Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Deuteronomy Chapters

Deuteronomy 11 Verses

1 ஆகையால், நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அன்பு செய்து, அவருடைய கட்டளைகளையும் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைகளையும் சட்டங்களையும் எக்காலமும் அனுசரிக்கக்கடவாய்.
2 உங்கள் புதல்வர்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய கண்டனைகளையும், அவருடைய மகத்துவங்களையும் வலுத்த கையையும், ஓங்கிய புயத்தையும் கண்டிராமையால், அவர்கள் அறியாதவைகளை நீங்களாவது இன்று ஆராய்ந்துபாருங்கள்.
3 அவர் எகிப்தின் நடுவிலே பரவோன் மன்னனுக்கும் அவனுடைய நாடு அனைத்திற்கும் செய்த அற்புத அதிசயங்களையும்,
4 எகிப்தியரின் படை அனைத்தும் குதிரைகளும் தேர்களும் உங்களைப் பின்தொடர்ந்து வந்தபோது செங்கடலின் திரைகள் எழும்பி அவர்களை அமிழ்த்தியதையும், இந்நாள்வரை ஆண்டவர் அவர்களை அழித்ததையும்,
5 நீங்கள் இவ்விடத்திற்கு வருமட்டும் அவர் உங்களுக்காகப் பாலைவனத்திலே செய்து வந்ததையும், நிலம் தன் வாயைத்திறந்து,
6 ரூபனின் மகனான எலியாபின் புதல்வர்களாகிய தாத்தான், அபிரோன் என்பவர்களையும், அவர்களுடைய வீட்டாரையும் கூடாரங்களையும் இஸ்ராயேல் நடுவில் அவர்களுக்கு உண்டாயிருந்த பொருட்கள் அனைத்தையும் விழுங்கினதையும்,
7 ஆண்டவர் செய்த இவை போன்ற மகத்தான செயல்கள் யாவையும் நீங்கள் கண்ணாலே கண்டிருக்கிறீர்கள் அல்லவா ?
8 (ஏன் அவ்வாறு செய்தாரென்றால்) நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற எல்லாச் சட்டங்களையும் நீங்கள் கைக்கொண்டொழுகவும், அதன்வழி நீங்கள் புகவிருக்கும் நாட்டை அடையவும் உரிமையாக்கிக் கொள்ளவும்,
9 ஆண்டவர் உங்கள் மூதாதையருக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் கொடுப்போமென்று ஆணையிட்டு, பாலும் தேனும் பொழியும் நாட்டில் நீங்கள் நீடித்து வாழும்படியாகவுமே அன்றோ ?
10 உண்மையிலே உரிமையாக்கிக் கொள்ளும்படி நீ புகவிருக்கும் நாடு நீ விட்டுவந்த எகிப்து நாட்டைப்போல் அன்று. அங்கே விதை விதைத்த பின்பு தோட்டங்களுக்கு வாய்க்கால்கள் வழியாய் நீர்பாய்ச்சுவது வழக்கம்.
11 இந்த நாடோ மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள நாடு. அதற்கு வானத்தின் மழையே வேண்டும்.
12 அதை உன் கடவுளாகிய ஆண்டவர் எப்பொழுதும் கவனித்து வருகிறார். ஆண்டின் தொடக்க முதல் இறுதிவரை அவருடைய கண்கள் அதன்மேல் வைக்கப்பட்டிருக்கின்றன.
13 ஆதலால், நான் உங்களுக்கு இன்று கற்பிக்கின்ற கட்டளைகட்கு நீங்கள் பணிந்தவர்களாய், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை உங்கள் முழு இதயத்தோடும் முழு ஆன்மாவோடும் நேசித்து ஊழியம் செய்வீர்களாயின்,
14 அவர் உங்கள் நாட்டில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யச் செய்வதனால், நீங்கள் தானியத்தையும் கொடிமுந்திரிப் பழச்சாற்றையும் எண்ணெயையும்,
15 மிருகவுயிர்களுக்காக உங்கள் வெளிகளில் புல்லையும் சம்பாதித்துக்கொண்டு, உண்டு நிறைவு கொள்வீர்கள்.
16 உங்கள் இதயம் வஞ்சிக்கப்பட்டு, நீங்கள் ஆண்டவருக்கு முதுகைக் காட்டிப் பிற தேவர்களுக்குப் பணிந்து ஆராதனை செய்யாதபடிக்கு எச்சரிக்கையாய் இருங்கள்.
17 இல்லாவிடில் ஆண்டவர் கோபம் கொண்டு வானத்தை அடைத்து விட்டாலும் விடலாம். அப்பொழுது மாரி பெய்யாமலும் நிலம் பலன்தராமலும் இருக்க, ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கும் சிறந்த நாட்டிலிருந்து நீங்கள் விரைவில் அழிந்து போனாலும் போவீர்கள்.
