Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 33 Verses

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, உன் இனத்தார்க்குக் கூறு: நாம் ஒரு நாட்டின் மீது வாளை வரச் செய்கையில், அந்நாட்டு மக்கள் தங்களுக்குள் ஒருவனை அழைத்து அவனைத் தங்களுக்காகக் காவல் காரனாய் ஏற்படுத்தியிருக்க,
3 இவன் அந்நாட்டின் மேல் வாள் வருவதைக் கண்டு, எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கைப்படுத்தும் போது,
4 மக்களுள் எக்காளத்தின் ஒலியைக் கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் ஒருவன் இருப்பானாயின், வாள் அவன் மேல் வந்து அவனை வீழ்த்தும்;
5 அவன் இரத்தப்பழி அவன் மேலேயே இருக்கும். ஏனெனில், அவன் எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும், அவன் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை; அவனது இரத்தப்பழி அவன் மேலே இருக்கும்; ஆனால் எச்சரிக்கைக்குச் செவிசாய்த்திருந்தால், தன்னையே காத்துக்கொண்டிருப்பான்.
6 அதற்கு மாறாக, காவல்காரன் வாள் வருவதைக் கண்டு, எக்காளம் ஊதி மக்களுக்கு எச்சரிக்கை தராமல் இருந்து, அதனால் எச்சரிக்கையாய் இல்லாத ஒருவன் வாளால் வெட்டுண்டு இறந்தால், அம் மனிதன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆயினும் அவனது இரத்தப்பழியைக் காவல்காரனின் மேல் சாற்றுவோம்.
7 அவ்வாறே, மனிதா, உன்னை நாம் இஸ்ராயேல் வீட்டாருக்குச் சாமக் காவலனாக வைத்திருக்கிறோம்; ஆதலால் நீ நம் வாயினின்று புறப்படும் வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் அதைச் சொல்லி, அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும்.
8 தீயவன் ஒருவனிடம், 'நீ கண்டிப்பாய்ச் சாவாய்' என்று நாம் சொல்ல, அவன் தன் தீய வழியினின்று திரும்பும்படி அவனுக்கு நீ எச்சரிக்கை செய்யாமல் விடுவாயாகில், அந்தத் தீயவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் அவனது இரத்தப் பழியை உன் மேலேயே சாற்றுவோம்.
9 அதற்கு மாறாக, தீயவன் தன் தீய வழியை விட்டு மனந்திரும்ப வேண்டுமென்று நீ அவனுக்கு எச்சரிக்கை செய்திருந்தும், அவன் தன் தீய வழியிலிருந்து திரும்பாமல் இருப்பானாயின், அவன் தன் அக்கிரமத்திலேயே சாவான்; ஆனால் உன்னையே நீ காத்துக் கொள்வாய்.
10 "நீயோ, மனிதா, இஸ்ராயேல் வீட்டாருக்குச் சொல்: நீங்கள், 'எங்கள் அக்கிரமங்களும் பாவங்களும் எங்கள் மேல் இருக்கின்றன, அவற்றினால் நாங்கள் சோர்ந்து போகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படி? 'என்று சொல்லுகிறீர்கள்.
11 நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர்மேல் ஆணை! தீயவன் சாக வேண்டும் என்பது நம் விருப்பமன்று; ஆனால் அவன் தன் தீய வழியை விட்டுத் திரும்பி வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம். 'இஸ்ராயேல் வீட்டாரே, மனந்திரும்புங்கள்; உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும்?' (என்று சொல்.)
12 நீயோ, மனிதா, உன் இனத்தார்க்குக் கூறு: நீதிமான் பாவஞ் செய்தால், அவனுடைய நீதி அவனை மீட்காது; தீயவன் தன் அக்கிரமத்தை விட்டு மனந்திரும்பினால் அவ்வக்கிரமத்தினால் அவனுக்குப் பொல்லாப்பு ஒன்றும் வராது; நீதிமான் பாவஞ் செய்யும் போது, தன் நீதியால் வாழ்வதில்லை.
13 கண்டிப்பாய்ப் பிழைப்பான் என்று நாம் நீதிமானுக்குச் சொல்லியிருந்தாலும், அவன் தன் நீதியை நம்பிப் பாவத்தில் விழுந்தானாயின் அவனுடைய முன்னைய புண்ணியங்களையெல்லாம் நினைக்கமாட்டோம்; அவன் தான் செய்த அக்கிரமத்திலேயே சாவான்.
14 ஆனால் கண்டிப்பாய்ச் சாவான் என்று தீயவனுக்கு நாம் சொல்லியிருந்தாலும், அவன் தான் செய்த அக்கிரமத்திற்காக மனம் வருந்திச் சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்தால்,
15 தான் வாங்கின அடைமானத்தையும், கொள்ளையடித்த பொருளையும் திருப்பிக் கொடுத்து விட்டு, இனி அநியாயம் ஏதும் செய்யாமல், வாழ்வளிக்கும் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், அவன் கண்டிப்பாய்ப் பிழைப்பான்.
