Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 4 Verses

1 அவர்கள் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கையில், குருக்களும், கோயிலின் காவல்தலைவனும், சதுசேயர்களும் அங்குத் தோன்றினார்கள்.
2 அவர்கள் மக்களுக்குப் போதிப்பதையும், இயேசுவை எடுத்துக்காட்டாகக் கூறி, இறந்தோர் உயிர்த்தெழுவர் என அறிவிப்பதையும் கண்டு சினந்து,
3 அவர்களைப் பிடித்தார்கள்; ஏற்கெனவே பொழுதுபோயிருந்ததால், மறுநாள்வரை அவர்களைக் காவலில் வைத்தார்கள்.
4 தேவ வார்த்தையைக் கேட்டவர்களுள் பலர் விசுவாசங்கொண்டனர்; இப்படி விசுவசித்த ஆண்களின் எண்ணிக்கை ஐயாயிரமாயிற்று.
5 மறுநாள் மக்கள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் யெருசலேமில் கூடினார்கள்.
6 தலைமைக்குரு அன்னாஸ், கைப்பாஸ், யோவான், அலெக்சாந்தரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் அங்கே இருந்தனர்.
7 அப்போஸ்தலர்களை நடுவில் நிறுத்தி, "எந்த வல்லமையால், யார் பெயரால் இதை நீங்கள் செய்தீர்கள் ?" என்று வினவினர்.
8 அப்பொழுது இராயப்பர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பெற்று, அவர்களைப் பார்த்துக் கூறியதாவது: "மக்கள் தலைவர்களே, பெரியோர்களே,
9 நோயாளிக்கு நாங்கள் செய்த நன்மையைக்குறித்து விசாரிப்பீர்களாகில், இவன் எவ்வாறு குணமானான் என்று எங்களை இன்று கேட்பீர்களாகில்,
10 இவன் குணம் பெற்று உங்கள்முன் நிற்பது நாசரேயராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால்தான்; இது உங்கள் எல்லோருக்கும், இஸ்ராயேல் மக்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கட்டும். இந்த இயேசுவைத்தாம் நீங்கள் சிலுவையில் அறைந்தீர்கள்; கடவுளோ அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார்.
11 ' வீடுகட்டுவோராகிய உங்களால் விலக்கப்பட்டு மூலைக்கல்லாய் அமைந்த கல் ' இவர்தாம்.
12 இவராலன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை; ஏனெனில், நாம் ' மீட்படைவதற்கு அவர் பெயரைத்தவிர இவ்வுலகில் மனிதருக்கு வேறு பெயர் அருளப்படவில்லை."
13 இராயப்பரும் அருளப்பரும் கல்வியறிவு அற்றவர்கள் எனச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களுடைய துணிவைக் கண்டு வியப்புற்றனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதும் தெரியும்.
14 எனினும் குணமான மனிதன் அவர்களுடன் நிற்பதைக் கண்டபோது ஒன்றும் மறுத்துப்பேச முடியவில்லை.
15 மன்றத்தை விட்டு வெளியேற அவர்களுக்குக் கட்டளையிட்டு, தமக்குள் ஆலோசனை செய்து,
16 "இவர்களை என்ன செய்யலாம்? சிறந்ததோர் அருங்குறி இவர்களால் நிகழ்ந்துள்ளது; யெருசலேமில் வாழ்வோர் அனைவருக்கும் அது நன்றாய்த் தெரியும்; அதை நம்மால் மறுக்க முடியாது.
17 ஆயினும், இது மக்களிடையே மேலும் பரவாதிருக்க, இப்பெயரைச் சொல்லி யாரிடமும் பேசலாகாது என இவர்களை எச்சரிப்போம்" என்று முடிவுசெய்தனர்.
18 இதன்பின் அவர்களை அழைத்து, இனி இயேசுவின் பெயரைச் சொல்லி, எதுவும் பேசவோ போதிக்கவோ கூடாது எனக் கட்டளையிட்டனர்.
