Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 38 Verses

1 அவன் தகனப் பலிப்பீடத்தையும் சேத்தீன் மரத்தினாலே செய்தான். அது நீளத்திலும் அகலத்திலும் ஐந்து முழச் சதுரமாகவும், உயரத்திலே மூன்று முழமாகவும் இருந்தது.
2 அதன் மூலைகளிலே கொம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அதையும் வெண்கலத்தகடுகளால் மூடி,
3 அதன் உபயோகத்திற்கு வேண்டிய பற்பல பணிமுட்டுக்களாகிய சாம்பற் சட்டிகளையும் குறடுகளையும் சூலங்களையும் துறட்டிகளையும், நெருப்புச் சட்டிகளையும் வெண்கலத்தால் செய்தான்.
4 அதற்கு வலைப் பின்னலைப் போன்ற வெண்கலச் சல்லடையையும், அதன்கீழே பீடத்தின் நடுவில் அடுப்பையும் அமைத்து,
5 அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் பலிப்பீடத்தைத் தூக்க உதவும் தண்டுகளை நுழைப்பதற்கான நான்கு வளையங்களையும் அமைத்தான்.
6 இந்நான்கு தண்டுகளையும்கூடச் சேத்தீம் மரத்தினால் செய்து வெண்கலத் தகடுகளால் மூடி,
7 பீடத்தின் பக்கங்களின் மேலுள்ள வளையங்களில் அந்தத் தண்டுகளை நுழைத்தான். அந்தப் பலிப்பீடமோ கெட்டிமரம் அன்று; உள்ளே கூடாகக் குடைந்த பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.
8 ஆசாரக் கூடாரத்து வாயிலிலே காத்துக் கொண்டிருந்த பெண்களின் முகக்கண்ணாடிகளைக் கொண்டு வெண்கலத் தொட்டியையும் அதன் பாதத்தையும் செய்து அதன் பின் பிராகாரத்தையும் அமைத்தான்.
9 அதன் தென்திசைக்கு எதிரே, திரித்த மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட நூறு முழ அகலமான தொங்கு திரைகளை அமைத்திருந்தான்.
10 அவற்றின் தூண்கள் இருபதும், இவற்றின் பாதங்கள் இருபதும் வெண்கலத்தால் செய்யப்பட்டவை. தூண்களின் போதிகைகளும், இவற்றின் பூண்களும் வெள்ளியாலானவை.
11 தென்புறத்தில் இருந்தது போன்று வடப்புறத்திலும் செய்யப்பட்டிருந்தது. தொங்கு திரைகள், தூண்கள், இவற்றின் பாதங்கள் போதிகை முதலியன ஒரே விதமான அளவும் வேலைப்பாடும் மூலப்பொருளுமாய் இருந்தன.
12 மேற்புறத்திலோ தொங்கு திரைகள் ஐம்பது முழம். அவற்றின் தூண்களும் பாதங்களும் வெண்கலத்தாலானவை. பத்துத் தூண்களின் போதிகைகளும் பூண்களும் வெள்ளியாலானவை.
13 கீழ்த்திசையிலோ ஐம்பது முழமுள்ள தொங்குதிரைகள் இருந்தன.
14 இந்த ஐம்பது முழமுள்ள தொங்குதிரையிலே, மூன்று தூண்களையும் அவற்றின் மூன்று பாதங்களையும் கொண்டிருந்த ஒரு புறத்தே, பதினைந்து முழம் வாயிலாய் உபயோகித்துக்கொள்ளப்படும்.
15 மறுபுறத்தே (ஏனென்றால், பிராகாரவாயில் அதற்கும் இதற்கும் நடுவே இருந்தது) மூன்று தூண்களும் அவற்றின் முன்று பாதங்களும் கொண்டிருந்த இடத்திலே, வேறு பதினைந்து முழம் ( அவ்வாறான ) உபயோகத்தில் இருந்தன.
16 பிராகாரத்திலிருந்த தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்டிருந்தன.
17 தூண்களின் பாதங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. அவற்றின் போதிகைகளும் பூண்களும் வெள்ளியாலானவை. பிராகாரத்திலுள்ள தூண்களை வெள்ளியாலே மூடினான்.
