Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Genesis Chapters

Genesis 26 Verses

1 ஆபிரகாமின் காலத்தில் நெடுநாள் மழை பெய்யாததனால் அப்பொழுது நாட்டிலே பஞ்சம் உண்டானது கண்டு, ஈசாக் பிலிஸ்தியர் அரசனான அபிமெலெக்கைக் காண ஜெரரா நாடு சென்றான்.
2 அப்போது ஆண்டவர் அவனுக்கு முன் தோன்றி: நீ எகிப்து நாட்டிற்குப் போகாமல், நாம் உனக்குத் காண்பிக்கும் நாட்டிலே குடியிரு.
3 அதில் நீ அந்நியனாய்க் குடியிருப்பாய். நாம் உனக்குத் துணையாய் இருப்போம்; உன்னை ஆசீர்வதிப்போம்; ஏனென்றால், உன் தந்தையாகிய ஆபிரகாமுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி, அந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் சந்ததிக்கும் தருவோம்.
4 உன் சந்ததியை விண்மீன்களைப் போல் பெருகச் செய்வோம். உன் வம்சத்தாருக்கு அந்நாடுகளை எல்லாம் தந்தருள்வோம். பூமியிலுள்ள எல்லா இனத்தாரும் உன் சந்ததியில் ஆசீர்வதிக்கப்படுவர்.
5 எனென்றால், ஆபிரகாம் நம்முடைய சொல்லுக்கு அமைந்து, நம் விதிகளையும் கட்டளைகளையும் அனுசரித்து நம் திருச்சடங்குகளையும் கட்டளைகளையும் நிறைவேற்றி வந்தான் என்று திருவுளம் பற்றினார்.
6 அவ்வாறே ஈசாக் ஜெரரா நாட்டில் குடியிருந்தான்.
7 அவ்விடத்து மக்கள் அவன் மனைவியைப் பற்றி அவனை விசாரித்தபோது: அவள் என் சகோதரி என்றான். ஏனென்றால், அவள் அழகுள்ளவள்; ஆதலால், அம்மக்கள் அவள் பொருட்டுத் தன்னைக் கொல்வார்களென்று நினைத்து, அவன் தன் மனைவியென்று சொல்ல அவன் துணியவில்லை.
8 நாட்கள் பல சென்றன. அவனும் அவ்விடத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்தான். (ஒருநாள்) பிலிஸ்தியரின் அரசனான அபிமெலெக் சன்னல் வழியாய்ப் பார்த்த போது, ஈசாக் தன் மனைவி இரெபேக்காளோடு சரசமாய் விளையாடுவதைக் கண்டான்.
9 அப்போது அவன் அவனை வரவழைத்து: அவள் உன் மனைவியென்று தெளிவாய்த் தெரிகிறதே; பின் ஏன் அவள் உன் சகோதரி என்று என்னிடம் பொய் சொன்னாய் என்று கேட்டான். அதற்கு அவன்: அவள் பொருட்டு எனக்குச் சாவு வரும் என்ற பயத்தினால் தான் என்று பதில் கூற, அபிமெலெக்:
10 நீ ஏன் எங்களை இப்படி ஏமாற்ற வேண்டும்? குடிகளில் யாரேனும் உன் மனைவியோடு சேர்ந்தானென்று வைத்துக்கொள்வோம்: அப்போது நீ எங்கள் மீது பெரும்பழியல்லவா சுமக்கப் பண்ணியிருப்பாய் என்றான்.
11 இவ்வாறு பேசிய பின்: இந்த மனிதனுடைய மனைவியைத் தொடுபவன் உறுதியாகச் சாவான் என்று அபிமெலெக் தன் குடிகள் அனைவரையும் எச்சரித்தான்.
12 ஈசாக் அந்த நாட்டிலே விதை விதைத்தான். ஆண்டவர் அவனை ஆசீர்வதித்தபடியால், அவ்வாண்டு நூறு மடங்கு பலனை அடைந்தான்.
13 அதலால் அவன் பெருஞ் செல்வம் திரட்டியதுமன்றி வரவர அவை பெருகிப் பலுகினபடியால், இறுதியில் அவன் மிகுந்த செல்வாக்குள்ளவனானான்.
14 அது தவிர, அவனுக்கு ஆட்டு மந்தையும், மாடு முதலிய மந்தைகளும், வீட்டிலே பல பணிவிடைக்காரரும் இருந்தபடியால், பிலிஸ்தியர் அவன் மீது பொறாமை கொண்டு,
15 அவன் தந்தையாகிய ஆபிரகாமின் வேலைக்காரர் வெட்டியிருந்த கிணறுகள் எல்லாவற்றையும் அவர்கள் ஒருநாள் மண்ணைப் போட்டுத் தூர்த்து விட்டுப் போனார்கள்.
16 (பொறாமை எவ்வளவு வளர்ந்து வந்ததெனில்,) அபிமெலெக் கூட ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட வலிமை உடையவனாய் இருக்கின்றமையால், எங்களை விட்டுப் போவது மேல் என்றான்.
17 எனவே, அவன் புறப்பட்டுப் போய் ஜெரரா பள்ளத்தாக்கிலே குடியேறினான்.
