Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 27 Verses

1 நாங்கள் கப்பலேறி இத்தாலியாவுக்குப் போக முடிவு செய்தபோது, சின்னப்பரையும் வேறு கைதிகள் சிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த யூலியு என்னும் நூற்றுவர் தலைவனிடம் ஒப்படைத்தனர்.
2 அதிராமித்தியம் ஊர்க்கப்பல் ஒன்று ஆசியா நாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்லத் தயாராயிருந்தது. நாங்கள் அதிலேறிப் பயணமானோம். தெசலோனிக்கே ஊரானாகிய அரிஸ்தர்க்கு என்னும் மக்கதோனியா நாட்டவன் எங்களோடிருந்தான்.
3 மறுநாள் சீதோன் துறைமுகம் சேர்ந்தோம். யூலியு சின்னப்பரிடம் மிகப்பரிவு காட்டி, அவர் தம்முடைய நண்பர்களிடம் செல்லவும், அவர்களால் உபசரிக்கப் படவும் அனுமதித்தான். ஆகவே, அங்கிருந்து புறப்பட்டோம்.
4 எதிர்க்காற்று வீசியதால் சைப்ரஸ் தீவின் ஒதுக்கிலே சென்றோம்.
5 பின்பு சிலிச்சியா, பம்பிலியா நாடுகளை ஒட்டியுள்ள கடலைக் கடந்து லீசியா நாட்டு மீரா நகரையடைந்தோம்.
6 அங்கே அலெக்சாந்திரியா நகரக் கப்பல் ஒன்று இத்தாலியாவுக்குப் புறப்படப் போவதைக் கண்டு நூற்றுவர் தலைவன் எங்களை அதில் ஏற்றினான்.
7 மெதுவாய், பலநாள் கடின பயணம் செய்து கினீது நகர் எதிரே வந்தோம். பின்பு எதிர்க்காற்று இன்னும் வீசிக்கொண்டிருந்ததால் சல்மோனே முனையைக் கடந்து கிரேத்தாத் தீவின் ஒதுக்கிலே சென்றோம்.
8 அதன் கரையோரமாகக் கடின பயணம் செய்து லசேயா நகர் அருகிலுள்ள செந்துறையென்னும் இடத்தையடைந்தோம்.
9 இவ்வாறு பலநாட்கள் கழிந்தன. நோன்பு நாட்களும் கடந்து போயின. இனி, கடற்பயணம் செய்வது ஆபத்தானது என்பதால் சின்னப்பர்,
10 "நண்பர்களே, இப் பயணம் விபத்துக்குரியது எனத் தோன்றுகிறது. கப்பலுக்கும் சரக்குக்கும் மட்டுமன்று, நமது உயிருக்குமே கேடு வரலாம்" என எச்சரித்தார்.
11 ஆனால், நூற்றுவர் தலைவன் சின்னப்பர் சொன்னதை நம்பாமல் கப்பலோட்டியும் கப்பலுக்குரியவனும் சொன்னதை நம்பினான்.
12 மேலும், மாரிக் காலத்தில் தங்குவதற்கு அந்தத் துறைமுகம் ஏற்றதாயில்லை. ஆகையால், அதை விட்டுப் போய்விட வேண்டுமெனப் பெரும்பாலோர் விரும்பினர். கூடுமானால் கிரேத்தா தீவிலுள்ள பெனிக்ஸ் துறைமுகம் சென்று மாரிக்காலத்தை அங்குக் கழிக்கலாம் என எண்ணினர். இத்துறைமுகம் தென் மேற்கையும் வட மேற்கையும் நோக்கி இருக்கிறது.
13 தெற்கிலிருந்து காற்று மெதுவாய் வீசவே தங்கள் எண்ணம் கைகூடியதாக எண்ணி, நங்கூரம் தூக்கி, கிரேத்தாத் தீவின் கரையோரமாகச் சென்றனர்.
14 ஆனால் சிறிது நேரத்திற்குள் வாடைக் கொண்டல் என்னும் புயல் காற்று அத்தீவிலிருந்து அடித்தது.
