Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 47 Verses

1 அப்பொழுது அவர் என்னைக் கோயிலின் வாயிலுக்குத் திரும்பக் கூட்டி வந்தார்; இதோ, வாயிற்படியின் கீழிருந்து தண்ணீர் ஊற்றெடுத்துக் கிழக்கே ஓடிக்கொண்டிருந்தது; (ஏனெனில் கோயிலின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது). அந்தத் தண்ணீர் கோயிலுக்குத் தென்புறமாய்ப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.
2 பின்னர் அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் வெளியே கொண்டு போய், கிழக்கே நோக்கியிருக்கும் வெளி வாயில் வரை என்னைச் சுற்றி நடத்திக் கொண்டு வந்தார்; ஆங்கே, தண்ணீர் தென்புறத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
3 அவர் தமது கையில் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்குப் பக்கமாய் நடந்து ஆயிரம் முழம் அளந்தார்; பிறகு என்னைத் தண்ணீர் வழியாய் நடத்திச் சென்றார்; தண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது.
4 மறுபடியும் அவர் ஆயிரம் முழம் அளந்தார்; பிறகு தண்ணீரைக் கடக்கும்படி எனக்குச் சொன்னார்; அங்குத் தண்ணீர் முழங்கால் அளவு ஓடிற்று.
5 மீண்டும் அவர் ஆயிரம் முழம் அளந்தார்; தண்ணீரைக் கடக்கும்படி கூறினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவு இருந்தது; இன்னும் ஆயிரம் முழம் அளந்தார்; அங்கே என்னால் கடக்க முடியாத பெரு வெள்ளமாய் இருந்தது; ஏனெனில் வெள்ளம் பெருகி இருந்தது; நீந்திப்போகுமளவுக்கு வெள்ளம் ஓடிற்று; ஆனால் யாரும் அதை நடந்து கடக்க முடியாது.
6 அவர் என்னை நோக்கி, "மனிதா, இதைக் கண்டாயா?" என்றார்; பின் ஆற்றங்கரையோரமாய் என்னைத் திரும்ப நடத்திச் சென்றார்.
7 நான் திரும்பிப் போன போது, ஆற்றின் இரு கரைகளிலும் மிகத் திரளான மரங்களைக் கண்டேன்;
8 அவர் என்னை நோக்கி, "இந்தத் தண்ணீர் கிழக்குப் பகுதி நோக்கிப் பாய்ந்து, அராபா சமவெளிக்கு ஓடிச்சேரும்; கடலிலுள்ள நீரோடு இது போய்க் கலக்கும்போது, தண்ணீர் நல்ல தண்ணீராகத் தெளியும்.
9 இந்த ஆறு எங்கெல்லாம் பாய்கிறதோ அங்கெல்லாம் ஊர்வன யாவும் பிழைத்திருக்கும்; அங்கே திரளான மீன்கள் இருக்கும்; ஏனெனில் கடல் நீர் தெளிந்து நல்ல நீராகும்படியே இந்த நீர் அங்கே பாய்கிறது; ஆகவே இந்த ஆறு ஓடிப்பாயும் இடங்களில் எல்லாம் உயிர்கள் வாழும்.
10 இந்த ஆற்றிலே செம்படவர் வந்து மீன் பிடிப்பார்கள்; என்காதி என்னும் ஊர் துவக்கி என்காலீம் என்னும் ஊர் வரையில் வலைகள் உலர்த்தப்படும் இடமாயிருக்கும்; பெருங்கடலிலுள்ளவற்றைப் போலப் பற்பல வகையான மீன்கள் இந்தத் தண்ணீரில் இருக்கும்.
11 ஆயினும் அதைச் சார்ந்த உளையான பள்ளங்களிலும், சதுப்புப் பகுதிகளிலும் தண்ணீர் தெளியாது; ஏனெனில் அங்கே உப்பளங்கள் கட்டப்படும்.
