Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 37 Verses

1 ஆண்டவருடைய கரம் என் மேல் இருந்தது; ஆண்டவருடைய ஆவி என்னைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் விட்டது; அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.
2 அவற்றைச் சுற்றி என்னை அழைத்துச் சென்றார்; இதோ, அந்தப் பள்ளத்தாக்கில் எலும்புகள் மிகப்பல கிடந்தன; அவை முற்றும் உலர்ந்திருந்தன.
3 அவர் என்னை நோக்கி, "மனிதா, இந்த எலும்புகள் உயிர் பெறக் கூடுமோ?" என்று வினவினார். "ஆண்டவராகிய இறைவா, உமக்குத் தெரியுமே" என்று விடை பகர்ந்தேன்.
4 மீண்டும் அவர் என்னிடம், "இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரைத்து அவற்றுக்குச் சொல்: உலர்ந்த எலும்புகளே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
5 இந்த எலும்புகளுக்கு ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, உங்களுக்குள் ஆவி நுழையச் செய்வோம், நீங்கள் உயிர் பெற்று வாழ்வீர்கள்.
6 பின்னும், உங்கள் மேல் நரம்புகளை வைப்போம், உங்கள் மேல் சதை பிடிக்கச் செய்வோம்; உங்களைத் தோலால் மூடுவோம்; உங்களில் ஆவியை ஊட்டுவோம்; நீங்கள் உயிர் பெற்று வாழ்வீர்கள். அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவீர்கள்" என்று சொல் எனக் கூறினார்.
7 அவர் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குச் சொன்னேன்; அவ்வாறு நான் இறைவாக்குரைக்கும் போது, ஓர் ஒலி கேட்டது; இதோ, அசைவும் உண்டாயிற்று; ஒவ்வொரு எலும்பும் மற்றொரு எலும்பை அணுகி ஒன்றோடொன்று சேர்ந்து கொண்டன.
8 நான் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, இதோ, அவற்றின் மேல் நரம்புகள் காணப்பட்டன; அவற்றில் சதை பிடித்திருந்தது; அவற்றைத் தோல் மூடியிருந்தது; ஆயினும் அவற்றில் உயிர் இல்லை.
9 அப்பொழுது அவர் என்னை நோக்கி, "ஆவிக்கு இறைவாக்குக் கூறு, மனிதா, இறைவாக்குச் சொல்; ஆவிக்கு நீ சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: ஆவியே, நாற்றிசையிலிருந்தும் வா; வந்து உயிரிழந்த இவர்கள் மீது ஊதி, இவர்கள் உய்யும்படி செய்" என்றார்.
10 அவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் இறைவாக்குரைத்தேன்; அவர்களுள் ஆவி புகுந்தது; அவர்கள் உயிர் பெற்றுத் தரையில் காலூன்றி நின்றனர்; அவர்கள் மாபெரும் சேனை போல் இருந்தனர்.
11 பின்னும் அவர் என்னிடம் சொன்னார்: "மனிதா, இந்த எலும்புகள் இஸ்ராயேல் வீட்டாரனைவரும். இதோ, அவர்கள், 'எங்கள் எலும்புகள் முற்றிலும் உலர்ந்து போயின; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் முற்றிலும் அறுபட்டோம்' என்கிறார்கள்.
12 ஆகையால் நீ அவர்களுக்கு இறைவாக்குக் கூறு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: எம் மக்களே, இதோ நாம் உங்கள் கல்லறைகளைத் திறப்போம்; கல்லறைகளிலிருந்து உங்களை எழுப்புவோம்; இஸ்ராயேல் நாட்டுக்கு உங்களைத் திரும்பக் கூட்டிவருவோம்.
13 எம் மக்களே, உங்கள் கல்லறைகளைத் திறந்து, அவற்றினின்று நாம் உங்களை எழுப்பும் போது, நாமே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
14 உங்களுக்குள் நம் ஆவியைப் புகுத்துவோம்; நீங்கள் உயிர் பெறுவீர்கள். உங்கள் சொந்த நாட்டில் உங்களை வாழ வைப்போம்; அப்போது, ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம், நாமே இதைச் செய்து முடித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள், என்கிறார் ஆண்டவர்."
