Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Daniel Chapters

Daniel 11 Verses

1 ஆனால் நானோ, மேதியனான தாரியுசின் முதல் ஆண்டிலிருந்தே அவனைத் திடப்படுத்தவும் உறுதிப் படுத்தவும் அவனுக்கு அருகில் இருந்தேன். இப்போது நான் உனக்கு உண்மையை வெளிப்படுத்துகிறேன்:
2 அவனை எதிர்த்துப் போர்புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும்; அவ்வாறே உடன்படிக்கை செய்துகொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
3 பிறகு, வல்லமை மிக்க அரசன் ஒருவன் எழும்பி, மிகுதியான ஆற்றலோடு அரசு செலுத்தித் தான் விரும்பியதை எல்லாம் செய்வான்.
4 அவன் எழும்பும் போதே அவனுடைய அரசு அழிந்து போகும்; வானத்தின் நாற்றிசையிலும் அது பிரிக்கப்படும்; ஆயினும் அது அவனுடைய சந்ததியாருக்குத் தரப்படாது; அவனது ஆட்சிகாலத்திலிருந்த வல்லமையும் அதற்கு இராது. ஏனெனில் அவர்கள் தவிர மற்றவர்களுக்கு அவனுடைய அரசு பிரிக்கப்பட்டுக் கொடுக்கப்படும்.
5 பின்பு, தென்றிசை மன்னன் வலிமை பெறுவான்; ஆயினும் அவனுடைய தலைவர்களுள் ஒருவன் அவனை விட வலிமை பெற்று ஆட்சி செய்வான்; அவனது அரசும் மிகப் பெரியதாய் விளங்கும்.
6 சில ஆண்டுகள் சென்ற பின் அவர்கள் ஓர் உடன்படிக்கை செய்வார்கள்; தென்றிசை அரசனின் மகள் வடதிசை மன்னனுடன் சமாதானம் செய்துகொள்ள வருவாள்; ஆனால் அவளுடைய வலிமை நிலைநிற்காது; அவனுடைய சந்ததியும் நிலைத்திருக்காது; ஆனால் அவளும், அவளை அழைத்து வந்தவர்களும், அவளுடைய பிள்ளையும், அவளுடைய கணவனும் கைவிடப்படுவார்கள்.
7 அந்நாட்களில், அவளுடைய வேர்களிலிருந்து ஒரு தளிர் கிளம்பும்; அவன் பெரும்படையுடன் வந்து, வடதிசை மன்னனின் கோட்டைக்குள் புகுந்து அவர்களை முறியடித்து மேற்கொள்வான்.
8 அவர்களுடைய தெய்வங்களையும் சிலைகளையும், விலையயுர்ந்த வெள்ளி, பொன் பாத்திரங்களையும் எகிப்துக்குக் கொண்டு போவான்; சில காலத்திற்கு வட திசை மன்னன் மேல் படையெடுக்காமல் இருப்பான்.
9 பின்பு வடநாட்டு மன்னன் தென்னாட்டு அரசனது நாட்டின் மேல் படையெடுத்து வந்து, இறுதியாகத் தன் நாட்டுக்குத் திரும்புவான்.
10 பிறகு, அவனுடைய மக்கள் எழும்பித் திரளான சேனையைச் சேர்த்துக்கொண்டு வருவார்கள்; அவர்களுள் ஒருவன் பெருவெள்ளம் போலத் திடீரெனப் பாய்ந்து வந்து மீண்டும் தென்னவனின் கோட்டை வரைக்கும் போய்ப் போரிடுவான்.
11 அப்போது தென்றிசை அரசன் வெகுண்டெழுந்து புறப்பட்டுப் போய் வட திசை மன்னனோடு சண்டை செய்வான்; வடநாட்டான் பெரிய சேனையைத் திரட்டியிருந்தும், அச்சேனைப் பகைவன் கையில் அகப்படும்.
