Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Daniel Chapters

Daniel 2 Verses

1 நபுக்கோதனசாரின் இரண்டாம் ஆட்சியாண்டில், நபுக்கோதனசார் கனவுகள் சிலகண்டான்; அதனால் அவன் உள்ளம் கலங்கினான், உறக்கமின்றித் தவித்தான்.
2 அப்போது அரசன் தன் கனவுகளைத் தனக்கு விளக்கும் படி அறிஞர்களையும் நிமித்திகர்களையும் மந்திரவாதிகளையும் கல்தேயர்களையும் அழைத்துவரக் கட்டளையிட்டான்; அவர்களும் வந்து அரசனுக்கு முன்பாக நின்றார்கள்.
3 அரசன் அவர்களை நோக்கி, "நான் ஒரு கனவு கண்டேன்; அதனால் என்னுள்ளம் கலக்கமுற்றிருக்கிறது; நான் கண்டது இன்னதென்று அறிய விரும்புகிறேன்" என்றான்.
4 அப்போது கல்தேயர் அரசனை நோக்கி, (அரமாயிக் மொழியில்) "அரசே, நீர் நீடுழி வாழ்க! கண்ட கனவை நீர் உம் ஊழியர்களுக்குச் சொல்லுவீராகில், அதன் பொருளை உமக்கு விளக்குவோம்" என்று கூறினார்கள்.
5 அரசன் கல்தேயருக்குக் கூறிய மறுமொழி இதுவே: "நீங்கள் நான் கண்ட கனவையும், அதன் உட்பொருளையும் எனக்கு அறிவிக்காமற் போனால் சின்னாபின்னமாய்க் கிழிக்கப்படுவீர்கள்; உங்கள் வீடுகளும் தரைமட்டமாக்கப்படும்; இது என் திண்ணமான முடிவு.
6 ஆனால் கனவையும் அதன் உட்பொருளையும் தெரிவிப்பீர்காளகில் வெகுமதிகளும் பரிசுகளும் மிகுந்த மதிப்பும் என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுவீர்கள்; ஆகையால் கனவையும் அதன் உட்பொருளையும் எனக்குத் தெரிவியுங்கள்."
7 அதற்கு அவர்கள் மறுமொழியாக, "அரசர் கனவைத் தம் அடியார்களுக்குச் சொல்லட்டும்; அப்போது அதன் உட்பொருளை விளக்கிக் கூறுவோம்" என்றார்கள்.
8 அதற்கு அரசன் கூறினான்: "நான் முடிவு செய்து விட்டேன் என்பதை அறிந்து நீங்கள் காலந்தாழ்த்தப் பார்க்கிறீர்கள்; இது எனக்குத் தெரியாமலில்லை;
9 கனவு இன்னதென்று வெளிப்படுத்த உங்களால் இயலாமற் போனால், அதன் உட்பொருளையும் தெரிவிக்க உங்களால் முடியாதென்றே நான் முடிவு செய்ய வேண்டியுள்ளது; பொய்யும் புரட்டுமான வீண் கதைகளைச் சொல்லிக் காலத்தைப் போக்கப் பார்க்கிறீர்கள்; ஆதலால் கனவை நீங்கள் சொல்லுங்கள்; அப்போது தான் அதன் உட்பொருளையும் உங்களால் சொல்லமுடியும் என்பதை நான் அறிந்து கொள்வேன்."
10 கல்தேயர் மறுபடியும் அரசனை நோக்கி, "அரசே, நீர் கேட்கின்ற காரியத்தைச் செய்யக்கூடிய மனிதன் இவ்வுலகில் ஒருவனுமில்லை; ஏனெனில் மகிமையும் வல்லமையும் கொண்ட எந்த அரசனும் இத்தகைய காரியத்தை நிமித்திகனிடமாவது மந்திரவாதியிடமாவது கல்தேயனிடமாவது கேட்டது கிடையாது.
