Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 39 Verses

1 மேலும், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடியே பெசெலேயல், திருப்பணி செய்யும் போது ஆரோன் அணியவேண்டிய ஆடைகளை இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்தநிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் நெய்தான்.
2 முதலில் ஏப்போத்தைப் பொன் நூல், இளநீலம், இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல் முதலியவற்றால்
3 பல வண்ண நெசவு வேலையாய்ச் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால், பொன்னை மெல்லிய தகடாய் அடித்து அதனைச் சரிகையாக்கி; மேற்கூறின பலவண்ணச் சீலையின் நூலோடு சேர்த்து முறுக்கினான்.
4 இரண்டு தோள்களின் மேலும் உள்ள ஏப்போத்தின் முனைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன.
5 கச்சையையும் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி பல வண்ணமுடையதாய்ச் (செய்தான்).
6 மேலும், மணி வெட்டும் தலைமுறைப்படி இரண்டு கோமேதகக் கற்களை வெட்டி, அவற்றைப் பொன் குவளைகளில் கெட்டியாய்ப் பதிய வைத்து, அவைகளின் மேல் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களைப் பொறித்தான்.
7 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அவைகளை இஸ்ராயேல் புதல்வர்களின் நினைவுச் சின்னமாக ஏப்போத் ( என்னும் மேலாடையின் ) புறங்களிலே வைத்தான்.
8 மேலும், மார்ப்பதக்கத்தை ( மேலாடையாகிய ) ஏப்போத்தின் வேலைப்பாட்டிற்கு ஒப்பாக விசித்திர வேலையாய்ச் செய்து, பொற்சரிகை, இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம்தோய்த்த இரத்த நிற நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் வினோதமாய்ச் செய்தான்.
9 அதைச் சதுரமும் இரட்டையுமாய் ஒரு சாண் அளவாய் இருக்கும்படி செய்தான்.
10 அதனில் இரத்தினங்களை நான்கு வரிசையில் பதித்தான். முதல் வரிசையில் பதுமராகமும், புஷ்பராகமும், மரகதமும்,
11 இரண்டாம் வரிசையில் மாணிக்கமும்,
12 நீலமணியும், வைரமும், மூன்றாம் வரிசையில் கெம்பும், வைடூரியமும், செவ்வந்திக் கல்லும்,
13 நான்காம் வரிசையில் சமுத்திர வண்ணக்கல்லும் கோமேதகமும், படிகப் பச்சைக் கல்லும் ஆகியவற்றைத் தம் வரிசைகளின்படி பொற்குவளைகளிலே பதித்து வைத்தான்.
14 அந்தப் பன்னிரண்டு கற்களிலும் இஸ்ராயேலின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களை வெட்டினான். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் எழுதியிருக்கும்.
15 மார்ப்பதக்கத்தில் ஒன்றோடொன்று சேரும் சிறு சங்கிலிகளையும் அவர்கள் பசும் பொன்னால் செய்தார்கள்.
16 அதன் பின் இரண்டு கொக்கிகளையும் இரண்டு வளையங்களையும் பொன்னால் அமைத்தார்கள். மேற்சொன்ன வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரு பக்கத்திலும் பொருத்தினார்கள்.
17 இவைகளினின்று இரண்டு பொற்சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்தன. அந்தச் சங்கிலிகளை ஏப்போத்தின் முனையிலுள்ள வளையங்களிலே மாட்டினார்கள்.
18 அவை சரியாகப் பொருந்தும்படி செய்தால் ஏப்போத்தும் மார்ப்பதக்கமும் ஒன்றோடொன்று இணைக்கப்படும்.
19 அவ்விரண்டும் ஏப்போத்திற்கு எதிராக இறுகியவைகளுமாய் தளராதபடி நீல நாடா பொருத்திய வளையங்களால் பலமாய்ச் சேர்க்கப்பட்டவைகளுமாய் இருந்தன. அதனால், ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி, அவ்விரண்டும் ஒன்றை ஒன்று அகலவே கூடாது.
20 அன்றியும், ஏப்போத்துக்கடுத்த அங்கியை முழுவதும் இளநீல நூலால் செய்து,
