Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 7 Verses

1 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: இதோ, உன்னை நாம் பாரவோனுக்குத் தெய்வமாக நியமித்திருக்கிறோம். உன் சகோதரனாகிய ஆரோனோ, உனக்காகப் பேசுபவனாய் இருப்பான்.
2 நாம் உனக்குத் தெரிவிக்கும் யாவற்றையும் நீ அவனுக்குச் சொல்ல வேண்டும். அவனோ, பாரவோனை நோக்கி, அவன் தன் நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை அனுப்பிவிடுமாறு சொல்வான்.
3 ஆனால், நாம் பாரவோனுடைய இதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து நாட்டிலே நம் அருங்குறிகளையும் அற்புதங்களையும் மிகுதியாகக் காட்டுவோம்.
4 ஆயினும், அவன் உங்களுக்குச் செவி கொடுக்க மாட்டானாதலால், நாம் எகிப்துக்கு விரோதமாய் நமது கையை ஓங்கி, மகத்தான தண்டனைகள் மூலம் நம் படைகளும் குடிகளுமாகிய இஸ்ராயேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்வோம்.
5 நாம் எகிப்தின் மீது நமது கையை நீட்டி, இஸ்ராயேல் மக்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச் செய்யும் போது, நாமே ஆண்டவர் என்று எகிப்தியர் அறிந்து கொள்வார்கள் என்றார்.
6 ஆகையால் மோயீசனும் ஆரோனும் ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்து, அவ்விதமே நடந்தனர்.
7 அவர்கள் பாரவோனிடம் போய்ப் பேசின போது, மோயீசனுக்கு வயது எண்பதும் ஆரோனுக்கு வயது எண்பத்து மூன்றுமாம்.
8 மீண்டும், ஆண்டவர் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளி:
9 அற்புதங்களைக் காட்டுங்கள் என்று பாரவோன் உங்களுக்குச் சொல்லும் பொழுது, நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து, பாரவோனுக்கு முன்பாகப் போடு என்பாய்; அது பாம்பாய் மாறிவிடும் என்றார்.
10 அவ்வாறே, மோயீசனும் ஆரோனும் பாரவோனிடம் போய், ஆண்டவர் கட்டளையிட்டபடி செய்தனர். அதாவது, ஆரோன் பாரவோனுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கோலை எடுத்து எறிய, அது பாம்பாக மாறியது.
11 பாரவோனோ, ஞானிகளையும் மந்திரவாதிகளையும் வரவழைத்தான். இவர்களோ, எகிப்தில் வழங்கிய மந்திரங்களைக் கொண்டும், பல இரகசிய தந்திரங்களைக் கொண்டும் அவ்வண்ணமே செய்து காட்டினர்.
12 அதாவது, அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் கோலைப் போட்டதும், அவையெல்லாம் பாம்புகளாக மாறின. ஆயினும், ஆரோன் கோல் அவர்களுடைய கோல்களையெல்லாம் விழுங்கிவிட்டது.
13 ஆதலால், பாரவோனின் இதயம் கடினமாகிவிட்டது. ஆண்டவர் சொல்லியிருந்தபடியே, அவன் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் செவி கொடுக்கவில்லை.
14 அப்போது ஆண்டவர் மோயீசனை நோக்கி: பாரவோனின் இதயம் கடினமாகி விட்டது. மக்களை அனுப்பிவிட அவனுக்கு மனமில்லை.
15 நீ காலையில் அவனிடம் போ. அப்பொழுது அவன் ஆற்றை நாடி வந்து கொண்டிருப்பான். நீ ஆற்றங் கரையிலே அவனுக்கு எதிராகச் சென்று, பாம்பாய் மாறிய கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, பாரவோனை நோக்கி:
16 பாலைநிலத்தில் நமக்கு வழிபாடு செய்யும்படி நமது மக்களை அனுப்பி வை என்று சொல்லச் சொல்லி, எபிரேயருடைய கடவுளாகிய ஆண்டவர் என்னை உம்மிடம் அனுப்பினாராயினும், இதுவரையிலும் நீர் கேளாமல் போனீர்.
17 ஆதலால், ஆண்டவர் சொல்லுவதாவது: நாம் ஆண்டவரென்று எதனால் அறிவாய் என்றால், இதோ என் கையிலிருக்கிற கோலினால் ஆற்றிலுள்ள தண்ணீரின்மேல் அடிப்பேன்; அடிக்கவே, தண்ணீர் இரத்தமாய் மாறிப்போகும்;
18 ஆற்றிலுள்ள மீன்கள் மாண்டு போக, தண்ணீர் நாறிப் போகுமாதலால், எகிப்தியர் ஆற்று நீரைக் குடித்துத் துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று சொல்லுவாய் என்றார்.
19 பிறகு ஆண்டவர் மோயீசனை நோக்கி: ஆரோனுக்கு நீ சொல்ல வேண்டியதாவது: எகிப்தின் எவ்விடத்தும் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், அருவிகள், குளம் குட்டைகள், ஏரி முதலியவை எல்லாம் இரத்தமாய் மாறத்தக்கதாகவும், எகிப்தில் எங்கும் மரப்பாத்திரங்களும் கற்பாத்திரங்களும் இரத்தத்தால் நிறைந்திருக்கத் தக்கதாகவும், நீ கோலை எடுத்து உன் கையை நீட்டுவாயாக என்பதாம் என்றார்.
20 ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோயீசனும் ஆரோனும் செய்தனர். மோயீசன் கோலை எடுத்து, பாரவோனுக்கும் அவன் ஊழியர்க்கும் முன்பாக ஆற்று நீரின்மேல் அடித்தார். அடிக்கவே, தண்ணீர் இரத்தமாய் மாறிப் போயிற்று.
21 அன்றியும், ஆற்றிலுள்ள மீன்களும் மடிய, ஆறும் நாற்றம் எடுத்தது. எனவே, எகிப்தியர் ஆற்று நீரைக் குடிக்க இயலாது போயிற்று. எகிப்து நாடெங்குமே இரத்த மயமாய் இருந்தது.
22 பின்பு எகிப்தியருடைய மந்திரவாதிகளும் தங்கள் மந்திர வித்தையினாலே அவ்வண்ணமே செய்து காட்டினர். அது கண்டு பாரவோனின் இதயம் கடினமாகியது. ஆண்டவர் கட்டளைப்படி அவர்கட்குச் செவி கொடாது இருந்தான்.
23 அவன், முதுகைத் திருப்பிக் கொண்டு தன் வீட்டினுள் புகுந்து கொண்டானேயன்றி, இம் முறையும் அவன் மனம் இணங்கவேயில்லை.
24 ஆனால், ஆற்று நீர் குடிக்க உதவாமையால், குடிநீருக்காக எகிப்தியர் ஆற்றோரம் நெடுக ஊற்றுத் தோண்டினர்.
25 ஆண்டவர் ஆற்றை அடித்தது தொடங்கி எழு நாட்கள் கடந்துபோயின.
×

Alert

×