11 ஏனெனில், நீர் கேட்கும் காரியம் செயற்கரிய ஒன்று; தெய்வங்களன்றி வேறெவரும் அதனைத் தெரிவிக்க முடியாது; ஆனால் அற்ப மனிதர்கள் நடுவில் தெய்வங்கள் இருத்தலில்லையே!" என்று மறுமொழி கூறினார்கள்.
12 அரசன் இதைக் கேட்டுக் கடுங்கோபமும் சீற்றமும் கொண்டான்; பபிலோனில் இருக்கும் எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படி ஆணை பிறப்பித்தான்.
13 ஆணை பிறந்தவுடனே ஞானிகளைக் கொலை செய்யத் தேடும் போது தானியேலையும்; அவர் தோழர்களையும் கூடக் கொலைச் செய்யத் தேடினார்கள்.
14 பபிலோனிய ஞானிகளைக் கொலை செய்யப் புறப்பட்டவனும், அரசனுடைய மெய்க்காவலர்களின் தலைவனுமாகிய அரியோக்கிடம் தானியேல் விவேகத்தோடும் எச்சரிக்கையோடும் விசாரித்தார்.
15 இத்துணைக் கொடிய கட்டளையொண்று அரசனிடமிருந்து பிறக்கக் காரணமென்ன என்று அரசனின் அதிகாரம் பெற்றவனைக் கேட்டார்; அப்போது அரியோக்கு என்பவன் தானியேலுக்குக் காரணத்தை விளக்கினான்.
16 உடனே தானியேல் அரசனிடம் போய்க் கனவின் உட்பொருளையும் அரசனுக்கு விளக்கிக் காட்டத் தமக்குத் தவணை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
17 பின்னர் தானியேல் வீட்டுக்குத் திரும்பிப் போய்த் தம் தோழர்களான அனனியாஸ், மிசாயேல், அசாரியாஸ் ஆகியவர்களிடத்தில் செய்தியைக் கூறினார்:
18 கூறி, அவரும், அவருடைய தோழர்களும் பபிலோனிய ஞானிகளோடு கொல்லப்படாதபடிக்கு இந்த மறைபொருளை குறித்து விண்ணகக் கடவுளின் இரக்கத்தை இறைஞ்சிக் கேட்குமாறு அவர்களுக்குச் சொன்னார்.
19 பின்பு இரவில் கண்ட காட்சியொன்றில் தானியேலுக்கு இந்த மறை பொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்போது தானியேல் விண்ணகக் கடவுளை வாழ்த்திப் போற்றினார்.
20 தானியேல் கூறியதாவது: "கடவுளின் திருப்பெயர் என்றென்றும் வாழ்த்தப்படுவதாக! ஏனெனில் ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியன.
21 நாட்களையும் காலங்களையும் மாற்றுகிறவரும், அரசுகளை வீழ்த்தி வேற்றரசுகளை ஏற்படுத்துகிறவரும் அவரே; ஞானிகளுக்கு ஞானத்தைத் தருகிறவரும், கண்டுணர்வோருக்கு அறிவு கொடுப்பவரும் அவரே.
22 ஆழ்ந்த மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் அவரே; இருளில் உள்ளதை அவர் அறிகிறார், ஒளி அவரோடு இருக்கிறது.
23 எங்கள் தந்தையரின் புகழும் கூறுகிறேன்; ஏனெனில், எனக்கு ஞானமும் திறமையும் தந்தீர், நாங்கள் உம்மிடம் கேட்டதை நீர் இப்போது எனக்கு அறிவித்தீர், அரசனது காரியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தினீர்."
24 பின்பு தானியேல் பபிலோனின் ஞானிகளை அழிக்கும்படி அரசனால் ஏற்படுத்தப்பட்ட அரியோக்கிடம் போய், அவனை நோக்கி, "நீர் பபிலோனின் ஞானிகளை அழித்தல் வேண்டா; என்னை அரசன் முன்னிலையில் கூட்டிக் கொண்டுபோம்; நான் அரசனது கனவின் உட்பொருளைத் தெளிவாய்த் தெரிவிப்பேன்" என்றார்.
