Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 28 Verses

1 மேலும், நமக்குக் குருத்துவ ஊழியம் செய்யும்படி உன் சகோதரனாகிய ஆரோனையும், அவன் புதல்வராகிய நாதாப், அபியூ, எலெயசார், இத்தமார் ஆகியோரையும் இஸ்ராயேல் மக்களிடமிருந்து பிரித்து உன்னிடம் சேர்த்துக் கொள்வாயாக.
2 உன் சகோதரனாகிய ஆரோன் மகிமையும் அலங்காரமும் உள்ளவனாய் இருக்கும் பொருட்டு அவனுக்காகத் திருவுடையைத் தயார் செய்வாய்.
3 ஆரோன் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்யத் தகுதியுடையவனாக்க அவனைப் பரிசுத்தப் படுத்தும்படி அவனுக்காகத் தயாரிக்க வேண்டிய திருவுடைகளைக் குறித்து, நமது ஞானத்தின் ஆவியை நிறைவாய்ப் பெற்று உண்மையாகவே அறிவு சான்றவராய் இருப்பவர்களோடு பேசி ஆலோசனை செய்வாய்.
4 அவர்கள் தயாரிக்க வேண்டிய திருவுடைகளாவன: (இறைவன் திருவுளத்தைக்) கணிக்க உதவும் மார்ப்பதக்கம், எப்போத் என்ற மேலாடை, நெடுஞ்சட்டை, மெல்லிய சணல் நூலால் நெய்த உட்சட்டை, கிரீடம் என்னும் பாகை, இடைக்கச்சை முதலியனவாம். உன் சகோதரனாகிய ஆரோனும் அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ அலுவலைச் செய்யத் தக்கதாக அவர்களே தங்களுக்குத் திருவுடைகளைத் தயாரித்துக் கொள்வார்கள்.
5 அதற்காக அவர்கள் பொன், நீலம், கருஞ்சிவப்பு, இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், மெல்லிய சணல் நூல்கள் ஆகிய இவற்றைச் சேகரிக்கக்கடவார்கள்.
6 எப்போத் என்ற மேலாடையைப் பொன், நீலம், கருஞ்சிவப்பு, இருமுறை (சாயம்) தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய சணல் நூல்கள் ஆகியவற்றாலே விசித்திர வண்ண வேலையாய்ச் செய்வார்கள்.
7 அதன் இரண்டு மேல்முனையிலும் எப்போத் (என்ற) மேலாடை ஒரே பொருளாகத் தக்க இரண்டு தோல் வார்கள் ஒன்றோடொன்று இணைக்கத் தக்கதாய் அமைந்திருக்க வேண்டும்.
8 பொன், நீலம், கருஞ்சிப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்கள், முறுக்கிய மெல்லிய சணல் நூல்கள் ஆகியவற்றாலேயே நெசவும் வேலைப்பாடும் எல்லாம் செய்யப்படும்.
9 அன்றியும், இரண்டு கோமேதகக் கற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களைச் செதுக்குவாய்.
10 அதாவது, அவர்கள் பிறந்த வரிசையின்படியே அவர்கள் பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்க வேண்டும்.
11 இரத்தினங்களில் முத்திரைவெட்டும் வேலையைப் போல், அந்த இரண்டு கற்களிலும் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்களை வெட்டி, அவற்றைப் பொன்குவளைகளிலே பதிய வைப்பாய்.
12 அவைகளை இஸ்ராயேல் புதல்வர்களின் நினைவாக எப்போத்தின் இரு பக்கத்திலும் வைப்பாய். ஆதலால், ஆரோன் ஆண்டவர் முன்னிலையில் தன் இரு புயங்களின்மேல் அவர்களுடைய பெயர்களை நினைவுச் சின்னமாகச் சுமந்து வருவான்.
13 கொக்கிகளையும் பொன்னால் செய்து,
14 ஒன்றோடொன்று இணைக்கப்படும் இரண்டு சின்னஞ்சிறிய சங்கிலிகளையும் பசும்பொன்னால் செய்து அவற்றை மேற்சொன்ன வளையங்களில் மாட்டி வைப்பாய்.
15 (இறை திருவுளத்தைக்) கணிக்க உதவும் மார்ப்பதக்கத்தையும் பல நிறமுள்ள பின்னல் வேலையாய்ச் செய்வாய். எப்போத் வேலைக்குச் சரி நிகராக நீலம், கருஞ்சிவப்பு, இருமுறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்ட நூல்களாலும், திரித்த மெல்லிய சணல் நூல்களாலும் அதைச் செய்வாய்.
