Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 25 Verses

1 பெஸ்து பதவியேற்ற மூன்று நாட்களுக்குப் பின் செசரியாவிலிருந்து யெருசலேம் சென்றான்.
2 தலைமைக் குருக்களும் யூத முதல்வர்களும் பெஸ்துவிடம் சின்னப்பருக்கு எதிராக முறையிட்டனர்.
3 சின்னப்பருக்கு விரோதமான முறையில் தங்களுக்குத் தயவுகாட்டி அவரை யெருசலேமுக்கு அனுப்பி வைக்க மன்றாடினர். ஏனெனில், அவரை வழியில் கொன்றுபோடச் சூழ்ச்சி செய்திருந்தனர்.
4 அதற்கு பெஸ்து, "சின்னப்பன் செசரியாவிலேயே காவலில் இருக்கட்டும். நாம் விரைவில் அங்குப் போவோம்.
5 அவன்மேல் தவறு ஏதாவது இருப்பின், உங்கள் தலைவர்கள் என்னோடு வந்து குற்றம் சாட்டட்டும்" என்றான்.
6 அவன் யெருசலேமில் எட்டு அல்லது பத்து நாட்களுக்குமேல் தங்கவில்லை, அதன்பின் செசரியா திரும்பினான். மறுநாள் நீதி இருக்கைமீது அமர்ந்து சின்னப்பரை அழைத்துவரக் கட்டளையிட்டான்.
7 அவர் வந்தவுடன் யெருசலேமிலிருந்து வந்திருந்த யூதர்கள் அவரைச் சூழ்ந்து நின்று தங்களால் எண்பிக்க முடியாத பல பெருங் குற்றங்களை அவர்மேல் சாட்டத் தொடங்கினார்கள்.
8 அக்குற்றங்களை மறுத்துச் சின்னப்பர், "நான் யூதருடைய சட்டத்திற்கோ கோயிலுக்கோ செசாருக்கோ எதிராக ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று மறுத்துக் கூறினார்.
9 பெஸ்து யூதர்களுக்குத் தயவு காட்ட விரும்பிச் சின்னப்பரிடம், "நீ யெருசலேமுக்குப் போய் அங்கே என் முன் இவைபற்றி விசாரிக்கப்பட இசைவாயா?" என்று கேட்டான்.
10 சின்னப்பர் மறுமொழியாக, "செசாருடைய நீதி இருக்கையின்முன் நிற்கிறேன். இங்கேயே எனக்குத் தீர்ப்புக் கிடைக்க வேண்டும். யூதர்களுக்கு நான் எத்தீங்கும் செய்யவில்லை. உமக்கும் இது நன்றாகத் தெரியும்.
11 நான் குற்றவாளியாயிருந்து சாவுத் தண்டனைக்குரிய குற்றம் ஏதாவது செய்திருந்தால் சாவதற்குப் பின் வாங்கமாட்டேன். ஆனால், இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்களில் எதுவும் உண்மையன்றெனில், என்னை இவர்களுக்குத் தானமாக அளித்துவிட யாருக்கும் உரிமையில்லை. இவ்வழக்கு செசாரின் மன்றத்திற்கே செல்லவேண்டும்" என்றார்.
12 அப்போது பெஸ்து தன் மன்றத்தாரோடு கலந்து பேசி, "இவ்வழக்கு செசாருடைய மன்றத்திற்குச் செல்லவேண்டுமென்றா சொன்னாய்? செசாரிடமே செல்க" என்றான்.
13 சிலநாள் சென்ற பிறகு அகிரிப்பா அரசனும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டு கொள்ள செசரியாவுக்கு வந்தனர்.
14 அவர்கள் அங்குச் சில நாள் தங்கியிருக்கவே, பெஸ்து சின்னப்பரைப் பற்றிய செய்தியெல்லாம் அரசனிடம் சொன்னான். அவன் சொன்னது: "பெலிக்ஸ் காவலில் விட்டுப்போன கைதி ஒருவனிருக்கிறான்.
15 நான் யெருசலேமுக்குப் போயிருந்தபோது, தலைமைக் குருக்களும் யூத மூப்பர்களும் அவனுக்கெதிராகத் தீர்ப்பிட வேண்டினர்.