25 அப்போது அரியோக் தானியேலை அரசன் முன்னிலைக்கு விரைந்தழைத்துக் கொண்டுபோய், அரசனிடம், "அரசே, சிறைப்பட்ட யூதா நாட்டினருள் ஒருவனைக் கண்டுபிடித்தேன்; அவன் அரசருடைய கனவின் உட்பொருளைத் தெரிவிப்பானாம்." என்றான்.
26 அரசனோ பல்தசார் என்னும் பெயரிடப்பட்ட தானியேலைப் பார்த்து, 'நான் கண்ட கனவையும் அதன் உட்பொருளையும் எனக்கு அறிவிக்க உன்னால் கூடுமா?" என்று கேட்டான்.
27 தானியேல் அரசனது முன்னிலையில் சொன்ன மறுமொழி இதுவே: "அரசர் கேட்கிற மறைபொருளை அரசர்க்கு அறிவிக்க ஞானிகளாலும் நிமித்திகர்களாலும் அறிஞர்களாலும் குறிச்சொல்லுகிறவர்களாலும் இயலாது.
28 ஆனால், அரசே, மறைபொருட்களை வெளிப்படுத்துகின்ற விண்ணகக் கடவுள் கடைசி நாட்களிலே நிகழப்போகிறதை நபுக்கோதனசாராகிய உமக்குத் தெரிவித்திருக்கிறார்; நீர் கண்ட கனவும், நீர் படுத்திருக்கையில் உம் சிந்தையில் தோன்றிய காட்சிகளும் பின் வருமாறு:
29 அரசே, நீர் படுத்திருக்கும் போது இனி மேல் எதிர்காலத்தில் நடக்கப் போவதென்ன என்று நினைக்கத் தொடங்கினீர்: அப்போது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் இனி நடக்கப்போகின்றதை உமக்குக் காண்பித்தார்.
30 ஆனால் என்னைப் பொறுத்தமட்டில், மனிதர்கள் அனைவரையும் விட எனக்கு மிகுதியான ஞானமிருக்கிறது என்பதால் எனக்கு இந்த மறை பொருட்கள் வெளிப்படுத்தப்படவில்லை; அரசருக்கு அதன் உட்பொருளைத் தெரிவிக்கவும், உம்முடைய இதயத்தின் நினைவுகளை நீர் அறிந்து கொள்ளவுமே அவை எனக்கு வெளிப்படுத்தப்பட்டன.
31 அரசே, நீர் கண்ட காட்சி: பெரிய சிலையொன்றைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை ஒளி மிகுந்ததாய் உமக்கு எதிரே நின்றது; அதன் தோற்றமோ அச்சமூட்டுவதாய் இருந்தது.
32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னாலானது; அதன் மார்பும் புயங்களும் வெள்ளியாலானவை; வயிறும் தொடைகளும் வெண்கலத்தால் ஆனவை.
33 கால்கள் இரும்பினாலும், பாதங்களில் ஒரு பகுதி இரும்பாலும், மறுபகுதி களிமண்ணாலும் ஆனவையாய் இருந்தன.
34 நீர் பார்த்துக்கொண்டிருந்த போது, கைகளால் பெயர்க்கப்படாத கல்லொன்று (மலையிலிருந்து) உருண்டு வந்தது; வந்து சிலையின் இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி அவற்றை நொறுக்கிப் போட்டது.
35 அப்போது, அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கிக் கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளமே இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக்கல் பெரிய மலையாய் வளர்ந்து மணணுலகத்தை முழுவதும் நிரப்பிற்று.
36 இதுவே நீர் கண்ட கனவு; அரசே, அதன் உட்பொருளையும் உமக்கு இப்பொழுது தெரிவிப்பேன்.
37 நீர் அரசர்க்கரசராய் விளங்குகிறீர்; விண்ணகக் கடவுள் உமக்கு அரசுரிமை, ஆற்றல், வல்லமை, மகிமை ஆகியவற்றைக் கொடுத்திருக்கிறார்:
38 எல்லா இடங்களிலுமுள்ள மனிதர்களையும், வயல் வெளி மிருகங்களையும், வானத்துப் பறவைகளையும் உம் கைகளில் அவர் தந்திருக்கிறார்; நீர் அவற்றையெல்லாம் ஆளும்படி செய்துள்ளார்-ஆகவே பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கிறது.
