Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 42 Verses

1 பின்னும் அவர் என்னை வடதிசை வழியாக வெளிப்பிராகாரத்துக்கு அழைத்து வந்து, தனிப்பட இருந்த மாளிகைக்கு எதிரிலிருந்த கருவூல அறைகளில் நுழையச் சொன்னார்.
2 இந்தக் கட்டடம் வடக்கு வாயிலிருந்து நீளத்தில் நூறு முழமும், அகலத்தில் ஐம்பது முழமும் இருந்தது.
3 அதன் ஒரு பக்கத்தில் இருபது முழமுள்ள ஒரு அந்தரமான இடம் உட்பிராகாரத்திற்கும், மற்றொரு பக்கத்தில் கல்லால் செய்யப்பட்ட தளவரிசை வெளிப் பிராகாரத்திற்கும் இருந்தன; அங்கே மூன்று நடைப் பந்தல்களையுடைய தாழ்வாரம் ஒன்றிருந்தது.
4 கருவூல அறைகளின் முன் பத்து முழ அளவாகிய நடைவழி ஒன்றிலிருந்தது; அது நூறு முழ நீளமாய் இருந்தது. வாயில்கள் வடக்கு நோக்கியிருந்தன.
5 அதன் அறைகளுள் மேல்மாடியிலுள்ளவை கீழ்மாடியிலுள்ளவற்றினும் குறைந்த அகலமுள்ளவை; ஏனெனில் மேல்அறைகளுக்கு முன் நடைப்பந்தல்கள் அதிக இடம் கொண்டன; கீழ் அறைகளுக்கும் நடு அறைகளுக்கும் முன் அவ்வளவு இடங்கொள்ளவில்லை.
6 அவை மூன்றடுக்காய் இருந்தன. அங்குள்ள தூண்கள் பிராகாரத்திலுள்ள தூண்கள் போலல்ல; இவை கீழும் நடுவீட்டிலும் உள்ள தூண்களை விட ஒடுங்கி இருந்தன.
7 வெளிப்பக்கம், அறைகளின் ஓரமாய் வெளிப்பிராகாரத் திசையாக ஒரு மதில் இருந்தது; அறைகளின் முன்பாக அதன் நீளம் ஐம்பது முழம்.
8 ஏனெனில், வெளிப் பிராகாரத்தை நோக்கிய அறைகளின் நீளம் ஐம்பது முழம்; கோவிலுக்கு எதிரே இருந்தவற்றின் நீளமோ நூறு முழம்.
9 வெளிப் பிராகாரத்திலிருந்து அவ்வறைகளுக்கு வருகிற மக்களுக்கென ஒரு வழி கிழக்கே அடிஅறையில் இருந்தது.
10 கீழ்த்திசை வழிக்கு எதிராகவும், தனிப்படையாய் இருந்த மாளிகைக்கு நேர் முன்பாகவும் மதிலின் அகலத்தில் அறைகள் இருந்தன.
11 இவற்றின் முன்னேயும் ஒரு நடைபாதை இருந்தது; வடபக்கத்திலுள்ள அறைகளுக்கு முன்னிருந்த பாதையைப் போன்றது; நீளமும் அகலமும் ஒன்றே; வாயிற்படிகள், சிற்ப வேலைகள், கதவுகள் யாவும் அப்பக்கத்தில் இருப்பவற்றைப் போன்றவையே.
12 தென்திசை அறைகளுக்கு வாயில் இருந்தது போலவே, இப்பக்கத்திலும் ஒருவாயில் இருந்தது; இது தனிப்பட்டதாய் இருந்த மண்டபத்துக்கு எதிரே இருந்தது; கீழ்த்திசையிலிருந்து வருபவர்களுக்கு இது உதவியாயிருந்தது.
13 அந்த மனிதர் என்னைப் பார்த்து: "தனியாய்ப் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் மாளிகைக்கு முன்னால் இருக்கும் வடபுற அறைகளும், தென்புற அறைகளும் பரிசுத்த அறைகள்; ஆண்டவருடைய திருத்தூயகத்துள் சென்று ஆண்டவர் திருமுன் பணிபுரியும் அர்ச்சகர்கள் பரிசுத்த காணிக்கைகளை உண்ணும் இடங்கள் அவை; அவர்கள் மிகவும் பரிசுத்தமானவற்றையும் பாவப்பரிகாரப் பலியையும், குற்றப் பரிகாரக் காணிக்கைகளையும் அங்கே வைக்கிறார்கள்; ஏனெனில் அந்த இடம் பரிசுத்தமான இடம்.
14 அர்ச்சகர்கள் இவ்வாறு நுழைந்த பின்னர் பரிசுத்த இடங்களிலிருந்து வெளிப் பிராகாரத்துக்கு வரக்கூடாது; பணிபுரியும் போது அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடைகள் பரிசுத்தமானவை; ஆகையால் அவற்றை அங்கேயே கழற்றி வைத்து விட்டு வேறு உடைகளை உடுத்திக் கொண்டு தான் பொது மக்களுக்குரிய இடத்திற்குப் போவார்கள்" என்று சொன்னார்.
15 உட்புறத்து மாளிகையை அளந்து முடித்தபின், அவர் என்னைக் கிழக்கு வழியை நோக்கும் வாயில் வழியாய் வெளியே அழைத்துக் கொண்டு போய், முற்றத்தை முழுதும் அளக்கத் தொடங்கினார்:
16 கீழ்த்திசைப் புறத்தை அளவு கோலால் அளந்தார்; அந்த அளவு கோலின்படி ஐந்நூறு கோல் இருந்தது;
17 வடதிசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது;
18 தென்திசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது;
19 மேற்றிசைப் புறத்தை அளந்தார்; அக்கோலால் ஐந்நூறு கோல் இருந்தது.
20 நாற்புறமும் சுற்றிச் சுற்றிப் போய்ச் சுவர்களை அளந்தார்; தூயகத்திற்கும் பொதுமக்கள் முற்றத்திற்கும் உள்ள அந்தச் சுவரின் நீளம் ஐந்நூறு முழம்; அகலம் ஐந்நூறு முழம்.
×

Alert

×