Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 34 Verses

1 ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, இஸ்ராயேலின் மேய்ப்பர்களுக்கு எதிராக நீ இறைவாக்குரைத்து அவர்களைப் பார்த்துச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேலின் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள் தங்களையே மேய்த்துக் கொள்கிறார்கள். மேய்ப்பர்கள் மந்தையை அல்லவா மேய்க்க வேண்டும்?
3 கொழுப்பானதை நீங்கள் உண்டு, ஆட்டு மயிரை ஆடையாக்கி உடுத்தினீர்கள்; கொழுத்து வளர்ந்த ஆட்டை அடித்துச் சாப்பிட்டீர்கள்; ஆனால் ஆடுகளையோ நீங்கள் மேய்க்கவில்லை.
4 வலிமையற்ற ஆடுகளை நீங்கள் தேறும்படி செய்யவில்லை; பிணியுற்றவற்றை நீஙக்ள் பராமரிக்கவில்லை; எலும்பு முறிந்தவற்றுக்குக் கட்டுப்போடவில்லை; வழிதவறியவற்றைத் திரும்பக் கொண்டுவரவில்லை; காணாமற்போனவற்றைத் தேடவில்லை; ஆனால் அவற்றைக் கண்டிப்புடணும் கடுமையாகவும் நடத்தினீர்கள்.
5 மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் சிதறுண்டு போயின; சிதறியவை கொடிய மிருகங்களுக்கு இரையாகி மடிந்தன.
6 நம்முடைய ஆடுகள் சிதறிப் போய் மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன; பூமியின் எல்லாப் பக்கத்திலும் நம்முடைய ஆடுகள் சிதறுண்டு திரிந்தன; அவற்றைத் தேடவோ, தேடிக் கண்டுபிடிக்கவோ அக்கறையுள்ளவர் யாருமில்லை.
7 ஆதலால் மேய்ப்பர்களே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
8 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! மேய்ப்பன் இல்லாததால் நம்முடைய ஆடுகள் கொள்ளையிடப்பட்டன, காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின; நம் ஆயர்களோ நமது மந்தையைக் கண்காணிக்கவில்லை; மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்டார்கள்.
9 ஆகையால் மேய்ப்பர்களே, ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்:
10 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாம் நம்முடைய மேய்ப்பர்களுக்கு எதிராக வந்து, நமது மந்தையை அவர்கள் கையிலிருந்து மீட்டுக் கொண்டு, ஆடுகளை மேய்க்கும் வேலையிலிருந்து அவர்களை நீக்கிவிடுவோம்; அவர்கள் இனி மேல் தங்களையே மேய்த்துக் கொள்ள முடியாது. அவர்கள் வாயினின்று நம்முடைய ஆடுகளை மீட்போம்; அவை இனி அவர்களுக்கு இரையாகா.
11 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நாமே இனி நம்முடைய ஆடுகளைத் தேடிப்போவோம்; ஆர்வத்தோடு தேடுவோம்.
12 மேய்ப்பன் தன் ஆடுகளுள் சில சிதறுண்டு போனால் எவ்வாறு அவற்றைத் தேடுவானோ, அவ்வாறே நாமும் நம்முடைய ஆடுகளைத் தேடுவோம். மப்பும் மந்தாரமுமான நாளில் அவை சிதறுண்டிருக்கும் எல்லா இடங்களிலுமிருந்து அவற்றை நாம் மீட்டுக்கொண்டு வருவோம்;
13 வேற்றினத்தாரிடமிருந்து வெளிநடத்தி, வெளிநாடுகளிலிருந்து கூட்டி வந்து தங்களுடைய சொந்த நாட்டுக்கு அவற்றைத் திரும்பிக் கொண்டு வருவோம்; இஸ்ராயேலின் மலைகளிலும், நீரூற்றுகளின் ஓரத்திலும், நாட்டில் மக்கள் குடியிருக்கும் இடங்களிலெல்லாம் அவற்றை மேய்ப்போம்.
14 வளமான புல்வெளியில் அவற்றை மேய்ப்போம்; இஸ்ராயேலில் மலையுச்சிகளில் அவை மேய்ச்சலுக்குப் போகும்; அங்கே செழிப்பான புல் தரையில் அவை படுத்திருக்கும்; இஸ்ராயேலின் மலைகளில் உள்ள வளமான புல்லை அவை மேயும்.
15 நம்முடைய ஆடுகளுக்கு நாமே மேய்ப்பனாய் இருப்போம்; அவற்றை நாமே இளைப்பாறச் செய்வோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