16 அது நாற்கோணமாகவும், இரட்டையாகவும், நீளத்திலும் அகலத்திலும் ஒரு சாண் அளவாகவும் இருக்கும்.
17 அதிலே நான்கு வரிசை இரத்தினங்களை அமைப்பாய். முதல் வரிசையில் பதுமராகம், புஷ்பராகம், மரகதம் முதலிய இரத்தினங்களும்,
18 இரண்டாம் வரிசையில் மாணிக்கம், நீலமணி, வைரமும்,
19 மூன்றாம் வரிசையில் கெம்பு, வைடூரியம், செவ்வந்திக்கல் முதலியனவும்,
20 நான்காம் வரிசையில் படிகப்பச்சை, கோமேதகம், சமுத்திர வண்ணக் கல் ஆகிய இரத்தினங்களும் இருக்கும். அவைகளெல்லாம் அந்தந்த வரிசையிலே பொன்னினுள்ளே பதித்திருக்க வேண்டும்.
21 அவைகளிலும் இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்கள், ஒரு கல்லுக்கு ஒரு பெயராகச் செதுக்கப்படும். இப்படிப் பன்னிரண்டு கோத்திரங்களின்படி பன்னிரண்டு பெயர்களும் செதுக்கப்பட்டிருக்கும்.
22 மார்ப்பதக்கத்திலே ஒன்றோடொன்று சேர்க்கப்பட்ட சங்கிலிகளையும் பசும்பொன்னால் செய்வாய்.
23 இரண்டு வளையங்களையும் (செய்து) மார்ப்பதக்கத்தின் இரண்டு மேல் முனைகளில் வைத்து,
24 பொன்னால் செய்த இரண்டு சின்னச் சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களிலுள்ள வளையங்களிலே மாட்டி,
25 மேற்சொன்ன சங்கிலிகளின் நுனிகளை மார்ப்பதக்கத்தை நோக்கும் எப்போத் (என்ற) மேலாடைக்கு இரு புறத்திலும் இருக்கும் இரண்டு கொக்கிகளிலே மாட்டுவாய்.
26 இன்னும் பொன்னால் இரண்டு வளையங்களைச் செய்து, அவற்றை எப்போத்தின் கீழ்ப்புறத்திற்கடுத்த மார்ப்பதக்கத்து ஓரங்களிலே வைத்து,
27 பிறகு வேறிரண்டு பொன் வளையங்களையும் (செய்து), எப்போத்தின் முன்புறத்துக் கீழ்ப்பக்கத்திற்குத் தாழேயுள்ள இணைப்புக்கு எதிராக வைத்து, மார்ப்பதக்கமும் எப்போத் என்னும் மேலாடையும் அவற்றாலே இணையுமாறு பார்த்து,
28 மார்ப்பதக்கமும் எப்போத்தும் ஒன்றாகி, ஒன்றைவிட்டு ஒன்று நீங்காதபடிக்கு மார்ப்பதக்கத்து வளையங்களோடு எப்போத்தின் வளையங்கள் இனையத் தக்கதாக அவ்விரண்டையும் இளநீல நாடாவினாலே கட்டவேண்டும்.
29 ஆரோன் பரிசுத்த இடத்தில் புகும்பொழுது இஸ்ராயேல் புதல்வர்களின் பெயர்கள் ஆண்டவர் திருமுன் நித்திய நினைவுச் சின்னமாய் இருக்கத் தக்கதாக அவன் அந்தப் பெயர்களைத் தன் இதயத்தின் மீது (இறைவன் திருவுளத்தைக்) கணிக்க உதவும் மார்ப்பதக்கத்தின் மேல் அணிந்து கொள்வான்.
30 அம் மார்ப்பதக்கத்திலே 'கோட்பாடு' 'உண்மை' (என்ற) இவ்விரண்டு வார்த்தைகளைப் பதிக்கக்கடவாய். ஆரோன் ஆண்டவர் முன்னிலையில் வரும்போது அவற்றைத் தன் இதயத்தின் மேல் அணிவான். அவன் இஸ்ராயேல் புதல்வரின் நீதி விதியை ஆண்டவர் திருமுன் என்றும் அணிந்து கொள்ளக் கடவான்.
