Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Esther Chapters

Esther 2 Verses

1 பின்னர் அசுவேருஸ் அரசன் கோபம் தணிந்தவனாய் வஸ்தியையும் அவள் செய்த குற்றத்தையும் அவளைத் தான் தண்டித்திருந்த முறையையும் பற்றிச் சிந்திக்கலானான்.
2 அப்பொழுது அரச அவையில் இருந்த பணியாளரும் அலுவலரும் அரசனை நோக்கி, "கன்னிகளும் அழகிகளுமான பெண்களை அரசருக்குத் தேடிக்கொண்டு வரவேண்டும்.
3 ஆதலால் கன்னிமை கொடாத பேரழகியரைத் தேட நாடெங்கும் ஆட்களை அனுப்ப வேண்டும். அவர்களைச் சூசா நகரிலுள்ள அந்தப்புர மாளிகைக்கு அழைத்துவந்து, அரச மகளிரைக் கவனித்து வரும் ஏகே எனும் அண்ணகன் வசம் அவர்களை ஒப்புவிக்க வேண்டும். அவன் பெண்களுக்கேற்ற அணிகலன்களையும், அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும்.
4 அவர்கள் அனைவரிலும் அரசனுக்கு விருப்பமான கன்னிப் பெண்ணே வஸ்தித்குப் பதில் அரசியாக வேண்டும்" என்றார்கள். இது நலமென்று கண்டு அவ்வாறு செய்யுமாறு அரசன் பணித்தான்.
5 அக்காலத்தில் பென்யமீன் குலத்துக் கீசின் மகனான செமேயிக்குப் பிறந்த யாயிர் என்பவனின் மகனாகிய மார்தொக்கே என்னும் பெயர் கொண்ட யூதர் ஒருவர் சூசா நகரில் வாழ்ந்து வந்தார்.
6 பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யூதா அரசன் எக்கோனியாசைச் சிறைப்படுத்திய போது அவனோடு இவரும் யெருசலேமிலிருந்து கைதியாகச் சென்றிருந்தார்.
7 இவர் தம் சகோதரன் மகள் ஏதிஸ்ஸாவைத் தன் வீட்டில் வளர்த்து வந்தார். அவளுக்கு எஸ்தர் என்று இன்னொரு பெயரும் உண்டு. அவளுக்குத் தாயுமில்லை தந்தையுமில்லை. ஆனால் அவள் எழில் படைத்த பேரழகி. அவன் தந்தையும் தாயும் இறக்கவே, மார்தொக்கே அவளைத் தம் மகளாக எடுத்து வளர்த்து வந்தார்.
8 அரச கட்டளை பறைசாற்றப்பட்டது. எனவே, பேரழகிகள் சூசாவுக்குக் கொண்டு வரப்பட்டு ஏகே என்னும் அண்ணகன் வசம் ஒப்புவிக்கப்பட்டனர். அவர்களோடு எஸ்தரும் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டாள். அங்கே மற்றப் பெண்களோடு இருந்து வந்தாள்.
9 அவளை ஏகே விரும்பினான். எனவே அவள் அவனது தயவைப் பெற்றாள். அதன் பயனாக, அரச மாளிகையில் இருந்த மிக்க அழகு வாய்ந்த ஏழு இளம் பெண்களை அவளுக்குத் தோழியராக நியமிக்கவும், அவளுக்குச் சேரவேண்டிய அனைத்தையும் விரைவில் கொடுக்கவும் (மற்றொரு) அண்ணகனுக்கு அவன் கட்டளையிட்டான். மேலும், அவளையும் அவள் தோழியரையும் அலங்கரித்து, அழகுபடுத்தத் தேவையானவற்றை எல்லாம் கொடுக்கவும் சொன்னான்.
10 ஆனால் எஸ்தர் தன் குலத்தையும் சொந்த நாட்டையும் பற்றி அவனுக்குத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால், அவற்றைத் தெரிவிக்க வேண்டாமென்று மார்தோக்கே திட்டமாய்க் கூறியிருந்தார்.
11 மார்தொக்கே எஸ்தருடைய நலத்தின் மீது அக்கறை கொண்டு, அவளுக்கு நிகழ விருப்பதை அறிய விரும்பினார். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன் நாள்தோறும் வந்து உலாவுவது வழக்கம்.
12 கன்னிப் பெண்களுக்குரிய முறைப்படி பன்னிரண்டு மாதங்கள் கடந்த பின் தான் அப்பெண்கள் அனைவரும் தத்தம் முறைப்படி அரசன் முன் செல்ல முடியும். அதுகாறும் ஆறு மாதம் உடம்பிலே வெள்ளைப் போளம் பூசிக்கொள்வர்; மிஞ்சிய ஆறுமாதம் அழகுப் பொருட்களால் தங்களையே அழகுபடுத்திக் கொள்வர்.
