Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 19 Verses

1 இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டு வந்த மூன்றாம் மாதத்தின் மூன்றாம் நாள் சீனாய்ப் பாலைவனத்தை அடைந்தனர்.
2 அவர்கள் இராப்பிதிம் என்னும் இடத்திலிருந்து பயணமாகிச் சீனாய்ப் பாலைவனம் சேர்ந்து, அவ்விடத்திலேயே பாளையம் இறங்கினர். அங்கே இஸ்ராயேல் மக்கள் மலைக்கு எதிரே கூடாரம் அடித்தனர்.
3 மலையிலிருந்து கடவுள் தம்மைக் கூப்பிடுவதை மோயீசன் கேட்டு அவருடைய மலையில் ஏறின போது, ஆண்டவர் அவரை நோக்கி: நீ யாக்கோபு வம்சத்தாராகிய இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்க வேண்டியதாவது:
4 நாம் எகிப்தியருக்குச் செய்தவைகளையும், உங்களை நாம் கழுகுகளின் இறக்கைகள்மேல் சுமந்து நமக்குச் சொந்தமாய் ஏற்றுக் கொண்ட விதத்தையும் நீங்களே கண்டிருக்கிறீர்கள்.
5 ஆகையால், நீங்கள் நமது வாக்கைக் கேட்டு, நமது உடன்படிக்கையைக் கைக்கொண்டு அனுசரிப்பீர்களேயாகில், எல்லா மக்களிலும் நீங்களே நமது உடைமையாய் இருப்பீர்கள். ஏனென்றால், பூமியெல்லாம் நம்முடையது.
6 அன்றியும், நீங்கள் நமக்கு இராஜரீக ஆசாரியக் கூட்டமும் பரிசுத்த சனமுமாய் இருப்பீர்கள். இவை நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்ல வேண்டிய வார்த்தைகளாம் என்றார்.
7 மோயீசன் வந்து, மக்களுள் பெரியோரை அழைத்து, ஆண்டவர் தமக்குச் சொன்ன அனைத்தையும் அவர்களுக்கு விவரமாய்ச் சொல்ல,
8 மக்கள் எல்லாரும் ஒன்றாகச்சேர்ந்து மறுமொழி சொல்லி: ஆண்டவர் சொன்னவையெல்லாம் செய்வோம் என்றனர். பிறகு மக்களின் மறுமொழியை மோயீசன் ஆண்டவரிடம் தெரிவித்த போது,
9 ஆண்டவர் அவரை நோக்கி: நாம் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டால், அவர்கள் என்றும் உன்னை நம்புவார்கள். அதன்பொருட்டு நாம் இனிமேல் கார்மேகத்திலிருந்து வருவோம் என்றார். மக்களின் வார்த்தைகளை மோயீசன் ஆண்டவருக்குத் தெரிவித்த போது,
10 அவர் அவரை நோக்கி: நீ போய் இன்றும் நாளையும் மக்களைத் தூய்மைப்படுத்து. அவர்கள் தங்கள் ஆடைகளைக் கழுவி,
11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தமாய் இருக்கக் கடவார்கள்; ஏனென்றால், மூன்றாம் நாளிலே ஆண்டவர் எல்லா மக்களுக்கும் முன் சீனாய் மலை மேல் இறங்குவார்.
12 மலையைச் சுற்றிலும் மக்கள் மீறிக் கடக்கக் கூடாத எல்லைக் கல்லை நாட்டி: நீங்கள் மலைமேல் ஏற வேண்டாம்; அதன் அடிவாரத்தை முதலாய்த் தொடவேண்டாம்; எச்சரிக்கையாய் இருங்கள் என்றும்; மலையைத் தொடுபவன் சாகவே சாவான் என்றும்;