12 அச்சேனையைச் சிறை பிடித்ததால் தென்னவன் உள்ளம் இறுமாப்புக் கொள்ளும்; பல்லாயிரம் பேரை வீழ்த்துவான்; ஆயினும் அவன் முழு வெற்றி அடையமாட்டான்.
13 ஏனெனனில் வடதிசை மன்னன் முன்னதை விடப் பெரிய சேனையைத் திரும்பவும் திரட்டுவான்; சில ஆண்டுகளுக்குப் பிறகு அவன் திடீரெனப் பெரிய சேனையோடும், மிகுந்த தளவாடங்களோடும் தாக்க வருவான்.
14 அக்காலங்களில் தென்றிசை அரசனுக்கு எதிராகப் பலர் எழும்புவர்; உன் சொந்த இனத்தாரின் மக்களுள் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் காட்சியை நிறைவேற்றும்படி எழும்புவார்கள்; ஆனால் அவர்கள் வீழ்ச்சியுறுவார்கள்.
15 வடதிசை அரசன் வந்து முற்றுகையிட்டு அரணால் சூழ்ந்த நகரங்களைக் கைப்பற்றுவான்; தென்றிசை மன்னனின் படைகள் எதிர்க்க வலிமையற்றுப்போம்; அவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும் எதிர்க்க முடியாது நிற்பார்கள்; ஏனெனில் அவர்களுக்கும் வலிமையிராது.
16 வடதிசை அரசன் அசனுக்கு எதிராய் வந்து தன் மனம் போலச்செய்வான்; அவனுக்கு முன்பாக நிற்பவன் எவனுமில்லை; அழகான நாட்டுக்குள் நுழைந்து அதைப் பாழாக்குவான்.
17 அவனுடைய நாட்டையும் கட்டியாள வேண்டுமென்பது அவன் எண்ணம்; ஆகவே அவனோடு நட்பு கொண்டாடுவதுபோல நடித்து, அவனை வஞ்சகமாய் ஒழித்துக்கட்டும்படி தன் புதல்வியருள் ஒருத்தியை அவனுக்குக் கொடுப்பான்; ஆனால் அவன் நினைத்தது நிறைவேறாது; அந்த நாடும் அவனுக்குச் சொந்தமாகாது.
18 பிறகு, அவன் தன் எண்ணத்தைத் தீவுகள் மேல் திருப்பி, அவற்றுள் பலவற்றைப் பிடிப்பான்; ஆனால் படைத்தலைவன் ஒருவன் அவன் திமிரை அடக்குவான்; அடக்கி அவன் திமிர் அவனுக்கே கேடு விளைவிக்கும்படி செய்வான்.
19 ஆகையால் அவன் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பி விட முடிவுச் செய்வான்; ஆனால் அங்கே ஆபத்தில் அகப்பட்டு வீழ்ந்தழிவான்.
20 அவனுக்குப் பிறகு மிகக் கொடியவனும், அரசில் தண்டல்காரனை அனுப்புவோனுமான ஒருவன் எழும்புவான்; அவன் கோபத்தினாலோ போர் முனையினாலோ அன்றிச் சில நாட்களுக்குள் மடிவான்.
21 "அவனது இடத்தில் ஈனன் ஒருவன் எழும்புவான்; அவனுக்கு அரச சிறப்பு தரப்படாது; ஆனால் எதிர்பாராத நேரத்தில் வந்து வஞ்சகமாய் அரசைக் கைப்பற்றிக் கொள்வான்.
22 அவனை எதிர்த்துப் போர்புரியும் படை தோல்வியடைந்து நசுக்கப்படும்; அவ்வாறே உடன்படிக்கை செய்துகொண்ட தலைவனும் ஒழிக்கப்படுவான்.
23 உடன்படிக்கை செய்துகொண்ட பிறகும் அந்தக் கயவன் வஞ்சகமாய் நடந்து கொள்வான்; அவன் குடிகள் சிலராயிருந்தும் அவன் வலிமை பெற்று விளங்குவான்.
