமாக.
24 நமக்கு வாக்களித்தவர் உண்மையுள்ளவர். அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக.
25 சிலர் வழக்கமாக நம் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதைப்போல் நாமும் செய்யலாகாது. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதி நாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.
26 உண்மையை அறியும் பேறு பெற்ற பின்னரும், நாம் வேண்டுமென்றே பாவத்தில் நிலைத்திருந்தால், இனி வேறு எந்தப் பரிகாரப் பலியுமே இராது.
27 எஞ்சியிருப்பது அச்சத்தோடு காத்திருக்க வேண்டிய தீர்ப்பும், பகைவரை விழுங்கப் போகும் கோபக் கனலுமே.
28 மோயீசனுடைய சட்டத்தைப் புறக்கணித்தவன், இரக்கம் பெறாமல், இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியத்தின் மேல் சாகத்தான் வேண்டும் என்றிருந்தது.
29 அப்படியென்றால் கடவுளின் மகனையே காலால் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தப்படுத்திய உடன்படிக்கை இரத்தத்தையே இழிவுபடுத்தியவன். அருள் தரும் ஆவியையே அவமதித்தவன், எவ்வளவு பெரிய தண்டனைக்குத் தகுதியுள்ளவன் ஆவான் என்று எண்ணிப்பாருங்கள்.
30 "பழி வாங்குவது என் உரிமை; நானே பதிலுக்குப் பதில் செய்வேன்" என்றும், "ஆண்டவர் தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்"
31 என்றும் உரைத்தவர் யாரென்பது தெரியுமன்றோ? உயிருள்ள கடவுளின் கையில் அகப்படுதல் பயங்கரமானது.
32 நீங்கள் ஒளிபெற்றபின் பாடுகள் நிறைந்த போராட்டத்தைத் தாங்கிக்கொண்ட முன்னைய நாட்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
33 அந்நாட்களிலே, நீங்கள் வசை மொழிக்கும் வேதனைக்கும் ஆளாகி, மக்கள் முன்னிலையில் நகைப்புக்கு உள்ளானீர்கள். இவ்வாறு துன்புற்றோருக்குப் பக்கத் துணையாயிருந்தீர்கள்.
34 மெய்தான், சிறையிடப்பட்டவர்களுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள்; உங்கள் உடைமைகள் பறிமுதலான போதும், அதை நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். ஏனெனில், மேலானவையும் நிலையுள்ளவையுமான உடைமைகள் உங்களுக்கு உள்ளன என்று உணர்ந்தீர்கள்.
35 இவ்வுறுதியான நம்பிக்கையை இப்பொழுது இழந்து விடாதீர்கள். இதற்குப் பெரிய கைம்மாறு உண்டு.
36 நீங்கள் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி அவர் வாக்களித்ததைப் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை.
37 ஏனெனில், "இன்னும் மிக மிகச் சொற்பக் காலமே இருக்கிறது. வரவிருப்பவர் வந்துவிடுவார், காலம் தாழ்த்தமாட்டார்.
38 நீதி நெறியில் நடக்கும் என் அடியான் விசுவாசத்தால் வாழ்வு பெறுவான். எவனாவது பின் வாங்கினால் அவனில் நான் பூரிப்பு அடையேன்."
39 நாமோ அழிவுக்கேதுவான முறையில் பின்வாங்குபவர்களல்ல; ஆனால், நம் ஆன்மாவைக் காத்துக் கொள்வதற்காக விசுவாசத்தில் வாழ்பவர்கள்.
×

Alert

×