18 நீங்கள் இவ்வாக்கியங்களை உங்கள் இதயங்களிலும் ஆன்மாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கைகளிலும் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவிலும் தொங்கவிடுங்கள்.
19 நீங்கள் வீட்டில் இருக்கையிலும் வழியில் நடக்கையிலும் படுக்கையிலும் எழும்புகையிலும் அவற்றைத் தியானிக்கச் சொல்லி, உங்கள் புதல்வர்களுக்குக் கற்பியுங்கள்.
20 அவற்றை உன் வீட்டு நிலைகளிலும் கதவுகளிலும் எழுதுவாயாக.
21 அவ்வாறு செய்து வந்தால், வானம் நிலத்தின்மேல் இருக்குந்தனையும் நீயும் உன் புதல்வர்களும், ஆண்டவர் உன் மூதாதையருக்குக் கொடுப்போமென்று ஆணையிட்டுச் சொல்லிய நாட்டில் நெடுநாள் வாழ்ந்திருப்பீர்கள்.
22 உள்ளபடி நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அன்பு செய்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்தொழுகி, அவரோடு ஒன்றித்து, நான் உங்களுக்குக் கற்பிக்கிற கட்டளைகளைக் கைக்கொண்டு அனுசரித்து வருவீர்களாயின்,
23 ஆண்டவர் உங்கள் முன்னிலையில் இந்த இனத்தாரையெல்லாம் சிதறடிப்பார். அப்போது நீங்கள் உங்களிலும் பெருத்த மக்களையும் பலத்த இனத்தாரையும் வயப்படுத்துவீர்கள்.
24 உங்கள் கால்கள் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாய் இருக்கும். பாலைவனமும் லீபானும் யுப்பிரத்தேஸ் மாநதியும் தொடங்கி மேற்கிலுள்ள கடல் வரைக்கும் உங்கள் எல்லைகள் விரியும்.
25 உங்களுக்கு முன் எதிர்த்து நிற்பார் ஒருவருமில்லை. கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு வாக்களித்தபடியே, உங்களால் உண்டாகும் அச்சத்தையும் திகிலையும், நீங்கள் காலாலே மிதக்கும் நாடெல்லாம், அவர் பரவச் செய்வார்.
26 இதோ இன்று நான் ஆசீரையும் சாபத்தையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன்.
27 இன்று உங்களுக்குக் கற்பிக்கின்ற உங்கள் கடவுளாகிய ஆண்டவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவீர்களாயின் (உங்களுக்கு) ஆசீர் (வரும்).
28 உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல், இப்போது நான் உங்களுக்குக் காண்பிக்கிற வழியை விட்டு விலகி, நீங்கள் முன் அறிந்திராத பிற தேவர்களைப் பின்பற்றுவிர்களாயின், (உங்களுக்குச்) சாபம் (வரும்).
29 நீ குடியிருக்கப் போகிற நாட்டிலே ஆண்டவர் உன்னைப் புகுவித்த பிற்பாடு கரிஸிம் மலையின்மேல் ஆசீரையும் எபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய்.
30 அவை யோர்தானுக்கு அப்புறத்தில், சூரியன் மறையும் திசைக்குத் திரும்பும் வழிக்கு அப்பால், கானானையர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கல்கலாவுக்கு எதிரே இருக்கின்றன. கல்கலாவோ நெடுந்தூரம் பரந்து கிடக்கின்ற ஒரு பள்ளத்தாக்கின் புகுமுகத்தில் இருக்கிறது.
31 நீங்களோ உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கவிருக்கிற நாட்டிலே புகுந்து அதனை உரிமையாக்கிக்கொள்ளும் வண்ணம் யோர்தான் நதியைக் கடந்து போவீர்கள்; அதைக் கைப்பற்றி அதிலே குடியிருப்பீர்கள்.
32 இன்று நான் உங்கள் முன்னிலையில் எவ்விதச் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைகளையும் ஏற்படுத்துவேனோ அவைகளை நீங்கள் கைக்கொண்டு நிறைவேற்ற எச்சரிக்கையாய் இருக்கக் கடவீர்களாக.
×

Alert

×