24 வனமும் செழுமையும் நிறைந்த பட்டணங்களுள் திடீரென நுழைந்து தன் தந்தையர்களும், தந்தையர்க்குத் தந்தையரும் செய்யாததையும் செய்வான்; அவர்களுடைய கொள்ளைப் பொருட்களையும், கைப்பற்றிய செல்வங்களையும் வாரியிறைப்பான்; அவர்களுடைய அரண்களைப் பிடிக்க வழிகளைத் தேடுவான்; ஆயினும் நிலை கொஞ்ச காலமே நீடிக்கும்.
25 பிறகு அவன் தன் வல்லமையை நம்பித் தென்திசை மன்னனுக்கு எதிராகப் பெருஞ் சேனையோடு போவான்; அப்போது தென்றிசை மன்னனும் வலிமை மிக்க பெரும் படையோடு வந்து போர் முனையில் சந்திப்பான்; ஆனால் அவனுக்கு விரோதமாகச் சதித்திட்டங்கள் செய்யப்பட்டிருந்தபடியால் அவனுடைய படைகள் நிலைத்து நிற்கவில்லை.
26 அவனோடு உணவு உண்டவர்களே அவனை அழிப்பார்கள்; அவனுடைய படை முறியடிக்கப்படும்; பலர் கொலையுண்டு விழுவார்கள்.
27 இரண்டு அரசர்களும் ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய நினைப்பார்கள்; ஒரே பந்தியில் இருந்து கொண்டே பொய் பேசுவார்கள்; ஆயினும் அது அவர்களுக்குப் பயன்படாது; ஏனெனில், முடிவு இன்னொரு காலத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
28 வட நாட்டு மன்னன் மிகுதியான பொருட்களோடு தன் நாட்டுக்குத் திரும்பிப் போவான்; அவனுடைய உள்ளம் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் இருக்கும்; தீங்குகள் பல செய்த பின்பு தன் நாட்டுக்குத் திரும்புவான்.
29 குறித்த காலத்தில் மறுபடியும் தென்னாட்டுக்கு வருவான்; ஆனால் இம்முறை முந்தின முறையைப் போல் இராது.
30 அவனுக்கு விரோதமாய் உரோமையர்கள் கப்பல்களில் வருவார்கள்; அவனோ தோல்வியடைந்து திரும்பிப்போய்ப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாய் ஆத்திரங்கொண்டு, நடவடிக்கை எடுப்பான்; திரும்பி வந்து, பரிசுத்த உடன்படிக்கையைக் கைவிட்டவர்கள் மேல் கவனத்தைத் திருப்புவான்.
31 அவனுடைய படைவீரர்கள் வந்து திருக்கோயிலையும் கோட்டையையும் தீட்டுப்படுத்தி, அன்றாடப் பலியை நிறுத்தி விட்டுப் பாழாக்கும் அருவருப்பை அங்கே நாட்டி வைப்பார்கள்.
32 உடன்படிக்கையை மீறுகிறவர்களைப் பசப்பு மொழிகளால் தன் பக்கம் ஈர்ப்பான்; ஆனால் தங்கள் கடவுளை அறிந்திருக்கும் மக்கள் திடங்கொண்டு அவருடைய கற்பனைகளின்படி நடப்பார்கள்.
33 மக்களுள் அறிஞரானோர் பலருக்கு அறிவூட்டுவார்கள்; அந்நாட்களில் எழும்பும் கலகத்தில் அவர்கள் வாளாலும் நெருப்பாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் மடிவார்கள்;
34 இவ்வாறு அவர்கள் விழும் போது, அவர்களுக்குச் சொற்ப உதவியே கிடைக்கும்; ஆனால் வேறு பலர் அவர்களை வஞ்சிக்கும்படி அவர்களோடு சேர்ந்துகொள்வார்கள்;
35 அறிஞர்களுள் சிலர் மாபெரும் இக்கட்டுகளுக்கு உட்படுவார்கள்; இவற்றால் அவர்கள் புடம் போடப்படுவது போலக் குறிப்பிட்ட காலம் வரை தூய்மையாக்கப்படுவார்கள்; ஏனெனில் முடிவு வர இன்னும் நாட்கள் உண்டு.
