Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 9 Verses

1 பின் கடவுள் நோவாவையும் அவர் புதல்வர்களையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள்.
2 பூமியின் எல்லா உயிரினங்களும், வானத்துப் பறவைகள் அனைத்தும் பூமியின் மீது நடமாடுகிற மற்றுமுள்ள யாவும் உங்கள் முன்னிலையில் அஞ்சி நடுங்குவனவாக. (அன்றியும்) கடலிலுள்ள எல்லா மீன்களும் உங்களுக்கு கையளிக்கப் பட்டிருக்கின்றன.
3 உயிரும் அசைவும் கொண்டுள்ள யாவும் உங்களுக்கு உணவாய் இருப்பனவாக. பசும் புற்பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல் அவையெல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தோம்.
4 ஆயினும், இறைச்சியை அதன் இரத்தத்தோடு உண்ணாதிருப்பீர்களாக.
5 ஏனென்றால், உங்கள் உயிரின் இரத்தத்துக்காக எல்லா உயிரினங்களிடத்தும் மனிதனிடத்தும் பழிவாங்குவோம். மனிதனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடம் பழிவாங்குவோம்.
6 மனித இரத்தத்தைச் சிந்துபவன் இரத்தமும் சிந்தப்படும். ஏனென்றால், மனிதன் தெய்வச் சாயலாகப் படைக்கப்பட்டுள்ளான்.
7 நீங்களோ பலுகிப் பெருகிப் பூமியில் பரவி அதனை நிரப்புங்கள் (என்றருளினார்).
8 மேலும் கடவுள் நோவாவையும் அவர் புதல்வர்களையும் நோக்கி:
9 இதோ, நாம் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரோடும்,
10 பெட்டகத்திலிருந்து வெளியேறி உங்கள் அண்டையிலிருக்கிற பறவைகள், வீட்டு மிருகங்கள், மற்றும் பூமியிலுள்ள காட்டு விலங்குகள் முதலிய எல்லா உயிரினங்களோடும் நமது உடன்படிக்கையை நிறுவுவோம்.
11 உங்களோடு நாம் உடன்படிக்கை செய்வோம். ஆதலால், இனி மாமிசமெல்லாம் வெள்ளப் பெருக்குகளால் ஒருபோதும் அழிக்கப்படா. உண்மையில், பூமியைப் பாழாக்க இனி வெள்ளப் பெருக்கு வராது என்றருளினார்.
12 மேலும் கடவுள்: நமக்கும் உங்களுக்கும், உங்களுடனிருக்கும் எல்லா உயிரினங்களுக்குமிடையே நித்திய தலைமுறைகளுக்கென்று நாம் செய்து கொள்ளும் உடன்படிக்கையின் அடையாளமாவது:
13 நமது வில்லை மேகங்களிலே வைப்போம். அதுவே நமக்கும் உலகத்துக்குமிடையேயுள்ள உடன்படிக்கையின் அடையாளமாகும்.
14 ஆதலால், நாம் வானத்தை மேகங்களால் மறைத்திருக்கும் போது நம்முடைய வில் அங்குக் காணப்படும்.
15 அப்போது உங்களோடும் எல்லா உயிரினங்களோடும் (செய்துகொண்ட) நமது உடன்படிக்கையை நினைவு கூருவோமாகையால், இனி எல்லா உயிர்களையும் அழிக்கும் வெள்ளப் பெருக்கு இராது.
16 வில் மேகங்களில் தோன்றும். அதைக் கண்டு, கடவுளாகிய நமக்கும், உலகத்திலுள்ள எல்லா உயிர்களுக்குமிடையே ஏற்பட்ட நித்திய உடன்படிக்கையை நினைத்தருள்வோம் (என்றார்).
17 கடைசியாகக் கடவுள் நோவாவை நோக்கி: நமக்கும் உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்திற்குமிடையே நாம் செய்துள்ள உடன்படிக்கையின் அடையாளம் அதுவேயாம் என்று சொல்லி முடித்தார்.
18 பெட்டகத்திலிருந்து வெளியேறிய நோவாவின் புதல்வர்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களாவர். காம் கானானின் தந்தை.
19 நோவாவின் மூன்று மக்கள் இவர்களே. இவர்களால் மனித இனம் எல்லாம் உலகம் முழுவதும் பரவிற்று.
20 நோவா உழவராகிப் பயிரிடத் தொடங்கித் திராட்சை நட்டுத் தோட்டம் அமைத்தார்.
21 திராட்சை இரசத்தை அவர் குடித்த போது மயக்கம் கொண்டு தம் சுடாரத்துக்குள் ஆடை விலகிய நிலையில் படுத்திருந்தார்.
22 அப்போது கானானின் தந்தையாகிய காம் தன் தந்தையின் நிருவாணத்தைக் கண்டவுடன், வெளியே இருந்த தன் இரு சகோதரருக்கும், இச் செய்தியைத் தெரிவித்தான்.
23 அப்போது சேமும் யாப்பேத்தும் ஓர் ஆடையை எடுத்துத் தங்கள் இருவர் தோள் மீதும் போட்டுக் கொண்டு புறங்காட்டி வந்து தங்கள் தந்தையின் நிருவாணத்தை மூடினர். அவர்கள் திரும்பின முகமாய் வந்ததனால் தங்கள் தந்தையின் நிருவாணத்தைப் பார்க்கவில்லை.
24 இரசத்தால் உண்டான மயக்கம் தெளிந்த போது, நோவா தம் இளைய மகன் தனக்குச் செய்ததைக் கேட்டறிந்ததும்:
25 கானான் சபிக்கப்பட்டவன். அவன் தன் சகோதரரின் அடிமைகளுக்கு அடிமையாய் இருப்பான் என்றார்.
26 மேலும்: சேமின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்படுவாராக. கானான் இவனுக்கு அடிமையாய் இருக்கக் கடவான்.
27 கடவுள் யாப்பேத்தை விருத்தியாகச் செய்வாராக. அன்றியும் அவன் சேமின் கூடாரங்களில் வாசம் செய்வானாக. கானான் அவனுக்கும் அடிமையாய் இருக்கக் கடவான் என்றார்.
28 நோவா வெள்ளப் பெருக்கிற்குப் பின் முந்நூற்றைம்பது ஆண்டு வாழ்ந்தார்.
29 (28b) அவர் உயிர் வாழ்ந்த காலம் மொத்தம் தொள்ளாயிரத்தைம்பது ஆண்டுகள். பின் இறந்தார்.
×

Alert

×