Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 28 Verses

1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, தீர் நகரத்துத் தலைவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "உன் இதயம் செருக்குற்று, ' நானே கடவுள்; நடுக்கடலில் தெய்வங்களின் இருக்கையில் வீற்றிருக்கிறேன்' என்று நீ சொன்னாய்; நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணினாலும், நீ மனிதன் தான்.
3 நீ தானியேலை விட அறிவாளி தான், நீ அறியாத மறைபொருள் ஒன்றுமில்லை;
4 உன் ஞானத்தாலும் அறிவாலும், செல்வமும் வல்லமையும் பெற்றாய்; பொன்னும் வெள்ளியும் சேர்த்து உன்னுடைய கருவூலத்தை நிரப்பினாய்.
5 வாணிகத்தில் உள்ள உன் சிறந்த ஞானம், இருந்த செல்வத்தை மிகுதிப்படுத்திற்று; வல்லமை வளர்ந்தது; திறமை மிகுதியால் உன்னுடைய இதயம் செருக்குக் கொண்டது.
6 ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நீ கடவுளைப்போல் அறிவாளியாய் இருப்பதாக நினைப்பதால்,
7 வேற்று நாட்டவருள் மிகக் கொடியவர்களான அந்நியர்களை உனக்கெதிராய் எழுப்புவோம்; அவர்கள் கையிலேந்திய வாளோடு வருவர்; வந்து உன் ஞானத்தின் பெருமையைப் போக்குவர்; அதனுடைய பேரழகைக் கெடுப்பார்கள்.
8 உன்னைக் கொன்று அரியணையிலிருந்து தள்ளுவர்; கடலில் கொலையுண்டவர்கள் நடுவில் அழிவாய்.
9 நீ மனிதன் தான்; கடவுள் அல்லவே; உன்னைக் கொல்ல வருகின்றவர்களிடம், 'நான் கடவுள்' என்று சொல்வாயோ?
10 விருத்தசேதனம் செய்யப்படாதவனைப் போல், அந்நிய நாட்டினர் கையால் சாவாய்; ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
11 ஆண்டவரின் வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: "மனிதா, நீ தீர் நாட்டு அரசனைக் குறித்துப் புலம்பு:
12 நீ அவனுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "நீ கடவுள் சாயலின் முத்திரையாய் இருந்தாய்; ஞானத்தில் நிறைந்திருந்தாய்; அழகில் சிறந்திருந்தாய்;
13 கடவுளின் சோலையில், இன்பத் தோட்டத்தில் இருந்தாய்; விலையுயர்ந்த கற்களால் அழகு பெற்றிருந்தாய்; பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்குக் கல், கோமேதகம், படிகப்பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் முதலியவற்றை அணிந்திருந்தாய்; பொன்னான உன் உடுபாவனை உன் அழகை வெளிக்காட்டிற்று; நீ பிறந்த அன்றே இவை தயாரிக்கப்பட்டன.
14 தன் இறக்கையை விரித்துக் காக்கும் கெரூபை உனக்குக் காவலாக வைத்தோம். கடவுளின் பரிசுத்த மலை மேல் உன்னை நாட்டினோம்; விலையுயர்ந்த கற்களின் நடுவில் உலவினாய்.
15 நீ உண்டாக்கப்பட்ட நாளிலிருந்து உன் வழிகளில் குற்றமற்றிருந்தாய்; ஆனால் இறுதியில் உன்னில் குற்றம் காணப்பட்டது;
16 வியாபார மிகுதியால் உன்னில் அக்கிரமம் நிறைந்தது; நீ பாவத்தைச் செய்தாய்; ஆகையால் கடவுளின் மலையிலிருந்து அசுத்தமாயிருந்த உன்னைத் தள்ளினோம், காப்பாற்றும் கெரூபு உன்னை அக்கினி மயமான இரத்தினங்களின் நடுவினின்று வெளியேற்றியது.
17 நீ உன் அழகின் காரணமாய்ச் செருக்குற்றாய், உன் மாட்சியை முன்னிட்டு உன் ஞானத்தைக் கெடுத்தாய். உன்னைத் தரையில் குப்புறத் தள்ளினோம்; மன்னர்கள் முன் வைத்து அவர்கள் உன்னைப் பார்த்துப் பரிகசிக்கச் செய்தோம்.
18 உன் அக்கிரமங்களின் மிகுதியினாலும், வியாபாரத்தில் செய்த அநீதியாலும் உன் பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தினாய்; ஆகையால் உன் நடுவிலிருந்தே அக்கினியை வரப் பண்ணினோம்; அது உன்னைச் சுட்டெரித்தது. உன்னைப் பார்த்தவர்களின் கண்கள் காண, முற்றிலும் உன்னைச் சாம்பலாக்கினோம்.
19 உன்னைக் கண்டிருந்த மக்களெல்லாம், இப்பொழுது பார்த்துப் பயந்து வியக்கிறார்கள்; கொடியதொரு முடிவை நீ அடைந்தாய்; இனி என்றென்றும் இருக்க மாட்டாய்."
20 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
21 மனிதா, சீதோன் நகரின் பக்கமாய் உன் முகத்தைத் திருப்பி, அதற்கு எதிராக இறைவாக்குக் கூறு:
22 நீ அதற்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "சீதோனே, இதோ, நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; உன் நடுவில் நமது மகிமையை வெளிப்படுத்துவோம்; அதன் நடுவில் வந்து நீதித் தீர்ப்பு வழங்கும் போது, நம்முடைய பரிசுத்தத்தை அங்கே காண்பிக்கும் போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
23 நாம் அதில் கொள்ளைநோயை அனுப்புவோம், தெருக்களில் இரத்த வெள்ளம் ஓடச் செய்வோம்; நாற்புறமும் வாளால் வெட்டப்படுவார்கள்; வெட்டுண்டவர்கள் அதன் நடுவில் செத்து வீழ்வார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
24 "இஸ்ராயேல் நாட்டார்க்கு, அவர்கள் நிந்தித்து நடத்திய எதிரி நாட்டார்கள் காலில் குத்துகிற முள்ளாகவும், தைத்து நோவு கொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இனி மேல் இருக்க மாட்டார்கள் அப்போது நாமே இறைவன் என்பதை அறிவார்கள்.
25 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இஸ்ராயேல் வீட்டாரை நாம் அவர்கள் சிதறிவாழும் நாடுகளிலிருந்து சேர்த்துக் கொண்டு வந்து, அவர்கள் வழியாய்ப் புறவினத்தார் முன் நம் பரிசுத்தத்தை விளங்கச் செய்யும் போது, நாம் நம் அடியான் யாக்கோபுக்குக் கொடுத்திருந்த அவர்களுடைய சொந்த நாட்டில் வாழ்வார்கள்.
26 அவர்கள் அதில் அச்சமின்றிக் குடியிருப்பார்கள்; வீடுகள் கட்டுவார்கள்; திராட்சைத் தோட்டங்கள் அமைப்பார்கள். அவர்களைச் சூழ்ந்திருந்து அவர்களை இழிவாக நடத்தியவர்கள் மீது நாம் நீதித்தீர்ப்புச் செலுத்திய பிறகு, அச்சமின்றி வாழ்வார்கள்; அப்பொழுது, நாமே அவர்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
×

Alert

×