18 அதன் வாயிலிலே இளநீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்தநிறம் கொண்ட நூலாலும், திரித்த மெல்லிய சணல் நூலாலும் நெய்யப்பட்ட தொங்கு திரையை விசித்திரப் பின்னல் வேலையாய்ச் செய்து அமைத்தான். பிராகாரத்தின் எல்லாத் தொங்கு திரைகளையும் போல், அதுவும் இருபது முழம் நீளமுள்ளதாய் இருந்தது. ஆனால், உயரம் ஐந்து முழமே.
19 அவற்றின் தூண்கள் நான்கும், இவற்றின் பாதங்கள் நான்கும் வெண்கலத்தாலும், அவற்றில் போதிகைகளும் போதிகைகளின் பூண்களும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன.
20 திருவுறைவிடத்திற்கும் பிராகாரத்திற்கும் சுற்றிலுமிருந்த முனைகளெல்லாம் வெண்கலத்தாலானவை.
21 மோயீசன் கட்டளைப்படி. குருவாகிய ஆரோனின் புதல்வன் இத்தாமார், லேலியர்களின் பணிவிடைக்கென்று எண்ணி எழுதிய சாட்சியக் கூடாரத்துப் பொருட்களின் தொகை இதுவேயாம்.
22 மோயீசன்மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்த அவற்றை யூதாவின் கோத்திரத்துக் கூறு என்பவளின் மகனான ஊரியின் மகன் பெசேலேயலே செய்தான்.
23 அவனோடு கூட வேலை செய்தவன் தான் கோத்திரத்து அக்கிசாமேக்கின் மகனான ஒகொலியாப். இவன் மரவேலைகளில் மிகவும் கைதேர்ந்தவனாய் இருந்ததுமன்றி, பற்பல வண்ணச்சீலை நெய்யும் வேலையிலும் இளநீலம், கருஞ்சிவப்பு, இரத்த நிறம் கொண்ட நூல்களாலும், மெல்லிய சணல் நூலாலும் வினோதப் பின்னல் வேலைகளிலும் மிக்க திறமையுள்ளவன்.
24 ஆலயத்தின் வேலைகளுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டுச் செலவான பொன் எல்லாம் ஆலயத்து நிறைப்படி இருபத்தொன்பது தாலந்து, எழுநூற்று முப்பது சீக்கல் எடையாய் இருந்தது.
25 அந்தப் பொன் கொடுத்தவர்கள் யாரென்றால், இருபது வயதும் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஜந்நூற்றைம்பது பேர்களாவர். இவர்களே (இஸ்ராயேல் சபையின் ) மக்கட் தொகைக் கணக்கில் உள்ளவர்கள்.
26 அன்றியும், நூறு தாலந்து எடை வெள்ளியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. அந்த வெள்ளியாலேயே பரிசுத்த இடத்துத் தூண்களின் பாதங்களும், வாயிலிலுள்ள தொங்கு திரைத்தூண்களின் பாதங்களும் செய்யப்பட்டன.
27 ஒவ்வொரு பாதத்திற்கு ஒரு தாலந்தாக நூறு பாதங்களுக்கு நூறு தாலந்துகள் செலவாயின.
28 ஆயிரத்தெழுநூற்றெழுபத்தைந்து ( சீக்கல் வெள்ளியிலே ) தூண்களின் போதிகைகள் செய்யப்பட்டதுமன்றி, அத்தூண்கள் வெள்ளித் தகட்டால் மூடவும்பட்டன.
29 மேலும் வெண்கலத்திலே எழுபத்தீராயிரம் தாலந்தும் நானூறு சீக்கலும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
30 அதைக் கொண்டு சாட்சியக்கூடார வாயிலிலுள்ள தூண்களின் பாதங்களும், வெண்கலப் பலிப்பீடத்தில் உபயோகிக்கப்படும் எல்லாப் பாத்திரங்களும், பிராகாரத்திற்குச் சுற்றிலும் அதன் வாயிலிலும் இருந்த தூண்களின் பாதங்களும்,
31 திருவுறைவிடக் கூடாரத்து முளைகளும், பிராகாரத்துச் சுற்றிலுமுள்ள முளைகளும் செய்யப்பட்டன.
×

Alert

×