Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 5 Verses

1 அனனியா என்ற வேறொருவனும் அவன் மனைவி சபிராளும் தம் நிலத்தை விற்றார்கள்.
2 விற்றதில் ஒரு பகுதியை அவன் வைத்துக்கொண்டு ஒரு பகுதியைக் கொண்டுபோய் அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தான். அவன் மனைவியும் அதற்கு உடந்தையாயிருந்தாள்.
3 அப்பொழுது இராயப்பர், "அனனியாவே, நிலம் விற்றதில் ஒரு பகுதியை நீ உனக்கென வைத்துக்கொண்டு, பரிசுத்த ஆவியை ஏமாற்றும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன் ?
4 அது உன் பெயரில் இருந்தவரையில் உன்னுடையது தானே; விற்ற பிறகும் தொகை முழுவதும் உனக்கு உரிமையாகத்தான் இருந்ததில்லையா ? பின், இத்தகைய எண்ணம் உன் உள்ளத்தில் உதித்தது எப்படி ? நீ பொய் சொன்னது மனிதரிடமன்று, கடவுளிடமே" என்றார்.
5 இதைக் கேட்டதும் அனனியா அப்படியே விழுந்து உயிர்விட்டான். இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.
6 இளைஞர்கள் எழுந்து, அவனைத் துணியால் மூடி, வெளியே கொண்டுபோய்ப் புதைத்தார்கள்.
7 ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்குப்பின் அவன்மனைவி வந்தாள்; நடந்ததொன்றும் அவளுக்குத் தெரியாது.
8 இராயப்பர் அவளை நோக்கி, "நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், சொல்" எனக் கேட்க, "ஆம், இவ்வளவுக்குத்தான்" என்றாள்.
9 அதற்கு இராயப்பர், "நீங்கள் இருவரும் ஆண்டவரின் ஆவியைச் சோதிக்க ஒன்றுபட்டதேன்? உன் கணவனைப் புதைத்தவர்களின் காலடிகள் கேட்கின்றன; இதோ! கதவருகில் வந்துவிட்டார்கள்; உன்னையும் கொண்டுபோவார்கள்" என்றார்.
10 என்றவுடனே, அவள் அவருடைய காலருகில் விழுந்து உயிர்விட்டாள். இளைஞர்கள் உள்ளே வந்தபோது, அவள் இறந்துகிடக்கக் கண்டார்கள்; வெளியே கொண்டுபோய் அவளுடைய கணவனுக்கருகில் அவளைப் புதைத்தார்கள்.
11 சபையினர் எல்லாரையும், இதைக் கேள்வியுற்ற அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.
12 அப்போஸ்தலர்களுடைய கையால் பல அருங்குறிகளும் அற்புதங்களும் மக்களிடையே நிகழ்ந்தன. எல்லாரும் சாலொமோன் மண்டபத்தில் ஒன்றாய்க் கூடுவதுண்டு.
13 மற்றவர் யாரும் அவர்களோடு சேரத் துணியவில்லை; ஆனால் பொதுமக்கள் அவர்களைப்பற்றிப் பெருமையாகப் பேசினார்கள்.
14 பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் ஆண்டவரில் விசுவாசங்கொண்டு அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள்.
15 எனவே, இராயப்பர் போகும்போது, பிணியாளிகள் சிலர்மீது அவர் நிழலாவது விழும் என்று எதிர்பார்த்து, அவர்களைத் தெருக்களில் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடந்துவார்கள்.
16 யெருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவியால் துன்புற்றவர்களையும் தூக்கிக் கொண்டுவந்து திரளாகக் கூடுவார்கள்; அவர்கள் அனைவரும் குணமடைவர்.
17 தலைமைக்குருவுக்கும், சதுசேயர் கட்சியினரான அவருடைய ஆட்களுக்கும் பொறாமை பொங்கி எழ,
18 அவர்கள் அப்போஸ்தலர்களைக் கைதுசெய்து பொதுச்சிறையில் வைத்தார்கள்.
19 ஆனால், ஆண்டவருடைய தூதர் இரவில் சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கூட்டிவந்து,
20 "நீங்கள் போய்க் கோயிலில் நின்று, இப்புது வாழ்வைப்பற்றிய அனைத்தையும் மக்களுக்குத் தயங்காமல் சொல்லுங்கள்" என்றார்.
21 இதைக் கேட்டு, அவர்கள் விடியற்காலையில் கோயிலுக்குப் போய்ப் போதிக்கத் தொடங்கினார்கள். தலைமைக்குரு தம் ஆட்களுடன் வந்து, இஸ்ராயேலரின் ஆலோசனைக்குழுவையும் தலைமைச்சங்கம் முழுவதையும் கூட்டி, அப்போஸ்தலர்களைக் கொண்டுவர, சிறைச்சாலைக்கு ஆள் அனுப்பினர்.
22 காவலர்கள் போனபோது, சிறைச்சாலையில் அவர்களைக் காணவில்லை.
