Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Exodus Chapters

Exodus 12 Verses

1 ஆண்டவர் மேலும் எகிப்து நாட்டிலே மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளியதாவது:
2 இம்மாதமே உங்களுக்கு மாதங்களின் தொடக்கமாம். இதுவே ஆண்டின் மாதங்களில் முதல் மாதமாம்.
3 நீங்கள் இஸ்ராயேல் மக்களின் கூட்டத்தார் யாவரையும் அழைத்துச் சொல்ல வேண்டியதாவது: இம்மாதத்தின் பத்தாம் நாள் குடும்பத்திற்கும் வீட்டிற்குமாக ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆட்டுக் குட்டியை தெரிந்தெடுக்கக்கடவர்.
4 ஆனால், ஒருவன் வீட்டில் இருக்கிறவர்கள் ஆட்டுக் குட்டியை உண்பதற்குப் போதுமானவர்களாய் இராமற்போனால், அவன், தன் அயல் வீட்டாரில் ஆட்டுக் குட்டியை உண்பதற்குத் தேவையான பேரை அழைத்து வருவான்.
5 ஆட்டுக் குட்டியோ, மறுவற்றதும் ஆண்பாலானதும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும். ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் அந்த முறைப்படியே தெரிந்து கொள்ளவேண்டும்.
6 அதனை இம்மாதத்தின் பதினான்காம் நாள்வரை வைத்திருந்து, இஸ்ராயேல் மக்களின் ஒவ்வொரு கூட்டத்தாரும் மாலையில் அதனை அறுத்து,
7 அதன் இரத்தத்தில் சிறிது எடுத்து, ஆட்டை உண்ணும் வீட்டு வாயில் நிலைக்கால் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும்.
8 பின், அன்று இரவிலே, அடுப்பில் சுட்ட இறைச்சியைக் காட்டுக் கீரைகளோடும் புளியாத அப்பங்களோடும் உண்பார்கள்.
9 பச்சையாயும் நீரில் அவிக்கப்பட்டதாயும் உள்ள இறைச்சியில் ஒன்றும் உண்ணாமல், அடுப்பிலே பொரித்த கறியை மட்டும் உண்ணவேண்டும். (ஆட்டின்) தலை, கால், குடல் முதலிய எல்லாவற்றையும் உண்பீர்களாக.
10 அதிலே எதையும் விடியற்காலை வரை மீதி வைக்க வேண்டாம். ஏதும் எஞ்சி இருந்தால் அதை நெருப்பில் சுட்டெரிக்கக் கடவீர்கள்.
11 அதனை உண்ணவேண்டிய முறையாவது: நீங்கள் இடுப்பிலே கச்சை கட்டிக் காலிலே செருப்பு அணிந்தவர்களாயும், கையிலே கோலைப் பிடித்தவர்களாயும், அதனை விரைந்து உண்ணக் கடவீர்கள். ஏனென்றால் அது ஆண்டவருடைய பாஸ்கா (அதாவது: ஆண்டவருடைய கடத்தல்).
12 உண்மையில் அந்த இரவிலே நாம் எகிப்து நாடெங்கும் கடந்து போய், எகிப்திலுள்ள மனிதன் முதல் விலங்கு வரை தலைப் பேறானவை யெல்லாம் கொன்று, எகிப்தியத் தேவதைகளின் மீது நீதியைச் செலுத்துவோம்.
13 நாமே ஆண்டவர். நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்கு அடையாளமாய் இருக்கும். அந்த இரத்தத்தைக் காணவே, உங்களை நாம் கடந்து போவோம். இவ்வாறு, நாம் எகிப்து நாட்டைத் தண்டிக்கும்போது, கொள்ளைநோய் உங்கள்மேல் வந்து அழிக்காதிருக்கும்.
14 நீங்களோ, அந்நாளை நினைவுகூர வேண்டிய நாளாகக் கொண்டு, அதை உங்கள் தலைமுறை தோறும் ஆண்டவருடைய திருவிழா என்று எக்காலமும் கொண்டாடி வரக் கடவீர்கள்.
15 (அது எவ்வித மென்றால்,) புளியாத அப்பங்களை ஏழு நாள்வரை உண்பீர்கள். முதல் நாளில் புளித்த மாவு வீட்டில் இருக்கக்கூடாது. முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரை புளித்த அப்பம் உண்பவன் இஸ்ராயேல் சமூகத்தினின்று விலக்கப்படுவான்.
16 முதல் நாள், பரிசுத்த நாளும் சிறப்பாய்க் கொண்டாட வேண்டிய திருவிழாவும் ஆகும். ஏழாம் நாளும் அதுபோலவே வணக்கத்துக்குரியதாய் இருக்கும். அவற்றில் வேலையொன்றும் செய்யலாகாது. நீங்கள் உண்பதற்குத் தேவையான வேலையை மட்டும் செய்யலாம்.
