Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Acts Chapters

Acts 20 Verses

1 கலகம் அடங்கிய பின், சின்னப்பர் சீடர்களை வரச்சொல்லி, அவர்களுக்கு அறிவுரை கூறி, விடை பெற்றுக்கொண்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டார்.
2 அந்நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று, ஆங்காங்குள்ளோர்க்கு அறிவுரைகள் பல கூறினார். பிறகு கிரேக்க நாட்டை அடைந்து,
3 அங்கு மூன்று மாதங்கள் தங்கினார். சீரியாவுக்குக் கப்பலேற இருக்கையில் அவருக்கு எதிராக யூதர்கள் சதி செய்தனர். ஆகவே, அவர் மக்கெதோனியா வழியாகத் திரும்பத் தீர்மானித்தார்.
4 பெரோயா நகரத்துப் பிருவின் மகன் சோபத்தர், தெசலோனிக்கரான அரிஸ்தார்க்கு, செக்குந்து, தெர்பை நகரத்தானாகிய காயு, தீமோத்தேயு, ஆசியா நாட்டைச் சேர்ந்த தீகிக்கு, துரோப்பீமு ஆகியோர் அவருக்கு வழித்துணையாய்ச் சென்றனர்.
5 இவர்கள் முன்னே சென்று துரோவாவில் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
6 நாங்களோ புளியாத அப்பத் திருநாட்களுக்குப்பின் பிலிப்பிலிருந்து கப்பல் ஏறினோம். ஐந்து நாளில் துரோவாவில் அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம். அங்கு ஏழு நாள் தங்கினோம்.
7 வாரத்தின் முதல் நாளில் அப்பத்தைப் பிட்குதற்காக நாங்கள் கூடியிருந்தோம். மறுநாள் சின்னப்பர் ஊரை விட்டுப் போகவேண்டியிருந்தது. அங்கிருந்தவர்களுடன் உரையாடத் தொடங்கி நள்ளிரவுவரை பேசிக்கொண்டே போனார்.
8 நாங்கள் கூடியிருந்த மாடியறையில் விளக்குகள் பல இருந்தன.
9 ஐத்திகு என்ற இளைஞன் ஒருவன் சன்னலின் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். சின்னப்பர் பேசப் பேச ஆழ்ந்த தூக்கம் அவனை ஆட்கொண்டது. தூக்க மயக்கத்தால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்தான். அவனைத் தூக்கி எடுத்த போது பிணமாகக் கிடந்தான்.
10 சின்னப்பர் இறங்கிவந்து, அவன் மேல் குனிந்து, அவனை அணைத்து, "புலம்பலை நிறுத்துங்கள். உயிர் அவனுக்குள் இருக்கின்றது" என்றார்.
11 மீண்டும் மாடிக்குச் சென்று, அப்பத்தைப் பிட்டு உண்டபின், விடியும்வரை நெடுநேரம் உரையாடிவிட்டுப் புறப்பட்டார்.
12 உயிர்பெற்ற அப்பையனை அழைத்துச் சென்றனர். அதனால் அவர்கள் மிக்க ஆறுதல் அடைந்தனர்.
13 நாங்கள் கப்பல் ஏறி, சின்னப்பருக்கு முன்னதாகவே அஸ்ஸோ ஊருக்குச் சென்றோம். அங்கிருந்து தம்மைக் கப்பலில் ஏற்றிச்செல்ல வேண்டுமென்று அவர் ஏற்பாடு செய்திருந்தார். அவ்வூர்வரைக்கும் தரை வழியாக நடந்து போக விரும்பினார்.
14 அஸ்ஸோ ஊரில் அவர் எங்களோடு சேர்ந்து கொண்டபின் அவரை ஏற்றிக்கொண்டு மித்திலேனே நகருக்குப் போனோம்.
15 அங்கிருந்து புறப்பட்டு மறுநாள் கீயு தீவுப் பக்கமாகச் சென்றோம். மூன்றாம் நாள் சாமு தீவை அடைந்து அதற்கடுத்த நாள் மிலேத்துத் துறைமுகத்தை அடைந்தோம்.
16 ஆசியாவில் தாமதம் ஏற்படாதபடி சின்னப்பர் எபேசுக்குப் போகாமலே செல்லத் தீர்மானித்திருந்தார். கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகையன்று யெருசலேமில் இருக்க வேண்டுமெனத் துரிதமாய்ச் சென்றார்.
17 மிலேத்திலிருந்து எபேசுக்கு ஆள் அனுப்பிச் சபையின் மூப்பர்களை வரவழைத்தார்.
18 அவர்கள் வந்தபின் அவர் அவர்களிடம் பேசிய மொழிகள் இவை: "நான் ஆசியாவிற்கு வந்த நாள்முதல் எப்போதும் உங்களிடம் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.
19 கண்ணீர் சிந்தும் அளவுக்கு, யூதர்களின் சூழ்ச்சியினால் எனக்கு ஏற்பட்ட இன்னல்கள் பலவற்றிடையே ஆண்டவருக்கு மிக்க தாழ்மையுடன் ஊழியம் செய்தேன்.
