Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 28 Verses

1 ஆகையால், ஈசாக் யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்து: நீ கானானியப் பெண்ணைக் கொள்ள வேண்டாம்.
2 புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய், உன் தாயாரின் தந்தையாகிய பத்துவேலின் வீட்டிலே உன் மாமனாகிய லாபானின் புதல்வியரில் ஒருத்தியை மணந்து கொள்வாய்.
3 எல்லாம் வல்ல கடவுளே உன்னை ஆசீர்வதித்து, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்து, ஆபிரகாம் பெற்ற ஆசிரை அவர் உனக்கும் உனக்குப் பின் உன் வழிவருவோர்க்கும் அருள்வாராக.
4 அதனால், நீ அகதியாய் நடமாடும் பூமியையும், அவர் ஆபிரகாமுக்குத் திருவாக்கருளிக் கொடுத்த நாட்டையும் உரிமையாக்கிக் கொள்வாயாக என்றான்.
5 ஈசாக் யாக்கோபை அவ்விதமாய் அனுப்பிவிட்ட பின், அவன் புறப்பட்டு, சீரியாவிலுள்ள மெசொப்பொத்தாமியாவுக்குப் போய், தன் தாயார் இரெபேக்காளின் தமையனும், சீரியா நாட்டினனான பத்துவேலின் புதல்வனுமான லாபானிடம் சேர்ந்தான்.
6 ஈசாக் யாக்கோபை ஆசீர்வதித்து, திருமணத்தின் பொருட்டு சீரியாவிலுள்ள மெசொப்பெத்தாமியாவுக்கு அனுப்பிவிட்டதையும், அவனை ஆசீர்வதித்த பின்: நீ கானான் (நாட்டுப்) புதல்வியரிடையே பெண்கொள்ள வேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
7 யாக்கோபு தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து சீரியாவுக்குப் போனதையும் எசாயூ கண்டதனாலும்,
8 கானான் நாட்டுப் பெண்களின் மேல் தன் தந்தை வெறுப்பாயிருக்கிறாரென்று தன் சொந்த அனுபவத்தால் அறிந்ததனாலும்,
9 எசாயூ இஸ்மாயேலரிடம் சென்று, தான் முன் கொண்டிருந்த மனைவியரையன்றி, இன்னும் ஆபிரகாமின் புதல்வனான இஸ்மாயேலின் புதல்வியும் நபயோத்தின் சகோதரியுமான மகெலேத்தை மணந்து கொண்டான்.
10 யாக்கோபோ, பெற்சபேயிலிருந்து புறப்பட்டு, ஆரானை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
11 அவன் ஓரிடத்தில் வந்து, சூரியன் மறைந்தபடியால், அங்கே இளைப்பாற விரும்பி, அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலையணையாகத் தன் தலையின் கீழ் வைத்துக் கொண்டு, அங்கேயே துயில் கொள்ளுமாறு படுத்துக் கொண்டான்.
12 அப்போது அவன் கண்ட கனவாவது: ஓர் ஏணி பூமியிலே ஊன்றியது; அதன் மேல் நுனியோ வானத்தை எட்டுவதாய் இருந்தது. அதன் மேல் கடவுளுடைய தூதர் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தனர்.
13 அதற்கு மேல் ஆண்டவர் வீற்றிருந்து அவனை நோக்கி: நாம் உன் தந்தை ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் கடவுளுமாகிய ஆண்டவர். நீ படுத்துக் கொண்டிருக்கிற இப்பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தந்தருள்வோம். உன் சந்ததியோ நிலப் புழுதிக்கு ஒக்கும்.
14 நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்குத் திசைகளில் பலுகுவாய். உன்னிலும், உன் சந்ததியிலும் பூமியின் எல்லா இனத்தாரும் ஆசீர்வதிக்கப்படுவர்.
15 நீ எவ்விடம் போனாலும் உனக்கு நாம் காவாலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வோம். மேலும் நாம் உனக்குச் சொல்லியதையெல்லாம் நிறைவேற்று மட்டும் உன்னைக் கைவிட மாட்டோம் என்றார்.
16 யாக்கோபு தூக்கம் தெளிந்து: மெய்யாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்! என்று கூறித் திகிலடைந்து:
17 இந்த இடம் எவ்வளவு அச்சத்திற்குரியதாய் இருக்கிறது! இதுவே இறைவனின் இல்லம், வானக வாயில் என்றான்.
18 பிறகு யாக்கோபு காலையில் எழுந்து, தலையணையாகத் தான் வைத்திருந்த கல்லை எடுத்து நினைவு தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெயை வார்த்து,
19 லூசா என்று வழங்கப்பட்ட அந்த இடத்திற்குப் பெத்தெல் என்று பெயரிட்டான்.
20 மேலும்: கடவுளாகிய ஆண்டவர் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியில் என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும் உடுக்க உடையும் எனக்குத் தந்தருள்வாராயின்,
21 நானும் என் தந்தையின் வீட்டிற்கு நலமுடன் திரும்பிச் செல்வேனாயின், ஆண்டவரே எனக்குக் கடவுளாக இருப்பார்.
22 அன்றியும், நான் நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கோயில் எனப்படும். மேலும், நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் நான் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன் என்று நேர்ந்து கொண்டான்.
×

Alert

×