Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 21 Verses

1 நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டிய நீதி நெறிகளாவன: எபிரேய அடிமை ஒருவனை நீ விலைக்கு வாங்கினால்,
2 அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் ஊழியம் செய்து, ஏழாம் ஆண்டிலே ஒன்றும் கொடாமல் விடுதலை பெறுவான்.
3 அவன் வந்த ஆடையோடு செல்லக்கடவான். அவன் திருமணமானவனாய் இருந்தால் அவன் மனைவியும் அவனோடு போகக்கடவாள்.
4 ஆனால், அவன் தலைவன் அவனுக்கு ஒரு பெண்ணை மணமுடித்துக் கொடுத்து அவள் அவனுக்கு ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் பெற்றிருப்பாளாயின், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் தலைவனுக்கே சொந்தம்.
5 அடிமையானவன்: என் தலைவனுக்கும், என் மனைவிமக்களுக்கும் அன்பு செய்கிறேன்; விடுதலை பெற்றுப் போக எனக்கு விருப்பமில்லை என்று சொன்னால்,
6 அவன் தலைவன் அவனை மக்கட் தலைவர்களிடம் அழைத்துச் சென்று, அவனைக் கதவின் அருகேயாவது அல்லது கதவு நிலைகளின் அருகேயாவது இருத்தி, அவன் காதைக் கம்பியினாலே குத்துவான். அதன் பின் அவன் என்றென்றும் அவனுக்குப் பணிவிடை செய்யக் கடவான்.
7 ஒருவன், தன் மகளை வேலைக்காரியாக விற்றுவிட்டானாயின், வேலைக்காரர்கள் விடுதலை பெற்றுப் போவதுபோல அவள் போகக் கூடாது. அவளை வாங்கின தலைவனுக்கு அவள் பிடிக்கவில்லையென்றால் அவன் அவளைப் போக விடுவான்.
8 ஆனால், அவளை அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளை அந்நியர் கையில் விற்று விட அவனுக்கு அதிகாரமில்லை.
9 விரும்பின், தன் மகனுக்கு அவளை மண ஒப்பந்தம் செய்யலாம். அவ்வாறெனில் தன் புதல்வியரைப் போல் அவளையும் நடத்தக்கடவான்.
10 பிறகு அவன் அவளுக்குப் பதிலாக வேறொரு மனைவியைத் தன் மகனுக்குக் கொடுப்பானாயின், மேற்சொன்ன பெண்ணுக்கு உணவும் உடையும், வேறொரு திருமணத்திற்குச் செலவும், அவள் கன்னிமை நட்டத்துக்குப் பரிகாரப் பணமும் ஆகிய இவற்றில் குறைவு செய்யாமல் கொடுக்கக்கடவான்.
11 அவன் இம்மூன்றையும் அவளுக்குச் செய்யாவிடின், அவள் பணமொன்றும் கொடாமலே விடுதலையாய்ப் போவாள்.
12 வேண்டுமென்று ஒரு மனிதனைக் கொல்பவன் கொலை செய்யப்படக் கடவான்.
13 பகையோ கெட்ட எண்ணமோ இன்றித் தற்செயலாய் ஒருவனைக் கொன்றவன் நாம் பின்னர் நியமிக்கப் போகிற இடத்தில் சரணடைவான்.
14 ஒருவன் வேண்டுமென்று ஒளிந்திருந்து தன் பிறனைக் கொன்றிருப்பானாயின், அவனை நமது பீடத்தினின்றே அகற்றிக் கொல்லக்கடவாய்.
15 தன் தந்தையையோ தாயையோ அடிப்பவன் சாகவே சாவான்.
16 ஒரு மனிதனைக் கடத்திச்சென்று விற்றிருப்பவன், குற்றவாளியென்று தெளிவானவுடன் சாகவே சாவான்.
17 தன் தந்தையையோ தாயையோ சபிப்பவன் சாகவே சாவான்.
18 இருவர் சண்டை செய்யும்போது, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலோ கையால் குத்தியதினாலே அவன் சாகாமல், படுக்கையாய்க் கிடந்து,
19 பிறகு எழுந்திருந்து தன் கோலை ஊன்றி வெளியே நடமாடினால், அடித்தவன் அவனுக்கு உண்டான மானக்கேட்டைப் பற்றியும் நட்டத்திற்குப் பரிகாரம் செய்தால் குற்றமில்லாதவனாய் இருப்பான்.