18 அங்கே அவன் தந்தையாகிய ஆபிரகாமின் வேலைக்காரர் முன்னாளில் வெட்டியிருந்த வேறு கிணறுகள் (காணப்பட்டன). ஆபிரகாம் இறந்த பின் பிலிஸ்தியர் அவற்றைத் தூர்த்தப் போட்டிருந்தனர். அவற்றை ஈசாக் மீண்டும் வெட்டி, தன் தந்தை அவற்றிற்கு ஏந்கனவே இட்டிருந்த பெயர்களின்படியே தானும் அவற்றிற்குப் பெயரிட்டான்.
19 பின் அவன் வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீருற்றைக் கண்டார்கள்.
20 ஆனால், ஜெரராவின் மேய்ப்பர், இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்கின் மேய்ப்பர்களோடு சச்சரவு பண்ணினார்கள்.
21 ஈசாக், (அவ்வாறு) நிகழ்ந்ததைப் பற்றி, அந்த நீரூற்றுக்கு, 'அவதூறு' என்று பெயரிட்டான்.
22 அவன் அவ்விடத்தை விட்டு, அப்பால் சென்று வேறொரு கிணற்றை வெட்டினான். இம்முறை கலகம் ஒன்றும் நேரிடவில்லை. அதன் பொருட்டு: ஆண்டவர் இப்பொழுது நம்மை விரிவடையச் செய்தார் என்று சொல்லி, அதற்கு 'விசாலம்' என்று பெயரிட்டான்.
23 பின் அவன் அவ்விடத்திலிருந்து பெற்சபேய்க்குப் போனான்.
24 அன்றிரவு ஆண்டவர் அவனுக்குமுன் தோன்றி: உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நாமே. அஞ்சாதே. ஏனென்றால், நாம் உன்னோடு இருக்கிறோம். நாமே உன்னை ஆசீர்வதித்து, நமது ஊழியனாகிய ஆபிரகாமின் பொருட்டு உனது சந்ததியைப் பெருகச் செய்வோம் என்றார்.
25 இதைப் பற்றி ஈசாக் அங்கு ஒரு பீடம் எழுப்பி, ஆண்டவருடைய திருப்பெயரைத் தொழுது தன் கூடாரத்தை அடித்தான். பின் ஒரு கிணற்றை வெட்டுமாறு தன் வேலைக்காரருக்குக் கட்டளை இட்டான்.
26 அபிமெலெக்கும், அவன் நண்பனான ஒக்கொஜாத்தும், படைத் தலைவனான பிக்கோலும் ஜெரராவிலிருந்து தன்னிடம் வந்திருந்த போது, ஈசாக் அவர்களை நோக்கி:
27 நீங்கள் என்னிடம் வருவானேன்? எவனை நீங்கள் என்னிடம் விரோதித்து உங்கள் கூட்டத்தினின்று தள்ளிவிட்டீர்களோ, அவன் நானன்றோ என, அவர்கள் மறுமொழியாக:
28 ஆண்டவர் உம்மோடு இருக்கிறாரென்று கண்டோம். ஆதலால், எங்களுக்கும் உமக்குமிடையே ஆணையிட்டு உடன்படிக்கை செய்ய வேண்டுமென்று தீர்மானித்தோம்.
29 அதாவது, நாங்கள் உமக்கு உரியவகைகளில் யாதொன்றையும் தொடாமல், உம்மைத் துன்புறுத்தக் கூடிய எதையும் செய்யாமல், அண்டவருடைய நிறைவான ஆசீரை அடைத்துள்ள உம்மைச் சமாதானத்தோடு அனுப்பி விட்டது போல், நீரும் எங்களுக்கு யாதொரு தீமையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதைக் குறித்தேயாம் என்றனர்.
30 அவன் அவர்களுக்கு ஒரு விருந்து செய்து, (யாவரும்) உண்டு குடித்து முடிந்த பின்,
31 அதிகாலையில் இவர்கள் எழுந்து, ஒருவருக்கொருவர் சத்தியம் பண்ணிக் கொடுத்தார்கள். பின் ஈசாக் அவர்களைத் தங்கள் இடத்திற்குச் சமாதானத்துடன் அனுப்பி விட்டான்.
32 அதே நாளில் ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் வெட்டியிருந்த கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டு வந்து: (ஐயா,) தண்ணீரைக் கண்டோம் என்றனர்.
33 ஆதலால் அவன் அதற்கு 'மிகுதி' என்று பெயரிட்டான். எனவே அந்நகருக்கு பெற்சபே என்னும் பெயர் அந்நாள் முதல் இந்நாள் வரை வழங்கி வருகிறது.
34 எசாயூ நாற்பது வயதான போது, ஏத் என்னும் ஊரிலிருந்த பேறியின் புதல்வி யூதீத்தையும், அவ்வூரில் (குடியிருந்த) ஏலோனின் புதல்வி பசெமோத்தையும் மணந்து கொண்டான்.
35 அவர்கள் இருவரும் ஏற்கெனவே ஈசாக்கையும் இரெபேக்காளையும் மனம் நோகச் செய்திருந்தனர்.
×

Alert

×