20 நன்மை தரும் யாவற்றையும் உங்களுக்கு அறிவிக்க நான் பின்வாங்கவில்லை; வீடு வீடாகவும் போய்ப் போதித்தேன்.
21 ' மக்கள் கடவுள் பக்கம் மனந்திரும்ப வேண்டும், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் விசுவாசம் கொள்ளவேண்டும் ' என யூதருக்கும் கிரேக்கருக்கும் வற்புறுத்திக் கூறினேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்ததே.
22 ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டவனாய், இதோ! நான் இப்போது யெருசலேமுக்குச் செல்லுகிறேன். அங்கு எனக்கு என்னென்ன நேருமோ, நான் அறியேன்.
23 சங்கிலிகளும் வேதனைகளும் எனக்காகக் காத்திருக்கின்றன என்று நான் செல்லும் ஊர்தோறும் பரிசுத்த ஆவி எனக்கு உறுதி கூறுவது மட்டுமே அறிவேன்.
24 ஆனால், நான் என் உயிரை ஒரு பொருட்டாய்க் கணிக்கவில்லை. அதைப் பெரிதென மதிக்கவில்லை. கடவுளுடைய அருளைப்பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவராகிய இயேசு என்னிடம் ஒப்படைத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கைப் பயணத்தை முடிப்பேனாகில் அதுவே போதும்.
25 "உங்களிடையே பழகி இறையரசைப்பற்றிய செய்தியைப் போதித்து வந்தேன். இனிமேல், அந்தோ! உங்களுள் ஒருவனும் என் முகத்தைப் பார்க்கப் போவதில்லை என்று எனக்குத் தெரியும்.
26 கடவுளின் திட்டம் முழுவதையும் உங்களுக்கு அறிவிக்க நான் பின்வாங்கவில்லை.
27 ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கூறும் ஒரு வார்த்தை: யாருடைய அழிவுக்கும் நான் குற்றவாளியல்ல.
28 "எனவே, உங்களைப்பற்றி விழிப்பாயிருங்கள்; மந்தை முழுவதைக் குறித்தும் விழிப்பாயிருங்கள். ஏனெனில், கடவுள் தமது இரத்தத்தினால் சொந்தமாக்கிக் கொண்ட தம் திருச்சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களை அம்மந்தைக்கு மேற்பார்வையாளராக ஏற்படுத்தியுள்ளார்.
29 நான் சென்றபின் கொடிய ஓநாய்கள் உங்களுக்குள்ளே நுழையும். அவை மந்தையைத் தாக்காமல் விடா என்பதை அறிவேன்.
30 உங்களிடமிருந்தே சிலர் தோன்றி, சீடர்களையும் தம்மிடம் கவர்ந்து கொள்ளுமளவுக்கு உண்மையைத் திரித்துக்கூறுவர்.
31 எனவே, விழிப்பாயிருங்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக அல்லும் பகலும் அயராமல் நான் உங்கள் ஒவ்வொருவர்க்கும் கண்ணீரோடு அறிவுரை கூறிவந்தேன் என்பதை நினைவில் வையுங்கள்.
32 இப்பொழுது உங்களைக் கடவுளுக்கும், அவருடைய அருள் வார்த்தைக்கும் ஒப்படைக்கிறேன். அவ்வார்த்தை உங்களுக்கு முழு வளர்ச்சியையும், அர்ச்சிக்கப்பட்டவர் அனைவரோடு பங்கையும் அளிக்கவல்லது.
33 "ஒருவருடைய பொன்னையோ வெள்ளியையோ ஆடையையோ நான் விரும்பவில்லை.
34 என்னுடைய தேவைகளுக்காகவும், என்னோடு இருப்பவர்கள் தேவைகளுக்காகவும் இந்தக் கைகளே உழைத்தன என்பது உங்களுக்கே தெரியும்.
35 இவ்வாறு பாடுபட்டு உழைத்து பலவீனரைத் தாங்க வேண்டுமென்று பலவகையில் காட்டினேன். ' பெறுவதினும் தருவதே இன்பம் ' என்று ஆண்டவராகிய இயேசு சொன்னதை நினைவில் வைத்தல் வேண்டும்."
36 இப்படிச் சொன்ன பின், எல்லாரோடும் முழங்கால் படியிட்டுச் செபித்தார்.
37 அப்போது எல்லாரும் சின்னப்பரைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பெரிதும் புலம்பி அழலாயினர்.
38 இனி நீங்கள் என் முகத்தைப் பார்க்கமாட்டீர்கள் என்று அவர் சொன்னதுதான் அவர்களுக்கு மிக்க துயரம் வருவித்தது. அப்படியே கப்பல்வரைச் சென்று அவரை வழியனுப்பினர்.
×

Alert

×