31 எப்போத்தின் கீழ் (அணியும்) அங்கியை முழுவதும் இளநீல நூலால் செய்வாய்.
32 தலை நுழையும் துவாரம் அதன் நடுப்புறத்தில் இருக்கும். அது எளிதிலே கிழியாதபடிக்கு, மற்ற உடைகளிலே ஓரத்தை மடக்கித் தைக்கிறது போல், அதிலேயும் நெய்யப் பட்ட ஒரு நாடாவைத் துவாரத்தைச் சுற்றிலும் வைத்துத் தைக்க வேண்டும்.
33 மேற் சொன்ன அங்கியின் கீழ் ஓரமாய் இள நீல நிறம், கருஞ்சிவப்பு, இரு முறை சாயம் தோய்த்த இரத்த நிறம் கொண்டுள்ள நூல்களால் மாதுளம் பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே மணிகளையும் அதன் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்து வைக்க வேண்டும்.
34 ஒரு பொன் மணியும் ஒரு மாதுளம் பழமும், மறுபடி ஒரு பொன் மணியும் ஒரு மாதுளம் பழமுமாக இருக்க வேண்டும்.
35 ஆரோன் தன் குருத்துவ அலுவலைச் செய்ய ஆண்டவர் திருமுன் பரிசுத்த இடத்தினுள் புகும் போதும், வெளியே வரும் போதும் அவன் சாகாத படிக்கு அதன் சத்தம் கேட்கத் தக்கதாகவே அதை அணிந்து கொள்ள வேண்டும்.
36 பசும் பொன்னால் ஒரு தகட்டைச் செய்து, 'ஆண்டவருக்கு அர்ப்பணித்து ஒதுக்கப்பட்டவர்' என்கிற வார்த்தைகளை முத்திரை வெட்டும் வேலையாக (அதனில்) வெட்டி,
37 அதை இள நீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக.
38 அது குருவினுடைய நெற்றியின்மேல் காணப்பட வேண்டும். அதனால், இஸ்ராயேல் புதல்வர் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்துச் சமர்ப்பிக்கும் எல்லாக் காணிக்கைகள் கொடைகள் சம்பந்தப்பட்ட அக்கிரமங்களை ஆரோனே சுமந்து கொள்வான். ஆண்டவர் அவர்களுக்குப் பிரசன்னமாய் இருக்கத் தக்கதாக அந்தப் பொன் தகடு எப்பொழுதும் அவன் நெற்றியின் மேல் இருக்க வேண்டும்.
39 மெல்லிய சணல்நூலால் நெருக்கமான அங்கியையும், தலைக்கு அணியாகிய பாகையையும் செய்வாய். விசித்திர வேலையால் அலங்கரிக்கப்பட்ட கச்சையையும், அமைப்பாய்.
40 ஆரோனின் புதல்வர்களுக்கும் மகிமையும் அலங்காரமும் இருக்கத் தக்கதாக மெல்லிய சணல் நூலால் நெய்த அங்கியையும், தலைக்கு அணியாகப் பாகையையும், இடைக் கச்சையையும் தயார் செய்வாய்.
41 ஆரோனும் அவனோடு கூட அவன் புதல்வர்களும் நமக்குக் குருத்துவ ஊழியம் செய்யும் பொருட்டு நீ மேற் சொன்ன ஆடைஅணிகளை எல்லாம் அவர்களுக்கு அணிவித்து, அவர்களுடைய இரு கைகளையும் அபிசேகம் செய்து பரிசுத்தப் படுத்துவாய்.
42 அவர்களுடைய நிருவாணத்தை மூடும் படிக்கு, இடுப்பு தொடங்கி முழங்கால் வரை வெட்கமானவற்றை மறைக்க மெல்லிய சணலால் நெய்த சல்லடங்களையும் தயாரிப்பாய்.
43 ஆரோனும் அவன் புதல்வர்களும் உடன்படிக்கைக் கூடாரத்திலே புகும் போதாவது, பரிசுத்த இடத்திலே பணிவிடை செய்யப் பலிப்பீடத்தண்டை போகும் போதாவது அவர்கள் அக்கிரமம் சுமந்தவர்களாய்ச் சாகாதபடிக்கு இந்த ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். இது ஆரோனுக்கும் அவனுக்குப்பின் வரும் சந்ததியாருக்கும் நித்திய சட்டமாம்.
×

Alert

×