Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 21 Verses

1 அவர்களிடமிருந்து பிரிந்து கப்பலேறி, நேர் வழியாக, கோஸ் தீவிற்கும், மறுநாள் ரோது தீவிற்கும் சென்றோம். அங்கிருந்து புறப்பட்டு பத்தாரா துறைமுகத்தை அடைந்தோம்.
2 அங்கே பெனிக்கியா நாட்டுக்குச் செல்லும் கப்பலொன்றைக் கண்டு அதில் ஏறிப் பயணமானோம்.
3 வழியில் சைப்ரஸ் தீவு தென்பட்டது. அங்கே போகாமல் அதன் தென்புறமாக சீரியா நாட்டை நோக்கி பயணத்தைத் தொடர்ந்து தீர் துறைமுகத்தை அடைந்தோம்; அங்கே கப்பலின் சரக்கை இறக்கவேண்டியிருந்தது.
4 அங்கே சீடர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஏழுநாள் தங்கினோம். அவர்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு யெருசலேமுக்குப் போகவேண்டாம் எனச் சின்னப்பருக்குக் கூறினார்கள்.
5 ஆயினும், அந்நாட்கள் கழிந்ததும் புறப்பட்டுப் போனோம். பெண்கள், குழந்தைகளோடு அனைவரும் எங்களைப் புறநகர்வரை வழியனுப்ப வந்தனர். கடற்கரையில் முழங்காலிட்டு வேண்டினோம்.
6 அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கப்பல் ஏறினோம்; அவர்கள் வீடு திரும்பினார்கள்.
7 தீர் நகரிலிருந்து புறப்பட்டு பித்தெலெமயிஸ் துறைமுகம் வந்தடைந்து கடற்பயணத்தை முடித்தோம். அங்குச் சகோதரர்களைக் கண்டு நலம் உசாவி அவர்களுடன் ஒருநாள் தங்கி,
8 மறுநாள் புறப்பட்டு, செசரியாவுக்கு வந்தோம். நற்செய்திப் போதகர் பிலிப்புவின் வீட்டிற்குப் போனோம். அவர் திருப்பணியாளர் எழுவருள் ஒருவர்.
9 மணமாகாத நான்கு புதல்வியர் அவருக்கு இருந்தனர். அவர்கள் இறைவாக்குரைப்பவர்கள்.
10 பலநாள் அங்குத் தங்கினோம். அப்பொழுது இறைவாக்கினராகிய அகபு என்னும் ஒருவர் யூதேயாவிலிருந்து வந்தார்.
11 எங்களிடம் வந்தபோது, சின்னப்பரின் இடைக்கச்சையை எடுத்துத் தன் கால்களையும் கைகளையும் கட்டிக்கொண்டு, "பரிசுத்த ஆவி கூறுவதைக் கேளுங்கள்: இக்கச்சைக்குரியவனை யெருசலேமில் யூதர்கள் இதுபோலத்தான் கட்டுவார்கள். கட்டி, புறவினத்தாருக்குக் கையளிப்பார்கள்" என்றார்.
12 இதைக் கேட்டதும் நாங்களும் அங்கிருந்தவர்களும் சின்னப்பரை யெருசலேமுக்குப் போகவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்கலானோம்.
13 ஆனால், அவர், "நீங்கள் இப்படி அழுது என் உள்ளம் உடையச் செய்வானேன்? ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்காக யெருசலேமில் விலங்கிடப்படுவதற்குமட்டுமன்று இறப்பதற்கும் தயார்" என்றார்.
14 நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் ஏற்றுக்கொள்ளாததால் ஆண்டவர் திருவுளப்படியாகட்டும் என்று பேசாமலிருந்துவிட்டோம்.
15 அந்நாட்களுக்குப் பின், நாங்கள் பயண ஏற்பாடுகளைச் செய்து முடித்து யெருசலேமுக்குப் புறப்பட்டோம்.