23 திரும்பிவந்து, "சிறைச்சாலை பத்திரமாகப் பூட்டியிருப்பதையும் காவலர்கள் கதவு எதிரில் நிற்பதையும் கண்டோம்; திறந்தபோது உள்ளே ஒருவரையும் காணோம்" என்று அறிவித்தனர்.
24 இதைக் கேட்ட கோயிலின் காவலர்த் தலைவனும், தலைமைக் குருக்களும் அவர்களுக்கு என்னதான் நடந்திருக்கக் கூடும் என்று திகைப்புற்றனர்.
25 அப்போது ஒருவன் வந்து, "நீங்கள் சிறையில் வைத்தவர்கள் இதோ! கோயிலில் மக்களுக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார்களே" என்றான்.
26 இதைக் கேட்டதும் காவலர்த்தலைவன் தன் ஆட்களுடன் போய் அவர்களைக் கூட்டிவந்தான். மக்கள் கல்லால் எறியக்கூடுமெனப் பயந்து அவர்களை வலுவந்தம் செய்யவில்லை.
27 அவர்களைத் தலைமைச் சங்கத்தின் முன் நிறுத்தினான்.
28 தலைமைக் குரு அவர்களை நோக்கி, "இப்பெயரைச் சொல்லிப் போதிக்கலாகாது என்று உங்களுக்கு நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா ? ஆயினும், இதோ நீங்கள் யெருசலேம் எங்கும் உங்கள் போதனையைப் பரப்பிவிட்டீர்கள். அதோடு, அந்த மனிதனின் இரத்தப் பழியையும் எங்கள்மேல் சுமத்தப் பார்க்கிறீர்கள்" என்றான்.
29 அதற்கு இராயப்பரும் அப்போஸ்தலர்களும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்கு மேலாகக் கடவுளுக்கல்லவா கீழ்ப்படிய வேண்டும் ?
30 நீங்கள் கழுமரத்தில் ஏற்றிக் கொலை செய்த இயேசுவை நம் முன்னோரின் கடவுள் உயிர்ப்பித்தார்.
31 இஸ்ராயேலருக்கு மனந்திரும்புதலையும், பாவமன்னிப்பையும் அருளும்படி கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலக்கையால் உயர்த்தினார்.
32 இதற்கு நாங்கள் சாட்சிகள்; கடவுள் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அளிக்கும் பரிசுத்த ஆவியும் இதற்கு சாட்சி" என்றனர்.
33 இதைக் கேட்டுச் சங்கத்தினர் சீற்றங் கொண்டு அவர்களை ஒழித்துவிடத் திட்டமிட்டனர்.
34 அப்பொழுது கமாலியேல் என்னும் பரிசேயர் ஒருவர் சங்கத்தின் நடுவில் எழுந்தார். இவர் மக்கள் எல்லாரிடமும் மதிப்புப் பெற்றிருந்த ஒரு சட்ட வல்லுநர். இவர் அப்போஸ்தலர்களைச் சற்று நேரம் வெளியே அனுப்பக் கட்டளையிட்டு,
35 சங்கத்தை நோக்கி, "இஸ்ராயேலரே, இம்மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போவதைப் பற்றி எச்சரிக்கையாயிருங்கள்.
36 ஏனெனில், கொஞ்ச காலத்திற்கு முன்பு தெயுதாஸ் என்பவன் கிளம்பி, தான் ஒரு பெரிய மனிதன் என்று காட்டிக்கொண்டு வந்தான். ஏறத்தாழ நானூறு பேர் அவனுடன் சேர்ந்துகொண்டனர். ஆனால், இறுதியில் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைரும் சிதறிப் போகவே எல்லாம் ஒன்றுமில்லாமல் போயிற்று.
37 அவனுக்குப் பிறகு, மக்கள் தொகைக் கணக்கு எடுப்புக் காலத்தில் கலிலேயானான யூதாஸ் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்ய மக்களைத் தூண்டினான். அவனும் ஒழிந்தான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறுண்டனர்.
38 ஆகவே, நான் சொல்லுவது: இவர்களை விட்டுவிடுங்கள். இவர்கள் காரியத்தில் தலையிட வேண்டாம். ஏனெனில், இவர்கள் திட்டமிட்டிருப்பதும் செய்து வருவதும் மனிதருடைய செயலாயிருந்தால், சிதைந்துபோம்.
39 கடவுளுடையதாயின், நீங்கள் அவர்களைத் தொலைக்க முடியாது. மேலும், நீங்கள் கடவுளோடு போராடுவோர் ஆகக்கூடும்" என்றார். அவர் சொன்னதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர்.
40 பிறகு அப்போஸ்தலர்களை உள்ளே வரச்செய்து கசையால் அடிப்பித்து, இனி இயேசுவின் பெயரைச் சொல்லிப் பேசலாகாதெனக் கட்டளையிட்டு அனுப்பிவிட்டார்கள்.
41 அவர்களோ இயேசுவின் பெயருக்காகத் தாங்கள் இழிவுபடத் தக்கவர்களாய்க் கருதப்பட்டது பற்றி, மனமகிழ்ந்து மன்றத்தை விட்டு வெளியேறினர்.
42 நாள்தோறும் விடாமல் கோயிலிலும் வீடுகளிலும் போதித்து இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
×

Alert

×