12 வெள்ளத்தின் ஓரமாய், அதன் இருபுறத்துக் கரைகளிலும் எல்லா வகையான பழ மரங்களும் வளரும்; அவற்றின் இலைகள் உதிர்ந்துபோகா; கனிகள் அற்றுப்போகா; அவற்றுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த இடத்திலிருந்து புறப்பட்டு வருவதால், அம்மரங்கள் மாதந்தோறும் புதிய கனிகளைக் கொடுக்கும்; அவற்றின் பழங்கள் உணவாகவும், இலைகள் மருந்தாகவும் பயன்படும்."
13 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீங்கள் இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த நாட்டைப் பிரிந்து உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு.
14 உங்கள் தந்தையர்க்குக் கொடுப்பதாக நாம் ஆணையிட்டு வாக்களித்த நாடு இதுவே; இது உங்களுக்கு உரிமைச் சொத்தாய்க் கிடைக்கும்; நீங்கள் இதனைச் சரிபங்காகப் பிரித்து உரிமையாக்கிக் கொள்வீர்கள்.
15 நாட்டின் எல்லைகளாவன: வடக்கே பெருங்கடல் துவக்கி எத்தாலோன் வழியாய்ச் சேதாதா ஊருக்கு வரும் வரைக்கும்,
16 ஏமாத், பெரோத்தா, தமஸ்குவின் எல்லைக்கும் ஏமாத் எல்லைக்கும் இடைப்பட்ட சபாரீம், ஆவுரானின் எல்லைக்கடுத்த திக்கோனின் வரைக்குமாகும்.
17 அவ்வாறே கடலிலிருந்து ஏனோன் வரை- இது தமஸ்குவின் எல்லையில் உள்ளது- அதன் எல்லை உள்ளது; ஏமாத்தே வடக்கு எல்லையாகும்; இதுவே வடபாகம்.
18 கிழக்கு மாநிலமானது ஆவுரான் நடுவிலிருந்தும் தமஸ்கு நடுவிலிருந்தும் காலாத் நடுவிலிருந்தும் இஸ்ராயேல் நாட்டினின்றும் புறப்பட்டுக் கிழக்குக் கடலில் கலக்கும் யோர்தான் நதி வரையில் பரவியிருக்கும்; கீழ்க்கடலோரத்தையும் சேர்த்து அளந்து கொள்ளுங்கள்.
19 தெற்கு மாநிலமானது: ஒரு பக்கத்தில் தாமாரிலிருந்து சச்சரவு நீர் எனப் பொருள்படும் காதேஸ் என்னும் இடம் வரையிலும், மறுபக்கத்தில் எகிப்து நதி முதல் பெருங்கடல் வரையிலும் பரவியிருக்கும்; இதுவே தென்பகுதி.
20 மேற்கு மாநிலமானது: பெருங்கடல் துவக்கி நேர் வழியாய் ஏமாத்துக்குச் சேருமட்டும் இடைப்பட்ட நிலமாகும்; இதுவே மேற்குப் பகுதி.
21 இஸ்ராயேல் கோத்திரங்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த நாட்டை உங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வீர்கள்.
22 உங்களுக்கும், உங்கள் நடுவில் குடியேறி மனைவி மக்களோடு வாழும் அந்நியர்களுக்கும் இந்த நாட்டை உரிமைச் சொத்தாகப் பிரித்துக்கொள்வீர்கள்; அவர்களை, பிறப்பால் இஸ்ராயேல் இனத்தவராய் இருப்பவர்களுக்கு நிகராகக் கருதுங்கள்; இஸ்ராயேல் கோத்திரங்களின் நடுவில் உங்களோடு சொத்துரிமை பாராட்டும் பங்காளிகளாய் இருப்பார்கள்.
23 அந்நியன் எந்தக் கோத்திரத்தாரோடு வாழ்கிறானோ, அந்தக் கோத்திரத்தின் பாகத்தில் அவனுக்குப் பங்கு கொடுக்கக் கடவீர்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
×

Alert

×