Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 39 Verses

1 மனிதா, நீ கோகு என்பவனுக்கு எதிராக இறைவாக்குரைத்து அவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: மொசோக், தூபால் இனத்தவர்களின் தலைவனும் முதல்வனுமாகிய கோகு மன்னனே, இதோ நாம் உனக்கு விரோதமாக வருகிறோம்.
2 நாம் உன்னைச் சுற்றிச் சுழற்றி, முன்னுக்குத் தள்ளி, வடநாட்டின் பகுதியிலிருந்து புறப்படச் செய்து, இஸ்ராயேல் மலைகளுக்குக் கொண்டு வருவோம்;
3 உன் இடக்கையிலிருந்து உன் வில்லையும், வலக்கையினின்று உன் அம்புகளையும் தட்டி விட்டு விழச் செய்வோம்.
4 நீயும், உன் படைகளும், உன்னோடு கூட இருக்கும் மக்களும் இஸ்ராயேல் நாட்டு மலைகளில் விழுவீர்கள்; காட்டு மிருகங்களுக்கும், பிணந்தின்னும் எல்லா வகைப் பறவைகளுக்கும் உன்னை இரையாகக் கொடுப்போம்.
5 நீ ஒரு திறந்த வெளியில் வீழ்வாய்; இதை நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
6 மாகோகு மேலும், கடற்கரை நாடுகளில் வாழ்வோர் அனைவரின் மேலும் தீயை அனுப்புவோம்;
7 அப்போது அவர்கள் நாமே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வார்கள். அன்றியும் நம் மக்களாகிய இஸ்ராயேல் நடுவில் நமது திருப்பெயரை விளங்கச் செய்வோம்; நமது திருப்பெயரின் பேரில் தீட்டுண்டாக இனி ஒருகாலும் விடமாட்டோம்; நாமே ஆண்டவர் என்பதையும், இஸ்ராயேலின் பரிசுத்தர் என்பதையும் புறவினத்தார் அறிந்து கொள்வார்கள்.
8 இதோ, வருகிறது; நடக்கப் போகிறது, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; நாம் முன்னமே குறிப்பிட்டுச் சொன்ன நாள் இதுவே.
9 அப்போது, இஸ்ராயேல் நகரங்களில் வாழ்கிற மக்கள் வெளியே வந்து, படைக்கலங்களையும் கேடயங்களையும் பரிசைகளையும் வில்களையும் அம்புகளையும் வேல்களையும் ஈட்டிகளையும் சுட்டெரித்து, ஏழாண்டுகளுக்கு நெருப்பு உண்டாக்குவார்கள்;
10 அவர்கள் வயல்வெளிகளிலிருந்து விறகுகளையோ, காடுகளில் மரங்களையோ வெட்டத் தேவையில்லை; ஏனெனில் படைக்கலங்களையே எடுத்து எரிப்பார்கள்; தங்களைக் கொள்ளையிட்டவர்களை அவர்கள் கொள்ளையிடுவார்கள்; தங்களைச் சூறையாடினவர்களை அவர்கள் சூறையாடுவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
11 அந்நாளில் இஸ்ராயேல் நாட்டிலுள்ள 'வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கு' என்னுமிடத்தைக் கல்லறைத் தோட்டமாகக் கோகு என்பவனுக்குக் கொடுப்போம்; அது கடலுக்குக் கிழக்கே உள்ளது; வழிப்போக்கரைத் தடுத்து நிறுத்தும்; ஏனெனில் கோகு என்பவனும், அவன் சேனைகள் அனைத்தும் அங்கே புதைக்கப் பட்டிருப்பார்கள்; அவ்விடம் 'கோகு கூட்டத்தாரின் பள்ளத்தாக்கு' எனப்படும்;
12 நாட்டைத் தூய்மைப் படுத்துவற்காக இஸ்ராயேல் மக்கள் அவர்களைப் புதைப்பார்கள்; அவர்களைப் புதைத்து முடிக்க ஏழு மாதங்கள் ஆகும்.
13 நாட்டு மக்கள் யாவரும் அவர்களைப் புதைப்பார்கள்; அந்நாளிலே நாம் மகிமை பெறுவோம்; இஸ்ராயேல் மக்களுக்கும் அந்நாள் மிகச் சிறந்த நாளாகும், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
14 அவர்கள் நாட்டைத் தூய்மைப் படுத்துவதற்காக, எல்லா ஊர்களுக்கும் போய் அங்குக் கிடக்கும் மற்றப் பிணங்களையும் தேடிப் புதைக்கும் பொருட்டுச் சிலரை ஏற்படுத்துவார்கள்; ஏழு மாதங்களுக்குப் பிறகு இவர்கள் தேடத் தொடங்குவார்கள்.
15 இவர்கள் நாடெல்லாம் சுற்றித் தேடும் போது, எவனாவது ஒரு பிணத்தைக் கண்டால், அதனருகில் ஓர் அடையாளத்தை நாட்டுவான்; பிறகு பிணங்களைப் புதைக்கும் ஆட்கள் வந்து அதைக் கோகு கூட்டத்தாரின் பள்ளத்தாக்கிற்குத் தூக்கிக் கொண்டு போய்ப் புதைப்பார்கள்.
