Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Deuteronomy Chapters

Deuteronomy 25 Verses

1 சிலருக்குள் வழக்கு உண்டாகி அவர்கள் நடுவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தால், நடுவர்கள் எவனை நீதிமானென்று கண்டு பிடித்தார்களோ அவன் பக்கமாய்த் தீர்ப்புச் சொல்லவும், எவனைத் தீயவனென்று கண்டுபிடித்தார்களோ அவனைக் குற்றவாளியென்று தண்டிக்கவும் கடவார்கள்.
2 குற்றவாளி அடிபட வேண்டுமென்று தீர்ப்பளிப்பார்களாயின் நடுவர்கள் அவனை முகம் குப்புறப்படுக்கவைத்துத் தங்கள் முன்பாகவே அடிக்கச் செய்வார்கள். குற்றம் எவ்வளவு பெரியதோ அவ்வளவுக்கு அடிக்கச் செய்வார்கள்.
3 ஆயினும், உன் சகோதரன் உன் கண்களுக்கு முன் கொடுமையாய்க் காயப்பட்டுப்போகாதபடிக்கு நாற்பது அடிக்கு மேல் அவனை அடிக்கக்கூடாதென்று அறிந்துகொள்.
4 களத்தில் போரடிக்கிற மாட்டுக்கு வாயைக் கட்டலாகாது.
5 இரண்டு சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கையில், இருவரில் ஒருவன் மகப்பேறு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவிவேறொருவனை மணந்து கொள்ள வேண்டாம். கணவனுடைய சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, தன் சகோதரனுக்கு மகப்பேறு பிறப்பித்து,
6 இறந்தவனுடைய பெயர் இஸ்ராயேலில் மறைந்து போகாதபடிக்கு அவன் பெயரையே அவள் பெறும் தலைபிள்ளைக்குச் சூட்டக்கடவான்.
7 ஆனால், தன் சகோதரனுடைய மனைவி சட்டப்படி தனக்கே மனைவியாக வேண்டுமென்றிருந்தும், ஒரு வேளை அவன் அவளை மணந்து கொள்ளமனமில்லாதிருந்தால், அந்த விதவை நகரவாயிலில் கூடிய பெரியோர்களிடம் போய்: என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயர் இஸ்ராயேலில் நிலைக்கும்படி என்னை மனைவியாக வைத்துக் கொள்ள மனமில்லாதிருக்கிறான் என்று முறையிடுவாள்.
8 அப்போது அவர்கள் உடனே அவனை வரவழைத்து: ஏன் என்று கேட்கையில், அவன்: அவளை மணந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை என்று மறுமொழி சொன்னால்,
9 அப்பெண் பெரியோர்கள் முன்பாக அவனருகில் வந்து, அவன் காலிலிருக்கிற செருப்பைக் கழற்றி, அவன் முகத்திலே உமிழ்ந்து: தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்பட வேண்டும் என்று சொல்லக்கடவாள்.
10 மேலும், இஸ்ராயேலில் அப்படிப்பட்டவனுடைய வீடு: செருப்பு கழற்றப்பட்டவனுடைய வீடு என்று அழைக்கப்படும்.
11 இரு ஆடவர் ஒருவரோடொருவர் வாயாடி, சண்டை போட ஆரம்பித்திருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் கணவனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, கையை நீட்டி அடிக்கிறவனுடைய மானத்தைப் பிடிக்கத் துணிவாளாயின்,
12 நீ அவள்மேல் அணுவளவேனும் இரங்காமல் அவளுடைய கையைத் துண்டிக்கக்கடவாய்.
13 உன் பையில் பெரிதும் சிறிதுமான பல எடைக் கற்களையும்,
14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான மரக்கால்களையும் வைத்திருக்க வேண்டாம்.
15 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு அளிக்க விருக்கும் நாட்டில் நீ நெடுங்காலம் வாழும் பொருட்டு, உண்மையும் நேர்மையுமான எடைக் கல்லும் மரக்காலும் உன்னிடம் இருக்கவேண்டும்.
16 ஏனென்றால், இவ்வாறு செய்பவனைக் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார். அக்கிரமமானதை அவர் வெறுக்கிறார்.
17 நீ எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த வழியிலே அமலேக் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள்.
18 அவன் உனக்கு எதிராய்ப் படையெடுத்து, நீ களைத்து விடாய்த்திருக்கையிலே அவன் உன் பாளையத்தின் படை வீரர்கள் பலவீனப்பட்டு நின்று கொண்டு இருந்ததைக் கண்டு, கடவுளுக்கு அஞ்சாமல் அவன் அவர்களை வெட்டி வீழ்த்தினான்.
19 ஆகையால், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை இளைப்பாறச் செய்து, நீ உரிமையாக்கிக் கொள்ளுமாறு அவர் உனக்குக் கொடுக்கப்போகிற நாட்டின் சுற்றுப் புறத்தாராகிய இனத்தாரையெல்லாம் உனக்குக் கீழ்ப்படுத்தியபின், நீ அமலேக்கின் பெயரை மண்ணில் இராதபடிக்கு அழிக்கக்கடவாய். இதை மறவாதே, எச்சரிக்கை!
×

Alert

×