16 செசரியாவிலிருந்து எங்களுடன் சீடர் சிலர் வந்தனர். சைப்ரஸ் தீவினனான மினாசோன் என்னும் பழைய சீடன் ஒருவனுடைய வீட்டில் தங்கும்படியாக எங்களை அழைத்துச் சென்றனர்.
17 நாங்கள் யெருசலேமை அடைந்தபொழுது சகோதரர்கள் எங்களை மகிழ்வுடன் வரவேற்றனர்.
18 மறுநாள், சின்னப்பர் யாகப்பரைக் காணச் சென்றார். நாங்களும் அவருடன் சென்றோம். அங்கே மூப்பர் எல்லாரும் கூடியிருந்தனர்.
19 சின்னப்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறித் தமது திருப்பணியின் வாயிலாகக் கடவுள் புறவினத்தாரிடையே செய்ததெல்லாம் ஒவ்வொன்றாக விவரிக்கத் தொடங்கினார்.
20 அதைக் கேட்ட அவர்கள் கடவுளை மகிமைப்படுத்தினார்கள். ஆயினும் அவரைப் பார்த்து, "சகோதரரே, யூதர்களில் எத்தனையோ ஆயிரம்பேர் விசுவாசிகளாயுள்ளது உமக்குத் தெரியுமல்லவா? அத்தனை பேரும் திருச்சட்டத்தின் மீது மிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
21 இப்பொழுது உம்மைப்பற்றி ஒரு பேச்சு இவர்கள் செவிக்கு எட்டியுள்ளது. புறவினத்தாரிடையே வாழும் யூதர்கள் மோயீசனை விட்டுவிடும்படி நீர் போதிக்கிறீராமே. தம் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்யவேண்டாம், பழைய முறைமைகளைப் பின்பற்ற வேண்டாம் என்கிறீராமே.
22 நீர் இங்கு வந்துள்ளதைப்பற்றி எப்படியும் கேள்விப்படுவர்.
23 இனி என்ன செய்வது? சரி, நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி செய்யும். பொருத்தனை செய்துகொண்ட நால்வர் இங்கே உள்ளனர்.
24 இவர்களை அழைத்துக்கொண்டுபோய், இவர்களோடு துப்புரவுச் சடங்கு செய்துகொள்ளும். இவர்கள் முடி வெட்டிக்கொள்ளும் சடங்கிற்காகச் செய்ய வேண்டிய செலவையெல்லாம் நீரே செய்யும். அதனால் உம்மைப்பற்றிக் கேள்விப்பட்டதில் உண்மை ஒன்றுமில்லை என்றும், நீரும் சட்டத்தைக் கடைப்பிடித்து நடப்பவரே என்றும் அனைவரும் அறிந்துகொள்வர்.
25 விசுவாசிகளான புறவினத்தாரைப் பற்றி நாங்கள் செய்த முடிவுகளாவன: சிலைகளுக்குப் படைத்தது, மிருக இரத்தம், மூச்சடைத்துச் செத்ததின் இறைச்சி இவற்றை உண்ணலாகாது. கெட்ட நடத்தையை விலக்க வேண்டும். இவற்றைக் குறித்து ஏற்கெனவே எழுதியுள்ளோம்" என்றனர்.
26 சின்னப்பர் அந்த நால்வரை அழைத்துக்கொண்டு போய், மறுநாள் அவர்களுடன் துப்புரவுச் சடங்கு செய்துகொண்டு கோயிலுக்குள் நுழைந்தார். துப்புரவு நாட்கள் எப்போது முடியும் என்று தெரிவித்து, அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் பலி செலுத்தவேண்டிய நாளையும் குறிப்பிட்டார்.
27 குறிப்பிட்ட அந்த ஏழு நாட்கள் நிறைவுறப் போகையில் ஆசியாவிலிருந்து வந்த யூதர்கள் அவரைக் கோயிலில் கண்டு, மக்கள் எல்லாரையும் தூண்டிவிட்டு,
28 "இஸ்ராயேல் மக்களே, ஓடிவாருங்கள். நம் மக்களுக்கும் திருச்சட்டத்திற்கும், இப்புனித இடத்திற்கும் எதிராக எங்கும், எல்லாருக்கும் போதிப்பவன் இவன்தான். அதுமட்டுமன்று, கிரேக்கர்களைக் கோயிலுக்குள் கூட்டி வந்து இப்பரிசுத்த இடத்தைத் தீட்டுப்படுத்தியுள்ளான்" என்று கத்திக்கொண்டே அவரைப் பிடித்தனர்.
