Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Deuteronomy Chapters

Deuteronomy 8 Verses

1 நீங்கள் வாழ்ந்து பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ள, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற கட்டளைகளையெல்லாம் அனுசரிக்கக் கவனமாய் இருப்பீர்களாக.
2 உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் படைத்து, உன்னைப் பரிசோதித்து, தம்முடைய கட்டளைகளை நீ அனுசரிப்பாயோ அனுசரிக்க மாட்டாயோவென்று உன் இதயத்திலுள்ளதை நீயே அறியும்படியாக, நாற்பதாண்டளவாய் பாலைவனத்திலே உன்னை நடத்திவந்த எல்லா வழிகளையும் நினைப்பாயாக.
3 (உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் முன்னோரும் அறிந்திராத மன்னாவை உனக்கு அளித்தார். அதனால்: மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்று உனக்குக் காண்பித்தருளினார்.
4 இந்த நாற்பதாண்டும் நீ உடுத்தியிருந்த ஆடை பழையதாகிக் கிழியவுமில்லை; உன் காலடி காயமுறவுமில்லை.
5 ஆதலால் ஒருவன் தன் மகனுக்குக் கற்பிப்பதுபோல், கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கற்பித்தாரென்று நீ உன் இதயத்தில் உணர்ந்து அறிந்துகொள்வாயாக.
6 நீ உன் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய வழிகளில் நடந்து, அவருக்கு அஞ்சும்படியன்றோ (அவர் அவ்வாறு உன்னைப் படைத்தார்).
7 ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை நல்ல நிலத்திலே புகச்செய்வார். அது ஆறு, ஏரி, ஊற்றுகள் மிகுந்த நாடு. அதிலுள்ள பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலும் பல நதிகள் புறப்படுகின்றன.
8 கோதுமை வாற்கோதுமை முந்திரிக்கொடிகளும், அத்திமரம் ஒலிவமரம் மாதுளஞ் செடிகளும் அதிலே வளரும். அவ்விடத்தில் எண்ணெயும் தேனும் மிகுதியாக உண்டு.
9 அது எக்காலமும் நிறைவாக (நீ) அப்பம் உண்ணத்தக்கதும், ஒன்றும் உனக்குக் குறைவு வைக்காததுமான நாடு. அதில் கற்கள் இரும்பாய் இருக்கின்றன. அதன் மலைகளில் செம்பு வெட்டியெடுக்கப்படுகிறது.
10 ஆகையால், நீ உண்டு நிறைவு கொண்டபோது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுத்த சிறந்த நாட்டிற்காக அவரைப் போற்றக் கடவாய்.
11 நீ ஒருபோதும் உன் கடவுளாகிய ஆண்டவரை மறவாதே. நான் இன்று உனக்கு விதிக்கின்ற அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதிமுறைகளையும் அசட்டை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருப்பாயாக.
12 இல்லாவிட்டால், நீ உண்டு நிறைவு கொண்டு அழகிய வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருக்கும்போதும், ஆட்டுமந்தைகளையும்
13 மாட்டுமந்தைகளையும் சம்பாதித்துப் பொன்னையும் வெள்ளியையும் மிகுதியாய்க் கைக்கொண்டிருக்கும் போதும், ஒருவேளை நீ செருக்குற்றவனாய்,
14 உன்னை எகிப்திலும் அடிமைத்தன வீட்டிலுமிருந்து புறப்படச் செய்த உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தாலும் மறக்கலாம்.
15 (அவரை மறவாதே.) அவரன்றோ கொள்ளிவாய்ப் பாம்புகளும் திப்சாஸ் என்னும் நச்சுப் பாம்புகளும் தேள்களும் உள்ள, பயங்கரமான பெரிய நீரில்லாப் பாலைவழியாய் உன்னை நடத்தி அழைத்து வருகையில், மிகக் கடினமான கல் மலையிலிருந்து நீரருவிகள் புறப்படச் செய்து,
16 உன் முன்னோர்கள் அறிந்திராத மன்னாவைக் கொண்டு உன்னை உண்பித்து, உன்னைத் தாழ்த்திப் பரிசோதித்த பின்பு, இறுதியில் உன்மீது இரக்கமுள்ளவராய் இருந்தார்?
17 ( அவர் இப்படியெல்லாம் செய்ததன் உட்கருத்து ஏதென்றால்: ) என் திறமையினாலேயும், என் புய வலிமையினாலேயும் நான் அந்தச் செல்வமெல்லாம் சம்பாதித்தேன் என்று உன் இதயத்திலே நீ சொல்லாமல்,
18 உன் கடவுளாகிய ஆண்டவரை நினைத்து, அவரே செல்வத்தைச் சம்பாதிப்பதற்கான ஆற்றலை உனக்குக் கொடுத்திருக்கிறாரென்று நீ அறியும்படியாகவேயாம். அவர் உன் முன்னோருக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று, அப்படிச் செய்தார். இந்நாளிலே (நடக்கிறது) அதற்குச் சான்று பகரும்.
19 ஆனால், நீ உன் கடவுளாகிய ஆண்டவரை மறந்தவனாய், பிற கடவுளரைப் பின்பற்றி அவர்களை வணங்கித்தொழுது வருவாயாயின், நீ முற்றிலும் அழிந்து போவாயென்று இக்கணமே உனக்கு அறிவிக்கிறேன்.
20 உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய குரலுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல் போனால், உங்களுக்கு முன்பாக ஆண்டவர் அழித்த மக்களை போல் நீங்களும் அழிந்து போவீர்கள்.
×

Alert

×