15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டது. காற்றை எதிர்த்துச் செல்ல முடியாததால் போகவேண்டிய திசையை விட்டு காற்றடித்த திசையிலேயே புயல் எங்களை அடித்துக்கொண்டு போயிற்று.
16 கௌவுதா என்ற ஒரு சிறு தீவின் ஒதுக்கிலே செல்லும்போது கடின முயற்சியோடு கப்பலின் படகைத் தூக்கிக் கட்டினோம்.
17 அதைத் தூக்கியபின் வடக் கயிற்றினால் கப்பலைச் சுற்றிக் கட்டினார்கள். ஆழமில்லாத சிர்த்திஸ் வளைகுடாவில் கப்பல் அகப்பட்டுக் கொள்ளுமோ என அஞ்சித் தடுப்புப் பலகையை இறக்கினார்கள். இவ்வாறு காற்றடித்த திசையிலே சென்று கொண்டிருந்தனர்.
18 கடும் புயல் எங்களை மிகவும் அலைக்கழிக்கவே, மறுநாள் சரக்குகளைக் கடலில் எறியத் தொடங்கினர்.
19 மூன்றாம் நாள் கப்பலின் தளவாடங்களையும் தங்கள் கையாலேயே எடுத்தெறிந்தனர்.
20 பல நாளாய்க் கதிரவனோ, விண் மீன்களோ தென்படவில்லை. கடும் புயல் அடித்தபடியே இருந்தது. தப்பிப் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லாமல் போயிற்று.
21 அத்தோடு அவர்கள் பலநாள் ஒன்றும் உண்ணாமலிருந்து விட்டார்கள். அப்போது சின்னப்பர் அவர்கள் நடுவில் நின்று, "நண்பர்களே, நான் சொன்னதைக் கேட்டு நீங்கள் கிரேத்தாத் தீவை விட்டுப் புறப்படாமலிருந்திருக்க வேண்டும். அப்போது இந்த ஆபத்தும் கேடும் நேர்ந்திருக்காது.
22 ஆயினும் மனந்தளராதீர்கள். கப்பலுக்கு மட்டும் சேதம் ஏற்படும். உங்கள் உயிருக்கு ஆபத்து எதுவும் நேராது.
23 ஏனெனில், என்னை ஆட்கொண்டவரும் நான் வழிபடுபவருமாகிய கடவுளின் தூதர் ஒருவர் நேற்றிரவு எனக்குத் தோன்றி,
24 ' சின்னப்பா, அஞ்சாதே, செசார் முன்னிலையில் நீ போய் நிற்க வேண்டும். இதோ! உன் பொருட்டுக் கடவுள் உன்னோடு பயணம்பண்ணுகிற யாவருக்கும் உயிர்ப்பிச்சையளித்துள்ளார் ' என்றார்.
25 எனவே, நண்பர்களே, மனம் தளராதீர்கள். நான் கடவுளை நம்புகிறேன். எனக்கு அறிவித்துள்ளபடியே நடக்கும்.
26 ஆயினும், நாம் ஒரு தீவில் தள்ளப்பட வேண்டியிருக்கிறது" என்றார்.
27 பதினான்காம் நாள் இரவு, நாங்கள் ஆதிரியாக் கடலில் இங்குமங்கும் அலைக்கழிக்கப்படுகையில், நள்ளிரவில் கரை அருகேயிருப்பதுபோல் மாலுமிகளுக்குத் தோன்றிற்று.
28 அவர்கள் விழுதுவிட்டு ஆழம் பார்த்தபோது நூற்றிருபது அடியிருந்தது. சற்றுத்தூரம் சென்றபிறகு,
29 மறுபடியும் விழுதுவிட்டுப் பார்த்தபோது தொண்ணுறடி இருந்தது. பாறையில் மோதுமோவென அஞ்சிக் கப்பலின் பின்னணியத்திலிருந்து நான்கு நங்கூரங்களை இறக்கினர். எப்போது பொழுது விடியுமோவென்றிருந்தனர்.