29 ஏனெனில், எபேசியனாகிய துரோப்பீமு என்பவனை நகரில் சின்னப்பருடன் இருந்ததைக் கண்டிருந்தனர். அவர் அவனைக் கோயிலுக்குள் அழைத்துக்கொண்டு போயிருப்பார் என எண்ணினர்.
30 நகரெங்கும் குழப்பம் உண்டாயிற்று, நாலா பக்கத்திலிருந்தும் மக்கள் ஓடி வந்தனர். சின்னப்பரைப் பிடித்துக் கோயிலுக்கு வெளியே இழுத்து, கோயில் கதவுகளை அடைத்தனர்.
31 அவர்கள் அவரைக் கொல்வதற்குக் கிளர்ச்சி செய்கையில் யெருசலேம் முழுவதும் கலவரம் அடைந்துள்ளது என்ற செய்தி படைத் தலைவனுக்கு எட்டியது.
32 உடனே, அவன் போர்வீரர்களையும் நூற்றுவர் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு அங்கே ஓடி வந்தான். அவர்கள் படைத்தலைவனையும் போர்வீரர்களையும் கண்டதும் சின்னப்பரை அடிப்பதை நிறுத்தினார்கள்.
33 அப்பொழுது படைத்தலைவன் கூட்டத்தையணுகி அவரைப் பிடித்து, இரு சங்கிலிகளால் கட்டச் சொன்னான். அவன் யார்? அவன் செய்ததென்ன? என்றெல்லாம் விசாரித்தபோது
34 கூட்டத்திலிருந்தவர்கள் பலர் பலவிதமாகக் கூச்சலிட்டனர். குழப்ப மிகுதியினால் ஒன்றும் சரியாகப் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஆகவே, அவரைக் கோட்டைக்குள் கூட்டிச் செல்லுமாறு கட்டளையிட்டான்.
35 படியருகே வந்தபோது கூட்டம் கட்டு மீறி நெருக்கியதால் போர்வீரர்கள் அவரைத் தூக்கிக்கொண்டுபோக வேண்டியதாயிற்று.
36 ஏனெனில், மக்கள் திரள், "அவன் ஒழிக! ஒழிக!" என்று ஆர்ப்பரித்துக் கொண்டே பின்தொடர்ந்தது.
37 அவர்கள் அவரைக் கோட்டைக்குள் கொண்டுபோக இருக்கையில், சின்னப்பர் படைத் தலைவனிடம், "உம்மிடம் ஒன்று சொல்லட்டுமா?" என்றார். அவன், "உனக்குக் கிரேக்க மொழியும் தெரியுமா?
38 அப்படியானால், சிறிது காலத்துக்கு முன் ஒரு குழப்பத்தை உண்டாக்கி நாலாயிரம் கொள்ளைக் கூட்டத்தாரைப் பாலைவனத்திற்குக் கூட்டிச்சென்ற அந்த எகிப்தியன் அல்லையோ நீ?" என்றான்.
39 அதற்குச் சின்னப்பர், "நான் ஒரு யூதன். சிலிசியா நாட்டிலுள்ள தர்சு நகரைச் சார்ந்தவன். புகழிலே குறைவற்ற அந்நகரின் குடிமகன், மக்களிடம் பேச விடை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
40 படைத்தலைவன் விடைதந்தபின், சின்னப்பர் படிகளின்மேல் நின்றுகொண்டு, அமைதியாக இருக்கும்படி மக்களை நோக்கிச் சைகை காட்டினார். ஆழ்ந்த அமைதி உண்டாகவே, சின்னப்பர் எபிரேய மொழியில் பேசத் தொடங்கினார்.
×

Alert

×