16 நான் அதற்கு மறுமொழியாக, ' குற்றஞ் சாட்டப்பட்டவன் குற்றஞ் சாட்டியவர்களுக்கு எதிரே நின்று மறுப்புக்கூற வாய்ப்பளிக்காமல், அவனை அவர்களுக்குத் தானம்போல் அளித்துவிடுவது உரோமையருக்கு முறையன்று ' எனக் கூறினேன்.
17 ஆகவே, அவர்கள் என்னோடு இங்கு வந்தபோது காலந்தாழ்த்தாது, மறுநாளே நான் நீதி இருக்கையில் அமர்ந்து அந்த ஆளை அழைத்துவரச் சொன்னேன்.
18 ஆனால், குற்றம் சாட்டினவர்கள் அவனுக்கு எதிராகப் பேச எழுந்த போது நான் எதிர்பார்த்த குற்றங்களில் எதையும் அவன்மேல் சுமத்தவில்லை.
19 அவன்மேல் சொன்னதெல்லாம் ஏதோ தங்கள் மதத்தைப்பற்றிய பூசலாகத்தான் இருந்தது. இயேசு என்னும் ஒருவனைப் பற்றிக்கூட தர்க்கம் நடந்தது. இறந்துபோயிருந்த அந்த இயேசு உயிரோடிருப்பதாகச் சின்னப்பன் சாதித்துக்கொண்டிருந்தான்.
20 நான் இதெல்லாம் எப்படி விசாரிப்பது என்று தெரியாமல் தயங்கியவனாய், ' நீ யெருசலேமுக்குச் சென்று அங்கு இதைப்பற்றி விசாரிப்பதற்கு இசைவாயா ? ' என்று அவனைக் கேட்டேன்.
21 அதற்குச் சின்னப்பன், மாட்சிமை மிக்க மன்னரது தீர்ப்புக்கெனத் தன் வழக்கை ஒதுக்கி வைக்கும்படி கேட்டுக்கொண்டான். ஆகவே, செசாரிடம் அனுப்பும்வரை அவனைக் காவலில் வைக்க நான் கட்டளையிட்டேன்."
22 அப்போது அகிரிப்பா, "அவன் பேசுவதை நானும் கேட்க விரும்புகிறேன்" என்று பெஸ்துவிடம் சொன்னான். அதற்கு அவன், "நாளைக்கு நீர் கேட்கலாம்" என்றான்.
23 மறுநாள் அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்தோடு வந்து, படைத்தலைவர்களோடும் நகரத்துப் பெருங்குடி மக்களோடும் அவைக்கூடத்தினுள் நுழைந்தனர். பெஸ்துவின் கட்டளைப்படி சின்னப்பர் அழைத்து வரப்பட்டார்.
24 அப்பொழுது பெஸ்து, "அகிரிப்பா மன்னர் அவர்களே, எம்மோடு ஈண்டு குழுமியிருக்கும் பெருமக்களே, இதோ! உங்கள் முன்நிற்கும் இவனுக்கு எதிராக யெருசலேமிலும் இங்கும் யூதமக்கள் என்னிடம் விண்ணப்பம் செய்து கொண்டனர். இவனை இனி உயிரோடு விட்டுவைக்கக் கூடாதெனக் கூக்குரலிடுகின்றனர்.
25 சாவுத் தண்டனைக்குரியதெதுவும் இவன் செய்யவில்லையெனக் கண்டேன். இவனோ, இவ்வழக்கு ' மாட்சிமிக்க மன்னருடைய மன்றத்திற்கே செல்லவேண்டும் ' என்றான். ஆகவே இவனை அங்கே அனுப்பத் தீர்மானித்தேன்.
26 ஆனால், மன்னர் பெருமானுக்கு இவனைப்பற்றித் திட்டவட்டமாக எழுத ஒன்றுமில்லை. ஆகவே, உங்கள் அனைவர் முன்னிலையிலும், சிறப்பாக அகிரிப்பா மன்னர் அவர்களே, உம் முன்னிலையிலும் இவனை விசாரித்த பின்பு, எழுத ஏதாகிலும் கிடைக்கலாமென எதிர்பார்த்து, அவனை இங்கே அழைத்துவரச் செய்தேன்.
27 ஏனெனில், ஒருவன் மேல் சாட்டப்பட்ட குற்றங்களைக் குறிப்பிடாமல் கைதி ஒருவனை அனுப்புவது அறிவீனம் என எனக்குத் தோன்றுகிறது" என்றான்.
×

Alert

×