Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ezekiel Chapters

Ezekiel 12 Verses

1 ஆண்டவரின் வாக்கு எனக்குக் கூறியது:
2 மனிதா குழப்பக்காரர்கள் நடுவில் நீ வாழ்கிறாய்; கண்ணிருந்தும் அவர்கள் காண்பதில்லை; காதிருந்தும் அவர்கள் கேட்பதில்லை; அவர்களோ அடங்காத மக்கள்.
3 ஆனால் மனிதா, நீ வெளிநாட்டுக்கு அடிமையாய்ப் போகிறவனுக்குரிய பொருட்களைத் தயார் செய்து கொண்டு, அவர்கள் பார்க்கும்படி பட்டப் பகலில் புறப்படு; உன் உறைவிடத்தை விட்டு வேறோர் இடத்திற்குப் போக வெளிப்படையாய்ப் புறப்பட்டுப் போ. கலக்காரராய் இருப்பினும் அவர்கள் ஒருவேளை அதைக் கண்டுணர்வார்கள்.
4 அடிமையாய் வெளிநாட்டுக்குப் போகிறவன் போல் அவர்கள் பார்க்கும் படி உன் பொருட்களை பகல் வேளையில் எடுத்து வை; தன் நாட்டை விட்டுப் பிற நாட்டுக்குப் போகிறவன் போல் அவர்கள் காணும்படி மாலை வேளையில் புறப்படு.
5 அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, நீ உன் வீட்டுச் சுவரில் வழி உண்டாக்கி, அதன் வழியாய் வெளியேறு.
6 அவர்கள் பார்க்கும்படி உன் மூட்டையை எடுத்துத் தோளின் மேல் வைத்துக் கொண்டு வெளியே இருளில் தூக்கிக்கொண்டு போ; தரையைக் காணாதபடி உன் முகத்தை மூடிக்கொள்; ஏனெனில் இஸ்ராயேல் மக்களுக்கு உன்னை ஒர் அடையாளமாக வைத்திருக்கிறோம்."
7 நான் ஆண்டவரின் கட்டளைப்படியே செய்தேன்; அடிமையாய் வெளிநாடு செல்பவனைப் போல் என் பொருட்களை வெளியில் எடுத்து வைத்தேன்; மாலை வேளையில் என் கையால் சுவரில் துவாரமிட்டு, இருளில் அதன் வழியாய் வெளியேறி, எல்லாரும் பார்க்க என் மூட்டையைத் தூக்கிக் கொண்டு போனேன்.
8 காலையில் ஆண்டவர் என்னிடம் பேசினார்:
9 மனிதா, கலகக்காரராகிய இஸ்ராயேல் மக்கள் உன்னை நோக்கி, ' நீ செய்கிறது என்ன?' என்று கேட்க வில்லையா?
10 அவர்களுக்கு நீ சொல்லவேண்டிய மறுமொழி இதுவே: 'ஆண்டவராகிய இறைவன் சொல்லுகிறார்: இந்த இறைவாக்கு யெருசலேமின் அதிபதியையும், அதில் வாழும் இஸ்ராயேல் மக்களையும் பற்றியது ஆகும்.'
11 தொடர்ந்து சொல்: 'நான் உங்களுக்கு ஒர் அடையாளம்; நான் செய்தது போலவே அவர்களுக்குச் செய்யப் படும்; அடிமைகளாய் ஊரூராய்ச் செல்லும் சிறைக்கைதிகளாய் இருப்பார்கள்.'
12 அவர்கள் நடுவில் வாழும் அதிபதி தன் தோள் மீது மூட்டையைத் தூக்கிக் கொண்டு இருளிலே வெளியேறுவான்; அவனை வெளியேற்றச் சுவரில் துவாரமிடுவார்கள்; பூமியைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.
13 அவன் நமது கண்ணியில் சிக்கும்படி அவன் மீது வலையை வீசுவோம்; அவனைப் பிடித்துக் கல்தேயர் நாட்டிலுள்ள பபிலோனுக்குக் கொண்டு போவோம்; ஆனால் அதனையும் அவன் பார்க்காமலே சாவான்.
