Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Amos Chapters

Amos 2 Verses

1 ஆண்டவர் கூறுவது இதுவே: "மோவாபு பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; ஏதோம் அரசனின் எலும்புகளைச் சுட்டுச் சாம்பலாய் ஆக்கி விட்டான்.
2 ஆதலால் மோவாபின் மேல் நாம் தீயனுப்புவோம், அது கரியோத்தின் அரண்மனைகளை அழித்து விடும்; இரைச்சல், கூச்சல், எக்காள முழக்கம் இவற்றிடையில் மோவாப் மடிந்திடுவான்.
3 அதை ஆள்பவனை அதனடுவினின்று சிதைத்திடுவோம், அவனோடு அதன் தலைவரையெல்லாம் மாய்த்திடுவோம்" என்கிறார் ஆண்டவர்.
4 ஆண்டவர் கூறுவது இதுவே: "யூதா பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; ஆண்டவரின் திருச்சட்டத்தை அவர்கள் புறக்கணித்தனர், அவருடைய கட்டளைகளை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை; அவர்களுடைய தந்தையர்கள் பின்பற்றிய பொய் தெய்வங்கள் அவர்களையும் மோசம் போக்கின.
5 ஆதலால் யூதாவின் மேல் நாம் தீயனுப்புவோம், அது யெருசலேமின் அரண்மனைகளை அழித்துவிடும்."
6 ஆண்டவர் கூறுவது இதுவே: "இஸ்ராயேல் பழிச்செயலுக்கு மேல் பழிச்செயல் செய்ததற்காக நாம் இட்ட தண்டனைத் தீர்ப்பை மாற்ற மாட்டோம்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு சோடி செருப்புக்கும் விற்கிறார்கள்.
7 ஏழைகளின் தலைகளை மண்ணில் பட மிதிக்கிறார்கள், தாழ்த்தப்பட்டோரின் நெறியைக் கெடுக்கிறார்கள், மகனும் தகப்பனும் ஒரே தேவடியாளைக் கூடி, நம் திருப்பெயரைப் பங்கப்படுத்துகிறார்கள்.
8 தங்களிடம் அடகு வைத்த பிறராடைகளை விரித்துப் போட்டு, எல்லாப் பீடங்களின் முன்பும் உட்கார்ந்து கொண்டு, அபராதம் விதித்துத் திரட்டிய பணத்திற்கு மது வாங்கித் தங்கள் கடவுளின் இல்லத்தில் குடிக்கிறார்கள்.
9 நாமோ, உயரத்தில் கேதுரு மரங்களைப் போலும், வலிமையில் கருவாலி மரங்களைப் போலும் இருந்த அமோரியர்களை அவர்கள் முன்பாக அழித்துப் போட்டோம்; உயரத்தில் இருந்த அவனுடைய கனிகளையும், ஆழத்திலிருந்த வேர்களையும் நாம் நாசமாக்கினோம்.
10 மேலும், எகிப்து நாட்டினின்று உங்களைப் புறப்படச் செய்து, நாற்பதாண்டுகள் பாலை நிலத்தில் உங்களை வழி நடத்தி வந்து, அமோரியர் நாட்டை நீங்கள் உரிமையாக்கிக் கொள்ளச் செய்தோம்.
11 உங்கள் புதல்வர்களுள் சிலரை நாம் இறைவாக்கினராய் உயர்த்தினோம்; உங்கள் இளைஞர்களுள் சிலரை நாசரேயராய்த் தேர்ந்துகொண்டோம்; இஸ்ராயேல் மக்களே, இது உண்மையன்றோ?" எனக் கேட்கிறார் ஆண்டவர்.
12 ஆனால், நீங்கள் நாசரேயருக்கு மதுவைக் கொடுத்தீர்கள், ' இறைவாக்கு உரைக்கக் கூடாது' என இறைவாக்கினருக்குக் கட்டளையிட்டீர்கள்.
13 இதோ, வைக்கோல் பொதியேற்றிய வண்டியின் அச்சு கிறீச்சிடுவது போல், உங்களையும் உங்களிடத்திலேயே அழுத்தி நீங்களும் கிறீச்சிடச் செய்வோம்.
14 விரைந்தோடுகிறவனுக்கும் வேகமிராது, வலிமையுள்ளவனுக்கும் வலுவிருக்காது; வீரனும் தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியாது.
15 வில் வீரன் நிற்கவுமாட்டான், விரைந்தோடுபவனும் தப்பமாட்டான்; குதிரை வீரனும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது.
16 அந்நாளில் வீரர்களுள் மிக்க வீரம் படைத்தவன் கூட எல்லாப் படைக்கலங்களையும் எறிந்துவிட்டுத் தப்பியோடுவான்" என்கிறார் ஆண்டவர்.
×

Alert

×