16 அவன் முன்பு செய்த பாவமொன்றும் இனி அவனுக்கு எதிராய் நினைக்கப்படாது; சட்டம் சொல்வதையும் சரியானதையும் அவன் செய்ததால், அவன் கண்டிப்பாய் வாழ்வான்.
17 ஆனால் உன் இனத்தார், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று சொல்லுகிறார்கள்; ஆனால் அவர்களுடைய வழி தான் நீதியானதில்லை.
18 நீதிமான் தன் நீதி நெறியை விட்டு அக்கிரமம் செய்தானாயின், அவன் அதனால் சாவான்.
19 தீயவன் தன் அக்கிரமத்தை விட்டுச் சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின், அவன் அதனால் பிழைப்பான்.
20 இருப்பினும், 'ஆண்டவர் நடந்து கொள்வது நீதியில்லை' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இஸ்ராயேல் வீட்டாரே, உங்களுள் ஒவ்வொருவனையும் அவனவன் நடத்தைக்குத் தக்கபடியே நாம் தீர்ப்பிடுவோம்."
21 சிறைவாசத்தின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதம் ஐந்தாம் நாள் யெருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னை அணுகி, 'நகரம் பிடிபட்டது' என்றான்.
22 தப்பினவன் வருவதற்கு முந்தின நாள் மாலையிலேயே ஆண்டவரின் கரம் என் மேல் இருந்ததால், அந்த மனிதன் என்னைக் காலையில் வந்து காணுமுன்பே ஆண்டவர் என் வாயைத் திறந்துவிட்டிருந்தார்; என் வாய் திறக்கப்பட்டது; ஆகவே நான் இனி ஊமையில்லை.
23 அப்போது ஆண்டவர் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
24 மனிதா, இஸ்ராயேல் நாட்டின் பாழான இடங்களில் வாழ்பவர்கள், 'ஆபிரகாம் ஒருவனாயிருந்தும், நாட்டைச் சொந்தமாக்கிக் கொண்டான்; ஆனால் நாங்கள் பலராயிருக்கிறோம்; எங்களுக்கு இந்த நாடு சொந்தமாய்க் கொடுக்கப்பட்டது தானே' என்கிறார்கள்.
25 ஆகையால் நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இறைச்சியை இரத்தத்தோடு தின்கிறீர்கள், உங்கள் அருவருப்பான சிலைகளை ஏறெடுத்துப் பார்க்கிறீர்கள், இரத்தத்தைச் சிந்துகிறீர்கள், நீங்களா நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்ளப்போகிறீர்கள்?
26 நீங்கள் உங்கள் வாளின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள்; அருவருப்பானவற்றைச் செய்கிறீர்கள்; நீங்கள் ஒவ்வொருவரும் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நீங்கள் நாட்டைச் சொந்தமாக்கிக் கொள்வீர்களோ?
27 அவர்களுக்கு நீ இதைச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! பாழான இடங்களில் இருக்கிறவர்கள் வாளுக்கு இரையாகிச் சாவார்கள்; வயல் வெளிகளில் இருப்பவர்களைக் கொடிய மிருகங்களுக்கு இரையாகக் கொடுப்போம்; கோட்டைகளிலும் குகைகளிலும் வாழ்பவர்கள் கொள்ளை நோயால் செத்துப் போவார்கள்.
28 அதன் பின்னர், நாம் நாட்டைப் பாழாக்குவோம்; அதனுடைய வல்லமையின் பெருமை ஒழிந்துபோம்; இஸ்ராயேல் மலைகளும் பாழாய்ப்போகும்; அவ்வழியில் மனித நடமாட்டமே இருக்காது;
29 அவர்கள் செய்த எல்லா அருவருப்புகளின் காரணமாய் நாம் நாட்டைப் பாழும் பாலை நிலமாக்கி விடுவோம்; அப்போது, நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.
30 "மனிதா, சுவர்களின் ஓரத்திலும், வீட்டு வாசற்படிகளிலும் உன்னைக் குறித்து உன் இனத்தார் தங்களுக்குள், 'ஆண்டவரிடமிருந்து புறப்பட்ட வாக்கியம் என்ன என்று போய்க் கேட்போம்' என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு,
31 மக்கள் கூட்டமாய்க் கூடி உன்னிடத்தில் வந்து உன் முன்னால் நம் மக்கள் போல் உட்கார்ந்து நீ சொல்வதைக் கேட்கிறார்கள்; கேட்டும் அதன்படி நடக்கமாட்டார்கள்; தங்கள் வாயினால் அதிக அன்பு காட்டுகிறார்கள்; அவர்கள் இதயமோ பொருளாசையில் ஆழ்ந்திருக்கிறது.
32 இனிய குரலெடுத்துக் காதற் பாட்டுகள் பாடுகிறவன் போலவும், இசைக் கருவியை வாசிப்பவன் போலவும் நீ இருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள். ஆனால் நீ சொல்லுகிறபடி அவர்கள் நடப்பதில்லை.
33 இதோ, இறைவாக்கு நிறைவேறும்; கண்டிப்பாய் நிறைவேறும், அப்போது தான் தங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினர் இருந்து வந்தார் என்பதை அறிவார்கள்.
×

Alert

×