17 புளியாத அப்பத்தின் அந்தத் திருவிழாவைக் கொண்டாடுவீர்களாக. ஏனென்றால், அந்நாளிலே நாம் உங்கள் படையை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்வோம். நீங்களும், உங்கள் தலைமுறை தோறும் நித்திய நியமமாய் அந்த நாளைக் கொண்டாடக் கடவீர்கள்.
18 (அதாவது,) முதல் மாதத்தின் பதினான்காம் நாள் மாலை முதல் அம்மாதத்தின் இருபத்தோராம் நாள் மாலை வரை புளியாத அப்பத்தை உண்பீர்கள்.
19 ஏழு நாள் வரை புளிப்பு உங்கள் வீடுகளில் இல்லாதிருக்கக் கடவது. அந்நியரிலாவது குடிமக்களிலாவது எவனேனும் புளிப்புள்ளதை உண்டிருப்பானேல், அவன் இஸ்ராயேல் சமூகத்தினின்று விலக்குண்டு போவான்.
20 நீங்கள் புளிப்புள்ள யாதொன்றையும் உண்ணாமல், புளியாத அப்பத்தை உண்பீர்கள் (என்றருளினார்).
21 மோயீசனோ, இஸ்ராயேல் மக்களில் பெரியோர்களான யாவரையும் வரவழைத்து: நீங்கள் ஒவ்வொருவரும் போய், உங்கள் குடும்பத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வோர் ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்து, பாஸ்காவைப் பலியிடுங்கள்.
22 பின் ஈசோப்புக் கொழுந்துக் கொத்து எடுத்து வந்து, அதைக் கிண்ணியிலுள்ள இரத்தத்தில் தோய்த்து, வாயில் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள். விடியற்காலை வரை உங்களில் ஒருவரும் வீட்டுவாயிலைக் கடக்கக் கூடாது.
23 ஏனென்றால், ஆண்டவர் எகிப்தியரை அழிப்பதற்குக் கடந்து வரும்போது, கதவுநிலையின் மேற்சட்டத்திலும் நிலைக்கால்கள் இரண்டிலும் இரத்தம் இருப்பதைக் காணும்போது, அழிப்போனை உங்கள் வீடுகளில் புகுந்து உங்களை அழிக்கவிடாமல், வாயிற்படியை விலகிக் கடந்து போவார்.
24 இவ்வார்த்தையை நீயும் உன் புதல்வர்களும் நித்திய கட்டளையாகக் கைக்கொள்ளக் கடவீர்கள்.
25 மேலும், ஆண்டவர் தாம் சொன்னபடி உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிலே நீங்கள் போய்ச் சேர்ந்தபோதும், இச்சடங்கு முறைகளை அனுசரிக்கக் கடவீர்கள்.
26 அப்போது உங்கள் பிள்ளைகள்: இந்தச் சடங்கு முறையின் பொருள் என்ன என்று உங்களை வினவுகையில்,
27 நீங்கள்: இது ஆண்டவருடைய கடத்தற்கு உரிய பலியாம்; அவர் எகிப்தியரை அழித்த போது, எகிப்திலுள்ள இஸ்ராயேல் மக்களின் வீடுகளைக் கடந்துபோய், நமது வீடுகளைக் காத்தருளினார் என்று அவர்களுக்குச் சொல்வீர்கள் என்றார். (இதைக் கேட்ட) மக்கள் தலைவணங்கித் தொழுதனர்.
28 இஸ்ராயேல் மக்கள் போய், மேயீசனுக்கும் ஆரோனுக்கும் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடியே செய்தனர்.
29 பிறகு நிகழ்ந்தது என்னவென்றால், நள்ளிரவில் அரியணையில் வீற்றிருந்த பாரவோனின் தலைப் பிள்ளை முதல் சிறையில் அடைபட்டிருந்த அடிமைப்பெண்ணின் தலைப் பிள்ளை வரை எகிப்து நாட்டிலிருந்த முதற் பேறு அனைத்தையும் மிருகங்களில் தலையீற்று அனைத்தையும் ஆண்டவர் அழித்தார்.
30 பாரவோனும் அவன் ஊழியர்கள் அனைவரும் எகிப்தியர் யாவரும் இரவில் எழுந்தனர். எகிப்திலே பெரிய கூக்குரல் உண்டாயிற்று. ஏனென்றால், சாவு இல்லாத வீடே இல்லை.
31 இரவிலே பாரவோன் மோயீசனையும் ஆரோனையும் வரவழைத்து: நீங்களும் இஸ்ராயேல் மக்களும் எழுந்து என் மக்களை விட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்குப் பலியிடுங்கள்.
32 நீங்கள் கேட்டபடி உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டு புறப்பட்டுப் போங்கள். என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான்.