14 அவனைச் சூழ்ந்துள்ளவர்களையும், அவனுடைய மெய்க்காப்பாளர்களையும் இராணுவங்களையும் நாற்றிசையிலும் சிதறடிப்போம்; அவர்களை உருவிய வாளோடு பின்தொடர்வோம்.
15 பல நாடுகளிலும் புறவினத்தார் நடுவில் அவர்களைச் சிதறடிக்கும் போது, நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்.
16 அவர்கள் வந்து சேரும் மக்களிடத்தில் தங்கள் அக்கிரமங்கள் யாவற்றையும் விவரமாய் அறிவிக்கும்படி அவர்களுள் சிலரை வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளை நோய்க்கும் ஆளாக்காமல் காப்பாற்றுவோம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
17 தொடர்ந்து ஆண்டவர் என்னிடம் கூறினார்:
18 மனிதா, நீ அச்சத்தோடு அப்பத்தை உண்டு, நடுக்கத்தோடும் கலக்கத்தோடும் தண்ணீரைப் பருகு.
19 அப்போது மக்களை நோக்கிக் கூறு: இஸ்ராயேல் நாட்டு யெருசலேம் மக்களைப் பற்றி ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இவர்கள் அச்சத்தோடு அப்பத்தை உண்டு திகிலோடு தண்ணீர் குடிப்பார்கள்; ஏனெனில் இந்த நாட்டு மக்களின் அக்கிரமத்தின் காரணமாக இவை யாவும் குறைந்து போகும்; நாடும் பாழாய்ப் போகும்.
20 அவர்கள் இப்பொழுது வசிக்கும் பட்டணங்கள் பாலைவனமாய் மாறிப் போகும்; நாடும் காடாகும்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அறிவார்கள்."
21 மறுபடியும் ஆண்டவர் எனக்குச் சொன்னது:
22 மனிதா, 'காட்சியெல்லாம் வீண், அவை நிறைவேற நாளாகும்' என்று இஸ்ராயேல் மக்கள் நடுவில் ஒரு பழமொழி ஏன் வழங்கி வருகிறது?
23 ஆகையால் அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: அந்தப் பழமொழிக்கு நாம் ஒரு முடிவு காண்போம்; இனி அதை இஸ்ராயேல் மக்கள் வழங்கமாட்டார்கள்.' காட்சிகள் யாவும் றிறைவேறும் நாள் அருகில் இருக்கிறது என்று சொல்.
24 ஏனெனில், இஸ்ராயேல் மக்கள் நடுவில் இனிப்பொய்க் காட்சிகளும் சிலேடையான இறைவாக்கும் இல்லாமற் போகும்.
25 ஆண்டவராகிய நாம் விரும்பும் வார்த்தையை நாமே பேசுவோம்; நாம் சொல்லும் வார்த்தை யாவும் தாமதமின்றி நிறைவேறும்; கோபத்தை மூட்டுகிற மூர்க்கர்களே, உங்கள் நாட்களில் நாம் சொன்ன வார்த்தையை உங்கள் நாளிலேயே நிறைவேற்றுவோம், என்கிறார் ஆண்டவர்."
26 திரும்பவும் ஆண்டவர் என்னை நோக்கி,
27 மனிதா, 'இவன் கண்ட காட்சி நிறைவேற நாள் சொல்லும், எதிர்காலத்தைக் குறித்தே இவன் இறைவாக்கு உரைக்கிறான்' என்று இஸ்ராயேல் மக்கள் சொல்லுகிறார்கள்.
28 ஆகையால், நீ அவர்களுக்கு: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: நமது வார்த்தை ஒன்றாகிலும் இனித் தாமதியாது; நாம் சொன்ன வாக்கு நிறைவேறும் என்கிறார் ஆண்டவராகிய இறைவன், என்று சொல்" என்றார்.
×

Alert

×