Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 22 Verses

1 மாட்டையோ ஆட்டையோ திருடிக்கொன்றுவிட்டவன் அல்லது விற்றுவிட்டவன் அந்த ஒரு மாட்டுக்கு ஐந்து மாடுகளையும் ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுத்து ஈடு செய்யக்கடவான்.
2 திருடன் ஒரு வீட்டினுள் புகுமாறு கன்னமிடும் போதோ சுரங்கம் வெட்டும்போதோ கண்டுபிடிக்கப்பட்டு அடிபட்டு இறந்தால், அவன் இரத்தப்பழி அடித்தவனைச் சாராது.
3 சூரியன் உதித்தபின் அதைச் செய்திருந்தாலோ, அது கொலை பாதகமாகையினாலே, அவன் கொலை செய்யப்படுவான். திருட்டுக்கு ஈடு செய்யத் திருடன் கையில் ஒன்றுமில்லையாயின், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
4 அவன் திருடின மாடோ ஆடோ கழுதையோ உயிரோடு அவனிடம் அகப்பட்டதாயின், அவன் இருமடங்கு கொடுத்து ஈடு செய்யவேண்டும்.
5 அயலான் வயலையோ திராட்சைத் தோட்டத்தையோ அழித்து, அவற்றிலே தன் மிருகங்களை மேய விடுபவன் இழப்பிற்கு ஈடாகத் தன் சொந்த வயலிலும் திராட்சைத் தோட்டத்திலும் சிறந்ததைக் கொடுக்கக்கடவான்.
6 நெருப்பு எழும்பி முட்களின் மேல் விழுந்து, அதிலிருந்து தானியப் போரிலேயாவது விளைந்த பயிரிலேயாவது பற்றி எரித்து விடின், நெருப்பைக் கொளுத்தினவன் அழிவிற்கு ஈடு செய்யக்கடவான்.
7 ஒருவன் தன் நண்பனிடம் பணத்தையோ உடைமையையோ அடகு வைத்திருக்கும் போது, அது அவன் வீட்டிலிருந்து திருட்டு போனால், திருடன் அகப்பட்டால் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவான்.
8 திருடன் அகப்படாவிட்டால், வீட்டுத் தலைவன் நீதிபதியிடம் போய், தன் அயலானுடைய பொருளைத் தான் அபகரிக்கவில்லையென்று ஆணையிட்டுச் சொல்லக்கடவான்.
9 திருடுபோன மாடு, கழுதை, ஆடு, ஆடை முதலியவற்றின் நட்டத்தைப் பொறுத்தமட்டில் இருவர் நீதிபதிகளிடம் வருவார்கள். நீதிபதிகள் திருடனைக் குற்றவாளியென்று தீர்ப்புச் சொன்னால், அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாய் ஈடு கொடுக்கக்கடவான்.
10 ஒருவன் தன் கழுதை, ஆடு, மாடு, முதலிய மிருகங்களைப் பிறன் பொறுப்பில் ஒப்புவித்து விட்டிருக்கும் போது, அது இறந்தாலும், மெலிந்து போனாலும், பகைவரால் பறிபட்டுப் போனாலும், சாட்சிகள் ஒருவனும் இல்லாது போனால்,
11 சபையின் முன்பாக (பிரதிவாதி) தான் அயலானுடைய பொருளைக் கையாலே தொடவில்லையென்று ஆணையிட்டுச் சொல்வான். உரிமையாளன் அதை ஏற்கவேண்டும். மற்றவனோ ஒன்றும் அளிக்க வேண்டுவதில்லை.
12 அது திருடுபோயிற்றென்றால், அவன் அதன் உரிமையாளனுக்கு ஈடு செய்யக்கடவான்.
13 அது காட்டுவிலங்கால் உண்ணப்பட்டிருந்தால், அவன் எஞ்சியதைத் தலைவனுக்கு ஒப்புவித்துவிடின், அதற்காக ஈடு செய்ய வேண்டியதில்லை.