20 ஒருவன் தன் அடிமையை--ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி--தடியால் அடித்திருக்க, அவர்கள் அவன் கையாலே இறந்து போனால் அவன் தண்டனை பெறுவான்.
21 ஆனால், (அடியுண்டோர்) ஒருநாளேனும் இரண்டு நாளேனும் உயிரோடு இருந்தால், அவர்கள் தலைவனின் உடைமையாகையால், அவனுக்குத் தண்டனை கிடையாது.
22 மனிதர்சண்டையிலே ஒருவன் கருத்தாங்கிய ஒரு பெண்ணை அடித்ததனால் கருவிழுந்திருந்த போதிலும் அவள் உயிர் பிழைத்துக் கொண்டாளாயின், அவளுடைய கணவன் கேட்டபடி நீதிபதிகள் விதிக்கும் தண்டத்தைச் செலுத்தக்கடவான்.
23 ஆனால், அவள் இறந்திருந்தால் உயிருக்கு உயிரை ஈடுசெய்யக்கடவான்.
24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழிவாங்க வேண்டும்.
26 யாரேனும் ஒருவன் தன் அடிமை ஊழியனையோ ஊழியக்காரியையோ கண்ணில் அடித்ததினாலே அவர்கள் கண் குருடரானால், பழுதுபட்ட கண்ணுக்குப் பதிலாக அவர்களை விடுதலை செய்யக்கடவான்.
27 அப்படியே அவன் தன் ஊழியனுடைய பல்லோ, ஊழியக்காரியினுடைய பல்லோ உதிர அடித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யக்கடவான்.
28 ஒரு மாடு ஆடவனையோ பெண்ணையோ முட்டினதினால் அவர்கள் இறந்தால், அந்த மாடு கல்லால் எறியப்படவேண்டும். அதன் இறைச்சியை உண்ணலாகாது. ஆனால், மாட்டின் உரிமையாளன் குற்றவாளி ஆகமாட்டான்.
29 ஆயினும், தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடு என்று மக்கள் அவனுக்குத் தெரிவித்திருந்தும், அவன் அதைக் கட்டி வைக்காததினாலே அது ஓர் ஆடவனையோ பெண்ணையோ கொன்றிருந்தால், மாடும் கல்லால் எறியப்பட வேண்டும்; மாட்டின் உரிமையாளனும் கொலைசெய்யப்பட வேண்டும்.
30 ஆனால் அபராதம் கொடுக்கும்படி அவனுக்கு விதிக்கப்பட்டதாயின், அவன், தன் உயிரை மீட்டுக் கொள்ளும்படி, கேட்ட தண்டம் கொடுக்கக்கடவான்.
31 ஒருவனுடைய மகனையோ மகளையோ மாடு முட்டினால், அந்தத் தீர்ப்புப்படியே மாட்டுக்குடையவனுக்குச் செய்யப்படும்.
32 ஊழியனையோ ஊழியக்காரியையோ மாடு முட்டியிருந்தால், மாட்டுக்குடையவன் (அவர்களுடைய) தலைவனுக்கு முப்பது சீக்கல் வெள்ளி கொடுப்பான். மாடோவென்றால் கல்லால் எறியப்படவேண்டும்.
33 யாரனும் ஒருவன் ஒரு கிணறு வெட்டி, அதை மூடாமல் திறந்து போட்டிருந்ததினாலே மாடேனும் கழுதையேனும் அதில் விழுந்ததாயின்,
34 கிணற்றுக்குடையவன் மிருகம் செத்த நட்டத்திற்குப் பரிகாரமாக வேண்டிய பணம் கொடுக்க வேண்டும். செத்த மிருகமோ அவனுடையதாகும்.
35 ஒருவனுடைய மாடு மற்றொருவனுடைய மாட்டைக் காயப்படுத்தினதனாலே ஒருவேளை அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை விற்று, இருவரும் அதன் விலையைப் பங்கிட்டு, செத்த மாட்டையும் பங்கிட்டுக் கொள்ளக் கடவார்கள்.
36 ஆனால், அந்த மாடு முட்டுகிற மாடென்று, அம்மாட்டின் உரிமையாளன் முன்பே அறிந்திருந்தும் அதைக் கட்டிவைக்காதிருந்தால், மாட்டுக்கு மாடு கொடுத்து ஈடு செய்யக்கடவான். செத்த மாடோ அவனுடையது ஆக வேண்டும்.
×

Alert

×