36 அரசன் தன் மனம் போன போக்குப்படியெல்லாம் செய்வான்; அவன் தன்னையே உயர்த்திக்கொள்வான்; எல்லாத் தெய்வத்திற்கும் மேலாகத் தன்னையே பெருமைப்படுத்திக் கொண்டு தெய்வங்களுக்கெல்லாம் கடவுளானவர்க்கே எதிராகப் பழிச்சொற்களைக் கக்குவான்; இறைவனின் சினம் நிறைவேறும் நாள் வரும்வரை அவன் வாழ்க்கை வளம் பெறும்; ஏனெனில் வகுக்கப்பட்டது நடந்தேற வேண்டும்.
37 அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ, வேறெந்த தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கொல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.
38 அவற்றிற்குப் பதிலாக அரண்களின் தெய்வத்தை மட்டும் வணங்குவான்; தன் தந்தையர் அறிந்திராத அந்தத் தெய்வத்தை இவன் பொன்னாலும் வெள்ளியாலும் மாணிக்கக் கல்லாலும் விலையுயர்ந்த பொருட்களாலும் மகிமைப்படுத்தி வழிபடுவான்.
39 தன் அரண்களைக் காக்க அந்நிய தெய்வத்தை வழிபடும் இனத்தாரை ஏற்படுத்துவான்; அவனை அரசனாக ஏற்றுக் கொண்டவர்களை மகிமைப்படுத்திப் பல உயர்ந்த பதவிகளையும் மானியங்களையும் அளிப்பான்.
40 "முடிவு காலம் வரும் போது, தென்றிசை மன்னன் அவனோடு போர் புரிவான்; வடதிசை மன்னனும் தேர்ப்படை, குதிரை வீரர்கள், கப்பற்படை ஆகியவற்றுடன் புயல்காற்று போல் அவனை எதிர்த்து வருவான்; அவன் நாடுகளுக்குள் நுழைந்து அழிவு விளைவித்து நடந்து போவான்.
41 பிறகு அவன் மகிமையான நாட்டுக்குள் நுழைவான்; பலர் அழிக்கப்படுவர்; ஆனால் ஏதோம், மேவாப் மக்கள், அம்மோன் மக்களுள் சிறந்தவர்கள் ஆகிய இவர்கள் மட்டுமே தப்பித்துக் கொள்வர்;
42 அவன் மற்ற மாநிலங்கள் மேலும் கை நீட்டுவான்; தவறாமல் எகிப்து நாட்டுக்கும் போய்,
43 ஆங்குள்ள பொன், வெள்ளி முதலிய செல்வங்களையும், விலையுயர்ந்த எல்லாப் பொருட்களையும் கைப்பற்றிக் கொள்வான்; அவன் லீபியா வழியாகவும் எத்தியோப்பியா வழியாகவும் கடந்து போவான்.
44 ஆனால் கிழக்கிலும் வடக்கிலும் இருந்து வரும் செய்திகள் அவனைக் கலங்கச் செய்யும்: அப்போது அவன் பெரிய சேனையுடன் வந்து பலரைக் கொன்றொழிப்பான்.
45 பிறகு, கடலுக்கும், மகிமை பொருந்திய பரிசுத்த மலைக்கும் இடையில் தன் அரச கூடாரங்களை நாட்டுவான்; ஆயினும் அவன் தன் முடிவைக் காண்பான்; அவனுக்கு உதவி செய்ய ஒருவனும் இரான்.
×

Alert

×