30 மாலுமிகளோ கப்பலை விட்டுத் தப்பியோட வழி தேடினார்கள். கப்பல் முன்னணியத்திற்கு எதிரிலே சற்றுத் தள்ளி நங்கூரங்களை இறக்குவதுபோல நடித்து, படகைக் கடலில் இறக்கினார்கள்.
31 இதைக் கண்ட சின்னப்பர் நூற்றுவர் தலைவனையும் படை வீரர்களையும் பார்த்து, ' இந்த மாலுமிகள் கப்பலில் தங்காவிடில் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் ' என எச்சரித்தார்.
32 உடனே படை வீரர் படகின் கயிறுகளை அறுத்து அதைக் கடலில் விழச் செய்தனர்.
33 பொழுது விடிய சற்று முன் சின்னப்பர் எல்லாரையும் பார்த்து, "கவலையால் பதினான்கு நாளாய் ஒன்றும் உண்ணாமலிருக்கிறீர்களே, ஏதாவது சாப்பிடுங்கள்.
34 இல்லாவிட்டால் எப்படி உயிர் பிழைக்க முடியும்?" என்று உணவு கொள்ள வற்புறுத்தினார். "உங்களுள் எவனுக்கும் ஒரு தலை மயிர்கூட சேதமடையாது" என்றார்.
35 இப்படிப் பேசிய பின், அவர் அப்பம் ஒன்றை எடுத்து எல்லாருக்கும்முன் கடவுளுக்கு நன்றி கூறி, அதைப் பிட்டு உண்ணத் தொடங்கினார்.
36 அதைக் கண்டு மற்ற எல்லாரும் மனந்தேறியவர்களாய்ச் சாப்பிட்டார்கள்.
37 எல்லாருமாகக் கப்பலில் இருநூற்று எழுபத்தாறு பேர் இருந்தோம்.
38 அவர்கள் பசியாற உண்டபின் கோதுமையைக் கடலில் எறிந்து கப்பலின் பளுவைக் குறைத்தார்கள்.
39 பொழுது புலர்ந்தபோது தங்கள் கண்ணுக்குத் தென்பட்டது எந்த இடம் எனத் தெரியவில்லை. வளைகுடா ஒன்றில் மணல் கரையுள்ள ஒரு பகுதியைக் கண்டு, அங்கே கப்பலைச் செலுத்த முடியுமாவென்று பார்த்தனர்.
40 எனவே, கயிறுகளை அவிழ்த்து நங்கூரங்களைக் கடலிலேயே விட்டுவிட்டுச் சுக்கான் கட்டுகளைத் தளர்த்தினர். முன்பாயை விரித்துக் கப்பலைக் காற்றுக்கிசைவாகக் கரையை நோக்கிச் செலுத்தினர்.
41 ஆழமற்ற ஓரிடத்தில் கப்பல் மோதிற்று. அதனால் அதன் முன்னணியம் மண்ணில் புதைந்து அசையாமல் போகவே, பின்னணியம் அலைகளின் வலிமையால் சிதைவுறத் தொடங்கிற்று.
42 கைதிகளுள் எவனும் நீந்தித் தப்பி ஓடி விடாதபடி படைவீரர் அவர்களைக் கொன்று போட எண்ணீனர்.
43 ஆனால், நூற்றுவர் தலைவன் சின்னப்பரைக் காப்பாற்ற விரும்பி அவர்கள் எண்ணியபடி செய்ய விடவில்லை. நீத்தக்கூடியவர்கள் முதலில் கடலில் குதித்துக் கரை சேரவும்,
44 மற்றவர்கள் பலகைகளையாவது, கப்பலின் சிதைவுண்ட துண்டுகளையாவது பிடித்துக்கொண்டு கரை சேரவும் கட்டளையிட்டான். இவ்வாறு எல்லாரும் தப்பிக் கரை சேர்ந்தனர்.
×

Alert

×