Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Deuteronomy Chapters

Deuteronomy 10 Verses

1 அக்காலத்தில் ஆண்டவர் என்னை நோக்கி: முந்தினவைகளைப்போல் நீ இரண்டு கற்பலகைகளைச் செதுக்கிக் கொண்டு மலையில் ஏறி நம்மிடம் வருவாய். ஒரு மரப்பெட்டகத்தையும் செய்வாயாக.
2 நீ முன் உடைத்துப் போட்ட பலகைகளில் எழுதியிருந்த வார்த்தைகளை நாம் இந்தப் பலகைகளிலும் எழுதுவோம். நீ அவைகளைப் பெட்டகத்திலே வைப்பாய் என்றார்.
3 அப்படியே நான் சேத்தீம் மரத்தால் ஒரு பெட்டகத்தைச் செய்து, முந்தினவைகளின் வடிவமாக இரண்டு பலகைகளை வெட்டிச் செதுக்கி அவைகளைக் கையிலே ஏந்திக்கொண்டு மலையில் ஏறினேன்.
4 மக்கள் சபை கூடியிருந்த நாளில் ஆண்டவர் மலையிலே நெருப்பின் நடுவில் நின்று உங்களுக்குத் திருவாக்கருளிய பத்துக் கட்டளைகளையும் தாம் முன்பு எழுதிய வண்ணமே இந்தப் பலகைகளிலும் எழுதி, அவைகளை என்னிடம் தந்தார்.
5 அப்பொழுது நான் மலையிலிருந்து இறங்கி, பலகைகளை நான் செய்திருந்த பெட்டகத்தில் வைத்தேன். ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி அவை இன்னும் அதிலே இருக்கின்றன.
6 அதன்பின் இஸ்ராயேல் மக்கள் ஜக்கான் புதல்வரைச் சேர்ந்த பெரோத்திலிருந்து பாளையம் பெயர்ந்து மோசராவுக்கு வந்தார்கள். அங்கே ஆரோன் இறந்து அடக்கம் செய்யப்பட்டார். அவர் புதல்வனாகிய எலெயஸார் அவருக்குப் பதிலாகத் தலைமைக்குரு ஆனார்.
7 அங்கேயிருந்து அவர்கள் புறப்பட்டுக் காற்காதுக்கும், காற்காதிலிருந்து ஆறுகளும் வெள்ளங்களுமுள்ள நாடாகிய ஜெத்தெபத்தாவுக்கும் வந்து பாளையம் இறங்கினர்.
8 அக்காலத்தில் ஆண்டவருடைய உடன் படிக்கைக் கூடாரத்தைச் சுமப்பதற்கும், இந்நாள் வரையிலும் நடந்து வருவதுபோல் ஆண்டவர் திருமுன் நின்று அலுவலைச் செய்வதற்கும், அவருடைய பெயரால் ஆசீர் அளிப்பதற்கும் ஆண்டவர் லேவியின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
9 அக்காரணத்தால் லேவிக்குத் தன் சகோதரர்களோடு பங்குமில்லை; உரிமையுமில்லை. ஏனென்றால், உன் கடவுளாகிய ஆண்டவர் அவனுக்குச் சொல்லியுள்ளபடி, ஆண்டவரே அவன் உடைமை.
10 நானோ முன்போல் நாற்பது நாளும் இரவு பகலாய் மலையிலே இருந்தேன். ஆண்டவர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டருளி உன்னை அழிக்காமல் விட்டார்.
11 அவர் என்னை நோக்கி: நாம் மக்களுக்கு அளிப்போமென்று அவர்களுடைய மூதாதையருக்கு ஆணையிட்டுக் கொடுத்த நாட்டில், அவர்கள் புகுந்து அதை உரிமையாக்கிக் கொள்ளுமாறு நீ போய் மக்களுக்கு முன்பாகச் சொல்வாய் என்று எனக்குத் திருவுளம்பற்றினார்.
12 இப்பொழுது, இஸ்ராயலே, நீ உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, அவருடைய நெறியில் ஒழுகி, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கொண்டு, உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் அவருக்கு ஊழியம் செய்து,
13 உனக்கு நன்மை பயக்கும் பொருட்டு நான் இன்று உனக்குக் கற்பிக்கிற ஆண்டவருடைய கட்டளைகளையும் ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு கடைப்பிடிக்க வேண்டுமென்பதேயல்லாது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் வேறு எதனைக் கேட்கிறார் ?
14 இதோ வானமும், வானங்களின் வானமும், பூமியும் அதிலடங்கிய அனைத்தும் உன் கடவுளாகிய ஆண்டவரின் உடைமைகளே.
15 ஆயினும், ஆண்டவர் உன் மூதாதையரோடு ஒன்றித்து அவர்களை நேசித்தமையால், அவர்களுடைய சந்ததியாகிய உங்களை எல்லா மக்கள் கூட்டங்களுக்குள் தேர்ந்து கொண்டார். இது இந்நாளிலே எண்பிக்கப்பட்டதன்றோ ?
16 ஆகையால், நீங்கள் உங்கள் இதயத்தின் மிஞ்சின (ஆசை என்னும்) நுனித்தோலை விருத்தசேதனம் செய்து, உங்கள் தலையையும் இனி கடினப்படுத்தாதீர்கள்.
17 ஏனென்றால், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்தாமே கடவுளர்க்கெல்லாம் கடவுளும், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரும், மகத்துவரும் வல்லவரும் பயங்கரமுள்ளவருமான கடவுளாய் இருக்கிறார். அவர் ஒருதலைச் சார்பாய் இருப்பவருமல்லர்; கையூட்டு வாங்குபவருமல்லர்.
18 அவர் அநாதைப் பிள்ளைக்கும் விதவைக்கும் நீதி நியாயம் வழங்குபவரும், அகதியை நேசித்து அவனுக்கு உணவும் உடையும் தந்தருளுபவருமாய் இருக்கிறார்.
19 நீங்களும் எகிப்து நாட்டில் அந்நியர்களாய் இருந்தீர்கள் அல்லவா ? ஆகையால், அகதிகளுக்கு அன்பு செய்யுங்கள்.
20 உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பயந்து, அவருக்கே பணிசெய்து, அவரோடு ஒன்றித்திருந்து, அவருடைய பெயரைக் கைக்கொண்டு ஆணையிடுவாயாக.
21 உன் புகழும் அவரே; உன் கடவுளும் அவரே; உன் கண்கள் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை நடத்தினவரும் அவரே.
22 உன் மூதாதையர் எழுபது ஆட்களாய் எகிப்துக்குப் போனார்கள். ஆனால் இதோ கடவுளாகிய ஆண்டவர் உன்னை விண்மீன்களைப் போல் பெருகச் செய்துள்ளார்.
×

Alert

×