14 அப்படிப்பட்ட வகைகளில் எதையேனும் ஒருவன் இரவலாக வாங்கியிருப்பின், அது தலைவனுக்குத் தெரியாமல் இறந்தாவது அழிந்தாவது போயிருப்பின், அவன் அதற்கு ஈடு செய்யவேண்டும்.
15 ஆனால், உரிமையாளன் முன்னிலையில் அவன் பணம் கொடுத்து வாடகைக்கு அதை வாங்கினானாயின், அதற்கு ஈடு செய்ய வேண்டுவதில்லை.
16 மண ஒப்பந்தமாக ஒரு கன்னிப் பெண்ணை ஒருவன் கற்பழித்து அவளோடு படுத்தால், அவன் அவளுக்காகப் பரிசம் போட்டு அவளை மணந்து கொள்ளக்கடவான்.
17 கன்னியின் தந்தை அவளை அவனுக்குக் கொடுக்க இசையாவிடின், கன்னிகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி கொடுக்கவேண்டும்.
18 சூனியக்காரரை உயிர்வாழ விடாதே.
19 விலங்கோடு புணருகிறவன் கண்டிப்பாய்க் கொல்லப்பட்டுச் சாகவேண்டும்.
20 ஆண்டவர் ஒருவருக்கேயன்றி வேறு தேவர்களுக்கு வழிபாடு செய்கிறவன் கொல்லப்படுவான்.
21 அந்நியனைத் துன்புறுத்தவும் வதைக்கவும் வேண்டாம். நீங்களும் எகிப்து நாட்டிலே அந்நியராய் இருந்தீர்களல்லவா?
22 விதவைப் பெண்ணுக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் அநீதி செய்யலாகாது.
23 அவர்களுக்கு அநீதி செய்தீர்களாயின், அவர்கள் நம்மை நோக்கிக் கூப்பிட, நாம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு,
24 கோபம் மூண்டவராய் வாளினால் உங்களைக் கொல்வோமாதலால், உங்கள் பெண்களும் விதவை ஆவார்கள்; உங்கள் பிள்ளைகளும் திக்கற்ற பிள்ளைகளாய்த் திரிவார்கள்.
25 உன்னோடு குடியிருக்கிற நம் மக்களில் ஏழையான ஒருவனுக்கு நீ கடனாகப் பணம் கொடுத்திருப்பாயாகில், அவனை நெருக்கடி செய்யவும் மிதமிஞ்சின வட்டி வாங்கவும் வேண்டாம்.
26 உன் அயலானுடைய ஆடையை ஈடாக வாங்கியிருப்பாயாகில், சூரியன் மறையுமுன் அதை அவனுக்குத் திரும்பக் கொடுப்பாயாக.
27 ஏனென்றால், அவன் தன் உடலை மூடி உடுத்துவதற்கு அது ஒன்றேயன்றி, போர்த்திப்படுத்துக் கொள்வதற்கு வேறு இல்லை. அவன் நம்மை நோக்கி முறையிடும் போது, இரக்கமுள்ளவராகிய நாம் அவனுக்குச் செவி கொடுப்போம்.
28 அதிகாரிகளைப் பழிக்கவும், மக்கட் தலைவர்களைப்பற்றி இழிவாகப் பேசவும் வேண்டாம்.
29 உன் முதற் பலனில் பத்தில் ஒரு பாகத்தைக் காணிக்கை செலுத்தத் தாமதிக்க வேண்டாம். மேலும், உன் புதல்வரில் தலைச்சன் பிள்ளையை நமக்குக் கொடுப்பாயாக.
30 உன் ஆடுமாடுகளிலும் அவ்வாறே செய்வாய். குட்டியை ஏழு நாள் தாயோடு இருக்கவிட்டு, எட்டாம் நாளிலே நமக்குச் செலுத்தி விடுவாயாக.
31 நீங்கள் நமக்குப் பரிசுத்தமாக்கப்பட்ட மக்களாய் இருக்கக்கடவீர்கள். கொடிய விலங்குகளால் கடியுண்ட இறைச்சியை உண்ணாமல், அதை நாய்களுக்குப் போடக்கடவீர்களாக.
×

Alert

×