Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Amos Chapters

Amos 9 Verses

1 ஆண்டவர் பீடத்தருகில் நிற்பதைக் கண்டேன். அவர் சொன்னார்: "தூணின் முகட்டை இடித்துப் போடு, மேல் தளம் ஆட்டங் கொடுக்கட்டும்; மக்கள் அனைவருடைய தலைமேலும் உடைத்துத் தள்ளு, அவர்களுள் எஞ்சியிருப்பவர்களை நாம் வாளால் மாய்ப்போம்; அவர்களில் ஒருவனும் ஓடிப்போகான், ஒருவன் கூடத் தப்பிப்பிழைக்க மாட்டான்.
2 பாதாளம் வரையில் அவர்கள் இறங்கினாலும், அங்கிருந்தும் நம் கை அவர்களைப் பிடித்து வரும்; வானமட்டும் அவர்கள் ஏறிப் போனாலும், அங்கிருந்தும் அவர்களை நாம் இழுத்து வருவோம்;
3 கர்மேல் மலையுச்சியில் ஓடி ஒளிந்து கொண்டாலும், அவர்களைத் தேடி அங்கிருந்தும் நாம் கொண்டு வருவோம்; நம் கண்களுக்குத் தப்பி ஆழ்கடலில் மறைந்தாலும், அங்கு அவர்களைக் கடிக்கும்படி பாம்புக்குக் கட்டளையிடுவோம்.
4 தங்கள் பகைவர்முன் அடிமைகளாய்க் கொண்டு போகப்பட்டாலும், அங்கே அவர்களைக் கொல்லும்படி வாளுக்கு ஆணை தருவோம். அவர்கள் மேலேயே நாம் கண்ணாயிருப்போம், நன்மை செய்வதற்கன்று, அவர்களுக்குத் தீமை செய்வதற்கே."
5 சேனைகளின் இறைவனாகிய ஆண்டவர் அவரே; அவர் தொட்டால், மண்ணுலகம் பாகாய் உருகுகிறது, அதில் வாழ்பவர் அனைவரும் புலம்புகிறார்கள்; நிலம் முழுவதும் நைல் நதி போலப் பொங்கியெழுந்து எகிப்து நாட்டு நைல் நதி போல் அடங்குகிறது.
6 அவரே வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகிறவர், வானவளைவை நிலத்தில் அடிப்படையிட்டு நாட்டுகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின் மேலே பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.
7 இஸ்ராயேல் மக்களே, நீங்கள் நமக்கு எத்தியோப்பியரைப் போன்றவர்கள் தானே? இஸ்ராயேல் மக்களை எகிப்து நாட்டினின்றும், பிலிஸ்தியரைக் காதோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் நாம் கூட்டி வரவில்லையோ?" என்கிறார் ஆண்டவர்.
8 இதோ, இறைவனாகிய ஆண்டவரின் கண்கள் பாவஞ் செய்கிற அரசை உறுத்துப் பார்க்கின்றன; மண்ணுலகில் இராதபடி அதை நாம் அழித்துவிடுவோம்." ஆயினும் யாக்கோபின் வீட்டாரை நாம் முற்றிலும் அழித்துவிட மாட்டோம்" என்கிறார் ஆண்டவர்.
9 இதோ, நாம் ஆணை பிறப்பிப்போம், எல்லா மக்களினங்கள் நடுவிலும் இஸ்ராயேல் வீட்டாரைச் சல்லடையால் சலிப்பது போலச் சலிக்கப் போகிறோம்; ஆயினும் கோதுமை மணி ஒன்றும் தரையில் விழாது;
10 தீமை எங்களை அணுகாது, எங்கள்மேல் வாராது' என்று நம் மக்களுள் எந்தப் பாவிகள் கூறுகிறார்களோ, அந்தப் பாவிகள் அனைவரும் வாளால் மடிவார்கள்.
11 அந்நாளில், விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மறுபடியும் கட்டியெழுப்புவோம்; அதிலுள்ள திறப்புகளைப் பழுதுபார்த்துப் பழுதானவற்றைச் சீர்ப்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போலவே மறுபடி கட்டுவோம்;
12 அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும், நமது திருப்பெயரைத் தாங்கியிருக்கும் புறவினத்தார் அனைவரையும் அவர்கள் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வார்கள்" என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர்.
13 இதோ, நாட்கள் வருகின்றன, அப்போது அறுவடை செய்பவனை ஏர் உழுகிறவனும், விதைப்பவனைத் திராட்சைப் பழம் பிழிபவனும் தொடர்ந்து சென்று பிடிப்பார்கள்; மலைகள் புதிய இரசத்தைப் பொழியும், குன்றுகளிலெல்லாம் அது வழிந்தோடும்" என்கிறார் ஆண்டவர்.
14 நம் மக்களாகிய இஸ்ராயேலை முன்போல நன்னிலைக்குக் கொணர்வோம் அவர்கள் பாழடைந்த நகரங்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை நட்டுப் பயிர் செய்து அவற்றின் இரசத்தைக் குடிப்பார்கள்; பழத் தோட்டங்களைப் போடுவார்கள், அவற்றிலிருந்து கனிகளைப் புசிப்பார்கள்.
15 அவர்கள் நாட்டில் நாம் அவர்களைத் திரும்ப நாட்டுவோம், நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கும் நாட்டிலிருந்து இனி அவர்கள் மறுபடியும் அகற்றப்பட மாட்டார்கள்" என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
×

Alert

×