Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 26 Verses

1 பதினோராம் ஆண்டில் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
2 மனிதா, தீர் நகரம் யெருசலேமைக் குறித்து, 'ஆ, ஆ, மக்கள் நிறைந்த நகரத்தின் கதவுகள் உடைபட்டன; அந்நகரம் எனக்குத் திறந்துள்ளது. அது குடிகளில்லா நகரமாகும், நானோ மக்களால் நிரப்புவேன்' என்று சொல்லிற்று; அதனால்,
3 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: 'தீர் நகரமே, இதோ நாம் உனக்கு எதிராய் இருக்கிறோம்; கடலலை போலப் புறவினத்தாரை உனக்கெதிராய் எழுப்புவோம்.
4 அவர்கள் தீர் நகரின் மதில்களை அழிப்பார்கள், கோபுரங்களை இடிப்பார்கள்; இடிந்த மண்ணும் அதில் இராதபடி அகற்றி, வெறும் கற்பாறையாக நாம் ஆக்குவோம்;
5 கடல் நடுவில் அதை வலை காயுமிடமாக்குவோம்; ஏனெனில் நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்; அது புறவினத்தார்க்குக் கொள்ளைப் பொருள் ஆகிவிடும்.
6 வெளியூர்களான அதன் புதல்வியர் வாளுக்கு இரையாகி வீழ்வார்கள்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
7 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, அரசர்க்கு அரசனாகிய நபுக்கோதனசார் என்னும் பபிலோன் அரசனை, வடக்கிலிருந்து தீருக்கெதிராய் வரச்செய்வோம்: அவன், குதிரைகளோடும் தேர்களோடும், குதிரை வீரர்களோடும் பெருங் கூட்டத்தோடும், திரளான படைகளோடும் பாய்ந்து வருவான்.
8 வெளியூர்களான உன் புதல்வியரை வாளால் வீழ்த்தி, கொத்தளங்களால் உன்னை வளைத்து, கோட்டைகளால் உன்னைச் சூழ்ந்து, கூரை போலக் கேடயங்கள் தூக்கி உனக்கெதிராய்ப் போர் புரிவான்.
9 மதில் இடிக்கும் எந்திரங்களை எதிரே வைத்து உன் கோபுரங்கள் அனைத்தையும் இடித்து நொறுக்குவான்;
10 அது கிளப்பும் புழுதி உன்னை மூடி மறைக்கும் அளவுக்கு, அவனது குதிரைப்படை பெரிதாய் இருக்கும்; இடித்துத் திறக்கப்பட்ட பட்டணத்தில் நுழைவது போல், அவன் உனக்குள் நுழையும் போது, குதிரைகளும் வண்டிகளும் தேர்களும் செய்யும் பேரிரைச்சல் உன் மதில்களை அதிரச் செய்யும்.
11 அவன் குதிரைகளின் குளம்புகளால் உன் தெருக்களெல்லாம் மிதிக்கப்படும்; உன் மக்களை வாளால் வெட்டுவான்; உன் பெருந் தூண்கள் தரையில் சாயும்.
12 உன் செல்வத்தைக் கொள்ளையிடுவார்கள், உன் சரக்குகளைப் பறிப்பார்கள், உன் மதில்களை இடிப்பார்கள், அழகிய வீடுகளை அழிப்பார்கள், உன்னிலுள்ள கற்களையும் மரங்களையும் மண்ணையும் தண்ணீரில் எறிவார்கள்.
13 இசை முழக்கத்தை உன்னிடத்தில் ஒயப்பண்ணுவோம், உன் வீணையோசை இனிமேல் கேட்காது.
14 நீ வெறுங் கற்பாறை போல் ஆவாய்; வலைகள் காயும் இடமாய் இருப்பாய்; இனி மீண்டும் கட்டப்படமாட்டாய்; ஏனெனில் ஆண்டவராகிய நாமே சொன்னோம், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
15 ஆண்டவராகிய இறைவன் தீர் நகருக்குக் கூறுகிறார்: நீ வீழ்ச்சியுற்று, உன் மக்கள் கொன்று குவிக்கப்படும் போது, உன்னில் காயம் பட்டவர்கள் பயங்கரமாய் அலறி ஒலமிடும் ஒசையால் தீவுகள் அதிருமல்லவா?
16 கடற்கரை வாசிகளின் தரைவர்கள் அனைவரும், தங்கள் இருக்கைகளை விட்டிறங்கித் தங்கள் மகிமையின் அடையாளமான ஆடைகளைக் கழற்றி விட்டுச் சித்திர உடைகளை உரிந்து போடுவார்கள்; திகில் பிடித்தவர்களாய் மயங்குவார்; தரையிலே உட்கார்ந்து, நீ திடீரென வீழ்ச்சியுற்றதை எண்ணி எண்ணி வியப்படைவார்கள்.
17 அவர்கள் புலம்பி அழுது உனக்குச் சொல்வார்கள்: 'பேர்பெற்ற பட்டினமே, கடலின் அரசியே, நீயும் உன் குடிகளும் கடலில் வலிமை காட்டி, கடற்கரை நாடுகளுகெல்லாம் அச்சம் தந்தாயே, நீ இப்படி வீழ்ச்சியுற்றது எவ்வாறு?
18 நீ வீழ்ச்சியுற்ற நாளாகிய இன்று, தீவுகள் திகில் கொள்ளுகின்றன; ஆம், நீ மறைந்து போவதைக் கண்டு கடலின் தீவெல்லாம் கலங்கித் திடுக்கிடும்.'
19 ஏனெனில் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நாம் உன்னைக் குடியற்ற பட்டணம் போலப் பாழ்படுத்தி, உன் மேல் புயலை எழுப்பிக் கடல் நீரால் உன்னை மூழ்கடித்து,
20 ஆழ்ந்த பாதாளத்தில் இறங்கிய பண்டைய மக்களுடன் உன்னையும் தள்ளி, அங்கே அந்தப் பாதாளத்தில் இறங்குகிறவர்களோடு நீயும் பாழடைந்த படுகுழியிலே வாழச் செய்வோம்; உன்னில் மக்கள் வாழமாட்டார்கள்; வாழ்வோர் நாட்டில் உனக்கு இடமிருக்காது.
21 கொடிய முடிவுக்கு உன்னைக் கொண்டு வருவோம்; நீ இனி இருக்கமாட்டாய்; உன்னைத் தேடுவார்கள்; நீ காணப்படமாட்டாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்."
×

Alert

×