Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Ecclesiastes Chapters

Ecclesiastes 4 Verses

1 நான் வேறு காரியங்களையும் ஆராய்ந்து பார்த்தேன். சூரியன் முகத்தே சொல்லப்படும் புறணிகளையும், குற்றமில்லாதவர்கள் சிந்தும் கண்ணீர்களையும் கண்டேன். அவர்களைத் தேற்றுவார் இல்லை. அவர்களுக்கு உதவிசெய்வார் இல்லை. ஒடுக்குகிறவர்களுடைய பளுவைத் தடுக்க அவர்களுக்கு வலிமையும் இல்லை.
2 இதைக் கண்டு, உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைக் காட்டிலும் காலஞ்சென்று இறந்தவர்களையே பேறுபெற்றவர்கள் என்றேன்.
3 இவ்விருவகையினரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே மேல். இவன் சூரியன் முகத்தே செய்யப்படும் கொடுமையைக் காணவில்லையே!
4 பிறகு மனிதர்கள் படும் எல்லாத் துன்பங்களையும்ஆராய்ந்து சிந்தித்தபோது, அவர்களுடைய சொந்த முயற்சிகள் அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதைக் கண்டேன். இவைகளும் வீணானதாயும் பயனற்றதாயும் இருக்கின்றன அல்லவா?
5 மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன் தசையைத் தானே தின்கிறான்.
6 அவன்: உழைத்து வருந்தி இரண்டு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதைக் காட்டிலும் சும்மாவிருந்து ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே மேல் என்றான்.
7 இன்னொன்றை சிந்தித்துப் பார்த்து, சூரியன் முகத்தே வேறொரு காரியமும் வீணென்று கண்டேன்.
8 (அது என்னவென்றால்) ஒருவன் மகனுமன்றிச் சகோதரனுமின்றித் தனித்து இருக்கிறான். அப்படியிருக்க, அவன் ஓயாது வேலை செய்தாலும், அவன் கண்கள் செல்வத்தால் நிறைவு கொள்வதில்லை. அவன்: ஒரு நன்மையையும் நான் அனுபவிக்காமல் உழைப்பது யாருக்காகத்தான் என்று சிந்திக்கிறதில்லை. இதுவும் வீணானதும் பொல்லாத தொல்லையுமாய் இருக்கிறதன்றோ?
9 அப்படியிருக்க, தனித்து இருப்பதிலும் இருவராகக் கூடியிருப்பதே நலம். அவர்களுடைய கூட்டுறவினால் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
10 ஒருவன் விழுந்தால் அவன் தோழன் அவனைத் தூக்கி விடுவான். தனித்திருக்கிறவனுக்கோ அப்படியன்று; அவன் விழுந்தால், ஐயோ, அவனைத் தூக்குவாரில்லையே.
11 இரண்டு பேராய்ப் படுத்துக் கொண்டிருந்தால் ஒருவவனுக்கொருவன் சூடுண்டாக்குவான். தனித்தவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
12 ஒருவனை யாரேனும் மற்றொருவன் மேற்கொள்ளப் பார்த்தால் இருவரும் கூடி அவனுக்கு எதிர்த்து நிற்கலாம். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.
13 எதிர்காலத்துக் காரியங்களை முன்னாலே யோசிக்காத கிழவனும் மூடனுமாகிய அரசனைக் காட்டிலும் ஏழையும் ஞானமுமுள்ள இளைஞனே தாவிளை.
14 சங்கிலியால் கட்டுண்டு, சிறையிலிருந்து, அரசாளப் புறப்படுவாரும் உண்டு; அரச குடும்பத்தில் பிறந்து வறுமையில் வருந்துவாரும் உண்டு.
15 சூரியன் முகத்தே இவ்வுலகிலுள்ள யாவரும் பட்டத்துக்கு வரப்போகிற இளைஞன் பக்கம் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
16 அவனுக்கு முன்னிருந்த எல்லா மனிதர்களின் எண்ணிக்கை முடிவில்லா எண்ணிக்கை. அவனுக்குப்பின் வருபவர்கள் அவன் மேல் விருப்பம் கொள்ளமாட்டார்கள். இதுவும் வீணும் மனத்துக்கமும் அன்றோ?
×

Alert

×