19 அதற்கு இராயப்பரும் அருளப்பரும் மறுமொழியாக: "கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு மேலாக நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்குமுன் நீதியா, நீங்களே தீர்மானியுங்கள்.
20 நாங்கள் பார்த்ததையும் கேட்டதையும் பேசாமல் இருக்க எங்களால் இயலாது" என்றனர்.
21 இப்படி அற்புதமாய்க் குணமடைந்த மனிதன் நாற்பது வயதிற்கு மேற்பட்டவன்;
22 அவனுக்கு நிகழ்ந்ததைக்குறித்து எல்லாரும் கடவுளை மாட்சிமைப்படுத்தியதால், சங்கத்தினர் மக்களுக்கு அஞ்சி, அவர்களைத் தண்டிப்பதற்கு வழிகாணாமல், எச்சரித்து விடுதலைசெய்தனர்.
23 அவர்கள் விடுதலை அடைந்தபின் தம்மவர்களிடம் வந்து, தலைமைக்குருக்களும் பெரியோர்களும் தங்களுக்குச் சொன்ன யாவற்றையும் அறிவித்தார்கள்.
24 அதைக் கேட்டவர்கள் ஒருமிக்க உரத்த குரலில் கடவுளை நோக்கி, "ஆண்டவரே, விண், மண், கடல் யாவற்றையும், அவற்றில் அடங்கிய அனைத்தையும் ஆக்கியவர் நீரே.
25 நீரே பரிசுத்த ஆவியினால் உம் ஊழியர் தாவீதின் வாயிலாக மொழிந்தீர்: ' புறவினத்தார் சீறுவதேன் ? மக்கள் வீணான சூழ்ச்சி செய்வதேன் ?
26 ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக மாநில மன்னர் எழுந்தனர்; தலைவரும் ஒன்றுபட்டனர். '
27 "உள்ளபடியே, இந்நகரில் ஏரோதும் போஞ்சு பிலாத்தும் புறவினத்தாரும் இஸ்ராயேல் மக்களும் ஒன்றுபட்டு, நீர் அபிஷுகம்செய்த உம் புனித ஊழியராகிய இயேசுவை எதிர்த்து எழுந்தனர்.
28 உமது கைவன்மையும் திருவுளமும் தீர்மானித்ததெல்லாம் நிகழும்படி, இவ்வாறு செய்தனர்.
29 ஆண்டவரே, இப்பொழுது அவர்களது மிரட்டலைப் பாரும்; உமது வார்த்தையை முழுத்துணிவுடன் எடுத்துச்சொல்ல உம் ஊழியர்களுக்கு அருள்தாரும்.
30 உம் புனித ஊழியராகிய இயேசுவின் பெயரால் நோய்கள் தீரவும், அருங்குறிகள், அற்புதங்கள் நடைபெறவும் உமது கைவன்மையைக் காட்டும்" என மன்றாடினார்கள்.
31 இவ்வாறு மன்றாடவே, அவர்கள் குழுமியிருந்த இடம் அதிர்ந்தது; அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பெற்று, கடவுளின் வார்த்தையைத் துணிவுடன் எடுத்துச்சொன்னார்கள்.
32 விசுவாசிகள் அத்தனை பேரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்; அவர்களுள் ஒருவனும் தன் உடைமை எதன்மீதும் உரிமைப்பாராட்டவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
33 அப்போஸ்தலர்கள் மிகுந்த வல்லமையோடு ஆண்டவராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியம் கூறினார்கள்; அனைவருமே மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தனர்.
34 வறுமைப்பட்ட நிலையில் அவர்களுள் ஒருவனும் இல்லை; ஏனெனில், நிலபுலம், வீடு உடையவர்கள் அவற்றை விற்று அத்தொகையைக் கொண்டுவந்து,
35 அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தார்கள்; அவர்கள் அதை, அவனவன் தேவைக்குத் தக்கவாறு, பகிர்ந்து கொடுத்தார்கள்.
36 சைப்பாஸ் தீவினரான சூசை என்னும் லேவியர் ஒருவர் இருந்தார்; அப்போஸ்தலர்கள் அவருக்குப் பர்னபா என்று பெயரிட்டார்கள்; ( அதற்கு 'ஆறுதலின் புதல்வன் ' என்பது பொருள் ).
37 அவரிடம் ஒரு நிலம் இருந்தது; அதை விற்று, தொகையைக் கொண்டுவந்து அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்தார்.
×

Alert

×