15 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
16 மனிதா, நீ ஒரு கோலை எடுத்து அதில், 'யூதாவும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் மக்களும்' என்று எழுது; பிறகு வேறொரு கோலை எடுத்து, அதில், 'எப்பிராயீம் கோலாகிய யோசேப்பும், அவனோடு சேர்ந்திருக்கும் இஸ்ராயேல் வீட்டாரனைவரும்' என்று எழுது.
17 பிறகு அவ்விரு கோல்களும் உன் கையில் ஒரே கோலாகும்படி அவற்றைச் சேர்த்துப் பிடி.
18 உன் இனத்தார் உன்னிடத்தில் வந்து, 'இவற்றால் நீர் எதைக் காட்ட எண்ணினீர் என்பதை எங்களுக்கு விளக்கமாட்டீரோ?' என்று உன்னைக் கேட்கும் போது,
19 நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, எப்பிராயீமின் கையிலிருக்கும் யோசேப்பின் கோலையும், அவனோடு சேர்ந்துள்ள இஸ்ராயேல் கோத்திரங்களையும் எடுத்து, யூதாவின் கோலோடு ஒன்று சேர்த்து, அவற்றை ஒரே கோலாகச் செய்வோம்; அவை நம் கையில் ஒரே கோலாய் இருக்கும்.
20 நீ எழுதிய கோல்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக உன் கையில் இருக்கும் போது, நீ அவர்களுக்குச் சொல்:
21 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் இஸ்ராயேல் மக்களை அவர்கள் போயிருக்கும் புறவினத்தாரிடமிருந்து அழைத்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்களைச் சேர்த்து, அவர்களுடைய சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவோம்;
22 இஸ்ராயேல் மலைகளின் மேல் அவர்களை அந்த நாட்டில் ஒரே இனத்தவராய் ஆக்குவோம்; அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன்தான் இருப்பான்; இனி அவர்கள் இரண்டு இனத்தவராய் இருக்கமாட்டார்கள், இரண்டு அரசுகளாய்ப் பிரிந்திருக்கமாட்டார்கள்.
23 இனி மேல் அவர்கள் தங்கள் சிலைகளாலும், அருவருப்பான பொருட்களாலும், யாதொரு குற்றத்தாலும் தங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்; ஆனால் அவர்கள் நடந்துவந்த பிரமாணிக்கமில்லாத நெறியிலிருந்து அவர்களை மீட்போம்; அவர்களைத் தூய்மைப்படுத்துவோம்; அப்போது அவர்கள் நம் மக்களாய் இருப்பார்கள்; நாம் அவர்கள் கடவுளாய் இருப்போம்.
24 நம் ஊழியனாகிய தாவீது அவர்களுக்கு அரசனாயிருப்பான்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பன் தான் இருப்பான்; அவர்கள் நம் நீதிமுறைகளைப் பின்பற்றுவார்கள்; நம் கற்பனைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருப்பார்கள்.
25 நம் ஊழியனாகிய யாக்கோபுக்கு நாம் தந்ததும், உங்கள் தந்தையர் வாழ்ந்ததுமான நாட்டில் அவர்கள் வாழ்வார்கள்; அவர்களும், அவர்கள் பிள்ளைகளும், அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் என்றென்றும் அங்கே வாழ்வார்கள்; நம் ஊழியனாகிய தாவீது என்றென்றும் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
26 நாம் அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்வோம்; அது அவர்களோடு முடிவில்லா உடன்படிக்கையாய் இருக்கும்; அவர்களை நாம் ஆசீர்வதித்துப் பலுகச் செய்வோம்; அவர்கள் நடுவில் நமது பரிசுத்த இடத்தை என்றென்றும் நிலைக்கச் செய்வோம்.
27 நம் இருப்பிடம் அவர்களுடன் இருக்கும்; நாம் அவர்கள் கடவுளாக இருப்போம்; அவர்கள் நம் மக்களாய் இருப்பர்.
28 நமது பரிசுத்த இடம் அவர்கள் நடுவில் என்றென்றும் நிலைக்கும் போது, ஆண்டவராகிய நாமே இஸ்ராயேலைப் பரிசுத்தப்படுத்துபவர் என்பதைப் புறவினத்தார் அறிந்துகொள்வர்."
×

Alert

×