33 எகிப்தியர்களோ: நாங்கள் எல்லாரும் சாகப் போகிறோமே என்று சொல்லி, இஸ்ராயேல் மக்கள் விரைவில் நாட்டைவிட்டுப் புறப்படும் படி அவர்களைத் துரிதப்படுத்தினர்.
34 ஆகையால், அவர்கள் பிசைந்த மாவு புளிக்குமுன் எடுத்து, அதைப் போர்வைகளில் கட்டித் தங்கள் தோள் மேல் வைத்துக் கொண்டனர்.
35 மோயீசன் கட்டளையிட்டிருந்தபடி இஸ்ராயேல் மக்கள், எகிப்தியரிடம் பொன் வெள்ளி ஆபரணங்களையும் பற்பல ஆடைகளையும் கேட்டனர்.
36 ஆண்டவர் அவர்களுக்கு எகிப்தியர் கண்களில் தயவு கிடைக்கச் செய்தமையால், அவர்கள் கேட்டதை இவர்கள் கொடுக்க, இஸ்ராயேலர் எகிப்தியரைக் கொள்ளையிட்டனர்.
37 இஸ்ராயேல் மக்கள் இராம்சேசை விட்டுச் சொக்கோட்டுக்குப் போயினர். அவர்கள், பிள்ளைகளைத் தவிர்த்து, சுமார் ஆறுலட்சம் பேர் நடக்கக்கூடியவர் இருந்தனர்.
38 கணக்கிலடங்காத இன்னும் பெரிய கூட்டம் இவர்களோடு சேர்ந்து புறப்பட்டுப் போனதுமன்றி, மிகுதியான ஆடு மாடுகளும் பலவகை விலங்குகளும் போயின.
39 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்த மாவைப் புளியாத அப்பங்களாகச் சுட்டனர். அவை புளியாத அப்பங்களாய் இருந்தன. ஏனென்றால், எகிப்தியர் அவர்களைத் தாமதிக்கவிடாமல் விரைவில் புறப்பட்டுப் போகக் கட்டாயப் படுத்தினதினாலே, அவர்கள் பயணத்திற்கென்று தங்களுக்கு ஒன்றும் தயாரித்துக்கொள்ளவில்லை.
40 இஸ்ராயேல் மக்கள் எகிப்திலே குடியேறி வாழ்ந்த காலம் நானூற்று முப்பது ஆண்டுகள்.
41 அந்த நானூற்று முப்பது ஆண்டுகள் நிறைவெய்திய அதே நாளில் ஆண்டவருடைய படைகளெல்லாம் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்டன.
42 ஆண்டவர் அவர்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்த அந்த இரவு பெரிய திருநாள் ஆயிற்று. இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் தலைமுறை தோறும் அதனை அனுசரிக்கக் கடமைப்பட்டனர்.
43 ஆண்டவர் மீண்டும் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் திருவாக்கருளினதாவது: பாஸ்காவின் சட்டதிட்டம் இதுவே: அந்நியரில் ஒருவனும் அதனை உண்ண வேண்டாம்
44 ஆனால் விலைக்குக் கொள்ளப்பட்ட அடிமை எவனும், விருத்தசேதனம் செய்யப்பட்ட பிறகு அதை உண்ணலாம்.
45 அந்நியனும் கூலியாளும் அதை உண்ண வேண்டாம்.
46 அதை ஒரு வீட்டினுள்ளே உண்ண வேண்டுமேயன்றி, அந்த இறைச்சியில் சிறிதுகூட வீட்டிலிருந்து வெளியே கொண்டு போகக்கூடாது. அதன் ஒர் எலும்பையும் முறிக்கக்கூடாது.
47 இஸ்ராயேல் மக்களின் சபையார் எல்லாரும் அதை அனுசரிக்கக் கடவார்கள்.
48 அந்நியன் ஒருவன் உங்களிடம் வந்து குடியேற மனம்கொண்டு பாஸ்காவை அனுசரிக்கக் கேட்டால், முதன் முதல் அவனைச் சேர்ந்த ஆண்களெல்லாம் விருத்தசேதனம் செய்யப் படுவார்கள். பின் அவன் (அதைச்) சட்டப்படி கொண்டாடக் கடவான். அவன் அப்போது அந்நாட்டுக் குடிமகன் போலிருப்பான். ஆனால், விருத்த சேதனமில்லாத எவனும் அதை உண்ண வேண்டாம்.
49 உங்களிடத்தில் வந்து குடியேறின அந்நியனுக்கும் குடிமகனுக்கும் ஒரே சட்டம் இருக்கும் (என்றார்).
50 ஆண்டவர் மோயீசனுக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டிருந்தபடியே இஸ்ராயேல் மக்கள் எல்லாரும் செய்தனர்.
51 ஆண்டவர் அன்றே இஸ்ராயேல் மக்கள் எல்லாரையும் அணியணியாக எகிப்து நாட்டிலிருந்து புறப்படச்செய்தார்.
×

Alert

×