39 உமக்குப் பின் உம்மிலும் கீழ்ப்பட்ட வேறொரு அரசு தோன்றும்; அடுத்து உலகெல்லாம் ஆளும் வெண்கலமான மூன்றாம் அரசு எழும்பும்.
40 நான்காம் அரசு இரும்பைப் போல் இருக்கும்; இரும்பு எப்படி எல்லாவற்றையும் நொறுக்கிச் சின்னா பின்னமாக்குகிறதோ, அப்படியே இது அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கிவிடும்.
41 ஆனால் அச்சிலையின் பாதங்களும் கால் விரல்களும் ஒரு பகுதி குயவனின் களி மண்ணும், மறு பகுதி இரும்புமாயிருப்பதை நீர் கண்டீர். அந்த அரசு பிரிக்கப்படும்; ஆயினும் களிமண்ணோடு இரும்பு கலந்திருக்க நீர் கண்டது போலவே இரும்பின் உறுதி அதில் இருக்கும்.
42 கால்களின் விரல்கள் பாதி இரும்பும், பாதி களிமண்ணுமாய் இருந்தன; அந்த அரசு பாதி வலிமையுற்றதாயும் பாதி வலிமையற்றதாயும் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
43 இரும்பு களிமண்ணோடே கலந்திருப்பதை நீர் கண்டீர்; அவர்களும் மற்ற மனிதர்களுடன் திருமண உறவினால் கலந்திருப்பார்கள்; ஆனால் இரும்பு களிமண்ணோடு கலக்காதது போல் அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றித்திருக்க மாட்டார்கள்.
44 அந்த அரசுகளின் நாட்களில் விண்ணகக் கடவுள் ஓர் அரசை நிறுவுவார்; அது என்றுமே அழியாது; வேற்றினத்துக்கும் தரப்படாது.
45 அது மற்ற அரசுகளையெல்லாம் அழிக்கும்; அதுவோ என்றென்றும் நிலைத்திருக்கும்; கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து வந்து, களிமண்ணையும் இரும்பையும் வெண்கலத்தையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கியதாக நீர் கண்ட அந்தக் கல் இந்த அரசையே குறிக்கிறது. இவ்வாறு எதிர்க்காலத்தில் நிகழப்போவதை மாபெருங் கடவுள் அரசருக்குத் தெரிவித்திருக்கிறார். கனவு உண்மையானது; அதன் உட்பொருளும் சரியானது."
46 அதைக்கேட்ட அரசன் நபுக்கோதனசார் முகங்குப்புற விழுந்து, தானியேலைப் பணிந்தான்; அவருக்குப் பலி செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
47 மேலும் அரசன் தானியேலை நோக்கி, "நீர் இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியால் மெய்யாகவே உங்கள் கடவுள் தான் தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், அரசர்களுக்கெல்லாம் ஆண்டவர், மறைபொருட்களையெல்லாம் வெளிப்படுத்துகிறவர்" என்றான்.
48 பின்பு அரசன் தானியேலுக்கு உயர்ந்த மரியாதைகளைத் தந்து, அவருக்கு அன்பளிப்புகள் பலவும் கொடுத்தான்; பபிலோன் மாநிலம் முழுவதற்கும் ஆளுநராகவும், பபிலோனின் ஞானிகள் அனைவர்க்கும் தலைவராகவும் அவரை ஏற்படுத்தினான்.
49 ஆனால் தானியேலின் வேண்டுகோளின்படி சித்ராக், மிசாக், அப்தேநாகோ என்பவர்கள் பபிலோன் மாநிலத்தின் காரியங்களைப் பார்த்துக் கொள்ளும்படி ஏற்படுத்தப்பட்டனர்; தானியேலோ அரசனது அவையிலேயே இருந்து வந்தார்.
×

Alert

×