13 அவர்கள் அரசனிடம் செல்லு முன் தங்கள் ஒப்பனைக்கென்று அவர்கள் கேட்ட அனைத்தும் அவர்களுக்குக் கொடுக்கப்படும்; தாங்கள் விரும்பியது போல் அவர்கள் தங்களை அழகுபடுத்திக் கொண்டு அந்தப்புர மாளிகையிலிருந்து அரசனின் அறைக்குச் செல்வார்கள்.
14 மாலையில் உள்ளே சென்ற பெண் காலையில் வெளியே வருவாள்; உடனே அவள் அரசனின் வைப்பாட்டிகளைக் கவனித்து வந்த சூசாகாஜ; என்னும் அண்ணகனின் கண்காணிப்பில் இருந்த வேறொரு மாளிகைக்கு அனுப்பப்படுவாள். பிறகு அவளை அரசன் விரும்பிப் பெயர் சொல்லி அழைத்தாலன்றி அவள் ஒரு போதும் அரசனிடம் செல்லமுடியாது.
15 நாட்கள் பல கடந்தன; மார்தொக்கே எடுத்து வளர்த்த தம் சகோதரன் அபிகாயேலின் மகள் எஸ்தர் அரசனிடம் செல்ல வேண்டிய நாளும் வந்தது. அப்பொழுது அவள் மற்றப் பெண்களைப் போல் தான் விரும்பிய ஆடை அணிகள் ஒன்றையும் கேட்காமல், அந்தப்புரப் பெண்களைக் கண்காணித்து வந்த அண்ணகனான ஏகே தனக்கு விரும்பிக் கொடுத்திருந்தவற்றைக் கொண்டே தன்னை அழகு செய்து கொண்டாள். ஏனெனில், எஸ்தர் இயல்பிலேயே மிக அழகு வாய்ந்தவளாய் இருந்தமையால், பார்ப்பவர் கண்களுக்குக் கவர்ச்சியும் விருப்பமும் ஊட்டுபவளாக இருந்தாள்.
16 அசுவேருஸ் ஆட்சியின் ஏழாம் ஆண்டு, தெபெத் என அழைக்கப்பட்ட பத்தாம் மாதத்தில் எஸ்தர் அசுவேருஸ் அரசனுடைய படுக்கையறைக்கு அழைத்து வரப்பட்டாள்.
17 அரசன் ஏனைய பெண்களை விட அவள் மீது அதிக அன்பு கொண்டான். அவள் அரசனிடம் மற்றப் பெண்களை விடத் தயவும் ஆதரவும் பெற்றாள். ஆதலால் அசுவேருஸ் அரச முடியை அவளுக்குச் சூடி வஸ்திக்குப் பதிலாக அவளை அரசியாக ஏற்படுத்தினான்.
18 பிறகு எஸ்தரின் திருமண விழாவை முன்னிட்டுத் தன் சிற்றரசர் அனைவருக்கும் தன் பணியாளருக்கும் சிறந்ததொரு விருந்து அளிக்கக் கட்டளையிட்டான். மேலும், தன் மாநிலங்கள் முழுவதும் அந்நாளை விடுமுறையாகக் கொண்டாடும்படி பணித்து, அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்குத் தன் அரச மகிமைக்கு ஏற்றபடி பரிசுகளும் வழங்கினான்.
19 இரண்டாம் முறையும் கன்னிப்பெண்கள் கொண்டு வரப்பட்டனர். அப்போது மார்தொக்கே அரண்மனை வாயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
20 அவர் கூறியிருந்தபடியே எஸ்தர் தன் நாட்டையும் தன் குலத்தையும் பற்றி இன்னும் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவள் சிறுவயதில் அவரிடம் வளர்ந்து வந்த போது அவர் சொற்கேட்டு நடந்தது போலவே இப்பொழுதும் செய்து வந்தாள்.
21 ஒருநாள் மார்தொக்கே அரண்மனை வாயிலண்டை உட்கார்ந்திருந்த போது, அரண்மனையின் தலை வாயிலைக் காத்து வந்த பாகாத்தான், தாரேஸ் என்று இரு அண்ணகர்கள் அரசன் மீது சினங்கொண்டு, அவனுக்கு எதிராய் எழுந்து அவனைக் கொல்ல வகை தேடினர்.
22 இது மார்தொக்கேய்க்குத் தெரிய வந்தது. அவர் உடனே எஸ்தர் அரசிக்கு அதைத் தெரிவித்தார். அவள் மார்தொக்கே பெயரால் அரசனுக்கு அச்செய்தியைச் சொன்னாள்.
23 அது உண்மை என்று தெரியவரவே அக்காவலர் இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி அரசன் முன்னிலையில் நாளாகமத்தில் எழுதப்பட்டது.
×

Alert

×