21 அதன் மேற்பக்கத்து மையத்திலே தலையை நுழைப்பதற்கு ஏற்ற ஒரு துவாரத்தை அமைத்து, அதன் ஓரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவைத் தைத்தனர்.
22 அங்கியின் கீழ் ஒரத்திலே இளநீலம், கருஞ்சிவப்பு இரத்த நிறம் கொண்ட நூலாலும் மெல்லிய சணல் நூலாலும் செய்த மாதுளம் பழங்களைச் சித்திரப் பின்னல் வேலையாய்ச் செய்து,
23 பசும் பொன்னாலான மணிகளையும் மாதுளம் பழங்களையும் இடையிடையே வைத்து அங்கியின் கீழ் ஒரத்தைச் சுற்றிலும் அலங்கரித்தார்கள்.
24 ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம் பழமுமாக ( வைத்தார்கள் ). ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்த படியே, கடவுளுக்கு ஆராதனை செலுத்தப் போகும் போது பெரிய குரு மேற்சொன்ன அங்கியை அணிந்து கொள்ளக்கடவார்.
25 அவர்கள் ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் நெடுஞ்சட்டைகளையும் மெல்லிய சணல் நூலால் செய்ததும் தவிர,
26 சிறிய முடிகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகளையும் மெல்லிய சணல் நூலாலே அமைத்து,
27 மெல்லிய சணல் நூலால் செய்யப்பட்ட சல்லடைகளையும் அமைத்து,
28 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி, திரித்த மெல்லிய சணல் நூலாலும், இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிற நூல்களாலும் வினோதப் பின்னல் வேலையாய் இடைக் கச்சையையும் அமைத்தார்கள்.
29 மிகவும் பரிசுத்தமாகிய நெற்றிப் பட்டத்தைத் தூய பொன்னால் செய்து ஆண்டவருக்காக அர்ப்பணித்து ஒதுக்கப்பட்டவர் என்னும் வார்த்தைகளை அதிலே பொறித்தார்கள்.
30 ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே அதனை அலங்காரத் தலைப்பாகையோடு இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
31 இவ்வாறு உடன்படிக்கைக் கூடாரத்தின் வேலையையும் அதன் மேற்கட்டு வேலையையும் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் செய்து முடித்தனர்.
32 அவர்களே திருவுறைவிடத்தையும், அதன் மேற்கட்டையும், எல்லாப் பணிமுட்டுக்களையும் வளையங்களையும் பலகைகளையும் தண்டுகளையும் தூண்களையும் அதன் பாதங்களையும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
33 சிவப்புத் தோய்த்த ஆட்டுத் தோல்களை மேல் மூடியாகவும், ஊதா தோய்த்த தோல்களை அதற்கு மூடியாகவும் ஒப்புக்கொடுத்தார்கள்.
34 திரையையும் திருப்பெட்டகத்தையும் இரக்கத்தின் அரியணையையும்
35 மேசையையும், மேசைக்கடுத்த பாத்திரங்களையும், காணிக்கை அப்பங்களையும்,
36 குத்துவிளக்கையும், அதன் அகல்களையும், அவற்றின் கருவிகளையும் எண்ணெயையும்
37 பொற்பீடத்தையும், ( அபிசேகத் ) தைலத்தையும், நறுமணத் தூபவகைகளையும் கூடார வாயிலின் தொங்கு திரையையும்,
38 வெண்கலப் பீடத்தையும்,
39 அதன் சல்லடையையும் தண்டுகளையும் எல்லாத் தட்டுமுட்டுக்களையும் தொட்டியையும் அதன் பாதத்தையும், பிராகாரத்துத் தொங்கு திரையையும், தூண்களையும்,
40 அவற்றின் பாதங்களையும், மண்டப வாயிலின் தொங்கு திரையையும் அதன் கயிறுகளையும் முளைகளையும் கொடுத்தார்கள். ஆசாரக்கூடாரத்துப் பணிவிடைக்கும், சாட்சியக் கூடாரத்து ஆராதனை வழிபாட்டிற்கும் ஆண்டவர் கட்டளையிட்டவைகளிலெல்லாம் ( ஒன்றும் ) குறையவில்லை.
41 மேலும் பரிசுத்த இடத்தில் குருவாகிய ஆரோனும் அவர் புதல்வர்களும் அணிந்துகொள்ள வேண்டிய திருவுடைகளையும்,
42 ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இஸ்ராயேல் மக்கள் கொண்டுவந்து ஒப்புக்கொடுத்தார்கள்.
43 மோயீசன் அவையெல்லாம் நிறைவேறின என்று கண்டு, அவைகளை ஆசீர்வதித்தார்.
×

Alert

×