16 காணாமற் போனதைத் தேடுவோம்; வழி தவறியதைத் திரும்பக் கொண்டு வருவோம்; எலும்பு முறிந்ததற்குக் கட்டுப் போடுவோம்; வலுவில்லாததைத் தேறும்படி செய்வோம்; கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் கண்காணிப்போம் நமது நீதி விளங்கும் வகையில் அவற்றை மேய்ப்போம்.
17 நமது மந்தையே, ஆண்டவராகிய இறைவன் உங்களுக்குக் கூறுகிறார்: இதோ, ஆடுகளிலிருந்து ஆடுகளையும், ஆட்டுக் கடாக்களிலிருந்து வெள்ளாட்டுக் கடாக்களையும் நாமே நடுவராய் இருந்து தீர்ப்பிடுவோம்;
18 நல்ல மேய்ச்சலை மேய்வதோடு நில்லாமல், மேய்ச்சலில் எஞ்சியவற்றைக் காலால் மிதிக்கலாமோ? தெளிந்த நீரைக் குடிப்பதோடு நில்லாமல், எஞ்சிய நீரைக் காலால் கலக்கிக் குழப்பலாமோ?
19 உங்கள் கால்களால் மிதித்ததை நம்முடைய ஆடுகள் குடிக்க வேண்டுமோ? உங்கள் கால்களால் கலக்கிக் குழப்பியதை நம்முடைய ஆடுகள் குடிக்கவேண்டுமோ?
20 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் அவற்றுக்குக் கூறுகிறார்: இதோ, கொழுத்த ஆடுகளுக்கும், இளைத்த ஆடுகளுக்கும் இடையில் நாமே நடுவராய் இருந்து தீர்ப்பிடுவோம்.
21 வலுவற்ற ஆடுகளை நீங்கள் விலாப் பக்கத்தாலும் தோள் பட்டையாலும் இடித்து, இவற்றைப் பலவிடங்களிலும் சிதறடிக்கும் வரை கொம்புகளால் முட்டித் தள்ளிக் கொண்டு போனதால், நமது மந்தையை நாமே மீட்போம்;
22 இனிமேல் அவை பறிபோகமாட்டா; ஆடுகளுக்கிடையில் நாமே நடுநின்று தீர்ப்பிடுவோம்.
23 அவற்றை மேய்க்கும்படி நம் ஊழியனாகிய தாவீதென்னும் ஒரே மேய்ப்பனை ஏற்படுத்துவோம்; அவனே அவற்றை மேய்ப்பான்; அவனே அவற்றுக்கு மேய்ப்பனாய் இருந்து அவற்றை மேய்த்துக் கண்காணிப்பான்.
24 அப்போது ஆண்டவராகிய நாமே அவர்களுக்குக் கடவுளாய் இருப்போம்; நம் ஊழியனாகிய தாவீது அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்; ஆண்டவராகிய நாமே இதைச் சொன்னோம்.
25 நாம் அவற்றுடன் சமாதான உடன்படிக்கை செய்வோம்; கொடிய மிருகங்களை நாட்டினின்றே விரட்டி விடுவோம்; இனி இவை பாலை நிலத்தில் அச்சமின்றி வாழும்; காடுகளில் கவலையற்று உறங்கும்.
26 அவற்றையும், நமது குன்றின் சுற்றுப் புறங்களையும் ஆசீர்வதிப்போம்; தகுந்த காலத்தில் மழை பொழிவோம்; அவை ஆசீர்வாதத்தின் பொழிவாய் இருக்கும்.
27 வயல் வெளியில் உள்ள மரங்கள் தங்கள் கனிகளைக் கொடுக்கும்; பூமி தன் விளைவைத் தரும்; அவர்கள் தங்கள் நாட்டில் நலமாக இருப்பார்கள். அவர்களின் நுகத்தடிகளை முறித்து, அவர்களை அடிமையாக்கினவர்களின் கைகளினின்று அவர்களை விடுவிக்கும் போது,
28 நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள். இனி மேல் வேற்றினத்தார்க்கு அவர்கள் இரையாகமாட்டார்கள்; நாட்டில் வாழும் கொடிய மிருகங்கள் அவர்களை அடித்துத் தின்னமாட்டா; அவர்கள் அச்சமின்றி வாழ்வார்கள்; அவர்களை மிரட்டுவார் யாரும் இருக்க மாட்டார்கள்.
29 மேலும் செழிப்பான பண்ணை ஒன்றை அவர்களுக்குக் கொடுப்போம்; இனி அவர்கள் பட்டினியால் நாட்டில் மடியமாட்டார்கள்; புறவினத்தாரின் நிந்தைக்கும் ஆளாகமாட்டார்கள்.
30 அப்பொழுது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நாம் அவர்களோடு இருக்கிறோம் என்பதையும், இஸ்ராயேல் வீட்டாராகிய அவர்கள் நம் மக்களாய் இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் அறிவார்கள், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
31 நீங்களே நம்முடைய ஆடுகள்- நமது மேய்ச்சலின் ஆடுகள்; நாமே உங்கள் கடவுள் என்கிறார், ஆண்டவராகிய இறைவன்."
×

Alert

×