16 (அந்நகருக்கு ஆமோனா எனப் பெயரிடப்படும்). இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவார்கள்.
17 மனிதா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எல்லா வகையான பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் நீ சொல்: 'நீங்கள் ஒன்று கூடி நாற்றிசையிலுமிருந்து உடனே வாருங்கள்; இஸ்ராயேல் நாட்டின் மலைகள் மேல் உங்களுக்காக நாம் ஏற்பாடு செய்திருக்கும் பெரிய வேள்வி விருந்துக்கு வாருங்கள்; உங்களுக்குத் தின்ன இறைச்சி கிடைக்கும்; குடிக்க இரத்தம் இருக்கும்; விரைந்து வாருங்கள்.
18 நீங்கள் பலசாலிகளின் உடல்களைத் தின்பீர்கள்; உலகத்தின் தலைவர்களுடைய இரத்தத்தைக் குடிப்பீர்கள்- கொழுத்த ஆட்டுக் கடாக்களையும் ஆட்டுக் குட்டிகளையும் வெள்ளாட்டுக் கடாக்களையும் இளங் காளைகளையும் புசிப்பீர்கள்.
19 நாம் உங்களுக்காக ஏற்பாடு செய்திருக்கும் வேள்வி விருந்தில் நீங்கள் நிறைவடையும் வரை கொழுப்பைத் தின்பீர்கள்; வெறியாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
20 இவ்வாறு நம் பந்தியில் அமர்ந்து, குதிரைகள், குதிரை வீரர்கள், வலிமை மிக்கவர்கள், எல்லா வகையான படைவீரர்கள் உடலிறைச்சியையும் வயிறு புடைக்கத் தின்பீர்கள்' என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
21 "இவ்வாறு புறவினத்தார் நடுவில் நம் மகிமையை நிலைநாட்டுவோம்; நாம் நிறைவேற்றிய தண்டனைத் தீர்ப்பையும், அவர்கள் மேல் நீட்டிய நம் கரத்தையும் புறவினத்தார் அனைவரும் பார்ப்பார்கள்.
22 அந்நாள் முதல், இஸ்ராயேல் வீட்டார் ஆண்டவராகிய நாமே தங்கள் கடவுள் என்பதை அறிவார்கள்.
23 இஸ்ராயேல் வீட்டார் தங்கள் அக்கிரமத்தினால் தான் அடிமைகளாகக் கொண்டு போகப்பட்டார்கள், அவர்கள் நமக்குப் பிரமாணிக்கமின்றி நடந்ததால் தான் நாம் நமது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டோம், அவர்களைப் பகைவர்களின் கையில் ஒப்படைத்தோம், அவர்களெல்லாரும் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தனர் என்பதையெல்லாம் புறவினத்தார் அறிந்து கொள்வர்.
24 அவர்களுடைய அசுத்தத்திற்கும் அக்கிரமங்களுக்கும் தக்கவாறே நாம் அவர்களுக்குச் செய்தோம்; நமது முகத்தையும் அவர்களிடமிருந்து மறைத்துக் கொண்டோம்.
25 ஆகையால், ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இப்பொழுது யாக்கோபின் மக்களை அடிமைத் தனத்தினின்று மீட்டுக்கொண்டு வருவோம்; இஸ்ராயேல் வீட்டார் அனைவர் மேலும் இரக்கம் காட்டுவோம்; நமது திருப்பெயரை முன்னிட்டு மிகுந்த ஆர்வத்தோடு விழிப்பாய் இருப்போம்;
26 பல்வேறு இனத்தார் முன்னிலையில் அவர்கள் வழியாய் நமது பரிசுத்தத்தை நிலை நாட்டி விட்டு, அவர்களை அவர்களுடைய பகைவர்களின் நாடுகளிலிருந்து கூட்டிச் சேர்த்து,
27 மற்ற நாட்டு மக்களிடமிருந்து நாம் அவர்களைத் திரும்பக் கொண்டு வந்த பிறகு, அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் யாருக்கும் அஞ்சாமல் அமைதியாய் வாழும் போது, தங்களுடைய அவமானத்தையும் நமக்கு எதிராய் தாங்கள் செய்த எல்லாப் பாதகங்களையும் நினைவு கூர மாட்டார்கள்.
28 அப்பொழுது, ஆண்டவராகிய நாமே தங்கள் கடவுள் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்; ஏனெனில் புறவினத்தார் நடுவில் நாமே அவர்களை நாடுகடத்தினோம்; பிறகு நாமே அவர்களைச் சேர்த்து அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கூட்டிவந்தோம்; இனிமேல் அவர்களில் யாரும் புறவினத்தார் நடுவில் இருக்கவிட மாட்டோம்;
29 இஸ்ராயேல் வீட்டார் மேல் நமது ஆவியைப் பொழிவோம்; அது முதல் (அதன் பின்) அவர்களிடமிருந்து நம் முகத்தை மறைக்கமாட்டோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
×

Alert

×