13 அப்படிப்பட்டவனை யாரும் தொடக் கூடாது; அவன் கல்லால் எறியப்பட்டோ, வேலால் குத்தப்பட்டோ சாகவேண்டும். அது மனிதனானாலும் சரி, மிருகமானாலும் சரி, உயிரோடே வைக்கப்படல் ஆகாது; ஆனால், எக்காள முழக்கம் ஒலிக்கத் தொடங்கும் நேரம் மக்கள் மலைமேல் ஏறக்கடவார்கள், (என்றும் சொல்வாய்) என்றருளினார்.
14 மோயீசன் மலையிலிருந்து இறங்கி மக்களிடம் வந்து அவர்களைத் தூய்மைப்படுத்தினார். அவர்கள் தங்கள் ஆடைகளைத் தோய்த்த பின், அவர்களை நோக்கி:
15 மூன்றாம் நாளுக்கு ஆயத்தமாய் இருங்கள். உங்கள் மனைவிகளைச் சேராதிருங்கள் என்றார்.
16 மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் இதோ பேரிடி முழங்கியது; மின்னல் வெட்டியது; மலையின் மேல் கார்மேகம் வந்து கவிழ்ந்தது; எக்காளம் பேரொலி எழுப்பியது. அதனால் பாளையத்திலிருந்த மக்கள் அனைவரும் அச்சமுற்றனர்.
17 அப்பொழுது மக்கள் ஆண்டவருக்கு எதிர் கொண்டு போக, மோயீசன் அவர்களைப் பாளையம் இருந்த இடத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார். அவர்கள் மலையின் அடிவாரத்திலே நின்றனர்.
18 ஆண்டவர் சீனாய் மலைமீது நெருப்பில் இறங்கியபடியாலும், சூளையிலிருந்து புகை புறப்படுவது போல் மலையினின்று புகை எழும்பியதாலும், அந்தச் சீனாய் மலை புகைக் காடாகிப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது.
19 எக்காளமும் வர வரப் பேரொலி எழுப்பி நெடுநேரம் முழங்கிக் கொண்டிருந்தது. அவ்வேளை மோயீசன் கடவுளோடு பேசிக் கொண்டிருந்தார்; ஆண்டவரும் அவருக்கு மறு மொழி சொல்லிய வண்ணம் இருந்தார்.
20 பின் ஆண்டவர் சீனாய் மலையின் சிகரத்தில் இறங்கி, மோயீசனை அங்கு வரச் சொல்லி அழைத்தார். அவர் அங்கு ஏறின போது, அவர் மேயீசனை நோக்கி:
21 மக்கள் ஆண்டவரைப் பார்க்க வேண்டி எல்லைகளைக் கடந்து வரத் துணியாதபடியும், அதனால் அவர்களில் பற்பலர் அழிந்து போகாதபடியும், நீ இறங்கிப் போய் அவர்களை எச்சரித்து வை.
22 மேலும், ஆண்டவர் திருமுன் வருகிற குருக்களும் தங்களைத் தூய்மைப் படுத்தக் கவனமுள்ளவர்களாய் இருக்கச் சொல். இல்லாவிட்டால், ஆண்டவர் அவர்களை அழித்து விடுவார் (என்றார்).
23 அதற்கு மோயீசன்: ஆண்டவரே, மலையைச் சுற்றிலும் எல்லைக்கல்லை வைக்கச் சொல்லி, மக்களைத் தூய்மைப் படுத்த நீரே கட்டளையிட்டிருக்கிறீர். ஆகையால், மக்கள் சீனாய் மலை மேல் ஏறி வர மாட்டார்கள் என்றார்.
24 ஆண்டவர் அவரை நோக்கி: நீ இறங்கிப் போ. பின் ஆரோனுடன் திரும்பி ஏறி வா. மீண்டும், ஆண்டவர் அழித்தொழிப்பார் என்று சொல்லி, குருக்களும் மக்களும் ஆண்டவரிடம் வரும்படி எல்லைகளைக் கடக்க வேண்டாம் என்று எச்சரிக்கையாய் இருக்கச் சொல் என்றார்.
25 அப்படியே மோயீசன் இறங்கி மக்களிடம் போய், அவையெல்லாம் அவர்களுக்கு அறிவித்தார்.
×

Alert

×